Saturday, March 26, 2022

மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம்

 


மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம்

மாநிலங்களவையில் சிவதாசன் சங்கநாதம்

புதுதில்லி, மார்ச் 26-

மனுஸ்மிருதியை நிராகரித்திடுவோம் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கர்ஜித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவையில் தனிநபர் சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தும் சமயத்தில் பாஜக-வைச் சேர்ந்த ராகேஷ் சின்கா என்பவர் இந்திய அறிவுப் பாரம்பர்யங்களைப் புதுப்பித்திட வேண்டும் என்பதற்காக தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவிட வேண்டும் எனத் தனிநபர் சட்டமுன்வடிவு ஒன்றைக் கொண்டு வந்தார். இதற்குப் பதிலடி அளித்திடும் விதத்தில் டாக்டர் வி. சிவதாசன் பேசியதாவது:

மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் அமர் பட்நாயக் ஏற்கனவே அந்தோனியோ கிராம்சியின் பணிகளை மேற்கோள்காட்டினார். அந்தோனியோ கிராம்சியின் வாழ்க்கை மிகவும் தெளிவாகவே கலாச்சார மேலாதிக்கத்திற்கு (cultural hegemony) எதிராகப் போராட வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காட்டியிருக்கிறது. அவர் ‘சிறைக் குறிப்புகள்’ (’Prison Notebooks’) என்ற பெயரில் எண்ணற்றக் கட்டுரைகளை அவர் சிறையில் இருந்தபோது எழுதியிருக்கிறார். அவர், அவற்றில் காலனித்துவ ஆட்சியாளர்கள் அல்லது ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவற்றைத் தங்களுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்றும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். காலனித்துவத்தின் அடிப்படைக் குணாம்சம் சுரண்டலாகும். எங்கெல்லாம் காலத்துவ ஆட்சி இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் லாபத்திற்காக மட்டுமே தேடுதலில் ஈடுபட்டிருப்பார்கள். இவ்வாறு காலனித்துவத்தின் அடிப்படை நோக்கம் லாபம்.

இப்போது நாம் ஓர் ஏகாதிபத்திய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும்.

இங்கே, இப்போது நான் இந்த ‘மைக்ரோபோன்’ முன் பேசிக்கொண்டிருக்கிறேன். இதனைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல். அவர் ஒரு ஸ்காட்டிஷ் விஞ்ஞானி (Scottish scientist). ஆனாலும் அதனை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆல்பர்ட்இ ஐன்ஸ்டின் என்னும் அறிவியல் மேதை ஜெர்மனியில் பிறந்தார்.  அவருடைய சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியல் கோட்பாடு இயற்பியலின் இரு அடிப்படைத் தூண்களாகும். அவற்றை நாம் நம் கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நாம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்வையும், பங்களிப்புகளையும் ஆய்ந்துகொண்டிருக்கிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பங்களிப்புகளைப்பெற்றுக்கொள்வதில் எவ்விதமான தயக்கமும் நமக்கில்லை. அவர் கண்டுபிடித்த e=mc2 என்கிற மற்றொரு கோட்பாடும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.  மின் உலைக்களங்களில் நாம் இக்கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கலிலியோ கலிலி என்னும் மற்றொரு அறிவியலாளர். இத்தாலியைச் சேர்ந்தவர். அவர் நமக்கு சூரிய மைய அமைப்பு (solar-centric system) குறித்துச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் ஒன்றும் கேரளாவைச் சேர்ந்தவரோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரோ அல்லது வடநாட்டைச் சேர்ந்தவரோ அல்ல. நாம் கலிலியோ கலிலியை மதிக்கிறோம். அதேபோன்றே மற்றோரு தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான கியார்டனோ புரூனோவையும் மதிக்கிறோம். அவர், உண்மை மற்றும் அறிவியல் உணர்வுத் தேடலுக்காகத் (truth and scientific spirit) தன் ரத்தத்தைச் சிந்தியவர். 

இங்கே உறுப்பினர் ராகேஷ் சின்கா, இந்தியா குறித்த ஜெயஸ்வால் கோட்பாடு (Jayaswal’s theory on India), தேசியக் கல்விக் கொள்கை மற்றும் பல் விஷயங்களைக் குறிப்பிட்டார். ஆனால் அவர் காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடிப்படைக் குணாம்சங்கள் குறித்து ஏன் எதுவும் கூறவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள், இந்தியாவின் வளங்களை எப்படிச் சூறையாடித் தங்கள் நாட்டிற்குக் கொண்டுசெல்வது என்பதற்காகவே இந்தியா குறித்து ஆய்வு செய்தார்கள். எங்கெல்லாம் காலனித்துவம் செல்கிறதோ, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் அது அங்குள்ள மக்களைச் சுரண்டுவதற்கே முயற்சித்திடும். இதற்காக அவர்கள் அந்நாட்டு மக்களின் கலாச்சாரங்களை ஆய்வு செய்திடுவார்கள். அவர்களின் வாழ்நிலைமைகளையும் இதர அம்சங்களையும் ஆய்வு செய்திடுவார்கள். அவர்கள் நோக்க மெல்லாம் ஒன்றே ஒன்றுதான். லாபம். அதற்காக மக்களைச் சுரண்டுவது என்பது மட்டுமே.     எனவே, நாம், இந்தியக் கருத்தியல் என்றால் என்ன என்பது குறித்தும் விவாதித்திட வேண்டும்.

