Friday, November 25, 2011

மக்களின் அவலவாழ்வைக் காண மறுத்து கண்ணை மூடிக்கொள்ளும் ஐமுகூ அரசாங்கம்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:

அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையான முறையில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையானது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதுமே அதனை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. இது புரிந்துகொள்ளக்கூடியதேயாகும். உணவுப் பணவீக்கம் தற்போது 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கிறது. காய்கறிகள் 26 விழுக்காடும், தானியங்கள் 14 விழுக்காடும், பழங்கள் 12 விழுக்காடும், முட்டை, மீன் மற்றும் இறைச்சி வகைகள் 13 விழுக்காடும், பால் 12 விழுக்காடும் உயர்ந்திருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் சென்ற இரு கூட்டத் தொடர்களின்போதும், சாமானிய மக்களை வாட்டி வதைத்திடும் இவ்விலைவாசிப் பிரச்சனையே பிரதானமான ஒன்றாக முன்னுக்கு வந்தது. இப்போதும் அது தொடர்கிறது. இக்கூட்டத் தொடர்களின்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சீர்குலைக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், விலைவாசி உயர்வுக்கு எதிராக அவைத் தலைவரே தீர்மானம் கொண்டுவருவதற்கு இடதுசாரிக் கட்சிகள் ஒப்புக் கொண்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் நடைபெற்று, ‘‘பணவீக்கத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து சாமானிய மக்களைக் காப்பாற்றிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்’’ என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும், சாமானியர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைத்திட வில்லை. மாறாக, நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. சென்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போதும்கூட இப்பிரச்சனையே பிரதானமாக முன்னுக்கு வந்ததும் இயற்கையே. அப்போது அரசாங்கமும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஒரு வரைவு தீர்மானத்தை உருவாக்கி, பாஜக சார்பில் அதனை அவையில் முன்மொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தீர்மானத்தை எதிர்த்தது. காரணம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கை எது குறித்தும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்ற சமயத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய உருப்படியான நடவடிக்கைகளைத் தெரிவித்து அவற்றை தீர்மானத்தில் திருத்தங்களாக கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி, இரு அவைகளிலும் தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ள விலைவாசி உயர்வு குறித்து ஆழமான முறையில் விவாதங்கள் நடத்திட அரசாங்கம் தயாராக இல்லாமல் மிகவும் தடித்தனமான அணுகுமுறையையே அப்போது கடைப்பிடித்தது.
இப்போதும் இக்குளிர்காலக் கூட்டத் தொடரின்போதும் விலைவாசி உயர்வு தொடர்பாக அதே மாதிரியே சொரணையற்றமுறையில் நடந்து கொள்ள அரசாங்கம் முன் வந்திருக்கிறது. இதற்காக அரசாங்கம் ஒரு பதினொரு பக்க அறிக்கையை இரு அவைகளிலும் நிதியமைச்சர் மூலமாகத் தாக்கல் செய்திருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கையை இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. ஏனெனில் எகிறும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ளப்படவேண்டிய துல்லியமான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்திடக் கூடிய வகையில் இத்தீர்மானத்தில் எதுவும் இல்லை. எனவேதான், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தக்கூடிய விதத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்திருக்கிறது. இவ்வாறு உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திடவும், மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைத்திடவும் சில துல்லியமான நடவடிக்கைகளை அறிவித்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு, நாட்டின் பெரும்பான்மை மக்களின் அவலநிலையைப் போக்கக்கூடிய விதத்தில் அரசாங்கத்தை உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க வைத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இது, நாடாளுமன்றக்கூட்டத்தொடரை ஒரு நாள் முடக்கிட இட்டுச் சென்றது. அரசாங்கத்தின் பிடிவாதத்தைத் தகர்த்திட வேறு வழியில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாகவும், முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் மிகவும் உறுதிபட இருக்கிறார்கள். உண்மையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டத்தொடரின்போது, ஓராண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதைக் கட்டாயமாக்கி, அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஒரு திருத்தமே முன்மொழிந்திருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் நன்கு செயல்பட்டு மக்களின் இறையாண்மை நிலைநிறுத்தப்பட, அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பையும் அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களையும் நிறைவேற்றிட இது அவசியம் என்று நாம் கருதுகிறோம். இதனால், அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிகமாகிறது. இவை அனைத்துமே நாடாளுமன்றம் போதுமான கால அளவிற்கு முறையாகச் செயல்பட்டால்தான் உத்தரவாதம் செய்திட முடியும்.
ஆயினும், இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, சாமானியர்களின் ஆழமான பிரச்சனைகளைப் பிரதிபலிக்கக்கூடிய விதத்திலும், நாள்தோறும் எகிறும் விலைவாசி உயர்வால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அவர்களின் துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய விதத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்குளிர்காலக் கூட்டத்தொடருக்கு தன் உத்திகளை வகுத்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற்றால் அதன் மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்திட்ட பரிந்துரைகளில் குறைந்தபட்சம் மூன்றை ஏற்றுக்கொள்வதற்குப் பரிசீலனை செய்திட அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த முடியும்.
முதலாவதாக, விவசாயப் பண்டங்கள் மீதான ஊக வர்த்தகத்தை உடனடியாகத் தடை செய்தல். ஊக வர்த்தகம்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை பன்மடங்கு அதிகரித்திடக் காரணம் என்பதை இப்பகுதியில் பலமுறை நாம் விளக்கி இருக்கிறோம். விவசாயப் பண்டங்கள் மீது ஊக வர்த்தகம் அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இப்பண்டங்களின் கடும் விலை உயர்வுக்குக் காரணமாகும். எனவே இதனை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அல்லது குறைந்தபட்சம் நிறுத்தியாவது வைத்திட வேண்டும். ஆனால் அரசாங்கம் இதனைச் செய்ய மறுத்து அதன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்து கொள்ளை லாபம் ஈட்டிட ஊக வர்த்தக சூதாடிகளுக்கு வசதி செய்து தருகிறது.
இரண்டாவதாக, சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மீளவும் பழைய நிலைக்கே குறைப்பது அவசியம். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்து, அது பணவீக்கத்திற்கும் இட்டுச் செல்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் ‘‘நட்டங்கள்’’ அடைந்திருப்பதால் இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அவசியம் என்கிற வாதம் முற்றிலும் குதர்க்கமான ஒன்றாகும். எதார்த்தத்தில், நம் பெரிய எண்ணெய் நிறுவனம் எதுவும் நட்டம் எதுவும் அடைந்திடவில்லை. 2010 மார்ச் 31ஆம் நாளன்று நிறைவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் 10 ஆயிரத்து 998 கோடி ரூபாய்களாகும். மேலும் இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOC) தன்னுடைய இருப்பு வருவாய் உபரியாக 49 ஆயிரத்து 472 கோடி ரூபாய்கள் வைத்திருக்கிறது. 2009 ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் பொதுத்துறையின் கீழ் இயங்கும் மற்ற இரு எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனும்கூட முறையே 544 கோடி, 834 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டியிருக்கின்றன.
மேலும், இந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலமாக அரசாங்கம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக ஈட்டியிருக்கிறது. பட்ஜெட்டில் அரசாங்கம் மான்யத்திற்கு என்று ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 40 ஆயிரம் கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும். இவ்வாறு அரசாங்கமானது 90 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் அதிகமாக மக்களின் வயிற்றிலடித்து லாபம் ஈட்டியிருக்கிறது.
மூன்றாவதாக, பொது விநியோக முறை மூலமாக வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள மக்களுக்கு அரசின் மத்திய உணவுக் கிடங்குகளில் அழுகி வீணாகிக் கொண்டிருக்கும் உணவு தான்யங்களை விநியோகித்திட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இது உணவுப் பொருள்களின் விலை உயர்வை மட்டுப்படுத்திட உதவும். தற்சமயம், அரசாங்கக் கிடங்குகளில் சுமார் 600 லட்சம் டன்கள் உணவு தான்யங்கள் இருப்பில் இருக்கின்றன. இது, இருக்க வேண்டிய இருப்பின் கொள்ளளவைப்போல சுமார் இரண்டரை மடங்காகும்.ஆயினும், ஐமுகூ-2 அரசாங்கம் இதனை மக்களுக்கு விநியோகித்திட நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.
குறைந்தபட்சம் இம்மூன்று நடவடிக்கைகளையும் எடுப்பதற்குப் பதிலாக, நிதியமைச்சரின் அறிக்கையானது ‘‘பணவீக்க நிலைமை இந்தியாவில் சரியாகிக் கொண்டிருக்கிறது’’ என்று கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி அதிகமாகிவிட்டதால்தான் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்கிற ரீதியிலும் நிதியமைச்சர் விசித்திரமான விதத்தில் பேசியிருக்கிறார். இவ்வாறு இவர் பேசும் அதே சமயத்தில்தான் திட்டக் கமிஷன், கிராமப்புறங்களில் 8 விழுக்காடு அளவிற்கும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடு அளவிற்கும் மக்கள் உணவு தான்யங்கள் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவது வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசாங்கமே அமைத்திட்ட ஆணையங்கள் நாட்டு மக்களில் சுமார் 80 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு 20 ரூபாய் கூட வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் அதே சமயத்தில்தான் நிதியமைச்சர் இவ்வாறு சரடு விட்டுக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக, ஒன்று அரசாங்கம் மக்களின் வாழ்நிலையைப் பார்க்காது கண்ணை மூடிக்கொண்டு குருடாக இருக்க வேண்டும் அல்லது விலைவாசியை உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதை நியாயப்படுத்துவதற்காக நாட்டைத் திசை திருப்ப வேண்டும்.
எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டு மக்களின் துன்ப துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக, அரசாங்கத்தை மேலே கூறிய மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்திட அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் அளிக்கக்கூடிய விதத்தில் நாடாளுமன்றத்திற்குள்ளே போராட்டம் நடத்தக்கூடிய அதே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் மக்கள் போராட்டங்களை வலுப்படுத்திட முடிவெடுத்துள்ளது.
(தமிழில்: ச.வீரமணி)

No comments: