Saturday, January 27, 2018

மோடி கூட்டத்திடமிருந்து இந்துக்களையும் இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்--ஆர்.பி.குமார்


கோயமுத்தூர். ஜன.
வன்முறையின் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என குஜராத்தை சோதனைக்கூடமாக பயன்படுத்தி வெற்றிபெற்ற சங்பரிவார் அமைப்புகள். இன்று அதே வன்முறை பாணியில் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கி வருகிறது. நான் படித்த அனைத்து வேதங்களில் இருந்து புரிந்து கொண்டது மோடியின் நிறுவனங்கள் முன்வைப்பது இந்து தர்மமே அல்ல மாறாக பிராமணிய ஆதிக்கத்தையே நிலைநிறுத்த முயல்கின்றனர். இவர்களிடமிருந்து இந்துக்களையும், இந்திய தேசத்தையும் காப்பாற்ற வேண்டியது உடனடி தேவை என முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

2002
ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனக்கலவரம் நடைபெற்றது. அந்தசமயத்தில் அம்மாநிலத்தின் காவல்துறை உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஆர்.பி.ஸ்ரீகுமார். இவர் பொறுப்பில் இருந்தபோது குஜராத் மாநிலத்தில் இனக்கலவரத்தை தூண்டிவிட்ட பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பின் தலைவர்கள் அரசு அதிகாரிகளின் துணையோடு செயல்படுத்தப்பட்ட வன்முறைகள் குறித்து முழுமையான ஆதாரங்களை தொகுத்து ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலை .வீரமணி மற்றும் என்.ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. குஜராத் திரைக்கு பின்னால் என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந்நூல்வெளியீட்டு விழா வெள்ளியன்று கோவையில் நடைபெற்றது. கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தி.மணி தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.வி.தாமோதரன் வரவேற்புரையாற்றினார். இந்நூல் தற்போது வெளியிட வேண்டிய அவசியம் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் துவக்கிவைத்து உரையாற்றினார்.
எழுத்தாளர் முருகவேல் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் நூலை வெளியிட கோவை மாநகர முன்னாள் மேயர் கோபாலகிருஷ்ணன், விஜயாபதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம், சப்தகிரி போர்வெல் உரிமையாளர் கே.எம்.சந்திரன், தமுஎகச மு.பரமேஸ்வரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நூல் வெளியிட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பாரதிபுத்தகாலய பொதுமேலாளர் .நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர்.
அரபு தேசமாக மாற்ற நினைக்கிறார் மோடி
முன்னதாக நூலை வெளியிட்டு டி.கே.ரங்கராஜன் எம்பி பேசுகையில்,
குஜராத் கலவரம் குறித்து ராணா அயூப் எழுதிய குஜராத் கோப்புகள் முதல் நூலாக வெளிவந்தது. இதனை ராணா அயூப் எனும் பத்திரிக்கையாளர் தனது அடையாளங்களை மறைத்துக்கொண்டு தடயங்களையும் வாக்குமூலங்களையும் ரகசியமாக சேகரித்து எழுதினார் இந்நூலின் தமிழ் பதிப்பை பாரதி புத்தகலாயம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதியுள்ள இந்த புத்தகம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு உடந்தையான அரசு அதிகாரிகளின் வாக்குமூலங்களை முழுமையாக பதிவு செய்தும், ஆதாரங்களை திரட்டியும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தநூலை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் குறிப்பாக அரசுத்துறையில் உள்ளவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இந்நூலை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த நூலில், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள் என பல மேற்கோள்களை ஸ்ரீகுமார் முன்வைத்து எழுதியுள்ளார். இந்நூலின் வழியாக நாம் உணர்வது என்னவென்றால் எல்லா கலவரங்களும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது. சீக்கியர்கள் மீதான டில்லி கலவரமும் முஸ்லீம்கள் மீதான குஜராத் கலவரமும் நடத்தப்பட்டது என்பதை உணரமுடிகிறது. இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் வன்முறை நடந்தாலும் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருசிறு வன்முறைகூட நடைபெறவில்லை. அமைதி காத்தது மேற்குவங்கம். அந்நேரத்தில் முதல்வராக இருந்த தோழர் ஜோதிபாசு தூத்துக்குடியில் இருந்தார். முதல்வர் இல்லாத நிலையிலும் அரசாங்கமும் முறையாக செயல்பட்டது.. ஆனால், குஜராத்தில் முதல்வர் அங்கேயே இருந்தும் கலவரம் நடந்தது.
குஜராத் கலவரமானது மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில்116 தொகுதிகளிலும் நடந்தது.. கலவரம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்பதை நூலாசிரிய விரிவாக விளக்குகிறார்.
சாதாரணமாக, கலவரம், போர் என்றால், நகரங்களை சூறையாடுவர். ஆனால், சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கலவரங்களில் குறிப்பிட்ட நபர்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்குவதும் அவர்களின் சொத்துகளை சூறையாடுவதும் நடைபெறுகிறது. இக்கலவரங்களுக்கு பொதுவான ஒரு கூட்டணியை பார்க்கமுடியும். அரசியல்வாதிகள், குற்றவாளிகள், அரசு அதிகாரிகள் எனும் கூட்டணியே இது. மோடி இந்தியாவை ஒரு இந்து அரபு தேசமாக மாற்ற நினைக்கிறார், பிராமணிய ஆதிக்கத்தை நிறுவ முயல்கிறார். நான் மதச்சார்பற்றவன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும் என்பதாகவே தற்போதைய நிலை இருக்கிறது. அமைதி பூங்காவென தமிழ்நாட்டை நம்பிக்கொண்டிருக்கிறோம். இதுவும் மாறலாம். பெரியார் பிறந்த நாடு என மேடையில் பேசி பயனில்லை. மகாத்மா காந்தி பிறந்த நாடு தானே குஜராத், அங்கேயும் கலவரம் நடத்தப்பட்டது.
நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அந்த வகையில் ஆர்.பி.ஸ்ரீகுமார் எழுதிய இந்நூல் மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க மேலும் வலுசேர்க்கும். திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுமென ஸ்ரீகுமார் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்  என நிறைவு செய்தார்.
நிறைவாக ஏற்புரையாற்றிய நூலின் ஆசிரியரும் முன்னாள் டிஜிபியுமான ஆர்.பி.ஸ்ரீகுமார் பேசுகையில்,
இந்துக்களையும், இந்தியாவையும் காக்க வேண்டும்
குஜராத் கலவரத்தில் இறந்த மனிதர்களுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறேன். பயப்படாமல் போராடுகிறேன். எனக்கு ஆதரவு கொடுப்பவர்கள் இடதுசாரிகளும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம்தான். எனது புத்தகம் எழுதி வெளியிட பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. என்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர முயன்றேன். ஒன்பது வாக்குமூலங்களை, 600 பக்க தடயங்களை சமர்ப்பித்தேன். கலவரத்தை அடக்க வந்த ராணுவமும் துணை ராணுவம் தங்களை மாநில அரசு வேலை செய்ய விடவில்லையெனவும் கலவரம் பற்றிய உண்மையான அறிக்கையினை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் அளித்திருந்தது. அந்த அறிக்கையினை குஜராத் கலவரம் குறித்து விசாரித்த நானாவதி விசாரணை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பல காங்கிரஸ் தலைவர்களிடம் நேரடியாக கேட்டுக்கொண்டேன். பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த .கே. ஆண்டனியிடமும் மற்றொரு அமைச்சராக இருந்த ஷிண்டேயிடம் முறையிட்டேன். அவர்கள் செவி சாய்க்கவே இல்லை. நீதி விசாரணை அறிக்கையினை வெளியிட கேட்டுக்கொண்டேன், அதற்கும் தயாராக இல்லை. இந்த குஜராத் கலவரத்தில் மாநில முதல்வரின், அவரின் அமைச்சரவை சகாக்களின் பங்கு குறித்து விசாரிக்கவேண்டும் என்றேன். எனது அதிகாரத்தை முழுமையாக தெரிந்து கொண்டதன்காரணமாகவே இப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதிகாரத்தில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற உறுதியோடு பணியாற்றினேன். அவர்கள் கோரிக்கையை புறக்கணித்தனர்.    நானாவதி விசாரணை குழு எதை பற்றியெல்லாம் விசாரிக்கலாம் என   அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதிக்கொடுத்ததை அப்படியே மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது., வார்த்தைகளில் கூட மாற்றமிருக்கவில்லை. காங்கிரஸ் கட்சியானது குஜராத் கலவர வழக்கை தடம்புரளச்செய்தது.   ஆகவே தான் காங்கிரஸ் கட்சியை ஆன்மா இழந்த மதச்சார்பற்ற கட்சி என்பேன்.