உறுப்பினர் ராகேஷ் சின்கா இது தொடர்பாக எண்ணற்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

நான், மனுஸ்மிருதியிலிருந்து ஒரே ஒரு வாக்கியத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். கங்கைக்கும் யமுனைக்கும் இடையில் உள்ள மக்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. அப்படியென்றால் தென்னிந்தியர்களின் நிலை என்ன? வட கிழக்கில் வாழும் மக்களின் நிலை என்ன?  இவை குறித்தெல்லாம் நாம் விவாதித்திட வேண்டும். இவர் கொண்டுவந்திருக்கும் இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று. நாம் மனுஸ்மிருதியை, மனுஸ்மிருதியின் விழுமியங்களைத் தூக்கிப் பிடித்தோமென்றால் அது மிகவும் ஆபத்தான ஒரு விஷயமாகும். இது இந்த அவையால் நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

எண்ணற்ற அறிவுஜீவிகள், எண்ணற்ற சமூக சீர்திருத்தவாதிகள் ஏற்கனவே இந்தக் கருத்தியலுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

முப்பது கோடி ஜனங்களின் சங்கம், முழுமைக்கும் பொது உடைமை, ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை என்று மகாகவி பாரதியார் பாடினார். அவ்வாறு நம் சமுதாயம் ஒப்பிடமுடியாத அளவிற்கு உயர்ந்ததொரு சமுதாயமாகும். அவர் வாழ்ந்த சமயத்தில் நாட்டின் மக்கள்தொகை முப்பது கோடியாகும். எனவே அவர் அப்போது அவ்வாறு கூறினார். அத்தகையதொரு பொதுவுடைமைச் சமுதாயத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய ஒரு சமுதாயத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மார்ட்டின் லூதர் கிங், ஓர் அமெரிக்கர். அவர், எனக்கு ஒரு கனவு உண்டு. என் நான்கு குழந்தைகளும் ஒரு தேசத்தில் வாழும். அங்கே அவை அதன் தோலின் நிறத்தால் வகைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள், அவர்களின் குணத்தின் தன்மையால் மட்டுமே வகைப்படுத்தப்படுவார்கள். இது மார்ட்டின் லூதர் கிங் கூறிய வாசகங்கள். இத்தகைய பொருள்பொதிந்த வாசகங்களை எப்படி நாம் நிராகரித்திட முடியும்? எனவேதான் நான் மார்ட்டின் லூதர் கிங் அவர்களை விரும்புகிறேன். நான் மகா கவி பாரதியாரை விரும்புகிறேன். அதேபோன்று நான் ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி போன்ற சிந்தனாவாதிகளை விரும்புகிறேன்.

இதேபோன்றே நான் நம் தேசத்தின் சார்வாகனன் தத்துவங்களைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் நமக்கு ஏராளமாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

நாட்டில் பிராமாண மேலாதிக்கம் இங்கே அனுமதிக்கப்பட முடியாததாகும். இதுதொடர்பாக ஜவகர்லால் நேரு, அலகாபாத் பல்கலைக் கழகத்தில் கூறியதை மேற்கோள்காட்ட விரும்புகிறேன். அவர் பல்கலைக் கழகங்கள் குறித்து உரையாற்றி இருந்தார். அப்போது அவர் கூறினார்: ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதகுல முன்னேற்றத்திற்காக, சகிப்புத்தன்மைக்காக, சிந்தனைகளின் சாசகங்களுக்காக, உண்மையைக் கண்டறிவதற்காக இருந்திட வேண்டும்.

இந்த வார்த்தைகளுடன் நான் என் உரையை நிறைவு செய்கிறேன். ராகேஷ் சின்காஜி, நாம் சகிப்புத்தன்மைக்காக ஒன்றுபட்டு நிற்போம். நாம் உண்மையைக் கண்டறிவதற்காக ஒன்றுபட்டு நிற்போம். எனவே, மனிதகுல முன்னேற்றத்திற்கு எதிரான சிந்தனைகளை எதிர்த்திடுவோம். மனுவாதத்தை எதிர்த்திடுவோம்.

இவ்வாறு டாக்டர் வி. சிவதாசன் பேசினார்.

(ந.நி.)

 

Friday, February 25, 2022

ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்



ஆளுநர்கள் நியமனம், பங்களிப்பு, மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்

-தமிழில் : ச. வீரமணி

[ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.”]

கேரள மாநில அரசாங்கம், ஆளுநர்கள் நியமனம் அல்லது ஆளுநர்களைத் திரும்ப அழைப்பது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குத் திருத்தங்களை முன் மொழிந்து, ஒன்றிய அரசாங்கத்திற்கு எழுதியிருக்கி றது.  ஒன்றிய அரசுமாநிலங்கள் அரசு ஆகியவற்றிற்கி டையேயான உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் புஞ்ச்சி (Justice Punchhi) ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இது செய்யப்பட்டி ருக்கிறது.  ஆளுநர்களின் பங்கு குறித்து மாற்றங்கள் தேவை என்று நீண்டகாலமாக உணரப்பட்டு வந்த தன் அடிப்படையைப் பிரதிபலிக்கும் வகையில் கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடை கூறும் விதமாக இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் ஏஜண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

156ஆவது பிரிவில்  திருத்தம் வேண்டும்

ஆளுநர் ஒருவர் தன்னுடைய அரசமைப்புச்சட்டக் கடமைகளைச் செய்கையில், அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிறார் என்று காணும்போது, அவரைத் திரும்ப அழைத்திடும் விதத்தில் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளித்திட அரசமைப்புச் சட்டத்தின் 156ஆவது பிரிவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று இக்கடிதத்தில் கேரள அரசாங்கம் மேலும் கேட்டிருக்கிறது. சமீப காலங்களில், மோடி 2014இல் பிரதமராக வந்த பின்பு, ஆளுநர்கள் நியமனம் என்பது ஒன்றிய  அரசாங்கத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேவைக ளுக்குச் சேவகம் செய்யும் விதத்தில் மிகவும் வெட்கக்கேடான விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆளுநர்களில் சிலர் ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்டவர்கள். மற்றவர்கள் ஆளும் கட்சியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிற வர்களும், ஒன்றிய அரசின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள். கேரளாவில், ஆளுநர் ஆரிப் முகமது கான், அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளையெல்லாம் கிடப்பில்போட்டுவிட்டு மிக மோசமான நிலைப்பாடு களை எடுத்துக் கொண்டிருக்கிறார். நடப்பு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ஆளுநர் ஆரம்பத்தில் சட்டமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்காகக் கையெ ழுத்திட மறுத்துவிட்டார். எனினும், கடைசிக் கட்டத்தில் மனந்திருந்தி அரசமைப்புச்சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு முழு உரையையும் வாசித்தார். பல்கலைக் கழக துணை வேந்தர்கள் நியமனங்களின்போதும் மாநி லப் பல்கலைக் கழகங்களின்  வேந்தர் என்ற முறையில் அவருடைய பங்கு  சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.   

கண்ணூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மறு நியமனம் தொடர்பாக முதலில் அவர் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். பின்னர் அது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார். இப்போது அவை  கேரள உயர்நீதிமன்றத்தால் சரிசெய்யப்பட்டு, நியமனம்  செல்லத்தக்கது என்று கூறப்பட்டிருக்கிறது.

 

மாநில நிர்வாகத்தில் தலையிடும் போக்கு

பாஜக ஆட்சியில் இல்லாத வேறு சில மாநிலங்க ளிலும் ஆளுநர்கள் மிகவும் நாணமற்ற முறையிலும், ஒருதலைப்பட்சமாகவும் நடந்து கொண்டிருக்கி றார்கள். மேற்கு வங்க ஆளுநர், ஜகதீப் தன்கர், முதலமைச்சருக்கு எதிராகவும், மாநில அரசாங்கத் திற்கு எதிராகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங் கத்தின் துறைத் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கட்டளை பிறப்பிக்கும் பணிகளிலும் ஈடுபட்டார். மகாராஷ்டிராவில், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில அரசாங்கத்தால் மாநில சட்டமன்ற மேல வைக்கு நியமனம் செய்யப்பட்ட 12 உறுப்பினர்க ளுக்கான பரிந்துரைகள் மீது முடிவெதுவும் எடுக்காது  அவற்றின் மீது உட்கார்ந்திருந்தார். பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் நியமனத்திலும் வேந்தர் என்ற அந்தஸ்தில் தன் இஷ்டத்திற்குத் தலையிட்டார். இவ்வாறு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் தலை யிட்டதன் காரணமாக, சட்டமன்றத்தில் 2021 டிசம்பரில் மகாராஷ்டிரா பொதுப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளன.  

இந்தத் திருத்தங்கள், ஆளுநரான வேந்தருக்கும் துணை வேந்தருக்கும் இடையே உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சரை இணை வேந்தராக நியமிக்கப்படுவதற்காகவும், துணை வேந்தர்கள் நியமனங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திருத்தத்தின்மூலம் ஆளுநர், அவருக்கு அனுப்பப் படும் இரு நபர்களின் பெயர்களில் ஒருவரை அவர் ஒரு மாத காலத்திற்குள் தேர்ந்தெடுத்திட வேண்டும் என்று கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என்.ரவியும்கூட பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சம்பந்தமாக நேரடியாகப் பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். ‘நீட்தேர்வு சம்பந்தமாக, சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை நீண்டநாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து விட்டு, திருப்பி அனுப்பியிருந்தார். பிரச்சனை என்ன வென்றால்,  ஒரு குறிப்பிட்ட ஆளுநர் அல்லது வேறொரு வர் தவறாக நடந்துகொள்கிறார் என்பதல்ல. அதற்கும் மேல்  ஆழமான அளவில் பிரச்சனைகள் இதில் அடங்கி யிருக்கிறது

 

ஒன்றிய அரசுக்கு கடமைப்பட்டவர்களாக...

ஆளுநர்களை நியமனம் செய்வது தொடர்பாக,  அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய நிலை,  அந்த நபர் ஒன்றிய அரசாங்கத்தால் நியமனம் செய்யப்படக் கூடிய நிலை இருந்து வருகிறது. இது தவிர்க்க முடியாத விதத்தில்  அந்தப் பதவியில் நியமனம் செய்யப்படும் நபர், முழுமையாக ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படுவதற்கு இட்டுச்செல்கிறது. இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஆளுநரை நியமனம் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்வரை, ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவது, அதற்காகப் பொது வாழ்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் அல்லது அரசியல்வாதி கள் அல்லாத சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்ற வர்களை அப்பதவிக்காகப் பரிந்துரைப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது

உண்மையில், கடந்த கால அனுபவங்கள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் அல்லாது ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஆளுநர் பொறுப்பு க்கு வந்திருந்தவர்கள், மிகவும் மோசமாகவே நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பதவி யில் வேலை எதுவும் இன்றி சம்பளம் மட்டும் வாங்குவதற்காக முற்றிலுமாக ஒன்றிய அரசாங்கத் திற்கே கடமைப்பட்டவர்களாக இருந்து வந்திருக்கி றார்கள்.

 

ஸ்ரீநகர் மாநாட்டு பரிந்துரை

அதனால்தான், ஒன்றிய அரசாங்கம்-மாநில அர சாங்கங்கள் உறவுகள் தொடர்பாக 1983இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் , ஆளுநர் பதவிக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நபர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திட வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நீதிபதி சர்க்கா ரியா ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன்மொழிவி லும், புஞ்ச்சி ஆணையத்திற்கு அனுப்பியிருந்த முன் மொழிவிலும், இதையே கூறியிருந்தது. 2008 அக்டோப ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, ஒன்றிய அரசாங்கம்-மாநில அரசாங்கங்கள் இடையே உறவுகளை மாற்றியமைப்பது தொடர்பான அணுகு முறை ஆவணம் (‘Approach Paper on Restruct uring of Centre-State Relations) ஒன்றை நிறை வேற்றியது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாவது

ஒன்றிய அரசாங்கத்தால் மாநிலங்களுக்கு ஆளு நர்கள் நியமனம் செய்யப்படும் முறை காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. இது கூட்டாட்சி ஜனநாயக அரசியலுக்கு உகந்ததல்ல. ஆளுநர் பதவி தொடர்ந்து இருந்திட வேண்டும் எனக் கருதினால், பின் அது சர்க்காரியா ஆணையம் குறிப்பிட்டிருந்த அளவுகோல்களை நிறைவேற்றும் விதத்தில், மாநில முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படும் மூன்று புகழ்பெற்ற நபர்களிலிருந்து ஒருவர்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.” இப்போதுள்ள ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் ஆளுநர் நியமனம் தொடர்பாகவோ மற்றும் அவரின் செயல்பாடுகள் தொடர்பாகவோ எவ்விதமான சீர்திருத்தத்திற்கும் சாத்தியம் இல்லை. என்ன செய்ய முடியும் என்றால் எதிர்க்கட்சி மாநில அரசாங்கங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக விழிப்புடன் இருந்திட வேண்டும். இத்துடன் மாநில சட்டமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் போன்றவற்றில், சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள விதிமுறைகளையும் வரம்புகளையும் ஆளுநர் மீறமுடியாத விதத்தில் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.   

பிப்ரவரி 23, 2022, 
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி