Sunday, March 7, 2010

உலக மகளிர் தினத்தின் நூறாவது ஆண்டு - பிருந்தா காரத்




நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1910 ஆகஸ்ட் 27 அன்று கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிஸ்ட் மகளிர் மாநாட்டில் புரட்சி வீராங்கனை கிளாரா ஜெட்கின், தன் சக தோழர் அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் மற்றும் இதர தோழர்களுடன் இணைந்து ‘‘சர்வதேச மகளிர் தினம்’’ அனுசரிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

வரலாறு படைத்திட்ட தீர்மானம்

தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: ‘‘ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கின்ற அரசியல் மற்றும் வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் கீழ் இயங்கும் தொழிற்சங்க ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து நாடுகளிலும் உள்ள சோசலிஸ்ட் மகளிர், ஒவ்வோராண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுவார்கள். அதன் தலையாய குறிக்கோள், மகளிர்க்கான வாக்குரிமையைப் பெற உதவுவதேயாகும். இந்தக் கோரிக்கையை, சோசலிஸ்ட் கட்டளைக்கிணங்கப் பெறப்பட வேண்டும். மகளிர் தினம் சர்வதேச குணாம்சத்துடன் அமைந்திட வேண்டும். அதற்கான தயாரிப்புப் பணிகள் மிகவும் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.’’ மகளிர்க்கான வாக்குரிமையானது, சோசலிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்தும் எனக் கருதப்பட்டது.

முதல் மகளிர் தினம்

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சிகள், உழைக்கும் பெண்கள் மன்றங்கள் மற்றும் பின்னிஷ் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று பெண்கள் அடங்கிய பதினேழு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் பிரதிநிதிகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள். அடுத்த ஆண்டு - அதாவது 1911இல் - கோபன்ஹேகன் முன் முயற்சியின் விளைவாக ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அணிவகுத்தார்கள். 1848 புரட்சியைக் கொண்டாடும் மார்ச் 19 அப்போது மகளிர் தினத்திற்கான நாளாகத் தெரிவுசெய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மகளிர் தின அணிவகுப்புகள் மிக எழுச்சியுடன் நடைபெற்றன.

ஜார் ஆட்சி புரிந்த ரஷ்யாவிலும் பிப்ரவரி கடைசி ஞாயிறில் மகளிர் அத்தினத்தை அனுசரித்தார்கள். (அன்றைக்கு ரஷ்யாவில் புழக்கத்தில் இருந்த ஜூலியன் காலண்டர்படி அன்றையதினம் கொண்டாடப்பட்டது. உலகில் உள்ள மற்ற நாடுகளில் புழக்கத்திலிருந்த கிரிகோரியன் காலண்டர்படி அன்றைய தேதி மார்ச் 8 ஆகும்.) அமெரிக்காவில், சோசலிஸ்ட் பெண்கள் 1908இலேயே தேசிய மகளிர் தினத்தைக் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். உண்மையில் உலகில் கொண்டாடப்பட்ட முதல் மகளிர் தினம் இதுவேயாகும். அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் வாக்குரிமை மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்கள். ஆடை ஆயத்தத் தொழிலகங்களில் பணியாற்றி வந்த பெண்கள் போலீஸ் அடக்குமுறையையும் மீறி வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்த சமயத்தில் ஏகாதிபத்தியங்கள் உலக யுத்தத்திற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தன. உலகம் முழுதுமிருந்த பெண்கள் யுத்தத்திற்கெதிராக அமைதிக்காக அறைகூவல் விடுத்தார்கள். 1913இல்தான் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-க்கு மாற்றப்பட்டது.

ஆனால், அடுத்த ஆண்டு, உலக யுத்தம் மூண்டது. 1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் மகளிர் தினத்தைக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், போரில் ஈடுபட்டிருந்தவர்கள் அமைதிக்காகக் குரல் கொடுத்தவர்கள் மீது அடக்குமுறையை ஏவினார்கள். ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அலெக்சாண்ட்ரா கொல்லன்டாய் கூற்றின்படி அப்போது நார்வேயில் மட்டும்தான் மார்ச் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தது. சில பெண் பிரதிநிதிகள் கூடி, மிகவும் துணிவுடன் அமைதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அடுத்து, மாபெரும் 1917 வந்தது. ரஷ்யாவில் ஜாரின் ஆட்சிக்கெதிராகப், பெட்ரோகிராடில் புயல் அடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பெண் தொழிலாளர்கள் மார்ச் 8 பேரணி/ஆர்ப்பாட்டத்திற்காகப் பெண்களை அணிதிரட்டிக் கொண்டிருந்தார்கள். பெண் தொழிலாளர்கள், ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், தொழிலாளர் வர்க்கத்தின் குடும்பப் பெண்கள், பட்டினிக் கொடுமைக்கு ஆளானோர் அனைவரும் பெட்ரோகிராட் தெருக்களில் அணிவகுத்தார்கள். அவர்கள் யுத்தத்திற்கெதிராகக் குரல் கொடுத்தார்கள். தங்களுக்கு அமைதி வேண்டும் என்றும், உணவு வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்கள். இவர்களது குரலுக்குத் தொழிலாளர்களும், ராணுவத்தினரும் ஆதரவு நல்கியதை அடத்து பெட்ரோகிராடின் வீதிகளில் வீறுகொண்டு உணர்ச்சி முழக்கங்களுடன் முன்னேறினார்கள். மார்ச் 8 அன்று பெட்ரோகிராட் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுதும் மக்களின் எழுச்சியைப் பன்மடங்குப் பெருகச் செய்து, புரட்சிகர நிகழ்வுகளை ஏற்படுத்தி, உலகின் முதல் சோசலிஸ்ட் குடியரசு உதயமாவதற்கு இட்டுச் சென்றது. பெட்ரோகிராட் பெண்களும் மற்றும் ஜார் ஆட்சி செய்த ரஷ்யாவில் மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டங்களும், ‘‘பெண்களின் பங்களிப்பு இல்லாமல் மாபெரும் சமூகப் புரட்சிகள் சாத்தியமில்லை’’ என்று மாமேதை காரல் மார்க்ஸ் 1868 டிசம்பர் 12அன்று லுட்விக் குடேல்மான் என்பவருக்கு எழுதியிருந்த கடிதத்தின் வாசகங்ளை சரி என்று மெய்ப்பித்தன.

பிந்தைய வளர்ச்சிப் போக்குகள்

பின்னர், 1922இல் முதல் தொழிலாளர் அரசு மார்ச் 8 மகளிர் தினத்தை விடுமுறை தினமாகப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டு சீனாவிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகளிர் தினக் கொண்டாட்டங்கள் உலகம் முழுதும் வளர்ந்து வந்தன. இந்தியாவில் 1931இல் சமத்துவத்திற்கான ஆசியப் பெண்களின் மாநாடு லாகூரில் நடைபெற்ற சமயத்தில் முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது பெண்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், நாடுகளுக்கு விடுதலை கோருவதுடன் பெண்களின் சமத்துவத்தையும் இணைத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1960களுக்குப் பின்னர் சோசலிஸ்ட் நாடுகளிலிருந்த பெண்கள் மற்றும் அனைத்து நாடுகளிலும் இருந்த இடதுசாரி மகளிர் அமைப்புகளும் மகளிர் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடத் துவங்கின. இதனையடுத்து, பெண்கள் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டதை அடுத்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் 1975இல் மார்ச் 8 தினத்தை சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்து, தீர்மானம் நிறைவேற்றியது. இன்று உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சமே என்றாலும், மார்ச் 8 உருவான வரலாற்றை - அதன் சோசலிச மற்றும் சமூகப் பின்னணியை, அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்கள் முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த வரலாற்றை - நீர்த்துப்போகச் செய்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடம் தந்திடக் கூடாது.

இரண்டு அம்சங்கள்

மார்ச் 8 - மகளிர் தின வரலாற்றின் இரு அம்சங்கள் நமக்கு இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும். இதில் முதலாவதும் மிகவும் முக்கியமானதும் முதலாளித்தவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திலும், சோசலிச மாற்றுக்கான போராட்டத்திலும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டுவதாகும். ஐரோப்பா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் உழைக்கும் பெண்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களிலிருந்து தொழிலாளர் வர்க்கப் பெண்களின் கேந்திரமான பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றன. ஆரம்ப நாட்களில் தொழிற்சாலைகளில் பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களின் பணிநிலைமைகள் மிகவும் மோசமாக இருந்தன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உழைப்பு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டன.

" மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியில், ‘‘...எனவே, எந்திர சாதனங்களைப் பயன்படுத்திய முதலாளிகள் முதலில் நாடிச்சென்றது பெண்கள், குழந்தைகளின் உழைப்பையே. எந்திரம் என்பது மனித உழைப்புக்குப் பதிலாக நிறுத்தப்பெற்ற அசுர அமைப்பு. எனினும் ஒவ்வொரு பாட்டாளிக் குடும்ப உறுப்பினரும் மூலதனத்தின் நேரடி ஆளுகையின்கீழ் உழைப்பாளி எனப் பதிவு செய்யப்பட்டனர். வயது வேற்றுமை, ஆண்/பெண் பால் வேற்றுமை எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை. மூலதனத்திற்காக அனைவரும் கட்டாயமாக உழைப்பாளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டனர்’’ என்று எழுதுகிறார். பெண் தொழிலாளர்களுக்கு எதிரான சுரண்டலுக்கு எதிராகப் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்கள் மத்தியில் வேலை செய்த சோசலிஸ்ட்பெண் தலைவர்கள் மிகவும் முனைப்பாக செயல்பட்டார்கள். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தலைமையின்கீழ் நடைபற்ற முதலாவது கம்யூனிஸ்ட் அகிலம், பெண் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தது. மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிலைமைகள் குறித்தும் ஆய்வு செய்திட ஆழமான கேள்வித்தாளையும் வெளியிட்டது. அதுநாள்வரையில் அடிமைகள் போல் வேலை செய்து வந்த பெண்கள் மற்றம் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலை உட்பட பல கோரிக்கைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கு லண்டனில் இருந்த தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண் தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்திடும் பணியில் மார்க்ஸ் புதல்வி எளியானார் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.

1988இல் லண்டனில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் - இளம் பதின்மரிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை - முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்களது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்ளும் ஆதரவு அளித்தன. வேலை நிறுத்தப்போராட்டம் பல முக்கிய சலுகைகளுடன் வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது பெண் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது. இதேபோன்று அமெரிக்காவிலும் பெண்தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றனர்.

ஆரம்ப காலத்தில் மகளிர்க்கென்று தனியே மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமா என்கிற கருத்து, ஆண் தொழிலாளர்கள்மத்தியில் இருந்தது. 1920இன் பிற்பகுதியில் தோழர் லெனின், தோழர் ஜெட்கின்னுடன் உரையாடிய சமயத்தில், சோசலிஸ்ட் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் பெண்களுக்கென்று தனி அமைப்புகள் இருப்பதை விமர்சித்தவர்களை, தொழிலாளர் வர்க்கத்திற்குள்ளேயே பெண்களுக்குத் தனி அணுகுமுறையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்பதை அங்கீகரிக்காதவர்களைக் கடுமையாச் சாடினார். அப்போது அவர்சொல்லிய விமர்சனங்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.

நவீன தாராளமயப் பொருளதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், பெண் தொழிலாளர்களும், கிராமப்புறத்தில் இருக்கின்ற பெண்கள் உட்பட ஏழைப் பெண்களின் நிலைமைகளும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரசு, தன் சமூகப் பொறுப்புக்களைக் கைகழுவி விட்டுவிட்டதன் விளைவாகவும், பொருள்களின் விலைகளை சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டதன் காரணமாகவும், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, வேலையின்மையும், வேலையிறக்கமும், குறைந்த ஊதியங்களும் பெண்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு என்பது அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இக்கொடுமைகளுக்கு எதிராக பெண்களை அணிதிரட்ட வேண்டிய அவசிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

உலகில் முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது, சோவியத் யூனியன்தான். இப்போது நம் நாட்டில் மகளிர்க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 விழுக்காடும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு மகளிர் தினம் கொண்டாடப்பட நூறு ஆண்டுகளுக்கு முன், கோபன்ஹேகனில் முயற்சிகளை மேற்கொண்ட 100 பெண்கள், நூறாண்டுகள் கழித்து இந்த அளவிற்கு உலகம் முழுதும் மகளிர் தினம் கொண்டாடப்படும் என்று கற்பனை செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் அன்றைய தினம் வைத்திட்ட முழக்கங்கள் இன்றைக்கும் பொருந்துகிறது.

சர்வதேச மகளிர் தினம் என்பது முதலாளித்துவ நுகத்தடியில் பிணைக்கபட்டிருந்த பெண்களை விடுவிப்பதற்கான போராட்டத்தின் ஓர் அடையாளமாகும். அதே சமயத்தில் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தும் இன்றைய சமூக அமைப்பில் மிகவும் மோசமான முறையில் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள உழைக்கும் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், கிராமப்புறமற்றும் நகர்ப்புறங்களில் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் உரிமைகளுக்காக அணிதிரட்டுவதன் மூலமாகவே சமூகத்தில் தற்போது நிலவும் சமத்துவமின்மையை மாற்றியமைத்திட முடியும். வரும் மார்ச் 8 அன்று மகளிர் தினத்தின் நூற்றாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடும் அதே சமயத்தில், இவர்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல, சபதமேற்போம்.

மார்ச் 8 மகளிர் தினம் நீடூழி வாழ்க!
தோழர் கிளாரா ஜெட்கின் நீடூழி வாழ்க!
தமிழில்: ச.வீரமணி

மார்ச் 12 பேரணியில் அணிதிரள்வோம்--பிரகாஷ் காரத்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் அகில இந்திய அளவில் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டத்தினை வரும் மார்ச் 12 அன்று தலைநகர் புதுதில்லியில் நடத்த அறைகூவல் விடுத்திருக்கின்றன. இக்கட்சிகள் சுமார் இருபதாண்டுகள் கழித்து இப்போது இவ்வாறு அறைகூவல் விடுத்திருக்கின்றன. தில்லியில் சமீப காலங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகு ஜன அமைப்புகள் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டங்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன. ஆனால் இடதுசாரிக் கட்சிகள் நீண்ட கால இடைவெளிக்குப்பின் இப்போதுதான் அகில இந்திய அளவில் பேரணிக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றன.
2009 செப்டம்பரிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை நாட்டின் பல மாநிலங்களிலும் சிறப்பு மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, நிறைவு நிகழ்ச்சியாக மார்ச் 12 அன்று தலைநகர் தில்லியில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நடவடிக்கைகள் மூலமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராகவும், பொது விநியோக முறை மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்திடக் கூடிய வகையிலும் நாடு முழுதும் பெருவாரியான அளவில் மக்கள் அணிதிரட்டப் பட்டிருக்கிறார்கள்.

நான்கு முக்கிய பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக மார்ச் 12 அணிவகுப்புக்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மூன்று பிரச்சனைகள் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குதல் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவைகளாகும். நான்காவது பிரச்சனை, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் ஏவப்பட்டுள்ள வன்முறைக்கு எதிரானதாகும். உணவுப் பணவீக்கத்தின் அளவு 20 விழுக்காட்டிற்கு மேல் வானத்தில் பறந்தகொண்டிருக்கக்கூடிய நிலையில், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி நாள்தோறும் விண்ணை நோக்கி விலைவாசி உயர்வு எகிறிக்கொண்டிருப்பதன் விளைவாக மக்கள், அதிலும் குறிப்பாக வறிய நிலையில் உள்ளோர், வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்க மறுத்திடும் தடித்தனமான அணுகுமுறையால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி வளர்ந்து கொண்டிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, விளைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலைகொடுத்திருப்பதுதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்றும், சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் உயந்திருப்பதுதான் காரணம் என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்திட மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்காததுதான் காரணம் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கம் விலைவாசி உயர்வுக்குத் தவறான முறையில் வியாக்கியானங்கள் செய்வதன் மூலமும் விலைவாசியை மேலும் உயர்த்திட இப்போது நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் உயர்த்தி இருப்பதும், யூரியா உரத்தின் விலையை 10 விழுக்காடு உயர்த்தியிருப்பதும் எந்த அளவிற்கு அரசு மக்கள் வயிற்றில் அடிக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணிகளாகவுள்ள, அனைத்து உணவுப் பொருள்கள் மீதும் முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதற்கு (Ban on Future Trading) தடை விதித்திட வேண்டும், வறுமைக்கோட்டுக்கு மேல்/வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்று பாகுபாடின்றி அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்திட வேண்டும், பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் மார்ச்12 பேரணியின் போது வலியுறுத்தப்படும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் அளித்தல் என்பது இப்போது மிக முக்கிய கோரிக்கையாக மாறியிருக்கிறது. நாட்டிலுள்ள பல்வேறு மாநில அரசுகளும் நிலச்சீர்திருத்தச் சட்டங்களை கைவிட்டுவிட்டன அல்லது நீர்த்துப்போகச் செய்துவிட்டன. நாட்டில் சுமார் 500 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் 73 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே பல்வேறு மாநில அரசுகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலும் 53 லட்சம் ஏக்கர் நிலம்தான் உண்மையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் மொத்தம் விநியோகிக்கப்பட்ட நிலத்தில் மேற்கு வங்கம் மட்டும் 20 விழுக்காடு நிலத்தை விநியோகித்திருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடி இன மக்களும் பயன்படுத்தி வந்த நிலம், 1894ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் அரக்கத்தனமான பிரிவுகளின் காரணமாக அவர்களிடமிருந்த பறிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லா மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்குவதென்பது இப்போது ஓர் அவசர அவசியத் தேவையாக மாறி இருக்கிறது.

அரசாங்கம் தேர்ந்தெடுத்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதை வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கூடிய அளவில் இல்லை. அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டில் மொத்தம் உள்ள அமைப்புரீதியான துறைகளில் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1991இல் 267.33 லட்சங்களாக இருந்தது, 2006இல் 269.93 லட்சங்களாக மாறியிருக்கிறது. இவ்வாறு பதினைந்து ஆண்டுகளில் வெறும் 2.6 லட்சம் பேர்களுக்குத்தான் கூடுதலாக வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மிக மோசமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மார்ச் 12 பேரணி, நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்றவும், தொழிலாளர்களைக் குறைப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறைகளில் வேலை நியமனத்திற்குத் தற்போது இருந்து வரும் தடையை நீக்கவும், வலியுறுத்தும்.

இடதுசாரி இயக்கத்தின் கோட்டையாகத் திகழும் மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு எதிராக மிகவும் இழிவான முறையில் வன்முறைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய தாக்குதல்கள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அவர்களின் மாவோயிஸ்ட் கூட்டாளிகளாலும் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர். ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவுவதற்கும் மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்கும் எதிராக இடதுசாரிக் கட்சிகள் உறுதியான போராட்டத்தை நடத்துவதை குலைக்க வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்ற முறையில் இவ்வாறு தாக்கதல்களைத் தொடுத்துள்ளார்கள். மார்ச் 12 பேரணி, மேற்கு வங்கத்தில் ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்திடவும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் கோரும்.
மார்ச் 12 பேரணி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பேரணியாகும். ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பின் நாட்டிலுள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து இப்பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, இனி நாட்டில் இடதுசாரி அரசியலுக்கு இடமில்லை என்று எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நலன்களைக் காத்திடும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகளால்தான் சரியான மாற்றுக் கொள்கைகளை முன் வைத்திட முடியும் என்பதை மார்ச் 12 பேரணி மக்களுக்குக் காட்டிடும். இடதுசாரிகள் முன்வைத்திடும் கொள்கைத் திட்டத்தால் மட்டுமே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தை அளித்திட முடியும், நிலமில்லா மக்களுக்கு நிலம் வழங்கிட முடியும், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலையளித்திட முடியும்.
மார்ச் 12 பேரணி முன்வைத்திடும் இந்நான்கு பிரதான கோரிக்கைகள் மீது ஓர் அனைத்திந்திய இயக்கத்திற்கு அன்றைய தினம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திடும். 1994இல் இதேபோன்று இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பேரணியின்போது, அப்போதிருந்த நரசிம்மராவ் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், அறைகூவலை ஏற்று 1994 ஆகஸ்ட் - செப்டம்பரில் நடைபெற்ற நாடு தழுவிய இயக்கத்தில் பங்கேற்று பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் சிறையேகினார்கள், அதுமட்டுமல்ல, 11.5 லட்சம் மக்களும் கைது செய்யப்பட்டார்கள். இப்போது மார்ச் 12 பேரணி அன்று விடுக்கப்படும் அறைகூவலும், அதே போன்று லட்சோப லட்சம் மக்களை அணிதிரட்ட இட்டுச் செல்லும் என்பது நிச்சயம்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, March 6, 2010

மொழியும் தேசிய இனமும்--பிரகாஷ்காரத்



(புதுதில்லியில், சப்தர்ஹஸ்மி நினைவு அறக்கட்டளை சார்பில் தோழர் இ.எம்.எஸ். நினைவு சொற்பொழிவு மார்ச 4 வியாழன் அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மொழியும் தேசியஇனமும் என்கிற பொருளில் பிரகாஷ் காரத் பேசியதன் சாரம்)

‘‘தோழர்களே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதல் நாடு முழுதும் தோழர் இ.எம்.எஸ். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவைப் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகிறோம். தோழர் இ.எம்.எஸ். இந்தியாவிலிருந்த மார்க்சிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளில் தனித்துவம் மிக்கவர். இந்திய சமூகத்தின் நிலைமைகளுக்கேற்ப மார்க்சியத்தைப் பிரயோகிப்பதில் அசாத்திய திறமைகளைப் பெற்றிருந்தார்.

தோழர் இ.எம்.எஸ். நம் நாட்டில் விவசாயிகள் பிரச்சனைகளை மார்க்சிய சிந்தனையில் ஆராய்ந்து விவசாய இயக்கத்தை இந்தியாவில் கட்டினார். நவீன கேரளாவின் சிற்பி அவர். திருவாங்கூர் - கொச்சி - மலபார் என்றிருந்த சமஸ்தானங்களை ஒன்றுபட்ட மலையாள மொழியின் கீழான தேசிய இனமாக ஒன்றிணைப்பதற்கு முதலில் அடித்தளமிட்டவர். அதன் அடிப்படையில்தான் ஒன்றுபட்ட கேரள மாநிலம் உருவானது. அதேபோன்று நாட்டில் சாதி மற்றும் வர்க்கங்களுக்கிடையேயான உறவுகளையும் ஆய்ந்த பேரறிஞர். இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கேற்பு எப்படி அமைந்திட வேண்டும் என்பதையும் ஆய்ந்து ள்ளார்.

இவை எல்லாவற்றையும் விட ஒரு முக்கிய அம்சம் குறித்து தற்போது விவாதிப்பது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கருதுகிறேன். அதுதான் இந்தியாவில் மொழிவாரி தேசிய இனப் பிரச்சனை என்பதாகும்.

ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச் சந்தை, பொதுக் கலாச்சார அமைப்பு போன்ற மற்ற பல்வேறு காரணிகளைவிட மொழிதான் மிகவும் முக்கியமான காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ்.=உம் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் குறித்து ஆய்வுகள் செய்தார்.

அதன் ஒரு பகுதியாக கேரளாவில் மலபாரிலிருந்த விவசாயி உறவுகள் குறித்து ஆய்வு செய்து, ஜமீன் - நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் விவசாய இயக்கத்தைக் கேரளாவில் கட்டினார்.
மலபாரில் மட்டுமல்ல, மன்னர் சமஸ்தானங்களாக விளங்கிய திருவாங்கூர் - கொச்சி ஆகிய பகுதிகளிலும் ஜமீன் முறை ஒழிப்புக்கான விவசாய இயக்கங்களைக் கட்டினார்.

இவ்வாறு மலையாளம் பேசும் திருவாங்கூர் - கொச்சி - மலபார் பகுதிகளில் வாழ்ந்த மலையாளிகளை மொழிவாரி தேசிய இனமாக ஒருங்கிணைத்திட இ.எம்.எஸ். முயன்றார். 1942இல் அவர் ஒரு சிறு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு ஒன்றே கால் கோடி மலையாளிகள் என்பதாகும். இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் ஆந்திராவில் தோழர் பி.சுந்தரய்யா, ‘விசாலாந்திரா’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார். அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன்றிணைப்பதற்கான பைபிளாக விளங்கியது. அதே கால கட்டத்தில் வங்கத்தில் தோழர் பவானி சென், வங்கமொழி பேசும் மக்களை ஒன்றுதிரட்ட ‘‘புதிய வங்கம்’’ என்ற நூலை எழுதினார். இவ்வாறு அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலங்களை வடிவமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது.

இவ்வாறு மாநிலங்கள் நாட்டிலுள்ள பல்வேறு மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதற்கான அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் முன்வைத்தது.

மொழிவாரித் தேசிய இனத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது திடீரென்ற ஒன்று அல்ல. ஏற்கனவேயே காந்தி தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியிருந்த காங்கிரஸ் கட்சியும் கூட மொழிவாரித் தேசிய இனங்களை அங்கீகரித்தது. காங்கிரஸ் கட்சியானது 1920இல் நாக்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தன்னுடைய பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளை மொழிவாரி அடிப்படையில் மாற்றியமைத்தது. கேரளாவில் திருவாங்கூர் - கொச்சி - மலபாரிலிருந்த காங்கிரஸ் கமிட்டிகளை மலையாள மொழி அடிப்படையில் ஒருங்கிணைத்தது. அதேபோன்று ஹைதராபாத் மற்றும் தெலுங்கு பகுதி மக்களையும் ஒன்றிணைத்தது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியானது தன் அனைத்து கமிட்டிகளையும் மொழிவாரி அடிப்படையில் மாற்றி அமைத்தது. மற்ற கட்சிகளும் அதனைப் பின்தொடர்ந்தது. இவ்வாறு அனைத்துக் கட்சிகளுமே மொழிவாரித் தேசிய இனங்களின் அடிப்படையில்தான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தன.
நம் நாட்டில் மொழிவாரி தேசியஇனங்கள் உருவாக்கம் என்பது நம் நாட்டிற்கு பிரிட்டிஷார் வருவதற்கு வெகு காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பாகவே தேசியஇனங்கள் உருவாவதற்கான மூலக்கூறுகள் நம் நாட்டில் இருந்தன. வர்த்தகம், பண லேவாதேவி, விவசாயம் போன்றவற்றின்மூலம் முதலாளித்துவ மூலக் கூறுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மக்களால் பேசப்படும் மொழிகள் மூலமாக ஆளும் வர்க்கங்கள் மொழிகளின் மூலமாகவே மக்களிடம் சென்றார்கள். 14ஆம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் மூலமாக மொழிகள் வளர்ந்தன. ஆயினும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தேசியஇன உணர்வு அரும்புவிடத் தொடங்கிவிட்டது.
பின்னர் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வந்தபோது முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி இல்லாமல் மொழிவாரித் தேசியஇனங்களின் வளர்ச்சி கிடையாது என்று இ.எம்.எஸ். கூறினார்.

பல்வேறு தேசிய இனக் குழுக்களும் மொழிவாரித் தேசிய இனக்குழுக்களும் பிராந்திய உணர்வுடன் மொழிவாரித் தேசிய உணர்வினைப் பெற்றிருந்தன. இத்தகைய மொழிவாரித் தேசிய உணர்வின் மூலமாகத்தான் நாட்டின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் மக்கள் இயக்கங்கள் வளர்ச்சி அடைந்தன. அந்த விதத்தில்தான் கேரளாவிலும் விவசாயிகள் இயக்கம் வளர்ச்சி அடைந்தது.
மக்களை அணிதிரட்ட மொழிவாரித் தேசிய இனத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திய அந்த சமயத்தில் ஆளும் வர்க்கம் அதனை ஒரு பிரிவினை முழக்கமாகக் கருதியது. முதலாளித்துவமும் பெரும் வர்த்தக நிறுவனங்களும் மொழிவாரி தேசிய இனத்தைத் தங்களின் நலன்களுக்கு எதிராகக் கருதின.

காங்கிரஸ் கட்சியும் சுதந்திரத்திற்கு முன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது. 1929இலேயே மோதிலால் நேரு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மொழிவாரி மாநிலங்கள் அமைத்திடும் என்று உறுதி கூறியிருந்தார். ஆனால் சுதந்திரத்திற்குப்பின், ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது. மாறாக, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதற்காக ஒரு கமிட்டியை அமைத்தது. ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீத்தாராமய்யா என்ற மூவரும் அந்தக் கமிட்டி உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியானது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கூடாது என்றும் அது மக்களைப் பிளவுபடுத்தி விடும் என்றும் பரிந்துரை செய்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்நிலையை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்தன. ஆந்திராவில் விசாலாந்திராவிற்கான போராட்டம் தொடங்கியது. கேரளாவில் ஐக்கிய கேரளாவிற்கான போராட்டமும், கர்நாடகாவில் ஐக்கிய கர்நாடகாவிற்கான போராட்டமும் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் போராட்டங்கள் வெடித்தன. இதனை அடுத்து காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்களைக் கண்டறிவதற்கான குழு ஒன்றை 1953இல் அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தன.
மகாராஷ்ட்ராவிலிருந்து குஜராத்தைப் பிரித்திட காங்கிரஸ் முன்வர மறுத்ததை அடுத்து அங்கு குஜராத் மாநிலத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் எண்ணற்றோர் உயிர்நீத்தபிறகு, குஜராத்தைத் தனி மாநிலமாகப் பிரித்தது.

பின்னர் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹர்யானா மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் வடகிழக்கு மாநிலங்கள். இப்போதுள்ள மேகாலயா, மிசோரம், மணிப்பூர் அனைத்துமே அஸ்ஸாமின் பகுதிகளாகத்தான் இருந்தன. ஆயினும் அவை சிறிய தேசிய இனங்களாக இருந்தன.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஒரு காலத்தில் மொழிவாரி மாநிலங்கள் தங்கள் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று நினைத்த முதலாளித்துவம் இன்றைய தினம் சிறிய மாநிலங்கள் உருவானால்தான் தங்கள் நலன்களுக்கு உகந்தது என்று கருதத் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து இப்போது ஆந்திராவில் தனித் தெலுங்கானா மாநிலக் கோரிக்கை எழுந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் தனி விதர்பா மாநிலம் கோரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் மாநிலங்களையும் பிரித்திட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கப்படுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிராக இருக்கிறது.

மொழிவாரி மாநிலங்கள்அமைக்கப்பட்ட பின் பல மாநிலங்களில் முதலாளித்துவம் நன்கு வளர்ந்தது. உதாரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. குஜராத் மாநிலங்களைக் குறிப்பிடலாம்.

ஆனால் முதலாளித்துவம் இப்போது சிறிய மாநிலங்களை விரும்புகிறது. ஏனெனில் சிறிய மாநிலங்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் பலவீனமாக இருந்திடும் என்பதாலும் அவற்றைத் தாம் எழுதில் வாங்கிட முடியும் என்றும் முதலாளித்துவம் கருதுகிறது. உதாரணமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சொல்லலாம். அங்கே ஆட்சியிலிருந்தவர்களால் மாநிலமே பங்கு போட்டு விற்கப்பட்டதைப் பார்த்தோம். கனிம வளங்கள் விற்கப்பட்டன, காட்டு வளங்கள் விற்கப்பட்டன, ஆற்று நீர் தனியாருக்கு விற்கப்பட்டதை யெல்லாம் கண்டோம். எனவேதான் பெரு முதலாளிகள் சிறு மாநிலங்ளை விரும்புகிறார்கள். சிறிய மாநிலங்களாக இருந்தால் அங்கு ஆட்சிக்கு வருபவர்களைத் தாங்கள் எளிதாக வசப்படுத்தி வாங்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

சிறு மாநிலங்கள் தாங்களாக எதையும் செய்திட முடியாது. அவை ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண்டியிருக்கும். இன்றைக்கும் கூட வடகிழக்கில் உள்ள அரசாங்கங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவை மத்தியில் யார் ஆட்சியிலிருக்கிறார்களோ - அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் சரி, அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு ஆதரவாக மாறுவதைப் பார்க்க முடியும். ஏனெனில் பல சிறிய மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கேத் திணறக்கூடிய நிலையில் இருக்கின்றன.

எனவேதான் மொழிவாரி மாநிலங்கள்தான் மிகச் சிறந்த முறையிலும், மிகவம் ஜனநாயக ரீதியிலும் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். நிர்வாக ரீதியாகவும் சரி, கல்வி ரீதியாகவும் சரி, நீதித்துறை செயல்பாடாக இருந்தாலும் சரி மொழிவாரி மாநிலங்கள்தான்
ஜனநாயக ரீதியாக செம்மையாகச் செயல்பட முடியும்.

ஆனால் இப்போது மாநிலங்களில் ஒரு பகுதி மற்றொரு பகுதியை விடப் பின் தங்கியிருப்பதாகக்கூறி, பின் தங்கிய பகுதிகளைத் தனியே பிரித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தபின் முதலாளித்துவத்தின் நியதியின்படி ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வு மேலும் அதிகமாகியது. முதலாளித்துவ வளர்ச்சியின் விதியே அதுதான். எனவே மாநிலங்களைப் பிரிப்பதால் பிற்பட்ட நிலைமைகளுக்கான பிரச்சனைகள் தீர்ந்திடாது.
சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகள் கழிந்த பின்னரும், நாட்டின் பல பகுதிகளிலும் ஒரு மாநிலத்திலேயே பல இடங்களிலும் சமத்துவமின்மை தொடர்கிறது. ஆட்சியாளர்கள் தற்சமயம் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இந்நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

மொழிவாரி மாநிலங்கள் அமைவது என்பது நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பின் ஒரு பகுதி என்று தோழர் இ.எம்.எஸ். தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்.

ஆனால் இத்தகைய மொழிவாரி தேசியஇனத்தின் விதிகளை மத்திய அரசு முழுமையாக அமல்படுத்த வில்லை. இந்தியாவில் பல்வேறு மொழிகள் வளமான முறையில் வளர்ந்துள்ளன. சுதந்திரம் பெற்ற சமயத்தில் மத்திய அரசு தேசிய மொழிகளாக 13 மொழிகளை அங்கீகரித்திருந்தது. பின்னர் அது 14 ஆக மாறி தற்போது 22 வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் சரிதான். நாம் இதற்கு எதிராக இல்லை. இவ்வாறு மொழிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் உள்ள மாநில அரசுகள் தங்கள் தங்கள் மொழிகளை வளர்த்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அது மட்டுமல்ல, மாநிலத்திற்கள்ளேயே சிறுபான்மை இன மக்கள் பேசிடும் மொழிகளையும் வளர்த்திட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.
மாநில அரசுகள் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் ஒற்றுமையைக் கணக்கில் கொண்டு மத்திய அரசும் ஜனநாயக முறையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். ஆனால் மத்திய அரசு அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை.
நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியை மத்திய அரசு செய்ய மறுக்கிறது. இன்றைக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு அதுதான் பிரச்சனை. ஒரு ஜனநாயக நாட்டில், உறுப்பினர் பிற நாட்டின் மொழியை பிற பகுதியின் மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதை ஏன் மத்திய அரசு வற்புறுத்துகிறது என்பதுதான் எங்கள் கேள்வி. நாடாளுமன்றத்தில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்திடுவதற்கான செலவு ஒன்றும் அதிகம் கிடையாது. ஒருசில கோடி ரூபாயில் இதனைச் செய்திட முடியும். ஆனாலும் மத்தியஅரசு இதனைச் செய்ய மறுக்கிறது.

மத்திய அமைச்சர் அழகிரி தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாட்டின் தேசிய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மொழிவாரி தேசிய இனங்களை நாம் முழுமையாக அங்கீகரித்ததாகக் கொள்ள முடியும்.
மொழி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் இதனை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘‘நாடாளுமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்களின் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளிலும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கிவிட்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத்தப்பட மாட்டாது. பல்வேறு மொழிகளுக்கும் சமத்துவம் அளிப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுதும் அதனைத் தகவல் தொடர்பு மொழியாக ஏற்கச் செய்ய முடியும்.’’

அவ்வாறு செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதிகள் அந்நிய மொழி ஒன்றை அறிந்திருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டுமானால் அனைத்து தேசிய மொழிகளும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்று கூறி, என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

(ச.வீரமணி)