Friday, April 11, 2014

தோழர் எம். பசவபுன்னையா

•           தோழர் எம். பசவபுன்னையா

           -பிரகாஷ் காரத்
           தோழர் எம். பசவபுன்னையா அவர்களின் நூற்றாண்டை 2013 டிசம்பர் 14இலிருந்து கொண்டாடி வருகிறோம். தோழர்  எம். பசவபுன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர்.  அவரது தலைமுறையைச் சேர்ந்த பல தலைவர்களைப்போலவே அவரும், நம் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பல முனைகளிலும் பங்களிப்பினைச் செய்துள்ளார். அவரது காலத்திலிருந்த பல தலைவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்தோ அல்லது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்தோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். ஆனால், தோழர் எம். பசவபுன்iயா, அவர்களைப் போலல்லாமல், 1934இல் அவர் மாணவர் இயக்கப் போராளியாக இருந்தபோதே நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
           எம்.பி. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் எம். பசவபுன்னையா ஆந்திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியிலும், வீரஞ்செறிந்த தெலுங்கானா விவசாயிகள் ஆயுதப் போராட்டத்தினைத் தலைமையேற்று நடத்தியதிலும் மிக முக்கியமான பங்கினை வகித்தார். அதன்பின்னர் கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்திலும், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானதிலும் அவர் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாட்டை மிகக்கூர்மையாகச் செதுக்கியதிலும் அவரது பங்களிப்புத் தன்னிகரற்றதாகும்.
           1920களில் உருவான இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவாக கம்யூனிஸ்ட் அகிலம் (comintern) அளித்த வழிகாட்டுதல் அடிப்படையிலும் பின்னர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்பட்டு வந்தது. இவ்வாறாக அது மிகவும் சோவியத் மார்க்சிஸ்ட் எந்திரத்தையே தன்னுடைய தத்துவார்த்த நிலைப்பாட்டிற்குப் பெரிதும் சார்ந்திருந்தது. கட்சியின் ஆரம்பகாலக் கட்டத்தில் இது இயற்கையாக இருந்தபோதிலும், பின்னர் இது தொடர்ந்து மார்க்சிஸ்ட் புரிந்துணர்வை படிப்படியாக இந்தியாவின் நிலைமைகளுக்குப் பொருத்துவதில் மிகவும் எந்திரகதியாகச் செயல்படுவதற்கும், பின்னர் கட்சிக்குள் திருத்தவாத நிலையை நடைமுறைப்படுத்துவதற்கும் இட்டுச் சென்றது.
           உள்கட்சிப் போராட்டம்
           நாடு அரசியல் சுதந்திரம் பெற்றபின் இந்தியப் புரட்சிக்கான பாதை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய போர்த்தந்திரம் (strategy) மற்றும் நடைமுறை உத்திகள் (tactics) குறித்தும்  கம்யூனிஸ்ட் கட்சிக்குள் போராட்டம் நடந்தது. இவ்வாறு கட்சிக்குள் நடைபெற்ற போராட்டமானது கட்சிக்குள் நிலவிய வறட்டுத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பை ``இடதுசாரிகம்யூனிஸ்ட்டுகளுக்கு நல்கியது.
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது இவ்வாறு கட்சிக்குள் நடைபெற்ற உள்கட்சிப் போராட்டத்தின் விளைவேயாகும். இப்போராட்டத்தை நடத்திய முன்னணித் தலைவர்களில் தோழர் எம். பசவபுன்னையா முக்கியமானவராவார்.  உள்கட்சிப் போராட்டம் நடைபெற்ற சமயங்களிலான கட்சி ஆவணங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தோமானால், தோழர்கள் பி.சுந்தரய்யா, ஹர்கிசன் சிங் சுர்ஜித், பி.டி.ரணதிவே, பி. ராமமூர்த்தி முதலானவர்களுடன் இணைந்துநின்று தோழர் எம். பசவபுன்iயாவும் உள்கட்சிப் போராட்டங்களை, கட்சி இரண்டாகப் பிரியும் வரை நடத்தியிருப்பதைக் காண முடியும். கட்சியின் ஒரு பிரிவினர் வர்க்க சமரசப் பாதையை (class collaborationist line)  உயர்த்திப்பிடித்ததை இவர்கள் முழுமையாக நிராகரித்தனர். அந்த சமயத்தில் இவ்வாறு வர்க்க சமரசப் பாதையை உயர்த்திப் பிடித்தவர்களை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது.
       1960களின் முற்பகுதியில், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் மிகவும் கூர்மையாகவும் கசப்பாகவும் வெளிப்பட்டன. உலகில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப்பெரிய கட்சிகளாக விளங்கிய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான இந்தச் சண்டை இந்தியாவிலும் தத்துவார்த்தரீதியிலான மோதலை ஏற்படுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கட்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், புரட்சிக்கான போர்த் தந்திரம் (strategy) மற்றும் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்துமான போராட்டமாக பின்னிப்பிணைந்து காணப்பட்டது.
           மார்க்சிச-லெனினிசத்தை மதிப்பிடுவதற்கான தத்துவார்த்த போராட்டத்தில், இந்தியாவில் உள்ள துல்லியமான நிலைமைகளுடன் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தைச் சரியாகப் பொறுத்தி,  மிகச் சரியான முறையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதே நம் நாட்டின் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அடிப்படையில் நீண்ட நெடிய தத்துவார்த்தப் போராட்டத்தின் ஊடாகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்ந்தது. தோழர் எம். பசவபுன்னையா இது தொடர்பாக கட்சிக்குள் நடைபெற்ற  உள்கட்சிப் போராட்டங்களிலும், அதன்பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த ரீதியிலான உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கியதிலும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பினைச் செய்துள்ளார்.    
           கட்சித் திட்டம்
       கட்சியின் போர்த்தந்திரம் (strategy) குறித்து சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள் கட்சிப் போராட்டத்தின் விளைவாக 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே போன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியே நடத்திய தங்கள் தங்கள் அகில இந்திய மாநாடுகளில் தனித்தனியாக கட்சித் திட்டங்களை வெளியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது அகில இந்திய மாநாடு 1964 அக்டோபர் 31க்கும் நவம்பர் 7க்கும் இடையே கொல்கத்தாவில் நடைபெற்றது. வரைவு கட்சித் திட்டம் தோழர் எம்.பசவபுன்னையா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு அறிமுகப்படுத்தி உரையாற்றுகையில் அவர், கட்சித் திட்டத்தின் சாராம்சங்களை விளக்கி உரையாற்றினார். இந்திய சமூகத்தின் வர்க்கங்களை ஆய்வு செய்தும், புரட்சியின் கட்டம் குறித்தும், இந்திய அரசின் வர்க்கத்தன்மை குறித்தும், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில்  மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தும்போது அது யார் யாரை யெல்லாம் தன் வர்க்கக் கூட்டாளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெளிவுபடுத்தினார். அவர் இவ்வாறு உரையாற்றுகையில், எந்த எந்த அம்சங்களில் எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபடுகிறது  என்பதையும் தெளிவுபடுத்தினார். இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவக் கூட்டணி அரசு என்பதையும்,  மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத்திடம்தான் இருந்திட வேண்டும் என்பதையும், மாறாக அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறுவதுபோல் தேசிய முதலாளிகளுடன் கூட்டாக இருக்கக்கூடாது என்பதையும், தற்போதுள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசு அந்நிய நிதி மூலதனத்துடன் வேகவேகமாக கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
           இடது அதிதீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே, கட்சியானது நக்சலிசம் வடிவத்தில் உருவான இடது அதிதீவிரவாத (Left sectarian trend) சவாலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதில் பெரும் பாதிப்பு ஆந்திராவில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஆயுதப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆந்திராவில் இருந்த நம் கட்சி முன்னணி ஊழியர்களும் தலைவர்களும் பெருமளவில் ஈர்க்கப்பட்டார்கள்.  இவ்வாறு ஏற்பட்ட இடது அதிதீவிரவாத திரிபுக்கு (ultra-Left deviation) எதிரான போராட்டத்தையும் தோழர் எம். பசவபுன்னையா கடுமையாக நடத்தினார்.  கட்சியின் சார்பில் 1968இல் பர்துவானில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான பிளீனம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற மாநில அளவிலான பிளீனம் நடைபெற்றது. இதில் இடது அதிதீவிரவாத திரிபுக்கு எதிரான போராட்டத்தை மிகச் சரியான முறையில் பி.சுந்தரய்யாவுடன் இணைந்து நின்று எம். பசவபுன்னையா நடத்தினார். பின்னர் பர்துவானில் நடைபெற்ற பிளீனத்தின்போதும் எம். பசவபுன்னையா ஆந்திராவிலிருந்து வந்திருந்த தலைவர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாட்டினை எதிர்த்து  முறியடித்தார். அப்போது கட்சியால் பர்துவான் பீளீனத்தில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வலது திருத்தல்வாதம் (right revisionism) மற்றும் இடது அதிதீவிரவாதம் (left sectarianism) ஆகியவற்றிற்கு எதிராக கட்சி மேற்கொண்ட தத்துவார்த்தப் போராட்டத்திற்கு இன்றளவும் அடிப்படையாக இருந்து வருகிறது.
           சர்வதேச அளவில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டிற்கு எதிராகவும் போராட்டத்தை நடத்துவதற்கான பொறுப்பை எம். பசவபுன்னையா எடுத்துக்கொண்டார். சமூக முரண்பாடுகளைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே சமாதான முறையில் போட்டியை ஏற்படுத்தி, சோசலிசத்தை சமாதானமான முறையிலேயே அடைய முடியும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட திருத்தல்வாத சிந்தனைகளை வேரறுக்கும் அறுவைக் கத்தியாக எம்.பசவபுன்னையா தன் பேனாவை உபயோகித்தார்.
       அதேபோன்று கலாச்சாரப் புரட்சி காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட இடது அதிதீவிர நிலைப்பாடுகள் (Left sectarian positions) பலவற்றையும் எம். பசவபுன்னையா கடுமையாக எதிர்த்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ``மூன்றுலகக் கோட்பாடு, சோவியத் யூனியனை ``சமூக ஏகாதிபத்தியவாதிஎன்று சித்தரித்தது மற்றும் பல நாடுகளிலும் உள்ள நிலைகளின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாது அல்லது அதனைப்பற்றிக் கவலைப்படாது ஆயுதப் போராட்டத்திற்காக இடது அதிதீவிர அறைகூவல் (Left adventurist call) விடுத்தது ஆகியவை இதில் அடங்கும்.  
           இதேபோன்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தவறான கொள்கைகளுக்கு எதிரான நிலையினை மேற்கொண்ட அதே சமயத்தில், சோவியத் எதிர்ப்பு அல்லது சீன எதிர்ப்பு நிலைப்பாடுகளை மேற்கொள்ளாது இருப்பதிலும் எம்.பசவபுன்னையா மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். இரு நாடுகளுமே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நிலைப்பாடுகளிலிருந்தும், சோசலிசத்தைக் கட்டுவதற்கான விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையிலிருந்தும்  விலகிச் சென்றுள்ளபோதிலும், அவை இரண்டும் சோசலிச நாடுகள்தான் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார்.
           இந்தியா போன்ற புதிய சுதந்திர நாடுகள் தங்களுடைய வளர்ச்சிக்கு முதலாளித்துவமற்ற பாதையைப் பின்பற்றலாம் என்று கூறிய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தத்தை (இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தது) எம். பசவபுன்னையா மிகவும் நாசுக்கானமுறையில் நிராகரித்தார். அதேபோன்று இந்தியாவில் ஏற்பட்டுவந்த முதலாளித்துவ வளர்ச்சியின் குணம் குறித்து நக்சலைட்டுகள் முன்வைத்த வறட்டுத்தனமான புரிந்துணர்வையும் எதிர்த்துத் தவிடுபொடியாக்கினார். அவர் எழுதிய ``ஆந்திரா தோழர்களுக்கான கடிதம் (இதனை பர்துவான் பிளீனத்திற்குப்பின்னர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஏற்றுக்கொண்டது) இவற்றை நன்கு விளக்குகிறது.
       இந்தியாவில் உள்ள முதலாளித்துவம் தரகு முதலாளித்துவம் என்று நக்சலைட்டுகள் கூறிவந்ததையும் அவர் தவிடுபொடியாக்கினார். மற்ற  ஜனநாயகக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்து போராட வேண்டும் என்பதனை அவர் உயர்த்திப்பிடித்தார். அதேபோன்று நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்கும் மற்றும் 1967களில் கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அமைக்கப்பெற்ற கூட்டணி அரசாங்கங்களுக்கும் எதிரான இடது அதிதீவிரவாத நிலைப்பாட்டையும் (Left sectarian stand) அவர் கண்டித்தார்.
           1978இல் கட்சியின் பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்றபின் தத்துவார்த்தப் பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து அதில் எழுதி வந்தார். 
