Thursday, September 24, 2009

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் - இல்லங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் - புதுடில்லியில் வைகோ பேச்சு

புதுடில்லி, செப். 25- முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தலைநகர் டில்லியில், லோதி சாலையில் உள்ள இந்திய இ°லாமிக் கலாச்சார மையத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வியாழன் அன்று மாலை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வைகோ தலைமை வகித்தார். மதிமுக மாநில நிர்வாகிகளில் ஒருவரான துரை. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடராஜன், பழ. நெடுமாறன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து வைகோ நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ‘‘முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஈழப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டும். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்கப்பட முடியாதது. இலங்கையில் மனித உரிமை மீறல் கொடுமைகள் நடைபெற்றிருப்பதற்கு இந்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் ஒன்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தியஅரசுதான் தன்னுடைய நடவடிக்கைளின் மூலமாக இலங்கையில் சீனா, பாகிச்தான், இச்ரேல் என அனைத்து நாடுகளும் நுழைய அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு வைகோ கூறினார். அமெரிக்காiச் சேர்ந்த யூதப் பெண்மணியான மருத்தவர் எலின் ஷாண்டர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்தியா வருவதற்கான விசா மறுக்கப்பட்டதால் அவரது உரை வீடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் ஒளிபரப்பப்பட்டது.

1 comment:

HomeoAnbu said...

வைகோவின் கருத்தும் பிறர் கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. சர்வதேச சமூகம் இதற்கு செவிசாய்க்க வேண்டும். அதே நேரத்தில் வைகோ தனக்கென்று ஒரு அரசியலை வைத்திருக்கிறார். அதுதான் ஈழ அரசியல். அது மட்டுமே அவரையும், அவருடைய கட்சியையும், தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றிவிடாது என்பதை அவர் உணர வேண்டும்.

ச. அன்பழகன்