Friday, December 27, 2013

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுதும் போராட்டம்




அன்பார்ந்த நண்பர்களே.
இன்றைய தினம் (27/12/13) புதுதில்லியில் மனதை மிகவும் நெகிழ வைத்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிற்கு சென்றிருந்தேன். ஊனமுற்றோர் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர் சார்பில் அச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

புகைப்படத்தில் உள்ளோர் இடமிருந்து வலமாக மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா (Activist for Autism children), ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பற்கான குழுவின் செயலாளர் (AADI (Action for Ability, Development and Inclusion) ஷ்யாமளா, ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி,ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் படத்தில் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார்.   அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.) இது தொடர்பாக நான் எங்கள் தீக்கதிர் நாளிதழுக்கு அனுப்பிய செய்தியை இத்துடன் இணைத்திருக்கிறேன், மேலும் முரளீதரன் மற்றும் ஏ,எஸ்.நாராயணன் ஆகியோர் ஆற்றிய உரைகளையும் யூ-ட்யூப் மூலம் பதிவேற்றம் செய்திருக்கிறேன், அவற்றை என்னுடைய இடுகையான இலக்கியா (http://illakkia.blogspot.com)விலும். முகநூலிலும் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்,

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு
டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை
மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுதும் போராட்டம்
புதுதில்லி, டிச.27-
ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டமுன்வடிவை பிப்ரவரியில் கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் முன்பும் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட ஊனமுற்றோர்களுக்கான அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி ஆகியோர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெள்ளியன்று மதியம் தில்லி, பெண்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்கள் கூறியதாவது:
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 2007ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான கன்வென்ஷன் அளித்துள்ள விதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது.
ஊனமுற்றோருக்கு உரிமைகள் வழங்கும் மிக முக்கியமான இந்தச் சட்டமுன்வடிவிற்கு நான்கு ஆண்டுகள் கழித்து டிசம்பர் 13 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  குளிர்காலக் கூட்டத்தொடரின் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. ஆயினும் என்ன காரணத்தாலோ குளிர்காலக் கூட்டத்தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றியவுடனேயே காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. ஊனமுற்றோருக்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படவே இல்லை.
எனவே 2014 பொதுத்தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் குறுகிய காலமே நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.  இச்சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்று அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருவேளை கால அவகாசம் இல்லையெனில், விவாதமின்றியாவது இது நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று கோருகிறோம்.
இதனை வலியுறுத்தி, வரவிருக்கும் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தின் முன்பும், மற்றும் பல்வேறு மாநிலத் தலைநகர்களின்முன்பும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளோம்.
அரசு செவிசாய்த்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்டமுன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் மேலும் வலுவாக எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் அவர்கள் மட்டும்தான் நாளை சனிக்கிழமையன்று மதியம் 12 மணிக்கு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்திருக்கிறார். அவரை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழகத்தில் சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தர்மாபுரம் பகுதியில் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் தெரிவித்துள்ளார்.

(ச,வீரமணி)

No comments: