Friday, November 16, 2018

என்னத்துக்காகப் பெயர் மாற்றம்?



அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்ற பிரச்சனையைப் புதுப்பித்திருப்பதுடன், ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் தங்களுடைய மதவெறி நோக்கத்திற்காகப் புதிதாக, மற்றுமொரு முன்னணியில் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதான், நாட்டில் முஸ்லீம் கலாச்சாரத்துடனும், வரலாற்றுடனும் சம்பந்தப்பட்ட பெயர்களைத் தாங்கி இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றுவதாகும்.  உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசாங்கம், மிகவும் குதியாட்டம் போட்டுக்கொண்டு பெயர் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்  முன்னனிக் கல்வி மற்றும் கலாச்சார மையங்களில் ஒன்றாகத்திகழும் அலகாபாத்தை, பிரயாக்ராஜ் என்று அதிகாரபூர்வமாக மாற்றி இருக்கிறார்கள். தீபாவளிக்கு முன்னால், ஆதித்யநாத் அயோத்தியிலிருந்து ஓர் அறிவிப்பினைச் செய்தார். அதாவது, அயோத்தி இருந்துவரும் பைசாபாத் மாவட்டம் இனி அயோத்தி மாவட்டம் என்று  அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்குச் சற்று முன்புதான், வட இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே சந்திப்பாகத் திகழும் மொகல்சராய் என்னும் ரயில்வே சந்திப்பை, தீன் தயால் உபாத்யாயா சந்திப்பு என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தாஜ்மகால் இருந்து வரும்  ஆக்ரா நகரையும்  ஆக்ராவான் என்று பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்றும் அதேபோன்று முசாபர்நகர் என்னுமிடத்தை லட்சுமிநகர் என்று மாற்ற வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசாங்கம் மட்டும் ஈடுபட்டுக்கொண்டில்லை. குஜராத் மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவரும் தலைநகர் அகமதாபாத்தை கர்ணாவதி என்று மாற்றிடலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு அவர்களின் ஒரே குறிக்கோள், நாட்டில் முஸ்லீம்களின் கலாச்சாரம் மற்றும் பங்களிப்புகளின் விளைவாக ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் முன்வைக்கிற வரலாற்றின்படி, முஸ்லீம்கள் ஆட்சி செய்த ஆயிரம் ஆண்டு காலம் அடிமைத்தனம் நிலவிய காலம், அதற்கு முன்னர் இருந்த காலம், இந்துக்களின் பொற்காலம். ஆகவே, கடந்த பத்து நூற்றாண்டு காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறிவரும் இந்துத்வா மதவெறி சிந்தனைக்கு எதிரான வரலாறு மற்றும் கலாச்சாரத் தன்மைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். இவ்வாறுதான் அலகாபாத் நகரம் அக்பர் ஆட்சிக்காலத்தில் உருவானது. பிரயாக்ராஜ் என்று எந்த நகரமும் கிடையாது.  கங்கை நதியும் யமுனை நதியும் சங்கமிக்கும் இடத்தின் பெயர்தான் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்பட்டு வந்தது. அது நகரத்திற்கு வெளியே இருக்கிறது. எனினும், அலகாபாத் என்ற பெயருடன் சம்பந்தப்பட்ட வரலாற்றையும், கலாச்சாரத்தையும் முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, புராண நகரமாக விளங்கும் பிரயாக்ராஜ் என்னும் பெயரை வைக்கிறார்கள்.
எப்படிப் பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரிலும், மாட்டுக்கறிக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரிலும் முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கினார்களோ, அதேபோன்று நகரங்களின் பெயர்களை மாற்றுவதும் நம் நாட்டின் மற்றும் நம் சமூகத்தின் பன்முகக் கலாச்சாரத்தின் வரலாற்றையும், நம் சமூகத்தில் பல மதத்தினரும் இரண்டறக்கலந்து உருவாக்கியுள்ள உன்னதமான கலாச்சார மாண்பினையும் நசுக்கி, ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே இவர்களது இழிநோக்கமாகும். நீங்கள் எவ்விதம் உடை அணிகிறீர்கள், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள் என்பது மட்டும்தான் இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை ஆளாகியிருந்தன. ஆனால், இப்போது ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான வரலாற்றையும், அடையாளத்தையுமே தாக்கிட முன்வந்திருக்கிறார்கள்.
இத்தகைய வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை, இதற்கு முன்பு செய்ததைப்போல  ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் கட்டவிழ்த்துவிடும் கும்பல்கள் செய்திடவில்லை, மாறாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கட்டளைப்படி செயல்பட்டுவரும் அரசாங்கங்களே செய்யத் தொடங்கி இருக்கின்றன. வரலாற்றை மாற்றி எழுதும் பணியுடன், இவ்வாறு கலாச்சாரத்தை சுத்தப்படுத்தும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
புதிய வடிவத்தில் மதவெறி நிகழ்ச்சிநிரலை இவர்கள் தூக்கிப்பிடித்திருப்பதற்கான காரணம், வேறொன்றுமில்லை. உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய இழிவான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். அனைத்து முனைகளிலும் பரிதாபகரமான முறையில் படுதோல்வி அடைந்துள்ள மோடி அரசாங்கம், இவ்வாறு பெயர்களை மாற்றுவதன் மூலம் எதார்த்த நிலைமையை சற்றே மாற்றிடலாம் என்று நம்புகிறது.
(நவம்பர் 14, 2018)
(தமிழில்: ச.வீரமணி)



No comments: