Tuesday, March 18, 2008

பொது விநியோக முறையில் பாரபட்சம் காட்டாதே--இடதுசாரிக் கட்சிகள் டில்லியில் தர்ணா


புதுடில்லி, மார்ச் 18-
பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைவருக்கும் உணவுப் பொருள்களை வழங்கக்கோரி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தர்ணா போராட்டம் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
பொது விநியோக முறையானது, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றின் கட்டளைக்கிணங்க மத்திய அரசால் படிப்படியாக சிதைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக முறையில் அளிக்கப்படும் குடும்பதாரர்களின் எண்ணிக்கையை வெட்டிச் சுருக்குமாறு உலக வங்கி - சர்வதேச நிதியத்தின் கட்டளைக்கிணங்க மத்திய அரசு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வாங்குவோரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளோர் என்று பிரித்து நாட்டில் மிகப் பெரும்பாலோனோருக்கு பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்காது குறைத்துள்ளது. இதனால் இதுநாள் வரை பொது விநியோக முறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொது விநியோக முறையில் இதுவரை அளித்து வந்து உணவுப் பொருள்களின் அளவையும் மத்திய அரசு கடுமையாக வெட்டிச் சுருக்கியுள்ளது. கேரள மாநிலத்திற்கு இதுவரை அளித்து வந்த அரிசியின் அளவில் 80 சதவீதத்தையும், மேற்கு வங்கத்திற்கு இதுவரை அளித்து வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதத்தையும் இவ்வாறு வெட்டிச் சுருக்கி இருக்கிறது. மத்திய அரசின் இத்தகு நடவடிக்கையைக் கண்டித்தும், பொது விநியோக முறையில் எவ்விதப் பாகுபாடும் காட்டாது அனைத்துக் குடும்பத்தினருக்கும் அத்தியவாசியப் பண்டங்களை அளித்திட வலியுறுத்தியும், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளபடிம 25 வேளாண் பண்டங்களுக்கு முன்பேர ஊக வர்த்தக முறையைத் தடை செய்திடக் கோரியும், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலை உயர்த்தப்படாமல் இருப்பதற்காக எண்ணெய் இறக்குமதிக்கு சுங்கம் மற்றும் கலால் வரிகளை ரத்து செய்யக்கோரியும், அத்தியாவசியப் பண்டங்களைப் பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஒழித்துக்கட்டப்பட்ட இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் பல்வேறு முக்கிய ஷரத்துக்களை மீண்டும் கொண்டுவரக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாய் காலை புதுடில்லி, நாடாளுமன்ற வீதியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதபிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அபானிராய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகாரத், விஜயராகவன், து. ராஜா, அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, மேற்கு வங்க சிபிஎம் மாநில செயலாளர் பிமன் போஸ், மற்றும் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் சீத்தாராம் யெச்சூரி, தேவபிரத பிஸ்வாஸ், முகமது சலீம் தலைமையில் பிரதமரின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப் பட்டது.
--

Monday, March 17, 2008

பொது விநியோக முறையைச் சீர்குலைத்திடும் மத்திய அரசு:சீத்தாராம் யெச்சூரி

புதுடில்லி, மார்ச் 17-
பொது விநியோக முறையை சீர்குலைத்திடும் மத்திய அரசைக் கண்டித்து, செவ்வாய் அன்று காலை மேற்கு வங்கம் மற்றும் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று மதியம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:மத்திய அரசு, வறுமைக்கோட்டுக்குக் கீழ் வறுமைக் கோட்டுக்கு மேல் என்று மக்களை மோசடியாகப் பிரித்து, மாநிலங்களுக்கு பொது விநியோக முறையில் அனுப்பி வந்த அத்தியாவசியப் பொருள்களின் அளவை கடுமையாகக் குறைத்து விட்டது. கேரளாவிற்கு அனுப்பி வந்த அரிசியின் அளவில் 80 சதவீதமும், மேற்கு வங்கத்திற்கு அனுப்பி வந்த கோதுமையின் அளவில் 50 சதவீதமும் இவ்வாறு குறைத்து விட்டது. இதனால் அம்மாநிலங்களில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பொது விநியோக முறை சீர்குலைந்து போயுள்ளது. பொது விநியோக முறையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாய் அன்று காலை நாடாளுமன்ற வீதியில் மேற்கு வங்கம், கேரளம் நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களின் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்ததாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்திய அரசு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ள யுஎஸ் ட்ரென்டன் என்னும் போர்க்கப்பல் குறித்து மத்திய தணிக்கை அதிகாரி கடுமையாக அறிக்கை அளித்துள்ளது குறித்து எழுப்பப்பட்டது. இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையாலேயே காலாவதியாகிப்போன ஒன்று என்று ஒதுக்கித்தள்ளப்பட்டதாகும். அங்கேயே இக்கப்பலில் விபத்தில் பல கடற்படை வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கப்பலை, அதிக விலை கொடுத்து இந்திய அரசு வாங்க வேண்டிய அவசியம் என்று என்று மத்திய தணிக்கை அதிகாரி வினா எழுப்பியிருக்கிறார். அதையேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எழுப்புகிறது. அதுமட்டுமல்ல, இந்தக் கப்பலை நாம் நியாயமான காரியங்களுக்குத்தான் பயன்படுத்துகிறோமா என்று அமெரிக்க எந்த நேரத்திலும் வந்து சோதனை செய்யுமாம். இவ்வாறு நம் நாட்டின் இறையாண்மையை அடகுவைத்து விட்டு இந்தக் கப்பலை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றுதான் கேட்க விரும்புகிறோம்.எனவே இப்பிரச்சனையை இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பினோம்.
அடுத்ததாக, இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய பிரச்சனை, மிகவும் லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசு முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதைக் குறித்ததாகும். பிஎஸ்என்எல் கடந்த ஆறு மாத காலமாக தன்னிடம் மொபைல் போன் கேட்டு பதிவு செய்து வைத்துள்ள 4 கோடியே 55 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு கொடுக்க முடியாத நிலையினை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 2 கோடியே 25 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் இன்று வரை 1 கோடியே 35 லட்சம் இணைப்புகள்தான் தர முடிந்திருக்கிறது. தற்சமயம் புதிதாக எந்த இணைப்பும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் தர முடியவில்லை. இதனால் நாட்டில் முதல் நிலையில் இருந்த இந்நிறுவனம் இன்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே இப்பிரச்சனையில் அரசு உடனடியாகத் தலையிட்டு நிலைமைகளைச் சீர் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பிஎஸ்என்எல் பிரச்சனையில் திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.பொது விநியோக முறையை மாநில அரசுகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாததினால்தான் அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறோம் என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதுபோல் தெரிகிறதே என்று ஒரு செய்தியாளர் வினவியபோது, ‘‘நாட்டிலேயே தென் மாநிலங்கள் நான்கும், மேற்கு வங்கமும் திரிபுராவும் பொது விநியோக முறையில் சிறந்து விளங்குவதாக அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றும், ‘‘வறுமைக்கோட்டுக்குக் கீழ் / வறுமைக்கோட்டுக்கு மேல் என்கிற மோசடியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் அரசு இவ்வாறு அத்தியாவசியப் பொருள்களின் அளவைக் குறைத்திருக்கிறது’’ என்றும், அரசின் அளவுகோலின்படி ‘வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’ மிகவும் குறைவு என்றும், ஆனால் தென் மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவிலும் பொது விநியோக முறையில் ‘வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கும்’ அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் எனவேதான் பிரச்சனை எழுந்துள்ளது என்றும் விளக்கினார்.

Thursday, March 13, 2008

பாசிஸ்ட்டுகளின் கோழைத்தனம்



ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவன் மீது 2008 மார்ச் 9 அன்று திடீரென்று தாக்குதலைத் தொடுத்ததன் மூலம், தங்களுடைய சுயமான பாசிஸ்ட் குணத்தை தோலுரித்துக் காட்டிவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அளித்திட்ட அறிக்கையின்படி, தாக்குதல் புரிந்தோர் ஏகே கோபாலன் பவனுக்கு அருகில் உள்ள இந்து மகா சபையில், காவல்துறையினரிடம் எவ்வித அனுமதி வாங்காமலும், அல்லது தகவல் தராமலும் கூடியுள்ளனர். அவர்களில் ஒருசிலர் ஏகேஜி பவனுக்கு ஆர்ப்பாட்டம் செய்திட செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் விவாதித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், ஒரு கும்பல் தங்களுடைய சொந்தக் கார்களில் கற்கள், செங்கற்கள் முதலானவற்றை நிரப்பிக்கொண்டு, ஏகேஜி பவனை நோக்கி வந்து, திடீரென்று தாக்குதலைத் தொடங்கியுள்ளது, கற்களை அலுவலகம் நோக்கி வீசத் தொடங்கியது. ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மத்தியக் குழு அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்ததை மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் தடுத்தபோது, அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் ஹரிசிங் காங், வி. சீனிவாசராவ், ஜோகேந்திர சர்மா, குமார் சிரால்கர், புஷ்பிந்தர் கிரேவால் ஆகிய ஐந்து மத்தியக் குழு உறுப்பினர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் சொத்துக்களுக்கு ஏராளமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

இத்தாக்குதலானது முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்பதும், பாஜகவினர் தனியார் கார்களில் கற்கள் மற்றும் செங்கற்களுடன் மத்தியக்குழு அலுவலகத்தை அடித்து நொறுக்கவும் தடுக்க வரும் தோழர்களைத் தாக்கிடவும் முன்னேற்பாட்டுடன் வந்திருக்கிறார்கள் என்பதும் தெளிவுபடத் தெரிகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 14 பேர்களில், இருவர் பாஜகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆறு பேர் தற்போது நகர்மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள். ஏகேஜி பவனுக்குப் பக்கத்தில் உள்ள இந்து மகா சபாவில் ஒன்றுகூடி, டில்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள பாஜக-வின் தலைவராலும், டில்லி மேயராலும் தலைமைதாங்கி இவ் வன்முறைக் கும்பல் வந்திருக்கிறது.அதே இரவு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த குண்டர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கர்நாடக மாநில செயலாளர், விஜேகே நாயரின் வீட்டிற்குள் வலுவந்தமாக நுழைந்திருக்கின்றனர். அங்கிருந்த அவரது மனைவியை அச்சுறுத்தி, வீட்டையே அடித்து நொறுக்கி நிர்மூல்யமாக்கி இருக்கின்றனர். மறுநாள், ஆர்எஸ்எஸ் குண்டர்கள் டேராடூன், நாகர்கோவில், ஆகிய இடங்களில் உள்ள கட்சியின் அலுவலகங்களுக்குச் சென்று தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் சுந்தரய்யா விஞ்ஞான் கேந்திரத்தையும் சேதப்படுத்தி, தீ வைத்துக் கொளுத்திட முயற்சித்திருக்கின்றனர்.

இவ்வாறு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, கொலைவெறித்தாண்டவமாட முன்வந்திருக்கிறது.கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை மூடிமறைப்பதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக கும்பல் வெளியில் சொல்லும் காரணம், கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தற்சமயம் நடந்து வரும் நிகழ்ச்சிப் போக்குகளாகும். கேரளாவில் இடது முன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், ஆர்எஸ்எஸ் குண்டர்களால் கண்ணூரில் கொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் எத்தனை பேர் என்பதையும் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் எவை எவை என்பதையும் தனியே பட்டியலிடப்பட்டு, ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’யின் இதே இதழில் வேறொரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைமையில் வன்முறைச் சம்பவங்கள் நiபெறுவது கண்ணூருக்குப் புதிய செய்தி ஒன்றுமல்ல. ஆயினும், சென்ற சட்டமன்றத் தேர்தலில், மதவெறி சக்திகள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்திற்குள் நுழைய மேற்கண்ட முயற்சிகள் படுதோல்வி அடைந்ததை அடுத்து, (சுதந்திரத்திற்குப்பின் கேரள மாநிலம் உருவானதிலிருந்து, சட்டமன்றத்திற்குள் ஓரிடத்தைக்கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை) அவர்கள் தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு தாக்குதல்களை, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எதிராகத் தீவிரப்படுத்தி இருக்கின்றனர். சமீப காலங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை வேகமாகச் சரிந்து கொண்டு வருகிறது. இவ்வாறு அரசியலில் தாங்கள் வெகு வேகமாக ஓரங்கட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள விரக்தியின் விளைவாகவே, வழக்கமான தங்களுடைய கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையை, மேலும் தீவிரமாக்கி கொலைவெறித் தாண்டவமாட முன்வந்திருக்கின்றனர்.

மார்க்சிஸ்ட்டுகள் மீது இவ்வாறு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், அவர்களை அச்சுறுத்தி, மிரட்டி பணியவைத்துவிடலாம் என்று ஆர்எஸ்எஸ் கருதுமானால், அதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறில்லை. பாசிஸ்ட்டுகளின் வன்முறை மற்றும் தாக்குதல்களை எதிர்த்து முறியடித்துத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. 1972க்கும் 1977க்கும் இடையில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஏவப்பட்ட அரைப் பாசிசத் தாக்குதல்களின்போது, நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பலிகொடுத்துள்ளோம். அந்தத் தாக்குதல்களை முறியடித்து மீண்டதோடு மட்டுமல்லாமல், முன்பிருந்ததை விட மேலும் பலமடங்கு வலுவடைந்து, அதன்பின் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றியினை மார்க்சிஸ்ட் கட்சி ஈட்டி வந்திருக்கிறது. உலக அளவிலும், கம்யூனிசத்தை அழித்திடப்போகிறோம் என்று ஓலமிட்டுக்கொண்டு, சோவியத் ஒன்றியத்திற்கெதிராக, ஏவப்பட்ட ஹிட்லரின் பாசிசத் தாக்குதலை, கம்யூனிஸ்ட் செம்படை முறியடித்தது மட்டுமல்ல, ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கோட்டையின் மீது செங்கொடியை உயர்த்தி உலகையே விடுவித்தது.

அதேபோன்று, இந்தியாவில், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான தாக்குதலும், முறியடிக்கப்படும். இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்படுத்தப்படக்கூடிய வகையில், ஆர்எஸ்எஸ்/பாஜக பாசிச மதவெறிக் கும்பல், அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்படும்.

தமிழில்: ச. வீரமணி