Thursday, May 20, 2021

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சீனா ஏன் தோல்வியுறவில்லை? -மருத்துவர் மாத்யு வர்கீஸ்

 


கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை

சீனா ஏன் தோல்வியுறவில்லை?

-மருத்துவர் மாத்யு வர்கீஸ்

தமிழில்: ச.வீரமணி

[தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும், நாட்டில் பொது சுகாதார அமைப்புமுறையை வலுப்படுத்த வேண்டும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மிகப்பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும் என்று கருதும் மருத்துவர்கள் ஒருசிலரேயாகும். அதில் மருத்துவர் மாத்யு வர்கீஸ் ஒருவர். மருத்துவர் மாத்யு வர்கீஸ், பொது சுகாதார வல்லுநரும், புதுதில்லி, செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் இயக்குநருமாவார். இப்போது நாட்டில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடர்பாக ஃப்ரண்ட்லைன் செய்தியாளர், டி.கே.ராஜலட்சுமி அவர்களிடம் அவர் அளித்த நேர்காணல்:]

கேள்வி: கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டை மீறி ஏன் மற்றும் எப்படிப் போனது? சென்ற ஆண்டு செப்டம்பரின் மத்தியிலேயே இத்தொற்று மிகவும் வேகமாகப் பரவியதிலிருந்தே இதன்மீது அரசாங்கம் செயல்படுவதற்கு நேரம் இருந்ததே!

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நாட்டில் எவரேனும் ஒருவர் அரசாங்கத்தின் கொள்கையை அல்லது அரசாங்கத்தின்மீது குறைகாண முயற்சித்தார் என்றால், பின்னர் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர், அரசாங்கத்தின்மீது குறை சொல்லும் அளவிற்குச் சென்றால், பின்னர் அவர் அரசாங்கத்திற்கு வேண்டப்படாத நபராக மாறிவிடுகிறார். உண்மையான ஜனநாயகம் என்பது இதில் எதுவும் கிடையாது. சிந்தனைகள் வெளிப்படைத்தன்மையுடனும், துல்லியமாகவும், நேர்மையாகவும் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பவர்கள் மீது அரசாங்கம் பாயக்கூடிய விதத்தில் நம் நாட்டின் ஜனநாயக அமைப்புமுறை இருந்து வருகிறது. நம்மைப்போன்ற ஒரு நாட்டில் மக்களை எப்படி சௌகரியமாக வைத்திருப்பது என்றும், அவர்களின் துன்ப துயரங்களை எப்படிக் குறைப்பது என்றும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் நான் இதனைப் பார்க்கிறேன்.

நள்ளிரவில் 1.30 மணிக்கு எனக்கு ஒரு சிறுவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அவருடைய அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். என் தொலைபேசி எண் அவனுக்கு எப்படித்தெரிந்தது என எனக்குத் தெரியவில்லை. அவன், அவனுடைய அம்மாவிடம் சாய்ந்துகொண்டு மூச்சை இழுத்து விடுமாறு கேட்டுக் கொண்டிருந்திருக்கிறான். இதுபோன்ற நிலைமைகள் மிகவும் கொடியது. ஒரு குழந்தை தன் தாய் தன் கண் முன்னாலேயே இறப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். என்னே கொடுமையான விஷயம்! உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்ட எங்களால், என்ன செய்ய முடியும்? நோயுற்றிருப்பவர்களைக் கவனித்தக்கொள்பவர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். நிலைமைகள் மிகவும் மனதைக் கசக்கிப் பிழிகின்றன. எந்த அரசாங்கமாக இருந்தாலும், அதன் சித்தாந்த நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், இதுபோன்ற நிலைமை நடக்கக்கூடாது என்பதை நாம் உத்தரவாதம் செய்திட வேண்டும். சுகாதார அமைப்புமுறை உரியவிதத்தில் இருக்க வேண்டும். நோய்க்கு ஆளாகி வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் துன்பதுயரங்களைத் தணிக்கும் விதத்தில் வசதிகள் அமைந்திருக்க வேண்டும். இப்போது இதுபோன்ற நிலைமை இல்லை. எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிந்து, இந்த அமைப்புமுறையைச் சரிசெய்வதில் இருக்கின்ற குறைகள் என்ன என்று ஆராய்ந்து  அதனைக் களைந்திட வேண்டும்.

கேள்வி: பல ஆண்டு காலம் ஒரு மருத்துவராக இருந்து அனுபவப்பட்டுள்ள நீங்கள், இதுபோன்று முன்னெப்போதும் இருந்ததில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: இதற்கு முன் இதுபோன்றதொரு நிலைமையை நாம் எப்போதும் சந்தித்ததில்லை. ஒரு நோயாளியின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, தன்னுடைய கணவரின் ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவர்கள் ஆக்சிஜன் செறிவூட்டல்கள் (concentrators) வைத்திருக்கிறார்கள். அவர் மேலும் தன் கணவரின் செறிவூட்டல் அளவு 83 என்றும் கூறினார். நான் உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்றேன். ஆனால் ஆம்புலன்ஸ் வண்டிகளே கிடைக்கவில்லை. அது நள்ளிரவு. ஆக்சிஜன் செறிவூட்டல்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அமைப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது செயல்படவில்லை. அந்த நோயாளியின் உறவினர் ஒருவர் அவருடைய காரில் அவரை ஏற்றிக்கொண்டு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) படுக்கை கிடைக்கவில்லை. இதுபோன்று நெஞ்சைப் பிழிந்திடும் நிகழ்வுகள் பலவற்றை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். 

ஒரு 30 வயது பெண்மணி. அவர் கருவுற்று 32 வாரங்கள் ஆகின்றன. அவருடைய ஆக்சிஜன் செறிவூட்டல் அளவு 80ஆக இருக்கிறது. எனவே அவரை ஏதேனும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியது அவசியம். ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை அனுமதித்திடவில்லை. காரணம் அவரை அனுமதிப்பதற்குத் தேவையான ஐசியு படுக்கைகள் அவர்களிடம் இல்லை. அந்தக் குடும்பம் ஒரு ஆம்புலன்சிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்த ஆக்சிஜன் தீர்ந்துவிட்டது. பின்னர் அவர் வேறொரு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். அப்போது பானிபட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐசியு படுக்கை காலியாக இருப்பதாக செய்தி வந்து அங்கே அவரை கொண்டு சென்றார்கள். அதற்குள் செறிவூட்டல் அளவு 70க்கு வந்துவிட்டது. பின்னர் அவர் வயிற்றில் உள்ள சிசுவுடன் இறந்துவிட்டார். இதுபோன்று ஒவ்வொரு நாளும் ஏராளமான கதைகளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஏன் இந்த அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன? தில்லி இந்த அளவுக்கு மோசமான நிலையை எதிர்கொள்ளாது என்று அனைத்துத்தரப்பினர்களும் கருதினார்களா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ப்போது வந்துள்ள அலை மிகவும் வேகமாகப் பரவும் தொற்று ஆகும். முன்பு வந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்தக் குடும்பத்தில் ஒருவர்தான் தொற்றுக்கு ஆளானார். ஆனால் இப்போது வந்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் தாக்குகிறது. அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வருபவர்களையும் அது தொற்றிக்கொள்கிறது. வைரஸானது அதீதமான தொற்றோடு இல்லாதிருந்தால் இது நடக்காது. இத்தொற்று 80 சதவீதம் லேசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. ஆனால் 20 சதவீதம் மிகவும் சீரியசான அறிகுறிகளுடன் காணப்படுகிறது. இவ்வாறு பீடிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அவசியம். நோய்த்தொற்று வெளியே தெரியாது இருப்பவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகையால் ஒரு குடும்பத்தில் அனைவரும் ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டால், ஒருவர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார். 

முன்பு வந்த முதல் அலையின்போது தொற்றால் பாதிக்கப்பட்டவரின் நிலை மோசமாவதற்கு ஏழு நாட்களாயின. ஆனால் இரண்டாவது அலை தொற்றிக்கொண்டால், நான்கைந்து நாட்களிலேயே நிலைமை மோசமடைந்து விடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சென்ற முறை மருத்துவமனைகளில் இவ்வளவு நெருக்கடி இல்லை. இந்தத்தடவை வசதிபடைத்தவர்களுக்குக்கூட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை.

கேள்வி: மருத்துவமனைகளில் உள்ள சாதாரண படுக்கைகளுக்கும், ஐசியு படுக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துவிட்டால் என்ன செய்வது?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: நான், செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் இயக்குநராக இருந்த காலத்தில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்த விஷயங்களில் ஒன்று, நோயுற்றிருப்பவரிடம் எங்கள் மருத்துவமனையில் ஒரு வெண்டிலேட்டர் இல்லை என்று கூறுவதாகும். இதற்கு எப்போதும் பற்றாக்குறை இருக்கும். எந்தவொரு மருத்துவமனையாக இருந்தாலும், 10-15 சதவீதப் படுக்கைகள்தான் ஐசியு-க்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றிலும் சிலவற்றில்தான் வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்து, வெண்டிலேட்டர்கள் இயக்கும் ஊழியர்கள் கிடைப்பது என்பதும் அரிது. வழக்கமான மருத்துவர் ஒருவரால் அதனை இயக்கிட முடியாது. நான் கணிசமாக சில ஆண்டுகள் பயிற்சி பெற்று மருத்துவராக இருந்தவன்தான். ஆனால் எனக்கும் ஒரு வெண்டிலேட்டரை இயக்கத் தெரியாது.  எனவே ஒரு மருத்துவமனையில் வெண்டிலேட்டர்கள் வாங்க முன்வந்தாலும், அவற்றை இயக்கும் ஊழியர்களை அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது.

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றே காரணமாகும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைத்திருப்பதனை எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்க முடியும். ஏற்கனவே இவை மிகவும் குறைவாக இருந்தன. மேலும் நோய்த்தொற்றாளர்களைக் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சிபெற்ற ஊழியர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் பற்றாக்குறையுடன் காணப்படுகிறது.

வெண்டிலேட்டர்கள் உயர்தொழில்நுட்பக் கருவியாகும். இதன் விலை சுமார் 15 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரைக்கும் இருந்திடும். சாதாரணமாக அடிப்படையான வெண்டிலேட்டரை 7 லட்சம் ரூபாய்க்குப் பெற்றிடலாம். ஆனால், உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்தான் இப்போது நமக்கு மிகவும் தேவையாகும். அநேகமாக இப்போது பல மருத்துவ மனைகளில் உள்ள வெண்டிலேட்டர்களால் பயனேதும் இல்லை.  உயர்தொழில்நுட்ப வெண்டிலேட்டர்களின் தேவை ஒவ்வொரு நகரத்திற்கும் தேவைப்படுகிறது. மேலும் அதனை இயக்கிடும் ஊழியர்களும் மிகப் பெரிய அளவில் தேவைப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபோதே நாம் வெண்டிலேட்டர்களின்றி சிரமப்பட்டோம். அப்போதும் ஐசியு படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. ‘வெண்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்கள் எப்போது சாவார்கள், நமக்கு இடம் கிடைக்கும்’ என்று மற்றவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். 

நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் அரசாங்கம் இதற்குத் திட்டமிட வேண்டும். இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பப் பயிற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிறுவனங்களை ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறெல்லாம் செய்தாலும்கூட இப்போதிருந்திடும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானவை அல்ல.  தனிமைப்படுத்தப்பட வேண்டிய நோயாளிகள், லேசான பாதிப்புகளுடன் வரக்கூடிய நோயாளிகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரையும் எப்படி நாம் கையாளப் போகிறோம்? இப்போது எவரேனும் ஒருவரின் நோய்த்தொற்று சீரியசாகிவிட்டதென்றால், அவரை வைப்பதற்கு வெண்டிலேட்டர் இல்லை என்றால், அவருடன் வந்திருக்கும் உறவினர்களிடம் வெண்டிலேட்டர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறோம். ஏழையாக உள்ள உறவினர்கள் இங்குமங்கும் ஓடுவதைத் தவிர அவர்களால் என்ன செய்ய முடியும்?

சிகிச்சையளித்திடும் நெறிமுறைகளே பேரிடர்க்கு ஆளாகியிருக்கிறது.  சிசிச்சை முறைகள் லேசாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், மிதமாகப் பாதிக்கப்பட்ட நபருக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றன.  ஒருவரின் நிலை, லேசானதா, மிதமானதா அல்லது கடினமானதா என்பதற்கு அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவு அளவை வைத்து நிர்ணயித்திட வேண்டும்.

இப்போது நாம் என்ன பார்க்கிறோம்? அரசின் கொள்கை முடிவுகள் வலுவானவைகளாக இல்லை. உதாரணமாக, அனைத்து அரசாங்க மருத்துவமனைகளும் கோவிட் மருத்துவமனைகளாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஒருவர் அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு கோவிட் தொற்று இருந்திட வேண்டும். பல இடங்களில் பல பேர் பொய்யாக ‘நெகடிவ்’ எனக் கூறப்பட்டிருக்கிறார்கள். எனவே உண்மையில் ‘பாசிடிவ்’ ஆகித் தொற்றுக்கு ஆளானவர்கள், சுதந்திரமாகச் சுற்றித்திரியும்போது தொற்றை அதிகப்பேருக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் நிலைமைகள் கையை மீறிப் போய்விடுகின்றன.

எனக்கு உத்தர்காண்டில் ஒரு குடும்பத்தைத் தெரியும். அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் ‘பாசிடிவ்‘ என அறிவிக்கப்பட்டார்கள். பின்னர் உள்ளூரிலிருந்த நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் கடைசியாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்கள். குடும்பத்திலிருந்த அனைவருமே சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதால் அவர்களைப் பார்த்துக்கொள்ள எவருமில்லை. எனவே தில்லியிலிருந்த அவர்களின் சகோதரர், தன்னுடைய மகனுடன் அங்கே விரைந்தார். அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு ‘பாசிடிவ்’ எனக் கண்டறியப்பட்டார்கள். கடைசியல் சகோதரர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள், ஒருவர் தில்லியிலும், ஒருவர் ரிஷிகேஷிலும் இறந்துவிட்டார்கள். இவர்களுக்கு சிகிச்சையளித்திடும் மருத்துவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்று பயந்துகொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்குப் பர்சனல்  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் நோயாளிகளைத் தொடுவதில்லை  என்ற போதிலும், இந்தப் பயம் அவர்களிடம் காணப்படுகிறது.

கேள்வி: கோவிட் சிகிச்சைக்கான நெறிமுறைகளுடன் நீங்கள் ஒத்துப்போகவில்லையா?

மருத்துவர் மாத்யு வர்கீஸ்: ஐவர்மெக்டின் (Ivermectin) எதற்கான மருந்து என்று பார்த்திருக்கிறீர்களா? இணைய தளத்தில் தேடிப்பாருங்கள். அது ஒட்டுண்ணி, உருளைப்புழு, நாக்குப்பூச்சி போன்ற ஒட்டுண்ணி தொடர்பான தொற்றுகளுக்கானதாகும். இது கோவிட்-19ஐக் குணப்படுத்தும் என்பதற்கு எந்த சாட்சியமும் கிடையாது. அந்த மருந்துகளே சந்தேகத்திற்குரியவை களாகும்.   

அதேபோன்றே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பிளாஸ்மா தெரபி (plasma therapy) சிகிச்சை, பிளாஸ்போ தெரபி (plasbo therapy) சிகிச்சையைவிட அதிக வலுவுள்ளது என்பதற்கும் எவ்விதமான சாட்சியமும் கிடையாது என்று கூறியிருக்கிறது. பின் ஏன் இந்த மருந்துகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை? பிரச்சனை என்னவென்றால் இப்போதுள்ள சிகிச்சை நெறிமுறைகளின்படி மருத்துவர்கள் இதைத்தான் பரிந்துரைப்பார்கள். ஒரு நோய் புதிதாக இருக்குமானால், அந்த நோய் குறித்து போதுமான புரிதல் மக்கள் பெற்றிருக்கமாட்டார்கள். இதுபோன்ற சமயங்களில் மக்களும் இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.   

ஹார்வார்ட் மற்றும் ஸ்டான்போர்டு போன்ற நிறுவனங்களில் எலும்பியல் துறையில் 30 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவருமே மருத்துவத்துறையைச் சார்ந்த எலும்பியல் மருத்துவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களில் 15 பேர் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர்களாக இருப்பார்கள். இதுபோன்று நம் மருத்துவக் கல்லூரிகளில் ஆராய்ச்சி மாணவர் குழுக்கள் கிடையாது. இங்கே இது மிதமிஞ்சிய ஒன்றாகக் கருதப்பட்டது. முன்பெல்லாம் வேலைகள் உத்தரவாதமாக இருந்தன. மத்திய அரசின் தேர்வாணையம் (UPSC) மூலம் நியமனம் செய்யப்படுபவர்கள் எல்லாம் நிரந்தரப்படுத்தப்பட்டனர். இன்றையதினம், அனைத்துப் புதிய நியமனங்களும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன. ஓய்வூதியத்திற்கு வாய்ப்பு இல்லை. இந்த மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தாண்டு காலம் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் யார் சிறந்த மருத்துவர்கள் என்று அநேகமாக அனைவருக்கும் தெரியும். பின்னர் அவர்களைத் தனியார் மருத்துவமனைகள் வேட்டையாடித் தங்கள் மருத்துவமனைகளுக்குள் இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறாக இப்போது நாட்டில் மருத்துவத்துறையில் கார்ப்பரேட்மயம் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஒருவருக்கு ஓய்வூதியம் இல்லை என்கிற பட்சத்தில், அவர் கார்ப்பரேட் துறைகளில் வேலைக்குச் சேர்ந்து எந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிப்பதில் குறியாக இருக்கிறார்.

கேள்வி: உலகில் நன்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே சுகாதார அமைப்பில் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்றும், எனவே இந்தியா இதற்கு விதிவிலக்கு அல்ல என்றும் அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறதே!

மருத்தவர் மாத்யு வர்கீஸ்: ஆம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றைப்பொறுத்தவரை அதுதான் நடந்திருக்கிறது. சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதுதான். ஆனாலும், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடுகிறார்களா? இல்லை. பெரிய மருத்துவமனைகள் அனைத்தும் தங்கள் சொந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இங்கே என்ன நிலைமை? தில்லியில் நஜாப்கர் சாலையில் செயல்பட்டுவந்த பெரிய இந்தியன் ஆக்சிஜன் லிமிடெட் ஆலை மூடப்பட்டுவிட்டது. அங்கேயிருந்த மாசு உண்டாக்கும் அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டதால், அதுவும் மூடப்பட்டுவிட்டது.

500 படுக்கைகளுக்கு  மேல் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் ஆலைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனைக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாக அரசாங்கம் அறிவித்திட வேண்டும். 

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையில் சீனா ஏன் தோல்வியுறவில்லை. அவர்களிடம் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது என்றோ பர்சனல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றோ எவரும் கூறமுடியாது. அங்கே பெரிய அளவில் மக்கள் புலம்பெயர்ந்து செல்லவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் சிகிச்சை செய்யாமல் துரத்தி அனுப்பிடவில்லை.  மேற்கத்திய நாடுகள் ஒருவரை சிகிச்சைக்காக அனுமதித்திட சில நிபந்தனைகளை வைத்திருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்துவிட்டால் அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்தியாவில் டிராலிகளிலும், ஆம்புலன்ஸ்களிலும் நோயாளிகள் இறந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுகாதார அமைப்புமுறை எக்காரணம் கொண்டும் தனியார்மயமாகக்கூடாது.

(நன்றி: ஃப்ரண்ட்லைன்)

 

No comments: