Thursday, January 25, 2018

குடியரசு அரசமைப்புச்சட்டத்திற்கு அச்சுறுத்தல்கள்

 தலையங்கம்
நாடு, குடியரசின் 68ஆம் ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நம் அரசமைப்புச்சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26இலிருந்து அமலுக்கு வந்தது என்பதையும் அன்றிலிருந்துதான் இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியது என்பதையும் மீண்டும் நினைவுகூர்தல் அவசியமாகும்.  அத்தகைய அரசமைப்புச்சட்டம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு, தற்போது ஆளாகி இருக்கிறது என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஓர் உண்மையாகும்.
இந்தியா, நம் அரசமைப்புச்சட்டத்தின் காரணமாக மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயக நாடாக மாறி இருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டம், அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்கள் இனம், மதம், பாலினம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி இருக்கிறது. அடிப்படை உரிமைகளையும் அனைத்துக் குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. மேலும் அரசமைப்புச்சட்டமானது, சிறுபான்மையினருக்கும், தலித்துகள், பழங்குடியினர் போன்ற சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குமான உரிமைகளையும் அங்கீகரித்திருக்கிறது. 
இத்தகைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைகளுக்கே இன்றைய தினம் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தினையும் அதன் இதர அமைப்புகளையும்  உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களே இத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நிலை உருவாகி இருக்கிறது. ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறா இந்துத்துவா சித்தாந்தத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை மாண்புகளுக்கு விரோதமானவைகளாகும். ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் சிந்தனாவாதிகளும் நாட்டின் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று கூறுவதை எந்தக்காலத்திலும் மூடி மறைத்ததில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கரின் கூற்றுப்படி, நம் அரசமைப்புச்சட்டமானது, “மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச்சட்டங்களிலிருந்து பிய்த்து பிய்த்துக் கோர்க்கப்பட்ட கதம்பமாகும்.“  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு தலைவரும், ஜன சங்கத்திற்கு ஒரு சமயம் தலைவராக இருந்தவருமான தீன் தயாள் உபாத்யாயா, இதே கருத்தை எதிரொலித்து, இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் போலியான ஒன்று என்றும், இந்தியாவின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளை முறித்துக் கொண்ட ஒன்று என்றும் கூறினார். அவர்கள் விரும்பும் அரசமைப்புச்சட்டம் என்னவென்றால், இந்தியாவின் புராதனக் கலாச்சாரத்தையும், சமுதாயப் பண்புகளின் அடிப்படைக்கூறுகளுக்கும் ஒத்துப்போகிற, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட மனுஸ்மிருதியைத்தான் நாட்டின் அரசமைப்புச்சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
மோடி அரசாங்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்தே, அவருக்குக் கீழ் செயல்படும் அமைச்சர்களும் மற்றும் முக்கியமான பொறுப்புகள் பலவற்றை வகிப்பவர்களும் அவ்வப்போது தற்போதைய அரசமைப்புச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விதத்தில் சமீபத்தில் ஆனந்த் குமார் ஹெக்டே என்கிற ஒரு மத்திய அமைச்சர் வரவிருக்கும் காலங்களில் தற்போதைய அரசமைப்புச்சட்டம் மாற்றப்படும் என்று கூறினார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருக்கும் ஆதித்யநாத், ‘மதச்சார்பின்மை‘ என்கிற சொல் சுதந்திரத்திற்குப் பின் கூறப்பட்டுவரும் மிகப்பெரிய பொய் என்று கூறியிருப்பதன்மூலம், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
அரசமைப்புச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களும் தற்போது தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அரசமைப்புச்சட்டம் பிரச்சாரம் செய்யும் அறிவியல் மனோபாவம், இந்துத்துவா பக்தர்களுக்கு வெறுக்கத்தக்க பொருளாக மாறியிருக்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் போற்றிப் புகழுதலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகளும் இன்றைய ஆட்சியாளர்களின் அடையாளங்களாக மாறி இருக்கின்றன. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது அறிவியல்பூர்வமாகத் தவறானது என்று சமீபத்தில் ஒரு மத்திய மனிதவள வளர்ச்சித்துறை  இணை அமைச்சர், சத்யபால் சிங், கூறியிருப்பது சமீபத்திய எடுத்துக்காட்டாகும். 
இந்தத்தருணத்தில், 1949ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணயசபையில் இறுதியாகப் பேருரையாற்றிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கூற்றை மீளவும் நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானதாகும். அப்போது அவர், “ஓர் அரசமைப்புச்சட்டம் என்னதான் நல்லவிதமாக அமைந்திருந்தாலும், அதனைச் செயல்படுத்த வேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அரசமைப்புச்சட்டமும் மோசமானதாக மாறிவிடும்,“ என்றார். இப்போது அரசமைப்புச்சட்டத்தின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள், உண்மையில் மிக மோசமானவர்களாவார்கள்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் இறுதிக் குறிக்கோள் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது என்பதே. ஆனால்  தற்போது நடந்துகொண்டிருப்பது என்னவென்றால், எந்த அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களே அதனை அழித்து வீழ்த்துவதற்கான செயல்களில் இறங்கியிருப்பதாகும்.  அரசமைப்புச்சட்டத்தின் கீழான ஒவ்வொரு அமைப்பும், அது நீதித்துறையாக இருந்தாலும் சரி, அல்லது சிவில் சர்வீஸாக இருந்தாலும் சரி, அல்லது ஆயுதப்படையாக இருந்தாலும் சரி, அனைத்துமே உள்ளுக்குள்ளேயே அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவற்றின் நேர்மையான செயல்பாடுகள் ஐயுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசமைப்புச்சட்டத்தினை உயர்த்திப்பிடிக்க வேண்டிய இடத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர்கள் போன்றவர்களே அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்புச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கான இத்தகைய முயற்சிகளும், அதனை அரிக்கச் செய்திட அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும். இவை நம் மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கின்றன. இத்தகைய தாக்குதல் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியதாகும். மக்கள்தான்  அதனைச் செய்திட முடியும். ஏனெனில், இறுதியில் அவர்கள்தான் அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்களாவார்கள்.
(ஜனவரி 24, 2018)
தமிழில்: ச.வீரமணி  



Friday, January 19, 2018

பாஜகவின் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதுதான் மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் –


பாஜகவின் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதுதான்

மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் –

தி டெலிகிராப் நாளேட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி


புதுதில்லி, ஜன. 19-
பாஜகவின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பது என்பதுதான் இன்று நம்முன் உள்ள மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் (இன்று) வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது. இதனையொட்டி கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப் நாளேடு சீத்தாராம் யெச்சூரியைப் பேட்டி கண்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்திட்ட பதில்களும் வருமாறு:
கேள்வி: நான் தற்போது கேட்கவிருப்பது குறித்து நீங்கள் மறுக்கலாம். எனினும் கேட்கிறேன். அக்டோபர் மத்தியக்குழுக் கூட்டத்திற்குப்பின்பும், டிசம்பர் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்திற்குப்பின்பும் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கைக் குறிப்பில் (press communique) வரைவு அரசியல் தீர்மானம் மீதான கருத்துவேறுபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் குறித்து கொஞ்சம் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியுமா?

சீத்தாராம் யெச்சூரி: விவாதங்கள், எப்படி பாஜகவைத் தோற்படிப்பது என்பது குறித்தும், பாஜக எதிர்ப்பு சக்திகளை எந்த அளவிற்கு அதிகபட்ச அளவில் ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் சுற்றிச்சுற்றி வந்தன.  நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் அனைவரும்  அறிந்ததே. இதில் எவ்விதமான  சமரசத்திற்கும் இடமில்லை.
அதனால்தான்,  இந்த நிகழ்ச்சிநிரலைப்பின்பற்றிக் கொண்டிருக்கும் ஆளும்வர்க்க கட்சிகளுடன் அரசியல் முன்னணி/கூட்டணி எதையும் நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனால், இன்றையதினம் ஆட்சியில் பாஜகவினர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நான்கு முனைகளில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள், நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றுவதில் மிகவும் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வெட்டிவீழ்த்திவிட்டு அந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரம்  குறிக்கோளைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளோடு மதவெறி நடவடிக்கைகளையும்  மிகவெறித்தனமாக தொடர்ந்து  ஏவிக் கொண்டிருக் கிறார்கள்.  நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் அதன் அரசமைப்புச்சட்டத்தின் கீழான நிறுவனங்களையும்கூட ஒழுங்காகச் செயல்படவிடாமல் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை முழுமையாகச் சரண்செய்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்குச் சேவகம் செய்திடும் விதத்தில் அதன் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவை நான்கும் நாம் எதற்காக நிற்கிறோமோ அவற்றிற்கு முற்றிலும் எதிரானவைகளாகும். இத்தகைய இவர்களின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதுதான் இன்றைய மிகவும் முக்கியமான முன்னுரிமையாகும்.
 கேள்வி: இந்தப் போராட்டத்தை நீங்கள், முன்பு ஐமுகூ-1 அரசாங்கத்துடன் செய்துகொண்டிருந்ததைப்போன்று, ஐமுகூ-1 அரசாங்கத்திலும், அதன் கொள்கைகளை நிர்ணயிப்பதிலும் இடதுசாரிகள் ஒரு வலுவான பங்கினைச் செய்ததைப்போன்று, இப்போதும் செய்துகொண்டு, வலுவாகச் செய்ய முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: இதற்கு நான் மத்தியக்குழுக் கூட்டத்திற்குப்பின்தான் பதில் கூற முடியும்.

கேள்வி: 1996இலும் 2004இலும் தேர்தலுக்குப்பின் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததைப்போன்ற பரிசோதனைகள் மீண்டும் திரும்புமா  அல்லது அவ்வாறு மேற்கொண்டால்  அது உங்களை ‘காங்கிரஸ் ஆதரவாளர்கள்‘ என்று காட்டிவிடாதா?

சீத்தாராம் யெச்சூரி: நான் காங்கிரஸ் ஆதரவாளனும் இல்லை, பாஜக ஆதரவாளனும் இல்லை. நான் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு ஆதரவாளனாவேன். இன்றையதினம், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்ன  தேவை என்றால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளிலிருந்து உடனடி நிவாரணமும், மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டங்களால்  உருக்குலைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும் ஆகும். இவற்றிற்கு இந்திய அரசாங்கம் மதவெறியர்களால் ஆளப்படக்கூடாது.

 கேள்வி: நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டால், உங்கள் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுபவர்களை பாஜக ஆதரவாளர்கள் என்று அதேதொனியில் கூற முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: இத்தகைய குற்றச்சாட்டுகளை மிதக்க விடுவது, மிகவும் கேலிக்குரியவைகளாகும். இவ்வாறு எனக்கு எதிராகக் குற்றஞ்சாட்டுபவர்களை, புரட்சியாளர்கள் என முகமூடி அணிந்துகொண்டு எதார்த்தத்தில் பாஜக ஆதரவாளர்களாவார்களாக இருக்கிறார்கள் என்று எளிதாகக் கூறிவிட முடியும். இவ்வாறு குற்றச்சாட்டுகள் வீசப்படுவதை நான் நம்பவில்லை. இது என்னுடைய குணமும் அல்ல, என் பழக்கமும் இல்லை.

 கேள்வி: ஐமுகூ-1 பரிசோதனையை எப்படி நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளை விரிவாக்கக்கூடிய விதத்தில் செயல்பட்ட முதல் மத்திய அரசாங்கம் இதுதான்.
அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மக்களுக்கு விரிவாகக் கொண்டுசெல்வதில் ஆளும் வர்க்கங்களை எந்தளவிற்கு உந்தித்தள்ளமுடியும் என்று பார்க்கக்கூடிய விதத்தில்தான் ஐமுகூ-1விற்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவு என்கிற  பரிசோதனை உண்மையில் அமைந்திருந்தது. ஐமுகூ-1 அரசாங்கம் மேற்கொண்ட பல முக்கிய கொள்கை முடிவுகளில் இடதுசாரிகள் மிகவும் தீர்மானகரமானதொரு பங்கினை வகித்தார்கள்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அமல்படுத்தினோம். அதனை நகர்ப்புற ஏழைகளுக்கும் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியையும் பெற்றோம். கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு உரிமைச் சட்டம், வன உற்பத்திப் பொருள்களில் பழங்குடியினர் உரிமைகளுக்கான சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. இவற்றின்மூலம் ஏற்கனவே இருந்துவந்த அரசமைப்புச்சட்ட உரிமைகளை ஒருமுகப்படுத்துவதுடன் மேலும் புதிய முன்னேற்றங்களையும் விரிவாக்க முடிந்தது.
இந்தச் சட்டங்களின் கீழான  வரம்புகள் என்னவாக இருந்தபோதிலும் அவற்றையும் முழுமையாக வெட்டிக்குறைத்திடுவதிலேயே இப்போதைய பாஜக அரசாங்கம் குறியாக இருக்கிறது.
 கேள்வி: தில்லியில் உள்ள இந்தியன் பெண்கள் பத்திரிகையாளர் அணி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, நீங்கள், மாற்றுக் கொள்கை என்பது பொருளாதாரக் கொள்கைகளை மட்டும் சார்ந்திருப்பது அல்ல என்றும், மாறாக சமூகக் கொள்கைகளையும் உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டீர்கள். தயவுசெய்து விளக்குங்களேன்.

சீத்தாராம் யெச்சூரி: நாம் முன்வைத்திடும் மாற்றுக் கொள்கை என்பது வெறுமனே பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை மட்டும் கொண்டதில்லை மற்றும் கொண்டதாக இருக்கவும் முடியாது. இந்தியா என்பது பல்வேறு விதமான வேற்றுமைகளுடன் உள்ள நாடாகும். நம் நாட்டின், நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பது இவ்வேற்றுமைகளுக்கிடையேயுள்ள பொதுப்பண்பைப் பிணைத்து வலுப்படுத்துவதன் மூலமே நிலைநிறுத்திட முடியும்.
இத்தகைய வேற்றுமைகளைக் களைந்து ஒரே சீரான தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக அரசாங்கம் மேற்கொள்கிற முயற்சிகள் சமூகத்தில் திடீரென்று வெடிப்பினை ஏற்படுத்திடும். … எனவேதான், அனைவரையும் அரவணைத்துச்செல்லக்கூடிய விதத்திலான கொள்கைகளும், சமூக நீதிக்கான கொள்கைகளும் இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளில் மிக முக்கியமான கூறுகளாக அமைந்திருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)



Thursday, January 18, 2018

உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதியரசர்களின் போர்க்குரல்



தலையங்கம்
ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வரால் நடத்தப்பட்ட  ஊடகவியலாளர்கள் சந்திப்பு என்பது உண்மையில், இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகும்.  நீதியரசர்கள் ஜெ. செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.  லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிக்கு அடுத்து உள்ள மிகவும் மூத்த நீதிபதிகளாவார்கள். அத்துடன் ஐந்து உறுப்பினர் லொலீஜியம் (collegium) எனப்படும் மூத்த ஐந்து உறுப்பினர்களில் தலைமை நீதிபதியைத்தவிர ஏனைய நான்கு நீதிபதிகளுமாவார்கள்.  இந்த நான்கு நீதிபதிகளும்தான் இவ்வாறு தலைமை நீதிபதிக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாகவும், அரசமைப்புச்சட்ட அமர்வாயங்கள் அமைப்பது சம்பந்தமாகவும் உள்ள நிர்வாக விஷயங்களில் தலைமை நீதிபதி நடந்து கொள்ளும் முறைகள் பற்றி முறையிட்டுள்ளார்கள்.
மேற்கண்ட நான்கு நீதிபதிகளும் தாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தையும் சுற்றுக்கு விட்டார்கள். அந்தக் கடிதத்தில் அவர்கள், தங்கள் மனத்தாங்கல்களை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஏற்கனவே கொலிஜியத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் நடைமுறையை மீறி தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்ததையும் எடுத்துக்காட்டி இருந்தார்கள். மேலும் அந்தக்கடிதமானது,    எந்தெந்த நீதிபதிகள் அமர்வாயங்களில் அமர்வார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடாமல், “தன் இஷ்டத்திற்கு அமர்வாயங்கள்“ அமைக்கப்படுவதுகுறித்தும் பேசியது.
நீதித்துறையின் நேர்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளை மூத்த நீதிபதிகள் எழுப்பி இருக்கிறார்கள்.  அவர்களுக்கேற்பட்ட அனுபவ சாட்சியமே இவ்வாறு அவர்கள் கவலை யடைந்ததற்கான காரணத்தை உறுதிசெய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தின்முன் நிலுவையில் உள்ள  மிக முக்கியமான அயோத்தி வழக்கு மற்றும் ஆதார் வழக்கு போன்றவற்றிற்காக அமைக்கப்பட்ட அமர்வாயங்களில்,   இந்த மூத்த நீதிபதிகளில் எவருமே இடம்பெறவில்லை. ஆதார் வழக்கில், நீதியரசர் செலமேஸ்வர் தலைமையிலான அமர்வாயம், இதனை அரசமைப்புச்சட்ட அமர்வாயத்திற்கு அனுப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்தது.  எனினும், அவ்வாறு ஐந்து உறுப்பினர் அடங்கிய அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அமைக்கப்பட்டபோது, செலமேஸ்வர் உட்பட முன்பு ஒரிஜினலாக அங்கம் வகித்த உறுப்பினர்கள் எவரும் இடம் பெறவில்லை.
நீதியரசர் லோயா வழக்கானது, நீதியரசர் அருண் மிஷ்ரா தலைமையிலான பத்தாவது அமர்வாயத்திற்கு அனுப்பப்பட்டபோதுதான், மூத்த நீதிபதிகளின் அச்சங்கள் உறுதிப்படுத்தியிருக்கும்போல் தோன்றுகிறது.  அமர்வாயங்கள் அமைக்கப்படும்போது அவற்றில் மூத்த நீதிபதிகளை ஒதுக்குவதும், வழக்குகள் பிரித்தனுப்பப்படும்போதும் மூத்த நீதிபதிகளை ஒதுக்குவதும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுவது நன்கு தெரிய ஆரம்பித்தது.
மிகவும் மூத்த நீதிபதிகள் ஜனவரி 15 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபின் மூன்று நாட்கள் கழித்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 377ஆவது (முறைபிறழ்ந்த புணர்ச்சி) பிரிவின்கீழ் வருபவர்களைக் கிரிமினல்களாகக் கருதக்கூடாது மற்றும் சபரிமலைக் கோவிலுக்கு பெண்கள் நுழைவு உட்பட ஏழு வழக்குகளைக் கேட்பதற்கான அரசமைப்புச்சட்ட அமர்வாயம் அமைக்கப்பட்ட போது, இது மீண்டும் ஒருமுறை தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.   தலைமை நீதித்துறை நடுவரின் தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அமர்வாயத்தில் மேற்கண்ட நான்கு நீதிபதிகளில் எவரொருவரும் இடம் பெறவில்லை.
இது நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்ற பீடத்தில் எழுந்துள்ள மிக ஆழமான நெருக்கடி என்பதில் எவ்விதச்  சந்தேகமும் இல்லை.  ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பும் பல்வேறுவிதமான சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு  ஆளாகியுள்ள நிலையில்தான் இதுவும் வந்திருக்கிறது.  நாட்டின் உயர்ந்தபட்ச அமைப்பில் இயங்கும் உச்சநீதிமன்றத்தில் ஆட்சியாளர்கள் தலையிடுவது என்பது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உச்சநீதிமன்றத்தின் நடைமுறைகளை (Memorandum of Procedure) மாற்றியமைத்து உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களைத் தன்வயப்படுத்திட பல்வேறு விதங்களில் ஆட்சியாளர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.  தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்திடவும், வேண்டாதவர்கள் நியமிக்கப்பட்டால் அவர்களை ஏற்காமல் மறுப்பதும் என்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவற்றில் ஒன்று, கொலிஜியத்தால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட நீதிபதிகளின் பெயர்களை, தேசியப் பாதுகாப்புக்காக ரத்து செய்வதாகக்கூறி ரத்து செய்ததாகும். இவ்வாறு ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்டுவரும் நிர்ப்பந்த உத்திகளால் சமரசம் செய்துகொள்ளப்பட்டு நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்திற்குள்ளாகும் அபாயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் மிகவும் ஆழமான முறையில் பிரச்சனைகள் உருவாகி இருக்கக்கூடிய சூழலில், அவற்றை நீதிபதிகளுக்கிடையே பேசி, சரி செய்துவிட்டோம் என்றும் அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டமைத்துவிட்டோம் என்றும் பூசிமெழுகுவது முறையாக இருக்காது.
கொலிஜியத்தின் கீழ் வரும் அனைத்து நீதிபதிகளும் மற்றும் ஒட்டுமொத்த நீதிபதிகளும் இப்பிரச்சனைகளை விவாதித்து, உச்ச நீதிமன்றத்தின் ஜனநாயக செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்தகைய திசைவழியில்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் செயல்படுவார்கள்  என்று நம்புவோமாக.
இறுதியாக, நம் நீதித்துறை அமைப்பில் அடிப்படைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று, உச்ச நீதிமன்றத்தின்  நீதிபதிகள் நியமனம் மற்றும் மேற்பார்வை குறித்ததாகும்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (NJAC-- National Judicial Appointments Commission), அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது எனக்கூறப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் அடித்து, நிராகரிக்கப்பட்டுவிட்டது. நீதிபதிகள் நியமனத்திற்குத் தற்போது இருந்துவரும் கொலிஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகளின் முறை திருப்திகரமானது அல்ல. இதனை மாற்ற வேண்டியது அவசியமாகும். இதில்,  தேசிய நீதித்துறை நியமன ஆணையம்  குறைபாடு உடையதாகும். ஆட்சியிலிருப்பவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இதில் வாய்ப்பு இருந்தது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கங்களுடன் இணைந்து நின்று, மேலும் விரிவான அளவிலான தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அது நீதிபதிகளின் நியமனங்களை மட்டுமல்ல, நீதிபதிகளின் நடத்தை குறித்து வரும் முறையீடுகளையும் விசாரித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கிறது.
(ஜனவரி 17 , 2018)