           தனிநபர் துதிக்கு எதிராக
           கலாச்சாரப் புரட்சி காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் எந்த இடது அதிதீவிர திரிபுடன் மாசேதுங்கைச் சுற்றி தனிநபர் துதியும் உருவாக்கப்பட்டது. எம். பசவபுன்னையா இந்த சமயத்தில் ``தனிநபர் துதிக்கு எதிரான போராட்டம்குறித்தும் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதினார்.  தனிநபர் துதி தொடர்பான மார்க்சிஸ்ட் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதில் அவரை வரையறை செய்தார். சோவியத் யூனியனில் ஸ்டாலின் மீதான தனிநபர் துதியும், சீனத்தில் மாசேதுங் மீதான தனிநபர் துதியும் எப்படியெல்லாம் கட்சியை சீர்குலைத்தது என்பதைக் குறிப்பிட்டார். தனிநபர் துதி என்பது உள்கட்சி ஜனநாயகத்தை சின்னாபின்னமாக்கிடும் என்பதை அவர் நன்கு அக்கட்டுரையில் விளக்கி இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
       ``தனிநபர் துதிக்கு எதிரான போராட்டம் என்பது உள்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துடனும், கட்சியில் கூட்டுத் தலைமையை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டத்துடனும், விமர்சனம் - சுய விமர்சனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்துடனும்  நெருக்கமான முறையில் பின்னிப்பிணைந்தது என்பதனை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது.  மிக அற்புதமாக தீர்மானங்கள் நிறைவேற்றினால் மட்டும் போதாது. சொல்லுக்கும் செயலுக்கும் இடையே எவ்வித வித்தியாசமுமின்றி அவை முறையாக அமல்படுத்தப்படவும் வேண்டும். கட்சியில் ``பாதிகடவுள் (““demigod””) மற்றும் ``தவறே புரியாத மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (“infallible Marxist-Leninist”) என்று எந்தத் தலைவரும் இல்லை என்பது கட்சி அணிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் விடாது தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே இருக்க வேண்டும். அதேபோன்று கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதற்காக உறுப்பினரைத் தண்டிக்கும் நடவடிக்கையிலும் எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியும் இறங்கிடக் கூடாது.”
           தேசிய இனப் பிரச்சனை
           கட்சித் திட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் எழுந்த விவாதங்களின்போது இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பல தேசிய இனங்களைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாட்டில், பல்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களுக்கான பங்கு என்ன? இது தொடர்பாக 1972இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன. ``தேசிய இனப்பிரச்சனை மீதான குறிப்பு  மாநாட்டில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய மாநாட்டில் இதற்கான ஆவணத்தை எம். பசவபுன்னையா அறிமுகப்படுத்தி உரைநிகழ்த்தினார். அப்போது அவர் ரஷ்யாவில் புரட்சிக்கு முன்பிருந்த நிலைக்கும், இந்தியாவில் நாம் அதிலிருந்து எப்படியெல்லாம் வேறுபடுகிறோம் என்பதையும் மிகவும் தெளிவாக முன்வைத்தார்.  ஜார் ஆட்சி காலத்தில் அங்கிருந்த பல்வேறு தேசிய இனங்கள், வெள்ளை ரஷ்ய தேசிய இனத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாகி இருந்தன. ஆனால் இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே எந்த தேசிய இனமும், மற்றொரு தேசிய இனத்தை அடக்கி ஆளவில்லை. இரண்டாவதாக, இந்தியாவின் ஆளும் வர்க்கம், முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கம், பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டுக் கலவையாகும். இந்த ஆளும் வர்க்கம்தான் பல்வேறு மொழிபேசும் பல்வேறு தேசிய இன உழைக்கும் வர்க்கத்தினரையும் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. அதன்மூலம் ஒரு பொதுவான வர்க்க ஒடுக்குமுறையை அவர்கள் மீது ஏவிக்கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியாவில் தனித்துப் பிரிந்து செல்ல வேண்டுமென்கிற அறைகூவல் நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி, போராட்டத்தில் இறக்குவதற்கு ஊறு விளைவித்திடும். தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பணி என்பது முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் பொதுவான வர்க்க சுரண்டலுக்கு எதிராக அனைத்து மொழி மற்றும் தேசிய இனங்களின் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டுவதாகத்தான் இருக்க வேண்டும்.
           மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,   கட்சித் திட்டத்தில் முன்வைத்துள்ள பிரச்சனைகள் மீது தத்துவார்த்தரீதியாக ஒரு நீண்ட நெடிய உள்கட்சிப் போராட்டத்தை மேற்கொண்டு உருவான கட்சியாகும். கட்சி உருவானபின்பு அதன்மீது சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தவறாக மேற்கொண்ட நிலைப்பாடுகளையும் முறியடித்து வளர்ந்த கட்சியாகும். இது எப்படி சாத்தியமானது? கட்சி, இந்திய நிலைமைகளுக்கேற்ப மார்க்சிச-லெனினிசத்தை மிகச் சரியான முறையில் பொருத்தி முன்னேறியதே இதற்குக் காரணமாகும். இவ்வாறு கட்சியை முன்னெடுத்துச் சென்றதில் தோழர் எம். பசவபுன்னையாவிற்கு மகத்தான பங்கு உண்டு.
           (தமிழில்: ச.வீரமணி)

           

No comments: