Sunday, August 18, 2019

“பெரும்பான்மையின் கொடுங்கோன்மை”




சீத்தாராம் யெச்சூரி நேர்காணல்
(ஆகஸ்ட் 7 அன்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள், தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி கிளர்ச்சிப் பேரணி நடத்தின. அந்த சமயத்தில் ப்ரண்ட்லைன் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை நேர்காணல் கண்டபோது, சீத்தாராம் யெச்சூரி இந்திய அரசமைப்புச்சட்டம் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும், ஜனநாயகமும் கூட்டாட்சித்தத்துவமும் எவ்வாறெல்லாம் அரித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார். அவற்றின் சாராம்சம் வருமாறு):
கேள்வி: அரசமைப்புச் சட்டத்திலிருந்து 370ஆவது பிரிவு நீக்கப்படுவதற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது, ஏன்?
சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறு 370ஆவது பிரிவை நீக்கியதன் மூலமாக, இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இணைத்த சமயத்தில் காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை மீறியிருப்பது மட்டுமல்லாமல், இவ்வாறு இதனை ரத்து செய்திருக்கிற விதம் அரசமைப்புச்சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவு, ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்ற வேண்டுமெனில் அதற்கு அம்மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இப்போது அங்கே மத்திய அரசின்கீழ் நேரடி ஆட்சி நடைபெறுவதால், அதனை மேற்கொண்டுவரும் ‘ஆளுநர்’ மாநில சட்டமன்றத்திற்குச் சமம் என்று தந்திரமாகக் கூறிக்கொண்டு இதனைச் செய்திருக்கிறது. இதன்மூலமாக மத்திய அரசு நாட்டில் இதுவரை மொத்தம் 29 மாநிலமாக இருந்ததை, 28ஆகக் குறைத்திருக்கிறது. மேலும் மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தை நடைமுறையில் மூன்றாகப் பிரித்திருக்கிறது. ஆயினும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளை ஒரே நிர்வாகக்குடையின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் விருப்பத்தைக் கேட்காது இவ்வாறு செய்திருப்பதால், இது அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை மீறிய செயலாகும்.
370ஆவது பிரிவின் பின்னணியைப் புரிந்துகொள்ளவேண்டியது முக்கியமாகும். ஆரம்பத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தினை ஆட்சி செய்து வந்த டோக்ரா மன்னர் தன் மாநிலத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைத்திட விருப்பமின்றிதான் இருந்தார். தனியாகவே ஒரு சுதந்திர நாடாக  ஆட்சி புரியவேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். நாடு இரண்டாகத் துண்டாடப்பட்ட சமயத்தில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிவந்து தாக்கியவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை வலுக்கட்டாயமாகத் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பியபோது, மன்னராட்சிக்கு எதிராக அந்த சமயத்தில் மக்களுக்குத் தலைமை தாங்கிப் போராடிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்திட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி செய்த மாநிலங்கள் அல்லாது நிலச்சீர்திருத்தம் சிறப்பாக அமல்படுத்தப்பட்ட ஒரே மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம்தான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஜனநாயக உரிமையும், மதச்சார்பின்மை உரிமையும் அளிக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டதால், ஷேக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடனேயே இணைக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில்தான், சுதந்திரத்திற்குப்பின்னர் 370ஆவது பிரிவு வரையப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அப்போது இந்தியா அரசாங்கத்தால் பவித்திரமான உறுதிமொழிகள் (solemn promises) அளிக்கப்பட்டன.  ஆனால் இன்றையதினம் ஒரேயொரு கையெழுத்தின்மூலமாக அவ்வாறு அளித்த அனைத்து உறுதிமொழிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதை மேற்கொண்டவிதம் மிகவும் தான்தோன்றித்தனமானதாகும். எனவேதான் இடதுசாரிக் கட்சிகள் இதனை எதிர்க்கின்றன.
கேள்வி: இவ்வாறு 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அரசாங்கத்தின் தரப்பில் நாங்கள் அங்குள்ள பயங்கரவாதம் மற்றும் வளர்ச்சி முதலியவற்றில் கவனம் செலுத்துவோம் என்று கூறப்படுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதமும் அமைதியின்மையும் வளர்ந்திருப்பதற்கு அங்கே 370ஆவது பிரிவு இருப்பதுதான் காரணம் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு வந்தது. ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா? அங்கே 370ஆவது பிரிவு கொஞ்சம் கொஞ்சமாகக் கணிசமான அளவிற்கு அரிக்கப்பட்டுவிட்டது. இப்போது மத்திய அரசின் பட்டியலில் உள்ள 97 இனங்களில் 94 இனங்கள் அம்மாநிலத்திற்கும் பொருந்தும். அங்கே சுயாட்சி இருந்ததாகக் கூறப்பட்டுவந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகம் தொடர்ந்து மீறப்பட்டது. அரசாங்கங்கள் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டன. கட்சித் தாவல்கள் ஊக்குவிக்கப்பட்டன. வளைந்து கொடுக்கும் அரசாங்கங்கள் சமீபகாலங்களில் அங்கே அமர்த்தப்பட்டன. இவற்றின் ஜனநாயக சாராம்சங்கள் கடுமையாக அரித்து வீழ்த்தப்பட்டன. இவ்வாறு அங்கே ஜனநாயகமும், சுயாட்சியும் படிப்படியாக அரித்துவீழ்த்தப்பட்டதன் காரணமாக மக்கள் அந்நியப்படுவதற்கு இட்டுச் சென்றது. இதனை பாகிஸ்தான் அதிகபட்ச அளவில் பயன்படுத்திக்கொண்டது. இதனைத் தொடர்ந்து அங்கே விடுதலை (Azadi) முழக்கங்கள் கேட்கத் தொடங்கின. எனவே இவற்றுக்கான மூலகாரணம் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அல்ல. மாறாக அங்கே ஜனநாயகம் அரித்துவீழ்த்தப்பட்டிருப்பதுதான் மக்கள் அந்நியப்படுவதற்கு இட்டுச் சென்றது. இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்தையும் மோடி-1 அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்ததுதான். அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் தூதுக் குழுவும் அப்போது அதன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும் கூறியது என்ன தெரியுமா? காஷ்மீர் மக்களுடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கு, ஜம்மு-காஷ்மீரில் இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மற்றும் இயக்கங்களுடனும் கலந்துபேசி நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிசெய்வதற்காக, ஓர் அரசியல் பேச்சுவார்த்தைக்கான நடைமுறை துவங்கப்படும்.இதுதான் அந்த அறிக்கையில் இருந்த வாசகங்கள். எனினும் கடந்த மூன்றாண்டுகளில் இதுதொடர்பாக அவர்கள் எதுவுமே செய்திடவில்லை. இது, அவர்களின் இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையிலான நிலைப்பாடாகும். காஷ்மீரை, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு மாநிலமாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். அதனை, இந்தியாவில் உள்ள இதர பகுதிகளுடன் இணைக்கிறோம் என்ற பெயரில் 370ஆவது பிரிவை ரத்து செய்திட அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் அந்த நிலப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களே யொழிய, அங்குள்ள மக்களின் மனதை வென்றெடுக்க வேண்டும், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்  என்று விரும்பவில்லை.   அவர்கள் அங்கே இருந்த மாநில அரசில் ஓர் அங்கமாக இருந்தார்கள். பின்னர் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள். பின்னர் அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்தார்கள், சட்டமன்றத்தைக் கலைத்தார்கள், மத்திய ஆட்சியைத் திணித்தார்கள்,  பின்னர் அதனை 370ஆவது பிரிவை ரத்து செய்வதற்கும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அங்கே இயல்பு வாழ்க்கை மற்றும் ஸ்திரமான நிலைமை உருவானால்தான், பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். அங்கே இயல்பு வாழ்க்கையும் ஸ்திரமான நிலைமையும் பாதிப்புக்கு உள்ளானதற்கு 370ஆவது பிரிவு காரணம் அல்ல. அந்தப்பிரிவு படிப்படியாக அரிக்கப்பட்டது. அந்தப் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்பட்டன. கடந்த முப்பதாண்டு காலமாக அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்ட சுயாட்சி படிப்படியாக அரிக்கப்பட்டது. இவை அனைத்தும்தான் இன்றைய நிலைமைக்குக் காரணங்களாகும்.  ராணுவம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற ஒரு மாநிலத்தில் வளர்ச்சி என்பது சாத்தியமே இல்லை. 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட விதத்தை ஆராய்ந்து பாருங்கள். அதனை நீக்குவதற்கு முன்பு, 45 ஆயிரம் துருப்புக்கள் அங்கே கொண்டுசெல்லப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் திரும்பிச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். மாநிலத்தின் அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூன்று, நான்கு மாதங்களுக்கான உணவுப்பொருள்களையும் அத்தயாவசியத் தேவைகளையும் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள் என்று மக்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நிச்சயமற்றதன்மையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. எனவே, இங்கே வளர்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை.
கேள்வி:  ஆர்எஸ்எஸ்/பாஜக, 370ஆவது பிரிவு தொடர்பாக தாங்கள் எடுத்துள்ள தவறான நடவடிக்கை குறித்து எவ்வித வருத்தத்துடனோ குற்றவுணர்வுடனோ இருப்பதாகத் தெரியவில்லையே! 370ஆவது பிரிவை ரத்து செய்த விதம் முன்னெப்போதுமில்லாத ஒன்றாக சித்தரிக்கப்படுகிறதே! வாஜ்பாயி அரசாங்கத்தின்போதுகூட இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லையே!
சீத்தாராம் யெச்சூரி: 370ஆவது பிரிவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் எப்போதுமே அவர்கள் குறிக்கோளாக இருந்து வந்தது. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை அவர்கள் புரிதல் என்னவென்றால், இந்தியாவுடன் காஷ்மீர் இணைய வேண்டும் என்று கூறுகிற அதே சமயத்தில் அங்கு வாழும் மக்களைப்பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. இதில் வேடிக்கையான முரண்பாடு என்னவெனில், வாஜ்பாயி பிரதமராக இருந்த சமயத்தில், மனிதாபிமானம், ஜனநாயகம் மற்றும் காஷ்மீரிகளின் பண்பாடு (Humanism, Democracy and Kashmiri ethos) என்று பேசினார். ஆனால் இப்போது காஷ்மீரிகள் முற்றிலுமாக ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
கூட்டாட்சித் தத்துவம் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டு, ஜனநாயகம் தகர்க்கப்பட்டிருக்கிறது. இதனை நிறைவேற்றியவிதத்தில் மனிதாபிமானம் என்பது முழுமையாக இல்லை.
கேள்வி: அரசாங்கம் கொண்டுவந்த தீர்மானத்தினை சில மாநிலக் கட்சிகளும், பாஜகவை எப்போதுமே எதிர்த்துக் குரல்கொடுத்துவரும் சில அரசியல் கட்சிகளும்கூட ஆதரித்திருக்கின்றனவே!
சீத்தாராம் யெச்சூரி: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள கதி, பாஜக-விற்குப் பிடிக்காத இந்தியாவில் இருக்கின்ற வேறு எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பின்னர் ஏற்படலாம். எதிர்க்கட்சி ஆளும் எந்த மாநிலமும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட முடியும். பின்னர் நாடாளுமன்றத்தின் மூலமாக அம்மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட முடியும். இது, ஒற்றை ஆட்சிமுறை (unitary structure)யை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கையாகும். இதைத்தான் இந்துத்துவா சித்தாந்தமும் கோருகிறது. இவ்வாறு இந்தியாவை ஒரேகுடையின்கீழ் கொண்டுவர முயற்சிப்பது, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு, அதாவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். இத்தகைய முயற்சிக்கு மாநிலக் கட்சிகளில் சில, துரதிர்ஷ்டவசமானமுறையில், ஆதரவு அளித்திருப்பது என்பது, தான் அமர்ந்திருக்கிற மரக் கிளையைத் தானே வெட்டிச் சாய்ப்பதைப்  போன்றதாகும். இவ்வாறு அவர்கள், பாஜகவின் நடவடிக்கையை ஆதரிப்பதற்கு இட்டுச்சென்ற கட்டாய நிலைமைகள் என்ன என்பதை அனைவரும் அறிவோம்.  பாஜக அரசாங்கம் எப்படியெல்லாம் மாநில அரசுகளுக்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்க முடியும் என்பதையும், மத்திய அரசின் உதவிகளை மறுக்க முடியும் என்பதையும் அனைவரும் அறிவோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றும் தீர்மானத்தை ஏன் ஆதரித்தோம் என்று மாநிலங்களில் ஆட்சி செய்யும் அந்த மாநிலக் கட்சிகள்தான் பதிலளித்திட வேண்டும். மத்திய ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதை சமீபகாலங்களில் நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். உதாரணமாகக் கூறவேண்டுமானால், கர்நாடக மாநிலத்தில் குதிரை பேரத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைப்பது, பின்னர் வேறு சில இடங்களில் அதனைப் பயன்படுத்தி தன் ஆட்சியை ஏற்படுத்திக்கொள்வது, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றுமொரு அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்வது. இந்த நடவடிக்கைகளை எல்லாம் நாம் நன்கு அறிவோம்.
கேள்வி: நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அரசாங்கம் சட்டமுன்வடிவுகளை அவசரகதியில் நிறைவேற்றியிருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனவே!
சீத்தாராம் யெச்சூரி: நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகவும் ஆபத்தானதாகும். நான் அங்கே இருந்தபோது, தேர்தல் முடிந்தபின் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் மிகவும் குறுகிய நாட்களே நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். பின்னர் ஏதாவது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் இருக்குமானால் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர், கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும். நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்பட்டபின் நடைபெறும் அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்படவேண்டிய சட்டமுன்வடிவுகள் நுண்ணாய்வுக்காகவும் அவற்றின் கருத்துக்களுக்காகவும் இக்குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு சட்டமுன்வடிவுகள் செம்மை செய்யப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் இவ்விதம் எவ்விதமான ஆய்வும் செய்யப்படாது 30 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.  சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தனிநபர் எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்த வகைசெய்யும் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன அமைப்பு முறை, மாற்றியமைக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவரே தான் குற்றவாளி அல்ல என்பதை மெய்ப்பிக்கவேண்டும் என்ற முறையில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது போன்று இச்சட்டமுன்வடிவுகளில் சில மிகவும் ஆபத்தானவைகளாகும்.   
நம் நாட்டில் நீதிபரிபாலன அமைப்பு முறை இதுவரை இருந்தது எப்படி எனில், ஒருவர் நீதிமன்றத்தின் முன் குற்றஞ்சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டு, அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பதை அரசுத்தரப்பில் சாட்சிகள் மற்றும் சான்றாவணங்களைக் கொண்டு நிரூபித்திட வேண்டும். பின்னர்தான் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியா, இல்லையா என முடிவுசெய்திடும். ஆனால் இப்போது இவர்கள் கொண்டுவந்திருக்கிற சட்டத்திருத்தங்கள் மூலமாக ஒருவர் பயங்கரவாதி என முத்திரைகுத்தப்பட்ட நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படுவார். பின்னர், அவர்தான் தான் பயங்கரவாதியல்ல என்பதை நீதிமன்றத்தின்முன் சாட்சி மற்றும் சான்றாவணங்கள் மூலம் நிரூபித்திட வேண்டும். இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட பல சட்டமுன்வடிவுகள், மாநிலங்களின் உரிமைகளில், கூட்டாட்சித் தத்துவத்தின் மீது,  நேரடியாகக் கை வைப்பவைகளாகும்.  பொதுமக்களின் நலன் காக்கும் அரசு என்பது போய் இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்ற சட்டங்களின் மூலமாக இந்த அரசு ஒரு ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு பாதுகாப்பு (Security) அரசாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள். நம் நாட்டிலிருந்துவந்த தொழிலாளர்நலச் சட்டங்கள் பல, நாட்டின் அரசமைப்புச்சட்டம் உருவாவதற்கு முன்பே இயற்றப் பட்டவைகளாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மாபெரும் தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டங்களின் விளைவாக, இதுபோன்ற தொழிலாளர் நலச் சட்டங்களை உருவாக்கிட பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. ஒரு பக்கம் தனியார்மயம், மறுபக்கம் தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றப்படுதல், இத்துடன் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கீழ் இயங்கிடும் பாதுகாப்பு அரசு நிறுவனப்படுத்தப்பட்டிருத்தல் – ஆகிய இவை அனைத்தும், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் ஆகியவைகள்மீது தாக்குதல் தொடுத்து அவற்றைக் கொல்லுகிறக் கூட்டுக் கலவை (lethal cocktail) ஆகும். இதுபோன்று சட்டத்திருத்தங்கள் கொண்டுவரும்போது, 370ஆவது பிரிவை ரத்து செய்வது உட்பட, எதுவாக இருந்தாலும் அவை தொடர்பாக அனைத்துக் கட்சியினருடனும் கலந்தாலோசனைகள் மற்றும் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இச்சட்டமுன்வடிவுகள் மீது எவ்விதமான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அவற்றுக்கான முயற்சிகளும் எதுவும் கிடையாது. இவை அனைத்தும் முன்னெப்போதும் இல்லாதவைகளாகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் இருந்தபோது, இவர்கள் குறித்து விளித்திடும்போது பெரும்பான்மையின் கொடுங்கோன்மை (Tyranny of Majority) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி இருந்தேன். அதைத்தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
 கேள்வி: யூனியன் பிரதேசம் அமைக்கப்படுவது என்பது தாமாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கிட உதவிடும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறதே!
சீத்தாராம் யெச்சூரி:  காஷ்மீர் மக்கள் அந்நியப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் சுயாட்சி தொடர்பாக அரசால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் அமல்படுத்தப்படாததேயாகும். அதனைச் செய்திடாமல், அங்கே நிலைமைகளில் இயல்பு நிலையைக் கொணர முடியாது. பயங்கரவாதம் ஊட்டி வளர்க்கப்படுவதை, முற்றிலுமாக வேறுவிதத்தில்தான் கையாள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதைப் பொறுத்தவரையில் இடதுசாரிகளைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்து வேறெதுவும் கிடையாது. பயங்கரவாதம் என்பது தேச விரோதம். அது, எங்கிருந்து முளைத்தாலும் சரி. ஆனால், 370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக இதனைச் செய்திடமுடியாது. மாறாக இது, அனைத்து வகையான அடிப்படைவாதிகளையும் ஒருவர்க்கொருவர் ஊட்டி வளர்த்திடவே உதவிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் போது கையெழுத்தான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கிற உறுதிமொழிகள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. நாங்கள் 370ஆவது பிரிவின் கீழ் சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்பதை எப்போதும் மதித்தே வந்திருக்கிறோம். உண்மையில், பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வானம் எட்டும் வரையில் சுயாட்சி அளிக்கப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது அதற்கு நேரெதிராக நடந்திருக்கிறது. இடதுசாரிகளின் நிலைப்பாடு என்பது கொள்கையின் அடிப்படை யிலானதாகும்.  வேலையின்மை என்பது கடந்த ஐம்பதாண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தில் இருக்கிறது. நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமை மிகவும் வேகமாக வீழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்டோமோபைல்ஸ் தொழில்கள் உட்பட ஏராளமான தொழில்பிரிவுகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல தொழிற்சாலைகள் கதவடைப்புகள் செய்திருப்பதால், கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இவை எதைப்பற்றியும் கவலைப்படாது, இந்த அரசாங்கம் ஆர்எஸ்எஸ்-இன் பாசிஸ்ட் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.
(நன்றி: ப்ரண்ட்லைன், ஆகஸ்ட் 30, 2019)
(தமிழில்: ச. வீரமணி)  

Thursday, August 8, 2019

ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டிருத்தல்: ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித்தத்துவத்தின் மீதான எதேச்சாதிகாரத் தாக்குதல்




-பிரகாஷ் காரத்
மோடி அரசாங்கம், அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் மின்னல்வேகத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. மோடி-அமித்ஷா ஆகிய இரட்டையரின் பெரும் ஆதரவுடன் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு அறுத்தெரியப்பட்டு, அதன் துணை ஷரத்தாக இருந்த 35-ஏ பிரிவு செல்லாததாக்கப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தை ஒழித்துக்கட்டியிருப்பதன் மூலமும் அதனை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியவிதத்தில் இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருப்பதன் மூலமும் அவர்கள் மிகவும் நாணமற்றமுறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள்.
இவை அனைத்தும், ஜம்மு-காஷ்மீர் மக்களை அடைத்து வைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக, மிகவும் வஞ்சமான முறையில் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கே குடியரசுத்தலைவர் ஆணை, அரசமைப்புச் சட்ட 370ஆவது பிரிவை நீக்குவது தொடர்பான தீர்மானங்களும், சட்டமுன்வடிவுகளும் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சின்னாபின்னமாகப் பிரித்திருப்பதும் – ஆகிய அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது மிகவும் சூழ்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு மோசடியாகும்.
இதுவரையிலும் இந்திய ஒன்றியத்தில் 29 மாநிலங்கள் இருந்தன. இப்போது ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதன் மூலம் இந்த எண்ணிக்கை 28ஆகக் குறைந்துவிட்டது. இத்தகைய நிகழ்வு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாக ஒன்று.  பாஜக அரசாங்கம், இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவானது,  அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அடிப்படைக் கூறாகும். இது, முன்னமே இருக்கிற ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றவோ அல்லது புதியதாக உருவாக்கவோ வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ளாமல், செய்திட முடியாது. இவ்வாறு அம்மாநிலத்தின் உரிமைகளில் கூச்சநாச்சமற்ற முறையில் தாக்குதல் தொடுத்திருப்பதையும், அதன்மூலம் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைத் திருப்பதையும் இதற்குமுன் நாம் பார்த்ததே கிடையாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திடும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவானது, இந்திய ஒன்றியத்தில் உள்ள இதர மாநிலங்களிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வித்தியாசமான முறையில் சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. அதன்படி அம்மாநிலமே தனக்கான அரசமைப்புச் சட்டத்தைத் தன்னுடைய அரசியல் நிர்ணயசபை மூலமாகத் தானே இயற்றிக்கொள்ளும்.  இதன்மூலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும், அதன் சட்டமன்றத்திற்கும் விரிவான அளவில் சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது.  அவற்றின்படி இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் தங்கள் மாநிலத்திற்கு ஏற்புடையதா என்று அவர்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும்.
அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின் பின்னணி
சுதந்திரத்திற்கு முன் மன்னராட்சியின் கீழிருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சுதந்திரத்திற்குப்பின் இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள காஷ்மீரையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது அம்மாநிலத்தில் மகாராஜாவாக இருந்த ஹரிசிங் தன் மாநிலத்தை, இந்தியாவுடன் இணைப்பதற்கு விரும்ப வில்லை. அவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைத் தனித்தே ஒரு சுதந்திர நாடாகவே வைத்திருக்க விரும்பினார். எனவே, 1947 ஆகஸ்ட் 15 அன்று இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்போது, ஷேக் அப்துல்லா தலைமையில் இயங்கிவந்த தேசிய மாநாட்டுக் கட்சி, நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தது. இது, அப்போது மன்னர் சமஸ்தானங்களில் நடைபெற்றுவந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது.
அந்த சமயத்தில் பாகிஸ்தானிலிருந்து பலர் ஊடுருவி வந்தபோது, அதிலும் பிரதானமாக வட மேற்கு முன்னணி மாகாணத்திலிருந்த பதன்கள் ஸ்ரீநகர் எல்லைக்கு வந்தடைந்த போதுதான், மகாராஜா காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் அத்தகையதொரு ஒப்பந்தம் 1947 அக்டோபர் 26 அன்று கையெழுத்தானது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்த மக்கள், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு, ஊடுருவியவர் களுக்கு எதிராகப் போராடினார்கள். இந்திய ராணுவம், விமானம் வழியே ஸ்ரீநகருக்குள் இறங்கி, ஊடுருவியவர்களை விரட்டி அடித்தது.
இந்தப் பின்னணியில்தான், அரசமைப்புச் சட்டத்தின் வரைவை உருவாக்கிக் கொண்டிருந்த அரசியல் நிர்ணயசபை, அதில் 370ஆவது பிரிவையும் உருவாக்கி இணைத்தது. 370ஆவது பிரிவு, இந்திய அரசுக்கும் காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே உருவான உடன்படிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காஷ்மீரிகள் (Kashmiriyat) என்கிற தங்கள் சொந்த அடையாளங்களுடனேயே இந்திய ஒன்றியத்தில் வாழ்வதற்கான காஷ்மீர் மக்களின் அபிலாசைகளை அது உள்ளடக்கி இருந்தது.
இந்திய நாட்டிற்கு, இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு நாடு மத அடிப்படையில் இரண்டாகத் துண்டாடப்பட்ட சமயத்தில், ஒன்று முஸ்லீம் நாடாகவும் மற்றொன்று மதச்சார்பற்ற நாடாகவும் துண்டாடப்பட்டசமயத்தில், பெரும்பான்மையினர் முஸ்லீம்களாக உள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், முஸ்லீம் நாடான பாகிஸ்தானுடன் இணைவதை நிராகரித்துவிட்டு, மதச்சார்பற்ற இந்தியாவுடன் இணைந்ததேயாகும். நாடு பிளவுண்டபோது, வட மேற்கு இந்தியா கலவரங்களால் பாதிக்கப்பட்ட சமயத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தின் புகலிடமாகத் திகழ்ந்தது.
370ஆவது பிரிவு படிப்படியாக சீர்குலைக்கப்பட்டது
காஷ்மீர் மக்களுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளித்த உறுதிமொழியிலிருந்து ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நழுவியதே காஷ்மீர் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமாகும். 1953க்குப்பின் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின்கீழ்  அளிக்கப்பட்டிருந்த சுயாட்சியை அரித்துத் தேய்ப்பதற்கான நடவடிக்கைகளில் படிப்படியாக இறங்கின. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுவந்த சுயாட்சியை மறுப்பதும், மத்தியத்துவத்தை நோக்கிக் காயை நகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் 60களிலும், 70களிலும் 80களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. அம்மாநிலத்தின் சுயாட்சியின் பெரும்பாலான அம்சங்களை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் 370ஆவது பிரிவு படிப்படியாகச் சீர்குலைக்கப்பட்டது. 1954இல் ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபின்னர், 2010 வரையிலும் 42 உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து அம்மாநிலத்தில் தலையிட்டிருக்கிறது. இவை, 370ஆவது பிரிவு ஏற்படுத்தப்பட்ட சமயத்தில் இருந்த காஷ்மீர் நிலைமையிலிருந்து மிகவும் விரிவான அளவிற்கு மத்திய ஆட்சியாளர்களின் தலையீட்டை அதிகப்படுத்தியது. மத்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவின் உண்மையான சாரத்தை எப்படியெல்லாம் உருக்குலைத்துச் சிதைத்து வந்திருக்கிறார்கள் என்பதை சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரனி அவர்கள் மிகவும் செம்மையாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இயற்றப்பட்ட 97 சட்டங்களில், 94 சட்டங்கள் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கும் பிரயோகிக்கக் கூடியவைகளாகும்.
அந்நியப்படுதலும் தீவிரவாதம் தலைதூக்குதலும்
காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி அரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஜனநாயகமும் ஜனநாயக உரிமைகளும் படிப்படியாக நசுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன. தேர்தல்கள் மத்திய ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் வெளிப்படையாகவே மோசடியாக நடத்தப்பட்டன. இதனை 1987 தேர்தலில் அப்பட்டமாகவே காண முடிந்தது.   இந்தப் பின்னணியில்தான் அங்கே மக்கள் அந்நியப்படுவதற்கான அடையாளங்கள் வளர்ந்தன. இது பலரை தீவிரவாதத்தின் பக்கமும், விடுதலை (‘Azadi’) என்னும் முழக்கத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொள்வதற்கும் தள்ளியது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி உணர்வை, இஸ்புல் முஜாஹிதீன் போன்ற பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய சக்திகளும், பின்னர் மிகவும் தீவிரவாத இயக்கங்களான ஜைய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கின.
ஆரம்ப காலத்திலிருந்தே, மன்னராட்சிக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையில் நடைபெற்ற இயக்கத்திற்கு எதிராகவே இந்து வகுப்புவாத சக்திகள் இருந்தன.  ஜனசங்கத்திற்கு முன்பிருந்த பிரஜா பரிஷத், உண்மையில், மகாராஜாவை ஆதரித்து வந்தது. ஜன சங்கமும், இந்து மகாசபையும் 370ஆவது பிரிவையும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு எவ்விதமான சுயாட்சி அளிப்பதையும் முழுமையாக எதிர்த்து வந்தன. இந்துத்துவா சித்தாந்தத்தின் கீழ் இயங்கிடும் ஆர்எஸ்எஸ் ஆதரவு ஜன சங்கமும் பின்னர் பாஜகவும் 370ஆவது பிரிவை உறுதியாக எதிர்த்தே வந்தன.  அவர்களுடைய சித்தாந்தம் என்பது வலிமையான மத்தியத்துவப்படுத்தப்பட்ட இந்தியா என்பதேயாகும். மேலும், காஷ்மீர் மக்கள் மீது அவர்கள் பகைமை கொள்வதற்கு மற்றுமொரு முக்கியகாரணம், அப்பகுதி முஸ்லீம்கள் ஆதிக்கத்தின்கீழ் உள்ள பகுதியாக இருப்பதுமாகும்.
ஜம்மு-காஷ்மீர் சிதைக்கப்பட்டது இந்துத்துவாவின் சூழ்ச்சியே
 எல்லைகளுக்கு அப்பாலிருக்கின்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் விரும்புவதைப்போலவே, இந்துத்துவா வாதிகளும், ஆர்எஸ்எஸ்-உம், மத அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரித்திடவே விரும்பி இருக்கிறார்கள்.  அதாவது, இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஜம்முவைத் தனியாகவும், முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கைத் தனியாகவும், புத்திஸ்டுகள் சற்றே பெரும்பான்மையுடன் இருக்கின்ற லடாக் பகுதியைத் தனியாகவும் பிரிக்கவே விரும்பினார்கள். இம்மூன்று பிரிவினரும் சேர்ந்து ஒன்றாக இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆட்சியாளர்களுக்கு வெறுக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வந்தது.
ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் நன்கு வளர்வதற்கான மண் என்றே நம்பின. ஏனெனில் அங்கே உள்ள மக்களின் மதச் சேர்மானம் அப்படி இருப்பதாக அவை கருதின. அவர்களிடம் ஊறிப்போயிருக்கின்ற முஸ்லீம் எதிர்ப்பு கண்ணோட்டமானது, காஷ்மீர் மக்களுக்கு எவ்விதமான ஜனநாயக உரிமைகளையும் அளிப்பதற்கு எதிரான விதத்திலேயே அமைந்திருந்தது. 370ஆவது பிரிவை ரத்து செய்வதை அவர்கள் நியாயப்படுத்தியதற்குக் காரணம், அதன்பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களைத் தங்களுடைய ராணுவத்தின் மூலம் நசுக்கிவிடலாம் என்பதேயாகும்.  
 ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி-அமித் ஷா இரட்டையரைப் பொறுத்தவரை, காஷ்மீர் என்பது அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், அங்குள்ள மக்களோ முஸ்லீம்களாக இருப்பதால் அந்நியர்களாகக் கருதப்பட வேண்டியவர்களாவார்கள்.
ஆர்எஸ்எஸ்/பாஜக, ஜம்மு மக்களுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையே மதவேற்றுமையை அதிகப்படுத்திட தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் இதற்கான முயற்சிகளில் வெறித்தனம் அதிகரித்தது. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான கிளர்ச்சிகள் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் மூலம் மிகவும் வெறித்தனமாக நசுக்கப்பட்டன. சாமானிய மக்களை தீவிரவாதிகளைப்போலக் கருதி அவர்கள்மீது ராணுவம்/துணை ராணுவப் படையினர் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்தன. அனைத்துவிதமான அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்திடும் போக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வது என்பது அதிகரித்தவண்ணம் இருக்கிறது.   இதன்காரணமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்படுவது என்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் சிறைக்கூடம்
பாஜக ஆட்சியாளர்களுக்கு, காஷ்மீர் மக்கள் மீது இருக்கின்ற வெறுப்பை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சிதைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படும் சமயத்தில், மாநிலத்திற்குள் பாதுகாப்புப் படையினரைக் குவித்ததில் நன்கு வெளிப்பட்டது. கூடுதல் மத்திய துணை ராணுவப்படையினர் பல்லாயிரக் கணக்கானோர், மற்றும் ராணுவத்துருப்புகள் பல்லாயிரக் கணக்கானோர் மாநிலம் முழுவதும்  வான்வழியாக இறக்கப்பட்டு, குவிக்கப்பட்டனர்.  பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தகவல்களை மக்கள் தெரிந்தகொள்ளக்கூடாது என்பதற்காக இணையம் மற்றும் மொபைல்போன்கள் சேவைகள் முடக்கப்பட்டன. அமர்நாத் யாத்ரிகர்களின் யாத்திரை திரும்பப்பெறப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் திரும்ப அழைக்கப்பட்டனர்.  காஷ்மீர் மாநிலமே மாபெரும் சிறைக்கூடாமாக மாறியது. காஷ்மீர் மாநிலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் சமயத்தில் அந்தச் சட்டத்தால் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்!
போலிப் பகட்டு வாதங்கள்
370ஆவது பிரிவை ரத்துசெய்வதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்வைத்த வாதங்கள், இந்துத்துவா முகாம்களில் அடிக்கடிக் கூறப்படும் பட்டுத்தேய்ந்த பழகிப்போன வாதங்களேயாகும்.
370ஆவது பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்குத் தடையாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார். உண்மையில், காஷ்மீர் மக்கள், அவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் விரும்பியேதான் இந்திய ஒன்றியத்துடன் சேர்ந்தார்கள்.   இந்த உறுதிமொழிகள் பின்னர் 370ஆவது பிரிவில் சேர்க்கப்பட்டன. இவ்வாறு காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவுடன் இணைவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊட்டி வளர்ப்பதாகக் கூறியிருக்கிறார். உண்மை என்னவென்றால், காஷ்மீர் மக்களுக்கு 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சிக்கான உறுதிமொழிகள் அரிக்கப்பட்டதன் விளைவாகவே அம்மக்கள் மத்தியில் அதிருப்தியும் இந்தியாவிடமிருந்து அந்நியப்படும் சிந்தனையும் அதிகரித்து, அவை பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கும், பாகிஸ்தான் உதவியுடனும் உடந்தையாக இருப்பதன் மூலமும் பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றன.  அம்மாநிலத்தில் சுயாட்சியையும் மறுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தையும் மீளவும் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அம்மக்கள் மத்தியில் அந்நியப்படுதலை சமாளித்திட முடியும்.
அமித் ஷா, காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சியின்மைக்கும், (development) பொருளாதார வளர்ச்சி (economic growth) இன்மைக்கும்  370ஆவது பிரிவையே குற்றம் சாட்டி இருக்கிறார். கடந்த முப்பதாண்டுகளாக அம்மாநிலத்தில் தலைதூக்கிய தீவிரவாதமும், சங்கடமான சூழ்நிலைமையும்தான் வளர்ச்சிப் பணிகளையும், பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை யும் முடக்கின. அங்கே ஓர் அரசியல் தீர்வினைக் கண்டு, அமைதியையும் இயல்புவாழ்க்கையையும் திரும்பக் கொண்டுவராமல், அமித் ஷா கூறுவதுபோல் அங்கே வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தனியார் முதலீடு பீறியடித்திடும் என்று நினைப்பதெல்லாம் பகல்கனவேயாகும்.
இறுதியாக, அமித் ஷா, மாநிலத்தில் மிகவும் விரிவான அளவிற்கு ஊழலும் பொது நிதி சூறையாடலும் ஏற்பட்டிருப்பதற்கும் 370ஆவது பிரிவைக் குறை கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் ஊழல் தலைவிரித்தாடுவதும், கூலிக்கு மாரடிக்கும் நிர்வாகம் இருப்பதும் உண்மைதான். ஆனாலும், இதற்கும் காரணங்கள் என்னவென்றால், அங்கே சரியானமுறையில் ஜனநாயக நடைமுறைகள் இல்லாததும், நிர்வாகத்தினர் தங்களுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்கிற நிர்வாக அமைப்புமுறை மிகவும் பலவீனமாக இருப்பதுமேயாகும்.
ஜம்மு-காஷ்மீர் வெகு காலமாகவே  போலீஸார் ஆளும் மாநிலமாகவே (police state) இருந்து வருகிறது. நீண்டகாலமாகவே மத்திய ஆட்சியின் கீழ்தான் இருந்திருக்கிறது. (ஒட்டுமொத்தத்தில் சுமார் பத்தாண்டு காலம் மத்திய ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.) இவ்வாறு அம்மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதற்குக் காரணம், மத்திய அரசின் கீழான அதிகாரவர்க்கமும், பாதுகாப்புத்துறை நிர்வாகமும் அவர்களுக்கு உடந்தையாயிருக்கின்ற அரசியல்வாதிகளுமே காரணமாகும். ஏனெனில் இவர்கள் பெரிதாக எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.
மோடி அரசாங்கத்தின் போலி வாதங்கள் 
அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற சதி எதேச்சாதிகார ஆட்சியே நடக்கிறது என்பதற்கான நேரறிகுறியாகும். அரசமைப்புச் சட்டத்தின் மற்றுமொரு பிரிவை – அதாவது 367ஆவது பிரிவை – மாற்றுவதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் குடியரசுத் தலைவர் உத்தரவு ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாற்றியமைத்த பின்னர், அதனை 370ஆவது பிரிவின் சாரத்தை நீக்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது. இத்தகையதொரு ஏற்பாட்டின்படி, மாநில சட்டமன்றத்தின் இசைவு பெறவேண்டும் என்பது ஆளுநரால் பறித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஏனெனில் அந்த மாநிலம் குடியரசுத்தலைவரின் ஆட்சியின் கீழ் இப்போது இருந்து வருகிறது.
ஆளும் கட்சியினரின் சூழ்ச்சித்தந்திரங்களும், மோடி அரசாங்கத்தின் எதிர்க்கட்சியினரை மிரட்டிப் பணியவைக்கிற அதிகாரங்களும் இதில் நன்கு செயல்பட்டிருக்கின்றன.  பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர்சிபி, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பல கட்சிகள், தங்கள் தலையில் மண்ணைவாரிப் போடக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு,  பாஜகவிற்கு ஆதரவாக அணிதிரண்டதிலிருந்து இதனைக் காண முடியும். ‘தன்னுடைய காலை வெட்டுவதற்குத் தன்னுடைய கோடாலியையே பயன்படுத்தியதைப்போல’  என்கிற இந்தி பழமொழியையே இவர்களின் செய்கை காட்டுகிறது.
காஷ்மீரில் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியை அங்கே அளிக்காமல் அதனை அரித்துவீழ்த்தியதில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.  நாடாளுமன்றத்தில் பாஜகவின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான முறையில் அதனால் எதிர்ப்பினைப் பதிவு செய்திட முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.  
நீண்ட போராட்டம் எதிர்நோக்கி இருக்கிறது
குடியரசுத் தலைவர் உத்தரவுக்கும் இந்தச் சட்டமுன்வடிவுக் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கும் எதிராக நீதித்துறையில் மேல்முறையீடுகள் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால், காஷ்மீர் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்ததற்கு எதிராக நீண்ட போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் ஜம்மு-காஷ்மீருக்கானது மட்டும் அல்ல. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்திடுவதற்காகவும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்குமான ஒரு போராட்டமுமாகும். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட சுயாட்சியைப் பாதுகாத்திட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. சுயாட்சியை அளிப்பதற்கான அதிகாரங்களையும், 370ஆவது பிரிவின்கீழான அதிகாரங்களையும் அரித்து வீழ்த்திவந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. பாஜகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அம்மாநிலத்தில் அதிகபட்சம் சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும், மேலும் அம்மாநிலத்தின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கும் தனித்தனியே பிராந்திய அளவிலான சுயாட்சி அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்திருக்கிறது. தீவிரவாதிகளின் ஆயுத வன்முறைகளையும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்துமுறியடித்திட வேண்டும் கூறுகிற அதே சமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநிலத்தில் இயங்கிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து வந்திருக்கிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இணைத்திடும் பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு, மக்களில் பல பிரிவினர் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் எழுந்துள்ள பிரச்சனைக்கு இது முடிவு கட்டுவதற்கான உறுதியான வழி என்று அவர்களால் பார்க்கப்படுகிறது. இவ்வாறுதான் மோடி அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமானமுறையில் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதனால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்து மக்கள் முன் வைக்கப்படவில்லை.
இந்தப் பணியை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள்தான் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பர்ய கலாச்சாரத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தை, இந்துத்துவா எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடனும், நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும் இணைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)




Tuesday, July 2, 2019

ஆசிரியர் பணியிடங்களுக்கான சட்டமுன்வடிவு துரோணரின் மனோபாவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம் மக்களவையில் ஆ.ராசா பேச்சு



ஆசிரியர் பணியிடங்களுக்கான சட்டமுன்வடிவு
துரோணரின் மனோபாவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது
இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம்
மக்களவையில் ஆ.ராசா பேச்சு
புதுதில்லி, ஜூலை 2-
இந்தச் சட்டமுன்வடிவு துரோணரின் மனோபாவத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனை நாங்கள் ஏற்க முடியாது. இனியும் நாங்கள் ஏகலைவன்களாக இருக்கமாட்டோம் என்று மக்களவை திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.
2019ஆம் ஆண்டு மத்தியக் கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டமுன்வடிவு திங்கள் அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இதன்மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:

இந்தச் சட்டமுன்வடிவில் ஒரு பகுதியை ஆதரிக்கிறேன். இதற்குக் காரணம்  பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியிருக்கிறவர்கள் சம்பந்தமாகவும் திமுகவின் கொள்கையில் ஒரு சிலவற்றை இது கூறுவதால் இதன் ஒரு பகுதியை ஆதரிக்கிறேன். எனினும், இந்தச் சட்டமுன்வடிவு பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்தது தொடர்பாக மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவைகளில் உள்ளதால், அவற்றில் தீர்ப்பு வரும்வரை நாங்கள் இதனை எதிர்க்கிறோம்.
இந்தச் சட்டமுன்வடிவு ஒன்று தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இது இரு பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும். முதல் பகுதியில், இந்தச்சட்டமுன்வடிவில் கூறியுள்ளபடி, சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.  இது ஏன்? அதற்கான காரணத்தை விளக்குகிறேன்.
சென்ற மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டபோது நாங்கள் அதனை பகுதியாக இல்லை.  ஆனாலும், இந்தச் சட்டமுன்வடிவானது, பழைய அரசமைப்புத்திருத்தச் சட்டமுன்வடிவுகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். இது தொடர்பாக வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால் இவற்றின்மீது சிலவற்றைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவின் நோக்கங்களும், காரணங்களும் என்பதன் கீழ் பத்து சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவு என்ன? அது இரு பகுதிகளைக் கொண்டது. அந்தச் சட்டமுன்வடிவின் நோக்கங்களும், காரணங்களும் கூறுவதாவது: தற்சமயம், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலிருந்தும், பொதுத்துறை வேலைகளிலும் தங்கள் பொருளாதார நலிந்த பிரிவின்காரணமாக  ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்தச் சட்டமுன்வடிவின் இரண்டாவது அம்சம்: அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றும் விதத்தில், பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களிலும், அரசாங்கம் மற்றும் பொது வேலைவாய்ப்புகளிலும் நியாயமானதொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு இரு காரணங்கள் கூறப்பட்டிருக்கிறது. முதலாவது, பொருளாதாரரீதியாக ஏழைகளுக்கு போதிய வாய்ப்பு இல்லை. இரண்டாவது அரசமைப்புச்சட்டத்தின் 46ஆவது பிரிவு இவ்வாறு சட்டத்திருத்தம் கொண்டுவர வகைசெய்கிறது. எனவே இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.
இட ஒதுக்கீடு ஒன்றும் புதிதல்ல
மாண்புமிகு உறுப்பினர்களே, நம் நாட்டில் இட ஒதுக்கீடு என்பது ஒன்றும் புதிதல்ல. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே அது இங்கே இடம் பெற்றிருக்கிறது. அது எப்படி என்று ஒருவர் ஆச்சர்யப்படக்கூடும். அப்போதிருந்த இடஒதுக்கீடு என்பது ஒருவிதமான மனிதாபிமானமற்ற ஒன்று. ஜனநாயகபூர்பமற்ற ஒன்று. நான் இதனை மேலும் விளக்குகிறேன்.
சமூகம் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள். இவர்களிலும் வராதவர்கள் சாதியற்ற, தலித்துகள். நாட்டின் அனைத்துத் தொழில்களும் மேற்கண்ட நான்கு வர்ணத்தாராலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அது ஒருவிதமான இட ஒதுக்கீடாகும். அந்த இடஒதுக்கீடு மனிதகுலத்திற்கு எதிரானது, மனிதாபிமானமற்றது மற்றும் ஜனநாயகபூர்வமற்றதாகும். (anti-human, inhuman and undemocratic)
இப்போது, நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் நான் என்ன கூறுகிறோம்? இந்திய மக்களாகிய நாம் இந்தியாவிற்கு என்று ஒரு இறையாண்மைகொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவிக்கொண்டிருக்கிறோம், என்று கூறுகிறோம்.  இவ்வாறு ஓர் அரசமைப்புச்சட்டத்தை நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டபின்பு நாம் ஏற்படுத்தியுள்ள இடஒதுக்கீடு என்பது, மனிதாபிமானமிக்கதும், ஜனநாயகபூர்வமானதுமாகும்.  
எனவேதான் இடஒதுக்கீடு என்பது நமக்கு ஒன்றும் புதிய ஒன்று அல்ல என்று கூறுகிறேன். ஒரே வித்தியாசம், முன்பிருந்தது மனிதாபிமானமற்றது, ஜனநாயகவிரோதமானது. இப்போதுள்ளது மனிதாபிமானத்துடன் ஜனநாயக பூர்வமானது.
திமுக உறுப்பினன் என்ற முறையில் இப்புதிய இட ஒதுக்கீடு கொண்டுவரப்படுவதற்கு எங்கள் தலைவர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் முதலானவர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன். அரசமைப்புச்சட்டம் 1951இல் சட்டமாவதற்கு முன்பே அவர்கள் இதனை வலியுறுத்தி வந்தார்கள்.
அரசமைப்புச்சட்டத்திற்கான முதல் திருத்தம், 1951இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் திராவிட இயக்கத்தின் முன்முயற்சி காரணமாக அத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கும் முன்னர் 1927இல் எங்கள் திராவிடர்களின் அரசாங்கம் அமைந்திருந்த சமயத்தில் சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கி இருந்தவர்களுக்காகவும், முஸ்லீம்கள் உட்பட தலித்துகளுக்காகவும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. வேறெவரும் இதனைக் கனவுகூட காணவில்லை. எனவே இந்தவகையில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசமைப்புச்சட்டத்தின் செல்லுபடிநிலை (validity) உயர்த்திப்பிடிக்கப்பட வேண்டும்.
நான்  ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதைப்போல இந்தச்சட்டமுன்வடிவு இரு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பது. இரண்டாவது, அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவு தொர்பானது.
அரசமைப்புச்சட்டத்தின் 46ஆவது பிரிவு என்ன கூறுகிறது? அது, அரசு, மக்களில் நலிவடைந்த பிரிவினரின், குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினரின், கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்திட சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களை சமூக அநீதியிலிருந்தும், சுரண்டலின் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும், என்றும் கூறுகிறது.  
இந்தப்பிரிவில் ‘பொருளாதார நலன்கள்’ என்கிற சொற்றொடர், புனையப்பட்டுள்ளது. அதேசமயத்தில் அரசமைப்புச்சட்டத்தின் 15 மற்றும் 16 ஆகியவை சமூக ரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் (socially and educationally backward classes) என்று கூறி அவர்கள் கல்வி நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிறது. அரசமைப்புச் சட்டம் ‘வகுப்பு’ (class) என்கிற அதே சமயத்தில் இப்போது இங்கே கொண்டுவரப்பட்டிருக்கிற சட்டமுன்வடிவு ‘பிரிவு’ (section) என்கிறது. வகுப்பிற்கும் பிரிவிற்கும் வித்தியாசம் உண்டு.
எனவே, சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது புதிதாக பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினர் என்று சேர்த்திருக்கிறார்கள்.
நாங்கள் பொருள்தாரரீதியாக நலிவடைந்தபிரிவினருக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும், அதிக கடன் வழங்கிட வேண்டும். பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கான கல்விக் கட்டணங்கள் முழுமையாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இப்போது பத்து சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்திருப்பதன் மூலம், தலித்/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களான ஒடுக்கப்பட்டவர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும்  அளிக்கப்பட்டிருந்த சமூக நீதிக்குள் அத்துமீறல் நடந்திருப்பதாக நான் கருதுகிறேன்.
இவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு என்பது கருணையின் அடிப்படையிலானதல்ல. அது அவர்களின் உரிமை. இது பிரிட்டிஷ் அரசாங்கக் காலத்திலேயே கொண்வரப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட ஒன்று. 1880களிலிருந்தே இது உருவாகி வளர்ந்து வந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை நான் உங்களுக்கு அளித்திட முடியும். பிற்பட்ட வகுப்பினர் என்கிற சொற்றொடர் 1880களிலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னர் 1985இல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் கல்வி உதவித்தொகை அளிக்க வகை செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பகுதியினர் தீண்டத்தகாதவர்கள். இது சென்னை ராஜதானியில் நடந்தது. 1917இல் கோலாபூர் மகாராஜா மாண்டேகு செம்ஸ்போர்ட் நலனில் அக்கறை காட்டினார். அதில் பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்டவர் என்ற சொற்றொடர் கிடையாது.
1918இல் மைசூர் மகாராஜா பொது நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை சேர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய ஒரு குழுவை அமைத்தார். 1920இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டு தெரிவுக் குழு அந்த அறிக்கையை ஆய்வு செய்து, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் குறித்து அழுத்தம் தந்தது. 1921இல் பிராமணர்கள் தவிர இதர அனைத்து வகுப்பாரும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று லண்டனில் கூடிய தேர்வு வாரியம் வரையறை செய்தது.
1928இல் ஹார்டாக் குழு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றால் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட சாதியினர் அல்லது வகுப்பினர் என்றும் இதில் அடக்கப்பட்ட வகுப்பினர், தொல் பழங்குடியினர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கிரிமினல் பழங்குடியினரும் அடங்குவர் என்று வரையறுத்தது.
அதன்பின் எண்ணற்ற குழுக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்தும் தலித்துகள் பழங்குடியினர் குறித்தும் பல்வேறு வரையறைகளை  அளித்துள்ளன. 1947க்குப்பின்னர் அரசியல் நிர்ணயசபை விவாதம் தொடங்கியபோது, என்ன நடந்தது? சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று டி.டி.கிருஷ்ணமாச்சாரி கூறினார். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் டாக்டர் அம்பேத்கர், இரண்டு அம்சங்கள் தொடர்பாக வரைவுக் குழு தன் பரிந்துரைகளை அளித்திட வேண்டும் என்றார். முதலாவதாக,  அனைவருக்குமான வாய்ப்புகளில் சமத்துவம் வேண்டும். இரண்டாவதாக, இதுநாள்வரையிலும் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத இனத்தினருக்கு ஆதரவைக ஏதேனும் செய்தாக வேண்டும். டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு பதிலளித்தார். ஏன் இவை அனைத்தையும் சுருக்கமாக நான் இங்கே குறிப்பிடுகிறேன்? ஏனெனில் இதன் ஆணிவேர் 1880இலேயே ஊன்றப்பட்டுவிட்டது. முதல் திருத்தம் 1951இல் மேற்கொள்ளப்பட்டது. சென்ற மக்களவைக் கூட்டத்தொடர் வரையிலும், பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலிருந்தே, எங்குமே, பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், அரசமைப்புச் சட்டத்திலோ அல்லது அடக்கப்பட்ட வகுப்பாருக்கான இட ஒதுக்கீட்டுக்கான  அரசாங்கத்தின் ஆணை எதிலுமோ  இடம் பெறவில்லை.
திடீரெனறு, அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். இதில் பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்று அளித்திருக்கிறீர்கள். அதனால்தான் இதனை தெரிவுக்குழுவிற்கு அனுப்பிட வேண்டும் என்கிறோம்.
இதுதொடர்பான மேல்முறையீடுகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன. அதுவரையிலும், 10 சதவீத இடஒதுக்கீடு கிடப்பில் போடப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவந்திருக்கிறீர்கள். இது தொடர்பாக என்ன ஆய்வு மேற்கொண்டீர்கள்? அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவின்கீழ் இதனை நியாயப்படுத்த முடியுமா? இது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா (abuse) அல்லது தகாதமுறையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா (misuse) என நான் அறிய விரும்புகிறேன்.
முந்தைய ஐமுகூ அரசாங்கம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ (Sinho) தலைமையில் ஓர் ஆணையம் அமைத்து,  பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ்  10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்திடுமாறு கேட்டுக்கொண்டது. மேற்படி ஆணையம், மாநிலங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நலத் திட்டங்களை மட்டும் விரிவுபடுத்திட பரிந்துரைத்திருந்தது.
இந்தியச் சூழ்நிலையில் இடஒதுக்கீடு என்பது சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பாரை மேலே தூக்கிவிடுவதற்கானதோர் ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.  பொருளாதாரரீதியான பிற்போக்கு நிலை, கல்வி நிறுவனங்களிலும் வேலைகளிலும் இட ஒதுக்கீட்டுக்கான அளவீடாக (criteria) இருக்க முடியாது. இவ்வாறு ஐமுகூ அரசாங்கம் நியமித்த ஆணையம் கூறியிருக்கிறது.
அரசாங்கம் ஓர் ஆணையத்தை அமைக்கிறது. அந்த ஆணையம் மிகவும் தெளிவாக ஓர் அறிக்கையை மிகவும் ஆணித்தரமாக அளிக்கிறது. அந்த அறிக்கையை நீங்கள் தள்ளுபடி செய்கிறீர்கள். அதற்கு முற்றிலும் விரோதமானமுறையில் சதியாலோசனையுடன் ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவருகிறீர்கள். சதியாலோசனை என்று நான் கூறுவதற்குக் காரணம் இந்தச் சட்டமுன்வடிவின் நகல்களை சுற்றுக்கே விடவில்லை. நாடாளுமன்றத்த்ன் அலுவல் ஆய்வுப் பட்டியலிலும் இது இடம் பெறவில்லை. அவ்வாறு பட்டியலிடாமலேயே, அரசமைப்புத் திருத்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவதென்பது அரசுத்தரப்பில் வெட்கக்கேடான விஷயமாகும்.
அரசமைப்புத் திருத்தச்சட்டம் அலுவல் ஆய்வுப் பட்டியலில் (List of Business) பட்டியலிடப்படாமல், முதல் தடவையாக அரங்கேறி இருக்கிறது. இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவை இந்த அரசு கொண்டுவந்திருக்கும் விதம் மிகவும் மர்மமாய் (fishy) மாறி இருக்கிறது. அதனால்தான் இதனைத் தெரிவுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சட்டமுன்வடிவை இந்த அரசு கொண்டுவந்துள்ள விதம் சந்தேகத்திற்கு மிகவும் இடமளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
எனவே, மேலே கூறிய காரணங்களின் அடிப்படையில், பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு  10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கிறேன்.
இனியும் நாங்கள் ஏகலைவன்களாகவே இருப்போம் என்று நினைக்காதீர்கள்.  துரோணரின் மனோபாவத்தை நீங்கள் கொண்டிருப்பது மாற்றப்பட வேண்டும். இனியும் நாங்கள் ஏகலைவன்கள் இல்லை என்பதை நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
(ந.நி.)