குஜராத் கலவரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சைது ஜாஃப்ரி கொல்லப்பட்டார். சோனியா காந்தி அகமதாபாத் வந்தபோது ஜாஃப்ரி வீட்டுக்கு செல்லவேண்டும் என நினைத்தார். அது இந்துக்களுக்கு எதிரான நிலை என தவறான சமீக்சை அளிக்குமென காங்கிரஸ் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. சோனியா காந்தியை காணச்சென்ற ஜாஃப்ரியின் மனைவியை விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே தூக்கிப்போட்டனர். இதை அவரே என்னிடம் கூறினார்.  குஜராத்தில் பெரும்பாலான மாவட்ட அதிகாரிகளும் கலவரத்திற்கு உடந்தையாக இருந்தனர். முஸ்லீம் அதிகாரிகள் கூட கொல்லப்படும் முஸ்லீம்களுக்கு உதவிசெய்யவில்லை.
இந்துத்துவா வாதிகளிடமிருந்து இந்துசமயத்தை காப்பாற்ற வேண்டும். வஹாபிகளிடமிருந்து இஸ்லாமை காப்பாற்ற வேண்டும். ஆன்மீக இழந்த இஸ்லாமும் இந்துசமயமும் வெளிநாட்டு மேலாதிக்கத்துடன் இணைந்து உண்மையான இந்து-இஸ்லாம் சமயங்களுக்கு ஆபத்தாக விளங்குகிறது. மோடி அண்டு கம்பெனி வகையார்களிடமிருந்து இந்துமக்களை காக்க வேண்டும்.  வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், திருக்குறள் அனைத்தையும் படித்துள்ளேன். வன்முறையின் மூலம் இந்துத்துவாவை கட்டியமைக்கிற இவர்கள் உண்மையான இந்துக்களே அல்ல இவர்களிடமிருந்து இம்மக்களை காப்பாற்ற வேண்டும்.
மேலும் தென்னகத்தின் தனித்தன்மையினை காக்கவேண்டும், திருக்குறளை நாட்டின் தேசிய நூலாக்க வேண்டும் எனும் கோரிக்கையினை வைத்து ஸ்ரீகுமார் ஏற்புரையாற்றினார்.
முடிவாக பாரதிபுத்தகாலயம் உபகுழுவின் வி.வெங்கட்ராமன் நன்றிகூறினார்.
அரங்கம் நிறைந்து வழிந்த பாரதிபுத்தகலாயத்தின் குஜராத் திரைக்கு பின்னால் நூல் வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் கொண்டுவந்திருந்த ஐநூறு புத்தகங்களும் உடனே விற்றுத்தீர்ந்தது. மேலும், இருநூறு புத்தகங்களுக்கான முன்தொகையை வாசகர்கள் பாரதிபுத்தகலாயத்தின் பொறுப்பாளர்களிடம் அளித்து சென்றனர். குறிப்பாக அன்னூர் ஜமாத் பள்ளிவாசலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் நிர்வாகிகள் நூறு புத்தகங்களுக்கான தொகையை அளித்து மேடையில் நூலை பெற்றுக்கொண்டனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள் துணிச்சலான காவல்துறை அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமாரின் அருகில் வரிசையாக   நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


No comments: