Showing posts with label சீத்தாராம் யெச்சூ. Show all posts
Showing posts with label சீத்தாராம் யெச்சூ. Show all posts

Sunday, December 5, 2021

வேளாண் சட்டங்கள் ரத்து ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி -சீத்தாராம் யெச்சூரி

 


வேளாண் சட்டங்கள் ரத்து

ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி

-சீத்தாராம் யெச்சூரி

[இடதுசாரிக் கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக உறுதியுடனும் உரக்கவும் விமர்சனம் செய்து வந்தன. இடதுசாரிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். அதேபோன்று, இவ்வாறான இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாகத்தான், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் மக்கள் ஆதரவு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இடதுசாரிக் கட்சிகள், நவீன தாராளமய சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்து, குறிப்பாக விவசாயத்தின்மீது அது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் குறித்து, மக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றனர்.

ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் தலைகீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், அது ஓர் அரசியல் சந்தர்ப்பவாதமே என்றும் விவரித்திருக்கிறார். அவரது நேர்காணலின் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சம்பந்தமாக பிரதமரின் அறிவிப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: தொடர்ந்து ஓராண்டு காலமாக வரலாறு படைத்திடும் விதத்தில் அமைதியாகப் போராடிவந்த நம் விவசாயிகளுக்கு இது ஒரு மகத்தான வெற்றியாகும்.  மிகவும் வீறாப்புடன் இருந்து வந்த மோடி அரசாங்கம் தன் வீறாப்புத்தனத்தை விட்டுக்கொடுத்து இறங்கிவரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசாங்கத்தாலும், மாநிலங்களில் உள்ள பாஜக-வின் அரசாங்கங்களாலும், விவசாயிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்துவிதமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் தகர்த்தெறிந்து வெற்றி பெற்றிருக்கிறது. தில்லியின் கடுங்குளிரிலும்  போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு எதிராக ஆட்சியாளர்கள் வாட்டர் கேனன்கள் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். விவசாயிகள் போராடுவதற்காக தில்லியை நோக்கி வருவதைத் தடுப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை ஏற்படுத்தினார்கள்.  பல இடங்களில் போராடும் விவசாயிகள் குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்கப்பட்டனர். அவர்களைத் தில்லிக்குள் வரவிடாதவாறு கைது செய்தனர். போராடும் விவசாயிகளை, காலிஸ்தானிகள் என்றும், தேச விரோத பயங்கரவாதிகள் என்றும், பிரிவினை வாதிகள் கும்பல் என்று பொருள்படும் துக்டே துக்டே கும்பல் என்றும் முத்திரை குத்தினர். மோடி மிகவும் கீழ்த்தரமான முறையில் “போராட்டத்தால் ஜீவிப்பவர்கள்” (Andolan Jeevis”) என்று கிண்டலடித்தார். இவ்வாறு இவர்கள் எடுத்த நடவடிக்கைள் அனைத்தையும் முறியடித்து, தில்லியின் எல்லையில் போராடிய விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவும் நாளுக்குநாள் அதிகரித்தது. இவ்வாறான மக்களின் ஆதரவு நாடு முழுதும் எதிரொலித்தது. மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களிலும் இது எதிரொலித்தது.

பாஜக-வினர் வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயமும் இவ்வாறு வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதற்கான ஒரு காரணிதான். உண்மையில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நேர்மையற்ற ஒன்றாகவும், முழுமையான தேர்தல் சந்தர்ப்பவாதம் என்றும்தான் பார்க்க வேண்டும். ஆயினும், இவ்வாறு பாஜக மேற்கொண்ட முடிவானது அக்கட்சிக்கு ஆதாயம் அளிக்குமா என்பது சந்தேகமே.  விவசாயிகளின் அமைதியான போராட்டம் நாளுக்கு நாள் வீர்யம் அடைந்துகொண்டிருந்ததும், விவசாயிகளின் உறுதியும்தான் அரசாங்கத்தைப் பணிய வைத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்திருக்கிறது. இந்த வெற்றி, ஜனநாயகத்திற்கான வெற்றி, ஜனநாயக உரிமைகளுக்கான வெற்றி, குடிமை உரிமைகளுக்கான வெற்றியாகும். அமைதியாகப் போராடுபவர்கள் மீது ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரத் தாக்குதல்களும், பாசிஸ்ட் தாக்குதல்களும் அதிவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், அரசமைப்புச்சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள நிலையிலும் இது நடந்திருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

கேள்வி: வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளின் ஏகபோகங்களுக்காகவும் கொண்டுவரப்பட்டன என்று நம்பப்படுகிறது. நாட்டின் சொத்துக்கள் தனியார் கார்ப்பரேட்டுகளிடமும், தனியார் ஏகபோகங்களிடமும் தாரைவார்ப்பதற்கு எதிராக இடதுசாரிக்கட்சிகள் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். அவை எதற்கும் அசைந்துகொடுக்காத அரசாங்கம், இப்போது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தினை அடுத்து, வளைந்து கொடுத்திருக்கிறது. விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், ஜனநாயக இயக்கங்களுக்கு நம்பிக்கையை அளித்திருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. மோடி அரசாங்கம் பின்வாங்கியிருப்பது, ஜனநாயக இயக்கங்களை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்பதற்கான சமிக்ஞையேயாகும். இது, இதர ஜனநாயகப் போராட்டங்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகவும், உலக அளவில் வேளாண் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர்களுக்காகவும் கொண்டுவரப்பட்டதுதான். இந்தியாவின் பொருளாதார இறையாண்மையை சரண் செய்யும் விதத்தில் மோடி அரக்கத்தனமாகப் பின்பற்றும் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கைகளின் ஒரு பகுதியேயாகும். இந்தச் சட்டங்களின் நோக்கம், வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலும், கார்ப்பரேட்மயப்படுத்துதலுமேயாகும். அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை ஒழித்துக்கட்டியதற்குக் காரணம், வேளாண் விளைபொருள்களை பதுக்கல் பேர்வழிகள் பதுக்கிவைத்து, செயற்கைமுறையில் பற்றாக்குறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவேயாகும். பணவீக்கத்தை ஏற்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வகை செய்வதென்பது, நிச்சயமாக மக்களைப் பட்டினிக் கொடுமைக்குத் தள்ளிவிடும் சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும். இவற்றின் விளைவாக இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களைக் பட்டினிச் சாவுகளிலிருந்து பாதுகாப்பது போன்ற நிலைமைகள் ஆபத்திற்கு உள்ளாகும். ஏற்கனவே, இந்தியா, உலக பசி-பட்டினி அட்டவணையில் தொடர்ந்து சரிந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்நிலைமை மேலும் மோசமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பொதுத்துறை நிறுவனங்களையும், கனிம வளங்களையும், நாட்டின் செல்வாதாரங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு எதிராக எண்ணற்றப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவது தொடர்கின்றன.  துறைவாரியாக பெரிய அளவிலான வேலை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட மத்தியத் தொழிற்சங்கங்களின் மகாசம்மேளனம் அறைகூவல்கள் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர இடதுசாரிக் கட்சிகளும் இத்தகைய தொழிற்சங்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஆதரவும் ஒருமைப்பாடும் அளித்து வருகின்றன. இத்தகைய போராட்டங்கள், இனிவருங் காலங்களில் மேலும் மேலும் வலுப்பெறும்.

விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இப்போராட்டங்களில் தொழிலாளர் வர்க்கமும், விவசாயத் தொழிலாளர்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி யமையாகும். போராட்டங்களின்போது விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காட்டிய ஒற்றுமை, மதச்சார்பின்மை ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோளாகவும் திகழும்.  

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான காரணம், பஞ்சாப் மற்றும் ஹர்யானா மாநிலங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான் என்று நாட்டில் ஒரு பிரிவினர் நம்புகிறார்களே. இது தொடர்பாக உங்கள் புரிதல் என்ன?

சீத்தாராம் யெச்சூரி: இது ஒரு கற்பனையான நம்பிக்கை. உண்மையில் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள துஷ்பிரச்சாரம். சந்தைப்படுத்தலும், கார்ப்பரேட்மயப்படுத்தலும் ஒட்டுமொத்த விவசாயிகளையும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. நாட்டிலுள்ள விவசாயிகளில் 85 சதவீதத்தினர், இரண்டு ஏக்கர் நிலத்திற்கும் கீழே உள்ள விவசாயிகள்தான். இவர்கள் சிறுகுறு விவசாயிகளாவர். மோடி அரசாங்கம் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் இவர்களின் நிலங்களைக் கார்ப்பரேட்டுகள் விழுங்குவதற்கு வகை செய்தது. விளைவாக சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து,  தாங்கள் இதுகாறும் அனுபவித்துவந்த தங்கள் சொந்த நிலங்களிலேயே விவசாயத் தொழிலாளர்களாக வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இன்றைய தினம் குறைந்தபட்ச ஆதார விலை ஒருசில மாநிலங்களில் மட்டுமே வலுவாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் ஒருசில விளைபொருள்களுக்கு மட்டுமேயாகும். குறைந்தபட்ச ஆதார விலையில் அனைத்து விளைபொருள்களையும் விற்பதற்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என்கிற கோரிக்கை அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கக்கூடியதாகும். அதனால்தான் இந்தக்கோரிக்கையை பணக்கார விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர்சாதி விவசாயிகள், இந்து-முஸ்லீம் விவசாயிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஆதரித்து, வரலாறு படைத்திட்ட போராட்டத்தை நடத்தினார்கள். கார்ப்பரேட்டுகள் இந்திய விவசாயத்தையும் அதன் உற்பத்தியையும் கையகப்படுத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக இவ்வாறு விவசாயிகள் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுபட்டு நின்று, போராடி, வெற்றிபெற்றுள்ளார்கள்.

கேள்வி: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது, பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னடைவு என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறதே, இந்த வாதத்தில் ஏதேனும் தகுநிலை (merit) இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: இந்த வாதத்தில் நிச்சயமாக எவ்விதமான தகுநிலை(merit)யும் கிடையாது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம், பெரும்பான்மையான மக்களின் கைகளில் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதேயாகும். இது பொருளாதாரத்தின் உள்நாட்டுத் தேவையை மந்தமாக்குகிறது. இதன் காரணமாக பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன, பல மூடப்பட்டும் விட்டன. ஏனெனில் இவை உற்பத்தி செய்த பொருள்களை வாங்குபவர்கள் இல்லை.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தின்போது, இந்தப் பிரச்சனை, மேலும் மோசமாகியது. இந்த நிலையில் ஒன்றிய அரசாங்கம், பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் வரிச் சலுகைகளை வாரி வழங்கிய அதே சமயத்தில், சாமானிய மக்களை விலைவாசி உயர்வின் மூலமாகவும், குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களை நாள்தோறும் உயர்த்துவதன் மூலமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. இது, மக்களின் வாங்கும் சக்தியை மேலும் மோசமாக்கியது. தாங்கள் ஜீவித்திருப்பதற்குத் தேவையான பொருள்களைத் தவிர வேறெதையும் வாங்கிட அவர்களால் இயலவில்லை.

ஆட்சியாளர்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் மோசமாக்கின. ஏனெனில், நாம் முன்பே விவாதித்ததுபோன்று, விவசாயிகளின் வருமானம் மேலும் மோசமாகி, அவர்கள் நுகர்பொருள்கள் வாங்குவதற்கான சக்தியற்று இருந்திடுவார்கள். நாட்டில் பெரிய அளவிற்கு சந்தை என்பது கிராமப்புற இந்தியாவில்தான் இருக்கிறது. அங்கே வாழும் மக்கள், பணக்கார விவசாயியிலிருந்து சிறுகுறு விவசாயிகள் வரை,  பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில், நம் பொருளாதாரத்தில் மக்களின் தேவை என்பது மேலும் சுருங்கிவிடும். இது நடப்பு பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்திடும்.

ஏதேனும் நடக்கும் என்றால் அது, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததன் மூலம், மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதன்மூலம் உள்நாட்டுத் தேவை வீழ்ச்சியடைவது ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கட்டுப்படுத்தப்படும் என்பதேயாகும்.

கேள்வி: விவசாயிகள் இயக்கத்தில் எண்ணற்ற விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து வந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். இத்தகைய ஒருமைப்பாடு நீடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இது மேலும் ஒன்றுபடுவதற்கும் நீடிப்பதற்கும் இடதுசாரிகளின் பங்கு எவ்விதத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மேலும் பல பொதுவான மற்றும் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்களில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்பட்டன. நவம்பர் 22 அன்று லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் மகா பஞ்சாயத்தைப் பார்க்கும்போது, விவசாயிகளின் மத்தியில் இத்தகைய ஒற்றுமை மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல, விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களுக்கிடையே போராட்டங்களில் காட்டிய ஒற்றுமையின் பலம், எதிர்வருங்காலங்களில் தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) என்ற பெயரில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும், நாட்டின் சொத்துக்கள் தனியார்மயம் மூலமாகச் சூறையாடப்படுவதை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களுடன் ஒரு பொதுவான போராட்டத்திற்கு இட்டுச்செல்லும். நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் வலுவினை உயர்த்திப்பிடிக்கிறது.

விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம்கூட தெரிவிக்க மோடி முன்வராத நிலையில், அவர்களுக்காக எவ்விதமான இழப்பீடும் வழங்குவார் என நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளின் குணாம்சம் வரவிருக்கும் காலங்களில் போராடும் மக்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்திடும்.

நேர்காணல் கண்டவர்: டி.கே.ராஜலக்ஷ்மி,

தமிழில்: ச.வீரமணி

நன்றி: ஃப்ரண்ட்லைன்

 

 

Friday, October 16, 2020

நாங்கள், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் உறுதியான பாதுகாவலர்கள் -சீத்தாராம் யெச்சூரி

 

 


நாங்கள், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் உறுதியான பாதுகாவலர்கள்

-சீத்தாராம் யெச்சூரி

 

1920 அக்டோபர் 17 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவிய நூற்றாண்டு தொடர்பாக கடந்த ஓராண்டாக அனுசரித்த கொண்டாட்டங்கள் இப்போது நிறைவு பெற்றுக்கொண்டிருக்கின்றன.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு தழுவிய அளவில் நீட்டிக்கப்பட்ட சமூக முடக்கம் மற்றும் அதன் காரணமாக தனிநபர் இடைவெளி போன்று ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நூற்றாண்டு விழாவை மிகவும் வலுவாகக் கொண்டாடமுடியாத விதத்தில் கடுமையாகப் பாதித்தன. எனினும், நமக்கிருந்த குறைந்தபட்ச வரையறைகளுக்கு உட்பட்டு, ஊடகங்களின் மூலமாகவும், டிஜிட்டல் தொடர்புகள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும்  கடந்த நூற்றாண்டுக் காலத்தில் இந்திய வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் மேற்கொண்ட பங்களிப்புகளை உயர்த்திப்பிடித்து பல்வேறு இயக்கங்களை கட்சி நடத்தி இருக்கிறது.

 

நிகழ்ச்சிநிரலை வடிவமைத்தல்

 

விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் கணக்கிலடங்காத அளவிற்கு புரட்சியாளர்களும், தியாகிகளும் செய்திட்ட அளப்பரிய தியாகங்களின் மூலமாக இந்திய வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் கட்சி வீரம் செறிந்த போராட்டங்களுக்கு எப்படியெல்லாம் தலைமை தாங்கின என்று குறிப்பிட்டிருக்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி, மக்களின் உண்மையான பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவந்ததிலும், தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலுக்கான பிரச்சனைகளை வடிவமைப்பதிலும் பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது.

இவற்றின் மத்தியில், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையை அங்கீகரித்து, நம் நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துவதும், அங்கீகரிப்பதும் அவசியம் எனக் கருதி, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் மொழிவழி மாற்றியமைப்பதற்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியது. இந்தப் போராட்டங்களில் மற்றவர்களைவிட கம்யூனிஸ்ட்டுகள் முன்னணியில் நின்றார்கள்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்டு நடைபெற்ற வீரம் செறிந்த புகழ்பெற்ற நிலப் போராட்டங்கள் நிலச் சீர்திருத்தங்களுக்கான பிரச்சனையை தேசிய அளவிலான நிகழ்ச்சிநிரலாகக் கொண்டு வந்தது.  இதில் மிகவும் முக்கியமானது, தேசிய வாதத்தின் பிளவுவாத மற்றும் பிரத்தியேகக் கருத்துக்களுக்கு எதிராக (against sectarian and exclusivist notions of nationalism),  உள்ளீடான தேசியவாத பரிணாம வளர்ச்சியில் (in the evolution of inclusive nationalism) இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்புகள் இருக்கின்றன.

 

தொலைநோக்குப் பார்வைகளுக்கிடையேயான போராட்டம்

 

விடுதலைப் போராட்டக் காலத்தின்போது, உள்ளீடான இந்தியாவின் கருத்தாக்கத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து,  நாட்டில் மூன்று விதமான தொலைநோக்குப் பார்வைகளுக்கு இடையே தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்தன.  இதில் பிரதானமான காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்குப் பார்வை என்பது, அடைய இருக்கும் சுதந்திர இந்தியா, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருக்கும் என்பதாகும். கம்யூனிஸ்ட்டுகள், இதனுடன் ஒத்துப்போன அதே சமயத்தில், ஒருபடி முன்னே சென்று, அத்தகையதொரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு, முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையைப் பின்பற்றுமானால், நிலைத்து நிற்காது என்றும் கூறினோம். எனவே, கம்யூனிஸ்ட்டுகள் அடைய இருக்கும் அரசியல் சுதந்திரம், ஒவ்வொரு இந்தியனுக்கும் சமூக-பொருளாதார விடுதலையை விரிவாக்கிடும் விதத்தில், விரிவாக்கப்பட வேண்டும் என்றும், அது சோசலிசத்தின் கீழ் மட்டுமே சாத்தியம் என்றும் கூறியது. 

இவ்விரண்டு தொலைநோக்குப் பார்வைகளுக்கும் விரோதமான மற்றொரு மூன்றாவது தொலைநோக்குப் பார்வையும் இருந்தது. அது, அடைய இருக்கும் சுதந்திர இந்தியா அதன் மக்களின் மதஞ்சார்ந்த இணைப்புகளினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றது. இந்தத் தொலைநோக்குப் பார்வையில் இரு விதப் போக்குகள் இருந்தன.   முஸ்லீம் லீக் கட்சி, ‘இஸ்லாமிய அரசு’ கோரியது. ஆர்எஸ்எஸ், ‘இந்து ராஷ்ட்ரம்’ கோரியது. துரதிர்ஷ்டவசமான முறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உதவியுடனும், உடந்தையுடனும் நாடு பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் பிரிவினைக்கு உள்ளாக்கப்பட்டு, முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தானை ‘இஸ்லாமிய அரசாக’ மாற்றும் தன்னுடைய தொலைநோக்குப் பார்வையில்  வெற்றி பெற்றது. ஆனால் இதர பகுதிகளில் இன்றுவரையிலும் அதன் பாதிப்புகள் தொடர்கின்றன. சுதந்திரம் பெற்ற சமயத்தில், ஆர்எஸ்எஸ், தங்கள் தொலைநோக்குப் பார்வையை எய்த முடியாது தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுதந்திரத்திற்குப்பின் அமைந்திட்ட மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை, தங்களுடைய ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது. இன்றையதினம் இம்மூன்று தொலைநோக்குப் பார்வைகளுக்கும் இடையேயான போராட்டம், சித்தாந்தப் போராட்டங்களாகவும், அரசியல் மோதல்களாகவும் இந்த வழியில், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்.

 

மதச்சார்பற்ற ஜனநாயகம் 


கம்யூனிஸ்ட் கட்சியின் தொலைநோக்குப் பார்வை, மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் தனித்துவம் மிக்க, வெவ்வேறான அம்சங்கள் இல்லை  என்பதையும், மாறாக அவை ஒருங்கிணைந்தவை என்கிற உண்மையை அங்கீகரித்திருந்தது.  இந்தியாவின் எதார்த்த நிலைமையில் அவை உள்ளார்ந்த முறையில் ஒருங்கிணைந்தவைகளாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து அனைத்துத் தரப்பினருக்கும் சமத்துவமும் பாதுகாப்பும் அளிப்பது, அதிலும் குறிப்பாக மதச்சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பது, ஜனநாயகத்தின் ஓர் அவசியமான மூலக்கூறாகும். அதேபோன்று, ஜனநாயக உரிமைகளோ, குடிமை உரிமைகளோ இல்லாமல், மதச்சார்பின்மை நிலைத்திருக்க முடியாது. உண்மையில், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள பொருளாதார சமத்துவம், அரசியல் சமத்துவம் மற்றும் சமூக சமத்துவம் ஆகிய அனைத்தும், துடிப்புள்ள ஜனநாயகம் இல்லாமல் நிறுவப்பட முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, இந்தியாவில் இத்தகைய மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மிகவும் உறுதியுடன் உயர்த்திப்பிடிப்பவர்களாக தொடர்கிறார்கள்.

உண்மையில், 1920இலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டவுடன், கட்சியில் சார்பில் எம்.என். ராய், 1920இல் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த மதக்கலவரங்களுக்குப் பின்னணியில், மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்தவதற்கான மாமருந்து, அனைத்து சாதியினரும் அனைத்து மதத்தினரும் இணைந்த உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமை மட்டுமே என்று எழுதினார். அன்றிலிருந்து, கடந்த நூறாண்டுகளாக, கம்யூனிஸ்ட்டுகளின் பணி, இதற்கு அழுத்தம் கொடுத்து, ‘உழைக்கும் மக்களின் ஒற்றுமையை’ வலுப்படுத்தும் விதத்திலேயே இருந்து வந்திருக்கிறது.

1920இல் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபின்னர், நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் ஒவ்வொரு மாநாட்டிலும், தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சிநிரல் என்னவாக இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓர் அறிக்கை (manifesto) சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு 1921 அகமதாபாத் மாநாட்டின்போதும், 1922 கயா மாநாட்டின்போதும் பின்னர் நடைபெற்ற மாநாடுகளிலும் அளிக்கப்பட்டது.    

இவற்றிற்கு மத்தியில், 1926 குவஹாத்தியில் நடைபெற்ற மாநாட்டில் அளிக்கப்பட்ட அறிக்கையில், நாட்டில் அதிகரித்துக்கொண்டிருக்கும் மதவெறி மோதல்கள் குறித்து தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்திட வலியுறுத்தி அதில் கூறியிருந்ததாவது:

கடந்த சில ஆண்டுகளாக நாட்டையே பேரழிவிற்கு உள்ளாக்கியுள்ள வகுப்புவாத மோதல்களால், பலர் ஊக்கமிழந்துள்ளார்கள். நிச்சயமாக இது ஓர் ஊக்கமிழக்கச்செய்யும் நிகழ்வுதான். ஆனாலும், மீண்டும் ஒருமுறை மக்களின் கட்சி, இதற்குத் தீர்வைக் காணும். உயர் வர்க்கத்தார் தங்களுடைய உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடக்கூடிய அதே சமயத்தில், இரு சமூகத்திலும் இருக்கின்ற வெகுமக்கள், பொதுவாகவே ஒரு முக்கியமான அம்சத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதுதான் சுரண்டல். இந்து தொழிலாளர்களும், முஸ்லீம் தொழிலாளர்களும் ஒரே தொழிற்சாலையில் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். இந்து விவசாயிகளும், முஸ்லீம் விவசாயிகளும் பக்கத்தில் பக்கத்தில்தான் நிலத்தில் உழுகிறார்கள். எனினும் இருவரும் சேர்ந்தே நிலப்பிரபுவாலும், பணலேவாதேவிக்காரராலும், ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகளாலும் சமமான அளவிலேயே சூறையாடப்படுகிறார்கள். முஸ்லீம் தொழிலாளி, தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே முஸ்லீம் முதலாளியால் கூடுதலாக சலுகை எதுவும் அளிக்கப்படுவதில்லை. அதேபோன்றே இந்து நிலப்பிரபு, தன்கீழ் உள்ள இந்து குத்தகை விவசாயியிடமிருந்து, முஸ்லீம் விவசாயியிடம் பெறக்கூடிய வாரத்தை விடக் குறைவாக ஒன்றும் பெற்றுக்கொள்வதில்லை.

இதே விதிதான் பெரிய அளவில் (சிறிய அறிவுஜீவிகள், சிறிய வர்த்தகர்கள், கைவினைஞர்கள் போன்ற) மத்திய தர வர்க்கத்தினர் சுரண்டப்படுவதிலும் பிரயோகிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களில் சுரண்டல் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள 98 சதவீத மக்கள் மதவெறி மோதல்களில் தங்களைச் சம்பந்தப்படுத்திக்கொள்வதற்கு எவ்விதமான காரணமும் கிடையாது. அவர்களின் பொருளாதார நலன்களை உணர்வுபூர்வமாக அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவிடுவோம்.  தங்களின் பொது எதிரியை, தங்களைச் சுரண்டும் சக்திகளை, எதிர்ப்பதற்கான போராட்டத்திற்கு அவர்களைத் துணிவுடன் தலைமையேற்கச் செய்திடுவோம். அதன்மூலம்  வகுப்புவாத மோதலைத் தூண்டும் நயவஞ்சகக் கொள்கையின் ஆணிவேரை வெட்டி வீழ்த்திடுவோம். இதனை ஒரேயிரவில் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், தேசிய இயக்கத்தின் நாடி நரம்புகளில் ஊடுருவியிருக்கின்ற மதவெறி என்னும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதற்கு வேறெந்தப் பரிகாரமும் கிடையாது.            

 

மதச்சார்பின்மை

 

கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கைவழி நிலைப்பாடு: மதச்சார்பின்மை என்பதன் பொருள் அரசியலிலிருந்து மதத்தைத் தனியே பிரிப்பது என்பதேயாகும். இதன் பொருள் அரசு என்பது மத நம்பிக்கையைப் தெரிவு செய்துகொள்ளும் ஒவ்வொரு தனிநபரின் உரிமையையும் எவ்விதத்தயக்கமுமின்றிப் பாதுகாக்கும் அதே சமயத்தில், அரசு எந்தவொரு மதத்தையும் சார்ந்திருப்பதோ, பிரச்சாரம் செய்வதோ கூடாது. நடைமுறையில், இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பின்னர், மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதங்களும் சமம் என்கிற முறையில் வரையறுக்கப்படக்கூடியவிதத்தில் சுருக்கப்பட்டது. இதற்குள் ஒளிந்திருக்கும் ஒருதலைப்பட்சமான போக்கு என்பது, பெரும்பான்மையோரின் மத நம்பிக்கையை நோக்கி அரசை இழுத்துச் செல்வது என்பதாகும்.  உண்மையில், இதுதான் மதவெறி சக்திகளுக்கும், அடிப்படைவாத சக்திகளுக்கும் இன்றையதினம் தங்கள் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்கு வாய்ப்பாக  அமைந்தது.

எனவே, கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பதோ, அல்லது மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பதோ, இந்தியாவின் உள்ளீடான தேசியவாதத்தைப் பாதுகாப்பதற்கும், அத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் முக்கியம் மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும், அதிலும் குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு மத்தியில் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் சோசலிசத்தின் குறிக்கோளை நோக்கி அவர்களை முன்னேற வைப்பதற்கும் மிகவும் முக்கியமாகும். இத்தகு ஒற்றுமையை வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. இந்தியாவின் வரலாற்றை பின்னடைவு மற்றும் பின்தங்கிய நிலைக்கு எடுத்துச்செல்கிறது.   

 

மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான போராட்டம்

 

இந்தியாவில், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2000 ஆண்டு கட்சித் திட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மதச்சார்பற்ற அடித்தளங்களுக்கான அச்சுறுத்தல், மத்தியில் வகுப்புவாத மற்றும் பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் பயமுறுத்தும்விதத்தில் மாறி இருக்கிறது. அரசின் நிறுவனங்கள், நிர்வாகம், கல்வி அமைப்பு மற்றும் ஊடகங்கள் அனைத்திலும் மதவெறி நஞ்சை ஏற்றுவதற்கான முயற்சிகள் படிப்படியாகத் திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. (பத்தி 5.7)

மேலும், கட்சித் திட்டத்தில், கட்சியின் கடமையாகக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: மதஞ்சார்ந்த வகுப்புவாதத்தின் அடிப்படையில் பாசிஸ்ட் போக்குகள் அதிகரித்துவரும் ஆபத்து அனைத்து மட்டங்களிலும் உறுதியுடன் எதிர்த்து முறியடிக்கப்பட்டாக வேண்டும். (பத்தி 5.8)

பாஜக, அரசாங்கத்தில் அமர்ந்திருப்பது இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு ஆழமான முறையில் ஆபத்துக்களைக் கொண்டுவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, கட்சித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சி,  பிரிவினை மற்றும் வகுப்புவாத மேடையுடன், பிற மதங்களுக்கு எதிராக வெறுப்பையும், சகிப்பின்மை மற்றும் அதிதீவிர தேசியவெறி கொண்ட பிற்போக்கு சாராம்சங்களுடனும் கூடிய ஒரு பிற்போக்கான கட்சியாகும். பாஜக ஒரு சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல. இது, பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் வழிகாட்டக்கூடிய, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கட்சியாகும். பாஜக அதிகாரத்தில் இருக்கும் போது, ஆர்எஸ்எஸ் அரசு அதிகாரத்தின் அனைத்துக் கருவிகளிலும் மற்றும் அரசு எந்திரத்திலும்  வழியேற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தம் கடந்தகாலப் பழக்க வழக்கங்களை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்து ராஷ்ட்ரத்தை நிறுவ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தை நிராகரிக்கிறது. (பத்தி 7.14)

 

கார்ப்பரேட் மதவெறிக் கூட்டணி

இன்றைய நடப்புப் பின்னணியில், 2019 பொதுத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தபின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, ‘இந்திய ஆளும் வர்க்கங்கள் இப்போது ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மிக அதிகமான அளவில் மாறிக்கொண்டிருக்கும் விதத்தில் ஒரு கார்ப்பரேட் - மதவெறிக் கூட்டணியை ஏற்படுத்தி இருக்கின்றன’ என்று குறிப்பிட்டது. மத்தியக்குழுவின் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டதைப்போல பின்னர் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள் இவற்றைத் தெளிவானமுறையில் நிரூபித்துள்ளன.

மேலே கூறிய அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக் குழு அறிக்கைகள், எந்த அளவிற்கு, ஆர்எஸ்எஸ்/பாஜக/மோடி தலைமையிலான அரசாங்கம், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றையும் அதனால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தையும், மக்களின் நடவடிக்கைகள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் பயன்படுத்திக்கொண்டு,   இந்தியாவின் அரசமைப்புச்சட்ட ஒழுங்கை இடித்துத் தரைமட்டமாக்கிடக்கூடியவிதத்தில் முழுமையாகத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.   பெரிய அளவில் தாராளமயம், நாட்டின் சொத்துக்களை சூறையாடுதல், நாட்டின் விவசாயத்தை அந்நிய வர்த்தக நிறுவனங்களுக்கு அடகு வைத்திடும் விதத்தில் புதிய வேளாண் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருப்பது ஆகியவற்றின் மூலமாக நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றி, தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள் மற்றும் அனைத்து  உழைக்கும் மக்களின் உரிமைகள் மீதும் கடுமையாகத் தாக்குதல்கள் தொடுத்திருக்கிறது, மதவெறித் தீயை மிகவும் பயங்கரமான முறையில் கூர்மைப்படுத்தி, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துவேறுபாடு கொண்டவர்களையெல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரை குத்தி, அரக்கத்தனமான சட்டங்கள் மூலமாகக் கைது செய்திருக்கிறது, குடிமை உரிமைகள் மீதும், மனித உரிமைகள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது. இவ்வாறு ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள் அனைத்தும் மக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைகளின்மூலமாக தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

இதற்கு நாம், மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டமும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டமும் தனித்தனியானவை அல்ல என்பதையும், அவை நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான ஒருங்கிணைந்த போராட்டத்தின் ஒரு பகுதியே என்பதையும், உழைக்கும் வர்க்கத்தின் லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான போராட்டங்களின் ஒரு பகுதியே என்பதையும் அங்கீகரிப்பது அவசியமாகும். இன்றைய பின்னணியில், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும், அதனால் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டங்களுடனும் பிரிக்கமுடியாதவைகளாகும். அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றை முன்னெடுத்துச் சென்று வெல்வதும் அவசியமாகும்.  கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதைக் கடந்த ஓராண்டு காலமாக அனுசரித்ததன் மூலம், நாட்டையும், உழைக்கும் மக்களையும் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்திட நாம் நம் உறுதியை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும்.

மோடி அரசாங்கம் இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பிள்ளையாக மாற்றிக்கொண்டிருப்பதால், இது ஒரு வல்லமை மிக்க போராட்டமாகும்.  நம்முடைய புரட்சிகர லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு,  இவ்வாறு நம்மீது ஏவப்பட்டுள்ள பன்மடங்கு சவால்களையும் எதிர்த்துநின்று முறியடித்திட நம்மை நாம் தயார்செய்துகொள்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.

(தமிழில்: ச. வீரமணி)  

 

 

Monday, September 28, 2020

பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா - சீத்தாராம் யெச்சூரி

 


பகத்சிங் பிறந்தநாள் ஆண்டுவிழா:

(பகத்சிங்கிற்கும் நமக்கும் இடையே ஒவ்வோராண்டும் இடைவெளி அதிகரித்தபோதிலும், அவரின் உணர்வுகள் நமக்கு மிகவும் நெருக்கமாகிக்கொண்டிருக்கின்றன)



சீத்தாராம் யெச்சூரி

(தமிழில்: ச.வீரமணி)

 

2020 செப்டம்பர் 28, இந்தியாவின் மாபெருமளவில் புகழ்பெற்ற தியாகி பகத்சிங்கின் 113ஆவது ஆண்டு பிறந்த தினமாகும். ஒவ்வோராண்டும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தபோதிலும், அவர் தன் வாழ்நாளில் ஏற்படுத்திய பங்களிப்புகளின் அலைகள் இன்றையதினம் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய விதத்தில் மிகவும் நெருக்கமான முறையில் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு, பகத்சிங்கால் கூர்நோக்கி அவதானிக்கப்பட்ட பல அம்சங்கள் இன்றைய நாட்டு நடப்புகளுடன் பொருந்தக்கூடியதாகவும், அவற்றுக்கு எதிராக அவசரகதியில் நாம் செயல்படவேண்டிய நேரத்திலும் வந்திருக்கின்றன. பகத்சிங், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் குறுகிய காலமே, அதாவது 23 வயது வரையிலுமே, வாழ்ந்திருந்தபோதிலும், நாம் மிகவும் வியக்கும் விதத்தில் சமூகத்தின் அனைத்துவிதமான பிரச்சனைகள் மீதும் அளவற்ற பங்களிப்பினை ஏற்படுத்திச் சென்றிருப்பது, நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. உண்மையில் பகத்சிங் சமூக வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொட்டிருக்கிறார். அவர் ஏராளமாகப் படித்தார், அவர்தன் வாழ்நாளில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக்கொண்டார், சர்வதேச அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிப்போக்குகளை ஆழமாகவும் கவனமாகவும் பின்பற்றினார், உலகின் பல முனைகளிலிருந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் எழுத்துக்களிலிருந்து உத்வேகம் பெற்றார், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சிகர விடுதலைக்கான லட்சியத்தை உறுதியுடன் உயர்த்திப் பிடித்தார்.

பகத்சிங்கின் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் பின்னாட்களில் ஏராளமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இந்திய இளைஞர்களின் பல தலைமுறையினருக்கும் அவர் உத்வேகமாக விளங்குவது தொடர்கிறது. பகத்சிங்கின் வளமான பங்களிப்புகளின் மத்தியில், இன்றைய சமகால நிலைமையில் ஒருசில முக்கியமான அம்சங்கள் குறித்து இப்போது நாம் விவாதிப்பது அவசியமாகிறது.

தில்லி வெடிகுண்டு வழக்கு

இன்றைய இந்திய நாடாளுமன்றத்தில், அன்றைய தில்லி மத்திய சட்டமன்றத்தில், 1929 ஏப்ரல் 8 அன்று, எவருக்கும் தீங்கிழைக்காத வெடிகுண்டுகளை வீசியது நாட்டின் கவனத்தையும், உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக, இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையின் சார்பில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இது, கேளாச் செவியினரைக் கேட்க வைக்கும் விதத்தில் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறது. இத்தகைய இறவாப்புகழ் படைத்த வார்த்தைகள், இதேபோன்று வேறொரு நிகழ்வின்போது, தியாகி வைலண்ட் என்னும் பிரெஞ்சு அராஜகவாதி (anarchist) எழுப்பிய முழக்கமாகும். அதனை எங்களுடைய இந்த நடவடிக்கைக்கும் வலிமையாக நியாயப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்துக் கையாண்டிருக்கிறோம்.

இந்த வெடிகுண்டு வழக்கு, ‘வன்முறைக் கலாச்சாரத்தின்’ வெளிப்பாடு என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, பகத்சிங், தில்லி அமர்வு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பி.கே.தத்துடன் இணைந்து கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

சட்டமன்றத்தில் உள்ள எவராவது எங்களின் நடவடிக்கையில் ஏதேனும் அற்ப காயங்கள் அடைந்திருந்தாலோ அவர்களுக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கு எதிராகவோ மனக்கசப்போ அல்லது எவருக்கும் கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ எங்களுக்குக் கிடையாது. மாறாக, மனிதசமுதாயத்தின் வாழ்க்கை எங்கள் வார்த்தைகளைவிட புனிதமானது என்று நாங்கள் உயர்த்திப்பிடிக்கிறோம் என்பதை திரும்பவும் நாங்கள் கூறுகிறோம். எவரையும் காயப்படுத்த வேண்டும் என்பதைவிட மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் உயிரை விரைவில் நாங்கள் இழப்பதற்குத்தான் எங்களை நாங்கள் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்விதமான மனஉறுத்தலுமின்றி பிறரைக் கொல்லும் ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப்படையினர் போன்றவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் மனிதகுலத்தை நேசிக்கிறோம். எங்கள் பலம் அதில்தான் இருக்கிறது. நாங்கள் இந்த மனிதசமூகத்தைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம். அந்த அடிப்படையில்தான் வேண்டுமென்றே எவரும் இல்லாத சட்டமன்றத்தின் அறைக்கு வெடிகுண்டை நாங்கள் வீசினோம் என்று இப்போதும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எனினும் உண்மைகள் உரத்துப் பேசும், எங்கள் நோக்கம் எங்கள் நடவடிக்கையின் விளைவிலிருந்து தீர்மானிக்கப்படும்.

புரட்சி ஓங்குக (இன்குலாப் ஜிந்தாபாத்):

பகத்சிங்கும், அவருடைய தோழர்களும், இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சேனையும் மிகவும் தெளிவாக இருந்தனர். தங்களுடைய குறிக்கோள், பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது மட்டுமல்ல, இவ்வாறு பெறும் சுதந்திரம் பொருளாதார, சமூக மற்றும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களுக்கும் விரிவாக்கப்படக்கூடிய விதத்தில் முழுச் சுதந்திரமாக அமைந்திட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். வேறொரு சூழலில், பகத்சிங் கூறியதாவது: எங்கள் விடுதலை, பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து தப்பிப்பதை மட்டும் அர்த்தப்படுத்தவில்லை. இதன் அர்த்தம், முழுச் சுதந்திரம் - மக்கள், ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் சுதந்திரமாக ஒன்றிணையவேண்டும், மள அளவில் அடிமை மனப்பான்மை பெற்றிருப்பதிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்

பகத்சிங் மற்றும் பி.கே.தத் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்போது, நீதிமன்ற வாயிலுக்குள் நுழையும் சமயத்தில், ‘புரட்சி ஓங்குக’ (‘இன்குலாப் ஜிந்தாபாத்’) என்று முழக்கமிட்டவாறே நுழைவார்கள். பிரிட்டிஷ் நீதித்துறை நடுவர் அவர்களைப் பார்த்து, இந்த முழக்கத்தின் பொருள் என்ன என்று கேட்டார். புரட்சி என்ற வார்த்தையின் மூலம் நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்று கேட்டார். இவர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

“ ‘புரட்சி’ என்கிறபோது அதில் ரத்தவெறிபிடித்த சண்டையோ அல்லது தனிநபர் பழிவாங்கும் செயல் எதுவுமோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கிக் கலாச்சாரமும் அல்ல. ‘புரட்சி’ என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, வெளிப்படையாகவே அநீதியை அடிப்படையாகக்கொண்டுள்ள இப்போதை சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதேயாகும். உற்பத்தியாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த சமூகத்தின் அவசியமான கூறுகளாக இருக்கிறார்கள் என்றபோதிலும், அவர்களின் உழைப்பால் விளைந்த கனிகள், சுரண்டல்காரர்களால் சூறையாடப்படுகின்றன, அவர்களின் அடிப்படை உரிமைகள் பறித்துக்கொள்ளப்படுகின்றன. அனைவருக்காகவும் உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திடும் விவசாயி தன் குடும்பத்துடன் பட்டினி கிடக்கிறான். உலகச் சந்தைக்கு ஜவுளித்துணிகளை அளித்திடும் நெசவாளி தன் உடலை, தன் குழந்தைகளின் உடலை மூடி மறைத்திட துணியில்லாமல் திண்டாடுகிறான். அற்புதமான அரண்மனைகளைக் கட்டும் கொத்தனார்கள், கொல்லர்கள், தச்சர்கள், சேரிகளில் விலக்கப்பட்டவர்களாக உழன்றுகொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டலாளர்களும் தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் விரயம் செய்கின்றனர். இத்தகைய கொடூரமான சமத்துவமின்மையும், வாய்ப்புகள் வலுக்கட்டாயமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதும் இத்தகைய குழப்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. இந்த நிலைமை நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாது.  ஒருசிலர் மட்டும் சுகபோக வாழ்க்கை வாழும் சமூகத்தின் இந்த நிலை எந்த நிமிடத்திலும் வெடிக்கக்கூடிய எரிமலையின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகும்

இந்த சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டிடமும் காலத்தே காப்பாற்றப்படாவிட்டால், தகர்ந்து வீழ்ந்துவிடும். எனவேதான் புரட்சிகரமான மாற்றம் அவசியம். இதனை உணர்ந்தோர், சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டியது கடமையாகும். இதனைச் செய்யாவிட்டால், மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கும், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டும் முறைக்கும் முற்றுப்புள்ளி வைத்திடாவிட்டால், மனித சமுதாயத்தின்மீது படுகொலைகளும், துன்ப துயரங்களும் ஏவப்படும் என்கிற அச்சுறுத்தலைத் தடுத்திட முடியாது. இதனைச் செய்யாமல் யுத்தத்தை நிறுத்தங்கள் என்று கூறுவதும், உலக அமைதிக்கான ஒரு சகாப்தத்திற்குக் கட்டியம் கூறுங்கள் என்று கூறுவதும், சந்தேகத்திற்கிடமில்லாத பாசாங்குத்தனமாகும்.

“‘புரட்சி’ என்பதன் மூலம் நாங்கள் பொருள்கொள்வது என்னவென்றால், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடம்கொடுக்காத ஒரு சமூகத்தை இறுதியாக நிறுவுவது என்பதேயாகும். மற்றும் இதில் தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். உலக அமைப்புகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய யுத்தங்கள் விளைவித்திடும் துன்ப துயரங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளவேண்டும்.

இதுவே எங்கள் லட்சியம். இந்தத் தத்துவத்தின்கீழ் உத்வேகம் பெற்று, நாங்கள் இந்த சுரண்டல் சமூகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் போதுமான அளவிற்கு உரத்து எச்சரிக்கிறோம்.

எனினும், இது செவிமடுக்கப்படாவிட்டால், இப்போதுள்ள அரசமைப்பு தொடருமானால், வளர்ந்துவரும் இயற்கையான சக்திகள் செல்லும் பாதையில் ஒரு முட்டுக்கட்டையாக இது இருக்குமானால், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கு, அனைத்துத் தடைகளையும் தூக்கி எறியக்கூடிய விதத்தில், புரட்சியின் லட்சியங்களைப் பூர்த்தி செய்வதற்கான பாதையை அமைப்பதற்கு ஒரு கடுமையான போராட்டம் மேற்கொள்ளப்படும். புரட்சி, மனிதகுலத்திடமிருந்து பிரிக்கமுடியாத உரிமையாகும். விடுதலை அனைவரின் அழிக்கமுடியாததொரு பிறப்புரிமையாகும். உழைப்புதான், தொழிலாளர்களின் இறுதி விதியின் இறையாண்மையாக, சமூகத்தை உண்மையாகத் தாங்கி நிற்கிறது.

சமூக அமைப்புக்கு எதிராகவே, எந்தவொரு தனிநபருக்கெதிராகவும் அல்ல

தற்போது, இந்தியா, பாஜக-வினால் நாட்டின் நாடாளுமன்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரித்து வீழ்த்துப்பட்டுக்கொண்டிருப்பதன் மூலம், இது மக்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக, அதே மக்களுக்கு எதிராக, ஆளும் வர்க்கங்களால் திருப்பிவிடப்பட்டிக்கிறது. இது, பகத்சிங்கின் எச்சரிக்கைகளை மீண்டும் உரத்தும் தெளிவாகவும் எதிரொலிக்கின்றன. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட புனிதமான தீர்மானங்கள் வெறுக்கத்தக்கவிதத்தில் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. …  நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏற்கப்படமுடியாது என்று நிராகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும், முன்மொழிவுகளும், வெறும் கையெழுத்து ஒன்றின்மூலமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

 இந்திய மக்களாகிய நாம், என்று நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட மக்களின் இறையாண்மையைப் பிரதிபலித்திடும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களை உயர்த்திப்பிடித்திடப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, அரசின் பிரதான அங்கங்களில் ஒன்றான நாடாளுமன்றம் காலில் போட்டு மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், பகத்சிங் கூறிய  இந்தச் சொற்றொடர்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் இன்றையதினம் ஒரு சிலிர்க்க வைத்திடும் நினைவூட்டலாக இருக்கின்றன.

வகுப்புவாதம் (எதிர்) மதச்சார்பின்மை

1919இல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்றவுடனேயே, பிரிட்டிஷார் மக்களை மத்தியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மிகவும் கூர்மையாக மேற்கொள்ளத் தொடங்கினர். அங்கே மிகவும் கொடூரமான முறையில் இரக்கமின்றி சீக்கியர்களும், முஸ்லீம்களும் இந்துக்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றுதான் நாட்டின் விடுதலைக்கானப் போராட்டத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தார்கள். இதன் பின்னர், நாடு முழுதும் மதவெறிக் கலகங்கள் வெடித்தன. 1924இல் பஞ்சாப்பில் கோஹாட் (Kohat) என்னுமிடத்தில் கோரமானமுறையில் ஒரு மதக்கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை இயக்கத்தில் மதவெறிக் கலகங்கள் உருவாகிவருவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெறத் துவங்கின.

விடுதலை இயக்கம், இத்தகைய சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதன் தேவையை அங்கீகரித்தது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை இந்து - முஸ்லீம் தலைவர்கள் அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. இதனை பகத்சிங் ஆதரித்தார்.

இன்றையதினம் பாரத்வர்ஷா/இந்தியாவின் நிலைமை உண்மையில் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. ஒரு மதத்தின் பக்தர்கள், மற்றொரு மதத்தின் பக்தர்களை எதிரிகளாகக் கருதப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஒரு மதத்திற்குச் சொந்தக்காரனாக இருப்பதே, இப்போது மற்றொரு மதத்தினனின் எதிரியாக இருப்பதற்குப் போதுமான காரணமாகக் கருதப்படுகிறது. இதனை நம்புவதற்கு நமக்குச் சிரமமாக இருக்கிறது என்றால், லாகூரில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைப் பார்த்திடுவோம். … இத்தகைய நிலைமைகளில், இந்துஸ்தானத்தின் எதிர்காலம் மிகவும் இருண்டதாகவே தோன்றுகிறது. … இந்துஸ்தானத்தைப் பீடித்துள்ள இத்தகைய மதவெறிக் கலகங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று எவருக்கும் தெரியவில்லை.

இதற்கு மாற்றுமருந்து என்ன? . ‘மதத்தை அரசியலிலிருந்து பிரிப்பதிலேயே இது அடங்கி யிருக்கிறது’ என்று பகத் சிங் இதுகுறித்தும் தெளிவாகப் பதிலளித்திருக்கிறார்.

1914-15இல் தியாகிகள் மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரித்தார்கள். மதம் ஒருவரின் தனிப்பட்ட சொந்த விஷயம். எவரொருவரும் இதில் தலையிட முடியாது. அதேபோன்று எவரொருவரும் மதத்தை அரசியலுக்குள் புகுத்தக்கூடாது. ஏனெனில் அனைவரையும் ஒன்றுபடுத்தாது, அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட துணைசெய்யாது. அதனால்தான் கதார் கட்சி போன்ற இயக்கங்கள் வலுவாக இருந்தன. தூக்குமேடையை நோக்கிச் சென்றபோதும்கூட சீக்கியர்கள் முன்னணியில் இருந்தனர். இந்துக்களும் முஸ்லீம்களும்கூட இதில் பின்தங்கிடவில்லை, என்று அவர்கள் நம்பினார்கள்.

தற்போது, இந்தியத் தலைவர்கள் சிலரும்கூட மதத்தை அரசியலிலிருந்து தனியே பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது, இரு மதத்தினர்க்கிடையே ஏற்படும் சண்டைகளை ஒழித்துக்கட்ட ஓர் அழகான பரிகாரமாகும். நாங்கள் இதனை ஆதரிக்கிறோம்.

மதம், அரசியலிலிருந்து தனியே பிரிக்கப்பட்டால், பின் நாங்கள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும்கூட, நாங்கள் அனைவரும் ஒன்றாக அரசியலில் பங்கெடுக்க முடியும்.

எனினும், பகத்சிங், வகுப்புவாதத்தை ஒழித்துக்கட்ட இறுதித் தீர்வு வர்க்க உணர்வே என்று அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார். அவர் எழுதுகிறார்:

இத்தகைய மதவெறிக் கலவரங்கள் குறித்து இதயத்தைப் பிழியும் விதத்தில் சம்பவங்களை ஒருவர் கேட்கும்போதும், இதற்கு முற்றிலும் வேறான விதத்தில் கல்கத்தா கலவரங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான முறையில் சில விஷயங்களை ஒருவரால் கேட்க முடிகிறது. தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலவரங்களில் பங்கேற்கவில்லை. ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக, அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவர்க்கொருவர் தாங்கள் பணிபுரியும் ஆலைகளில் இயல்பாக நடந்துகொள்கின்றனர்.  கலவரங்கள் நடந்த இடங்களில்கூட அவற்றைத் தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்குக் காரணம், அவர்களின் வர்க்க உணர்வுதான். தங்கள் வர்க்கத்திற்கு எது பயன் அளிக்கும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து அங்கீகரித்திருக்கிறார்கள். மதவெறிக் கலவரங்களைத் தடுத்து நிறுத்திட, இத்தகைய வர்க்க உணர்வே அழகான பாதையாக அமைந்திருக்கிறது.  

ஊடகங்கள்

மதவெறிக் கலவரங்கள் குறித்து நுண்ணாய்வு செய்து பகத்சிங் எழுதியதாவது:

நாங்கள் பார்த்தவரையில், இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் மதத் தலைவர்களும், செய்தித் தாள்களும் இருக்கின்றன.சில செய்தித்தாள்கள் மதவெறிக் கலகத்திற்கான தீயைக் கொளுத்திப் போடுவதில் சிறப்பு பங்கினைப் புரிந்திருக்கின்றன.

இதழியல் தொழில் ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஆனால் அது இப்போது மிகவும் அருவருப்பானதாக மாறியிருக்கிறது. இந்தப் பேர்வழிகள், ஆத்திரமூட்டும் தலைப்புகளை மிகவும் பிரதானமாகப் பிரசுரித்து, மக்களிடையே ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளும் விதத்தில்  வெறியுணர்ச்சியைக் கிளப்பிவிடுகிறார்கள். இவை கலகங்களுக்கு இட்டுச்செல்கின்றன.  ஓரிரு இடங்களில் மட்டுமல்ல, பல இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டதற்குப் பிரதானமான காரணம், உள்ளூர் ஏடுகள், மிகவும் மூர்க்கத்தனமான கட்டுரைகளை வெளியிட்டதுதான். இதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற நாட்களில் வெறித்தனமின்றி, நல்லறிவுடன், அமைதியாக இருந்தவர்கள் மிகச் சிலரேயாவர்.

செய்தித்தாள்களின் உண்மையான கடமை மக்கள் மத்தியில் கல்வியைப் போதிப்பது, மக்களிடம் காணப்படும் குறுகிய மனோபாவத்தை ஒழித்துக்கட்டுவது, மதவெறி உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவது, அனைவருக்கும் பொதுவான இந்திய தேசிய உணர்வை உருவாக்குவதாகும். ஆனால், அவைகள் தங்களுடைய பிரதான பணியாக, அறியாமையைப் பரப்புவது, குறுகிய மனோபாவத்தைப் போதனை செய்வது, பிற மதத்தினருக்கு எதிராக கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் விதத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குவது, இவற்றின் மூலமாக பொதுவான இந்தியத் தேசியவாதம் என்பதை இடித்துத்தரைமட்டமாக்குவது என்ற வகையில் அமைத்துக் கொண்டிருக்கின்றன. இதுதான், இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமாக அமைந்து, நம் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவைத்திருக்கிறது. நம் இதயத்தில், இந்துஸ்தான் என்னவாக மாறும்? என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.        

இன்றைய தினம், ஒருசில விதிவிலக்குகள் தவிர, கார்ப்பரேட் ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம், இதனை நமக்கு சிலிர்க்கும் விதத்தில் ஒத்துப்போகின்றன.

சமூக நீதி

பகத்சிங், சமூக நீதி மற்றும் அனைத்து மனிதசமுதாயத்தின் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து தீர்மானகரமான முறையில் அவர் எழுதியிருப்பதாவது:

… அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  மனிதர்களுக்கிடையே எவ்விதமான வகுப்புப் பிரிவும், தீண்டுதல் - தீண்டமைப் பிரிவும் இருக்கக்கூடாது. ஆனால் சனாதன தர்மம் இவ்விதம் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இருக்கிறது. இன்றைய இருபதாம் நூற்றாண்டில்கூட, ஒரு தாழ்ந்த ஜாதி சிறுவன், பண்டிட் அல்லது மௌல்வி போன்ற தலைவர்களுக்கு மாலை அணிவிக்க முடியாது.  அவ்வாறு அணிவித்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த உடையுடன் குளித்துவிட்டு வர வேண்டும். அதுவரை தங்கள் பூணூலை அணியக்கூடாது. தீண்டத்தகாதவர்களைத் தொடக்கூடாது. இத்தகைய மதத்திற்கு எதிராக எதுவும் கூறுவதில்லை என்று உறுதி எடுத்திருக்கிறோமா அல்லது இதற்கு எதிராகப் போராடப் போகிறோமா?

பகத்சிங், நான் ஏன் நாத்திகன் கட்டுரையை எழுதியபோது, அவரிடம் இதுபோன்று பகுத்தறிவு, பொருள்முதல்வாதப் புரிந்துணர்வு மற்றும் மார்க்சிய உலகக் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்தியது. ஆனால், இதில் மிகவும் முக்கியமாக, அவர் மதம் அல்லது மக்களின் மதவுணர்வுகளை தங்களுடைய குறுகிய மதவெறிக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள், மக்களின் எதிரிகள் என்று பகத்சிங்கால் பார்க்கப்பட்டார்கள். மக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிப்பதை மறுப்பதற்கு, மக்களின் மத உணர்வுகளையேப் பயன்படுத்திக்கொள்வதை ஒரு வலுவான ஆயுதமாக இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கிறார்கள். அன்றைக்கிருந்த பகத்சிங்கின் சிந்தனையோட்டம் இன்றைக்குள்ள நிலைமைக்கு எவ்வளவு சரியாகப் பொருந்துகிறது!

இத்தகைய மாபெரும் புரட்சியாளருக்கு நாம் அஞ்சலி செலுத்தும் அதே சமயத்தில், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கிட, நம் மக்களுக்கு உண்மையான முழுமையான விடுதலையைக் கொண்டுவர பகத்சிங் அளித்துள்ள பங்களிப்புகளின் முக்கியமான அம்சங்கள் சிலவற்றை முன்னெடுத்துச் செல்ல, உணர்வுபூர்வமாகச் செயல்படுவோம்.  

..