Showing posts with label kalyanasundaram. Show all posts
Showing posts with label kalyanasundaram. Show all posts
Wednesday, December 21, 2022
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும் மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும்
மாநிலங்களவையில் எஸ். கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்
புதுதில்லி, டிச.22-
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்றும், 100 நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் திமுக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் கோரினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நிதி சட்டமுன்வடிவு மீது பேசிய திமுக உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் தன்னுடைய கன்னிப்பேச்சில் கூறியதாவது:
மாண்புமிகு தலைவர் அவர்களே, எங்கள் இயக்கத்தின் தோற்றுணர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உரை நிகழ்த்திய இந்த சரித்திரப் புகழ்பெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவையில் எனக்குப் பேச வாய்ப்பளித்து ஓர் உறுப்பினராக்கி, பெருமை சேர்த்திருக்கும் எங்களுடைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்ற தலைவர்களோடு பயணம் செய்த எனக்கு, இந்த மாநிலங்களவையில் வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மாண்புமிகு தலைவரவர்களே, நாடாளுமன்ற மாநிலங்களவையில்இது என் முதல் உரையாகும். எனவே, நாடாளுமன்ற மரபினைக் கருத்தில் கொண்டு, எனக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கியும், இடையூறு எதுவும் இல்லாமல் என் உரையை முடிக்கவும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாக ஒரு போலி வேடம் இட்டு மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து, திரும்பப் பெற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்ததைவிட, உரங்களின் விலை, பொட்டாஷ், யூரியா, டி.ஏ.பி., சூப்பர் பாஸ்பேட் போன்றவைகளின் விலைகள் பத்து மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயிகளின் உற்பத்திப் பொருளான நெல் விலையோ, கோதுமை விலையோ, கரும்பின் விலையோ அல்லது சிறு தானியங்களின் விலையோ அந்த அளவுக்கு உயரவில்லை. இதற்கு ஈடுகட்டும் அளவிற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை.
இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, உள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடும் துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுக்கவும், இந்த அரசு எந்தவொரு தேவையான, சரியான, தெளிவான திட்டங்களைக் கொண்டுவரவிலிலை. ஒட்டுமொத்தமாக இந்த அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது.
அடித்தட்டு மக்களுக்கு உஜாலா திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமையல் எரிவாயு அளிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் ஒரு பக்கத்தில் 400 ரூபாய்க்கு விற்ற ஒரு சிலிண்டர் விலை, இப்பொழுது 1250 ரூபாய்க்கு உயர்ந்துவிட்டது. இப்பொழுது பொது மக்களுக்கு உஜாலா திட்டம் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல நாட்டு மக்களின் அத்தியாவசியப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல், பெட்ரோல் விலையைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு, சில நேரம் விலையை உயர்த்தாமல் ஏமாற்றி, பின்னர் இரண்டு மடங்காக உயர்த்தியது. இதனால் போக்குவரத்து செலவுகள் கூடுதலாகி, விலைவாசியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அதே போல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இருக்கும்போது அனைவருக்கும் பயன்படும் வகையில் செல்லிடப் பேசி வசதியை அடித்தட்டு மக்கள் பயன்பெறும் ஒரு சாதனையைப் படைத்தது. ஆனால் இந்த அரசு வந்த நாட்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி வழங்கப்படவில்லை. 5ஜியும் வழங்கப்படவில்லை. இவை இரண்டையும் தனியாருக்கு வழங்கியுள்ளது. ஆனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது எந்தவொரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பணிபுரிவதில்லை. பிஎஸ்என்எல் மட்டுமே தன் பணியைச் செம்மையாகச் செய்து வருகிறது. ஆனால் அந்த நிறுவனத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகரான தில்லியில் பிஎஸ்என்எல் சேவை முழுமையாகக் கிடைப்பதில்லை.
நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான ஏழை மக்களுக்கு வேலை கொடுக்கும் உரிமையை அடிப்படையாகக் கொண்டு, 100 நாள் வேலை என்கிற மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை உலகப் பொருளாதார நிபுணர்கள் பாராட்டி, அதற்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் அவ்வாறு நிதியை காலத்தே ஒதுக்காமல் அந்த ஏழை எளிய மக்களுக்கு உள்ள உரிமையை இந்த அரசு பறித்து வருகிறது. அவர்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 150 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருந்து வருகிறது.
தென்னிந்தியாவின் கும்ப மேளா என்று அழைக்கப்படும் மகா மகம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அடுத்த மகாமகம், 2028இல் நடைபெறவுள்ளது. பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொது மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்திட தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சோழர் காலத்து ஆலயங்களை மாநில அரசு, புதுப்பித்து வருகின்றது. இதற்கும் ஒன்றிய அரசு சிறப்பு நிதி ஒதுக்கி ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நான் சார்ந்த தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலான ரயில்வே பாதை, விழுப்புரம்-தஞ்சை இரயில்பாதை இரட்டை இரயில்பாதையாக இன்னமும் மாற்றப்படவில்லை. அதே போல் மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதையைப் புதுப்பிக்கும் கோரிக்கையும், சென்னை-தஞ்சாவூர் இடையே இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் விட வேண்டும் என்கிற கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகின்றன. இவற்றை உடனே முடிக்க வேண்டுமென இந்த மன்றத்தில் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும் ஒன்றிய அரசு நிறுவனங்களான ரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தங்கள் மூலமாக வைக்க விரும்புகிறேன்.
தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலம் கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், அங்கு தொழில் துவங்குவது சாத்தியம் இல்லை. அதனால் விவசாயம் சார்ந்த மாடு வளர்ப்பு, பால் பதப்படுத்துதல், மீன் வளர்த்தல், உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், நெல் அரவை தொழிற்சாலை, கடலை, தேங்காய், எள் போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழிற்சாலைகளை மேற்கொள்ள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக ஒன்றிய அரசு இருந்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனை தனிநபர் தீர்மானமாக இந்த அவையில் நான் தாக்கல் செய்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளின் மூலமாகக் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஈட்டியுள்ளபோதிலும் அவற்றை சி.எஸ்.ஆர். முறை மூலமாக சரியான விகிதத்தில் அவை தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளித்திடவில்லை என்பதை நான் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், சி.எஸ்.ஆர். திட்டத்தை அமல்படுத்தும்போது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபின், கலால் வரி எடுக்கப்பட்டுவிட்டதால், கரும்பு வளர்ச்சி நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக கரும்பு பயிரிடுவதால், நெல்லைப் போல் கரும்பு விவசாயிகளுக்கும் மானியங்கள் வழங்கிட கரும்பு வளர்ச்சி நிதியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தஞ்சை மாவட்டத்தில் தனியார் கரும்பாலைகள் மூடப்பட்டுவிட்டதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிப்பைப் போக்கும் விதத்தில் மூடப்பட்ட கரும்பாலைகளைத் திறப்பதற்கு, மாநில அரசுடன் கலந்து பேசி ஒன்றிய அரசு நிதி உதவி செய்திட வேண்டும்.
தஞ்சை டெல்டா மாவட்டத்தில் ரயில்வே நிலையங்கள் அருகே பயன்படுத்தப்படாத நிலங்கள் உள்ளன. அதில் நெல் கொள்முதல் செய்திட வேண்டும்.
நெல் மற்றும் இதர பொருட்களை ரயில்வே மூலம் எடுத்துச் செல்ல வசதியாக ரயில்வே துறை மூலம் குடோன் அமைத்தால் ரயில்வேக்கு வருமானம் கிடைத்திடும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களை டிஜிடல் கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எஸ். கல்யாணசுந்தரம் பேசினார்.
(ந.நி.)
Subscribe to:
Posts (Atom)