Monday, November 28, 2011

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன்."--நீதியரசர் மார்கண்டே கட்ஜு

‘‘நான் ஒரு சுதந்திரப் பற்றாளன். ஊடகங்கள் மீதான என் விமர்சனம் அவை சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.’’

நான் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அளித்துள்ள பேட்டிகளிலும், பல்வேறு செய்தித்தாள்களில் எழுதியுள்ள கட்டுரைகளிலும் ஊடகங்கள் குறித்த என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆயினும், ஊடகவியலாளர்கள் சிலர் உட்பட நான் கூறியவற்றில் சில பிரச்சனைகள் குறித்து மேலும் தெளிவுபடுத்துமாறும் சில பிரச்சனைகள் குறித்து மேலும் விளக்கமாகக்கூறுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் கூறியவை குறித்து சிலர் கருத்துமாறுபாடு கொண்டிப்பதால், அவை தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
இன்றைய இந்தியா நம்முடைய வரலாற்றில் ஓர் இடைமாற்றக் காலத்தினூடே பயணித்துக் கொண்டிருக்கிறது. இடைமாற்றம் என்பது நிலப்பிரபுத்துவ வேளாண் சமூகத்திலிருந்து நவீன தொழில்மய சமூகத்தை நோக்கிய திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிகவும் வலிதரக்கூடிய வேதனைமிகுந்த கால கட்டமாகும். பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் அடியோடழிக்கப்பட்டு கிழித்தெறியப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆயினும் புதிய நவீன தொழில்மய சமூகம் இன்னமும் முழுமையாகவும் உறுதியாகவும் நிறுவப்பட வில்லை. பழைய நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் புதிய நவீன சிந்தனைகள் அதன் இடத்தில் இன்னமும் சரியாக அமர்த்தப்படவில்லை. அனைத்தும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் மேக்பெத்தில் கூறியதைப்போல், ‘‘அழகு அசிங்கமாகிறது, அசிங்கம் அழகாகிறது.’’ (‘‘Fair is foul and foul is fair’’).
ஐரோப்பிய வரலாற்றைப் படிக்கும் எவரொருவரும், 16ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டுவரை, நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து நவீன சமூகமாக மாறிய இடைமாற்றக் காலத்தில், மிகுந்த கொந்தளிப்பு, குழப்பம், யுத்தங்கள், புரட்சிகள், தாறுமாறான ஒழுங்கற்ற நிலை, சமூகத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள், அறிவுஜீவிகள் மத்தியில் மிகுந்த கிளர்ச்சிநிலை முதலானவைகள் இருந்ததை உணர முடியும். இவ்வாறு ஏராளமான மாற்றங்கள் நடைபெற்ற பின்னர்தான் ஐரோப்பாவில் நவீன சமூகம் உருவானது. அதுபோன்றதொரு கொந்தளிப்பு நிலை தற்போது இந்தியாவில் இருக்கிறது. நம்முடைய நாட்டின் வரலாற்றில் அத்தகைய மிகவும் வலியும் வேதனையும் அளிக்கக்கூடிய காலகட்டத்தினூடே நாம் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக இதுபோன்றதொரு நிலை அடுத்து 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன். இந்த இடைமாற்றமானது மக்களுக்கு எவ்விதமான வலியையோ வேதனையையோ அளிக்காது உடனடியாக நடைபெற வேண்டும் என்று நாம் விரும்பினாலும் துரதிர்ஷ்டவசமாக கடந்தகால வரலாறு அப்படி இருந்ததில்லை என்பதே எதார்த்த உண்மை.
இப்படிப்பட்ட இடைமாற்றக் காலத்தில் மனிதர்களின் சிந்தனைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. எனவே இவ்வாறு மனிதர்களின் சிந்தனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகங்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சிந்தனைகள் பௌதீக சக்தியாக மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்னும் சிந்தனைகளும் மதச் சுதந்திரம் (மதச்சார்பின்மை) என்னும் சிந்தனையும் ஐரோப்பாவில், அதிலும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில், மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் வலுவான பௌதீக சக்திகளாக மாறின. இவ்வாறான இடைமாற்றக் காலத்தின்போது, ஐரோப்பாவில் ஊடகங்கள் (அப்போது ஊடகங்கள் என்றால் பத்திரிகைகள் மட்டுமே) நிலப்பிரபுத்துவ ஐரோப்பாவை நவீன ஐரோப்பாவாக மாற்றியதில் மாபெரும் அளவில் வரலாற்றுப் பங்களிப்பினை ஆற்றின.
என்னுடைய அபிப்பிராயமானது, இதேபோன்று முற்போக்கானதொரு பங்களிப்பினை இந்திய ஊடகங்களும் ஆற்றிட வேண்டும் என்பதேயாகும். சாதீயம், வகுப்புவாதம், மூடநம்பிக்கைகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற பிற்போக்கான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலமும், நவீன, பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகள், மதச்சார்பின்மை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதன் மூலமுமே இவற்றைச் செய்திட முடியும். ஒரு காலத்தில் நம் ஊடகங்கள் நம் வரலாற்றில் மாபெரும் பங்களிப்பினைப் புரிந்துள்ளன.
இந்திய ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஒலி-ஒளி ஊடகங்கள் இத்தகைய முற்போக்கான மற்றும் சமூகத்தின் பொறுப்பான பங்களிப்பினைச் செய்யவில்லை என்று நான் விமர்சித்ததை அடுத்து, அவ்வூடகங்களில் ஒரு பிரிவினரால் மிகவும் ஆவேசமாக நான் தாக்கப்பட்டேன். நான் அரசாங்கத்தின் ஏஜண்டாகச் செயல்படுவதாக தனிப்பட்ட முறையில் கூட ஒருசில ஊடகங்கள் என்னைத் தாக்கின. ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து அக்கறையுடன் சில பிரச்சனைகள் எழுப்பப்பட்டபோது, அவை அக்கறையுடன் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஊடகங்களை விமர்சித்ததன் மூலம் அவை தங்கள் செயல்பாட்டின் தன்மைகளை மாற்றிக்கொள்ள அவை தூண்டலாம் என்றுதான் நான் கருதினேனேயொழிய, மாறாக அவற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் அதைச் செய்யவில்லை. இடைமாற்றக்காலத்தில் இந்திய ஊடகங்களுக்கு ஒரு வரலாற்று ரீதியான பங்களிப்பு இருக்கிறது. இத்தகைய வரலாற்றுக் கடமையை ஊடக நண்பர்களுக்கு நான் நினைவு படுத்த விரும்பினேன். என்னுடைய விமர்சனத்தைச் சரியான உணர்வுடன் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருசில ஊடகங்கள் எனக்கெதிராக வசைமாரி பொழியத் தொடங்கியுள்ளன. என்னை சர்வாதிகார அரக்கன் என்பதுபோலக்கூட சில குறிப்பிட்டுள்ளன.
ஊடகங்கள் என்னை அவற்றின் மீது அக்கறை கொண்ட நண்பனாகவே கருத வேண்டும். நான் அவர்களை விமர்சித்தேன். ஏனெனில், அவை தங்களுடைய பலவிதமான குறைபாடுகளைக் கைவிட்டு, இன்றைக்கும் இந்திய மக்களின் மதிப்பினைப் பெற்றுள்ள ஐரோப்பிய பத்திரிகைகள் போன்று, செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நம் நாட்டின் மக்கள் தொதகையில் 80 விழுக்காட்டினர் கொடூரமான வறுமையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் இருக்கிறதென்றும், விலைவாசிகள் விண்ணைநோக்கி சென்றுகொண்டிருக்கின்றன என்றும், மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைத்திட வில்லை என்றும் நான் குறிப்பிட்டேன். அதேபோன்று கவுரவக் கொலைகள், வரதட்சணைச் சாவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வெறித்தனமான மூட மத நம்பிக்கைகள் போன்ற காட்டுமிராண்டித்தனமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இதுபோன்ற ஆழமான பிரச்சனைகள் குறித்து எதுவும் கூறாது, இந்திய ஊடகங்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்கு வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுக்குச் செலவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். உதாரணமாக, சினிமா நடிகர்களின் வாழ்க்கை, ஃபேஷன் அணிவகுப்புகள், பாப் மியூசிக், டிஸ்கோ நடனங்கள், கிரிக்கெட் அல்லது ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை விதைக்கும் நிகழ்ச்சிகளைக் காட்டுகின்றன என்று விமர்சித்திருந்தேன்.
ஊடகங்கள் மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களைக் காட்டவேண்டும்தான். ஆனால் அவை தங்களுடைய நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு அளவிற்குப் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஒதுக்கிவிட்டு, வெறும் 10 விழுக்காடு அளவு மட்டும் சமூகப் பொருளதார அம்சங்களுக்கு ஒதுக்குகின்றன. மக்களின் உண்மையான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறாது மேலே கூறியவாறு மக்களுக்குச் சம்பந்தம் இல்லாத சினிமா நடிகர்களின் வாழ்க்கை, டிஸ்கோ நடனங்கள் போன்ற விஷயங்கள் மீது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. இவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தராததற்காகவும், மூட நம்பிக்கைகளை விதைப்பதற்காகவும் தான் நான் ஊடகங்களை விமர்சித்தேன்.
எவரொருவரும் விமர்சனத்தைக்கண்டு அஞ்சக் கூடாது. அதேபோன்று அவ்வாறு விமர்சிப்பவர்கள் மீது சினங்கொள்ளவும் கூடாது. மக்கள் என்னை அவர்கள் விரும்பும் அளவிற்கு விமர்சிக்கலாம். நான் அதற்காகக் கிஞ்சிற்றும் சினங்கொள்ள மாட்டேன். உண்மையில் அதன் மூலம் நான் பயனடைவேன்.
உண்மையில் எப்போதும் நான் ஒரு சுதந்திரப் பற்றாளனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு ஆதாரம் வேண்டுமென்று விரும்புவோர் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நான் நீதிபதியாக இருந்த காலத்தில் அளித்திட்ட தீர்ப்புகளைக் கண்ணுற்றால் தெரிந்து கொள்ளலாம். நீதிபதிகள் என்போர் மக்களின் சுதந்திரத்தைக் காப்பவர்கள் என்றும், இதனை உயர்த்திப்பிடிக்க நீதிபதிகள் தவறுவார்களானால் அவர்கள் தங்கள் கடமையிலிருந்து நழுவியவராவார்கள் என்றும் பல முறை நான் என் தீர்ப்புகளில் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயினும் சுதந்திரம் என்பது எவரொருவரும் தாங்கள் விரும்பிய எதனையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து சுதந்திரங்களும் பொது நலன் மற்றும் பொறுப்புக்களுக்குக் குந்தகம் விளைவிக்காதவாறு தேவையான சில கட்டுப்பாடுகளையும் கொண்டவைகளாகும்.
இதன் அடிப்படையில் சுய முறைப்படுத்தல் (self regulation) குறித்து இப்போது நாம் விவாதிக்கலாம்.
தற்சமயம தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் நிகழ்ச்சிக்ளை முறைப்படுத்தக்கூடிய விதத்தில் எவ்விதமான அதிகாரக் குழுமமும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள இந்திய பிர° கவுன்சில் பத்திரிகைகள் மீது மட்டுமே ஆளுகை செலுத்த முடியும். இதிலும் பத்திரிகையாளர் எவரும் தங்கள் பத்திரிகை தர்மத்தை மீறி செயல்பட்டார் என்று மெய்ப்பிக்கப்படுவாரானால் இந்திய பிர ஸ்
கவுன்சில் அவருக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை என்பது என்ன தெரியுமா? மன்னித்தல் (admonition)அல்லது கண்டனம் (censure) என்பது மட்டுமே. இந்திய பிரஸ்
கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களையயும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.
பிரஸ் கவுன்சிலின் கீழ் கொண்டுவரப்படுவதை தொலைக்காட்சி - வானொலி ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. எங்களை நாங்களே சுயமாக முறைப்படுத்திக் கொள்வோம் என்று அவை கூறுகின்றன. நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூட அத்தகைய உரிமைகள் கிடையாது. அவர்கள் நாடாளுமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கண்டிக்கும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உண்டு. வழக்குரைஞர்களைக் கட்டுப்படுத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் இருக்கிறது. மருத்துவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் கீழ் வருகிறார்கள். இதேபோன்று நாட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு அமைப்பிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார்கள். எலக்ட்ரானிக் ஊடகவியலாளர்கள் மட்டும் இவ்வாறு ஒரு கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறார்கள்.
உண்மையில் சுய முறைப்படுத்தல் என்று எதுவும் கிடையாது. அது ஒரு முரண்தொடையாகும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். இதற்கு ஊடகங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.
(நன்றி: தி இந்து நாளிதழ், 16.11.11.)
(தமிழில்: ச.வீரமணி)

No comments: