Monday, February 2, 2015

ஒபாமாவின் இந்தியப் பயணம்: `அமெரிக்காவில் உற்பத்தி செய்தவற்றை’ இந்தியாவிற்குள் விற்பதில் வெற்றி

இந்தியாவின் 66ஆவது குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இப்போதைய மோடி அரசாங்கத்தின் அடிமை புத்தியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மிகவும் தள்ளாடித் தடுமாறிக் கொண்டி ருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்திட, இந்தியாவிலிருந்து என்னவெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பினாரோ அவை அனைத்தையுமே பெற்றுவிட்டார். 2008ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து, உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து அமெரிக்கா இன்னமும் முழுமையாக மீளவில்லை. அமெரிக்கப் பொருளாதாரம் இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவும் விதத்தில், இந்தியாவின் சந்தை களையும், அதன் வளங்களையும்  தங்கள் கொள்ளை லாப வேட்டைக்கு  அமெரிக்கா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, மோடி அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஒபாமா மேலும்உலக மேலாதிக்கத் திற்காக, தங்களுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல, இந்தியாவைத் தங்கள் கட்டளை களுக்கு அடிபணிந்து நடந்திடும் ஒரு கூட்டாளியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக, சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, தெற் காசிய பிராந்தியத்திலும், பசிபிக் கடல் மார்க்கத்திலும் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கக்கூடிய விதத்தில் முயற்சி களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். இந்த அடிப்படையில், ஒபாமா, தன்னு டைய நீண்டநாள் கூட்டாளியாக இருந்து மறைந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணத்திற்கு துக்கம் விசாரிப்பதற்காக தில்லியிலிருந்து, சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு, அமெரிக்கா மட்டுமே இந்தியாவின் மிகச்சிறந்த பங்காளியாக’’ இருக்க முடியும்  என்று கூறிச் சென்றிருக்கிறார். 
ஆயினும், ஒபாமா இந்தியாவைவிட்டுப் புறப்படுவதற்குமுன், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்திற்கு மிகவும் வலுவான முறையில் ஒரு குட்டு குட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். தில்லி யில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் அமெரிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில்”, ஒபாமா பேசுகையில், “மத அடிப்படையில் பிளவுபடாது இருக்கும்வரைதான் இந்தியா வெற்றிபெறும்,’’ என்று குறிப்பிட்டார்.  மோடி அரசாங்கத்தின் கீழ் மத சகிப்பின்மையும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளதை ஒபாமா மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டதுடன், தன்னுடைய தாயகத்திற்குத் திரும்புவதற்கு முன், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, மார்ட்டின்லூதர் கிங் ஜூனியர் ஆகியோரையும் குறிப்பிட்டு, இந்தியாவின் பலம், அமெரிக்காவைப் போலவே, பல்வேறு வேற்றுமைகளையும் கொண்டாடுவதில் தான் இருக்கிறதேயொழிய, பரஸ்பரம் சகிப் பின்மையை ஊட்டி வளர்ப்பதில் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இந்திய அரசமைப் புச் சட்டத்தின் 25ஆவது பிரிவையும் நினைவுகூர்ந்து, இந்தியர்கள் அனைவருக்கும் தங்கள் மதம் குறித்து உரிமை கொண்டாடவோ, நடைமுறைப்படுத் தவோ, பிரச்சாரம் செய்திடவோ உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தினார். அவர் மேலும், நம் இரு நாடுகளிலுமே மத சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு, ஒவ்வொரு நபரின் பொறுப்புமாகும்என்றும் கூறினார். கூட்டத்தினரிடையே அவர் அமெரிக்காவில் அனைத்து இனத்தினருக்கும் இடையே சமத்துவம் மலர்ந்திட நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்களை நினைவுபடுத்திய தோடு, அமெரிக்காவில் அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் வாக்குரிமை மற்றும் தேர்தலில் பங்குபெறும் உரிமையையும் தான் பிறந்ததற்குப் பிறகு ஓராண்டு கழித்துப் பெற்றதை யும் நினைவு படுத்தினார். அவ்வாறு உரிமையை நாங்கள் பெற்றிருக்காவிட்டால், அமெரிக்க ஜனாதிபதியாக நான் இன்றைய தினம் இருக்க முடியாதுஎன்றும் தெரிவித்தார்.
ஆயினும், அவர் தங்கள் ராணுவத் தலையீடுகளின் மூலமாக பல நாடுகளின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடாவடித்தனமாக மீறியதையோ, உலகம் முழுதும் பல நாடுகளில் அடிப்படை மனித உரிமைகளை மீறி எப்படி அரச பயங்கரவாதத்தைதிட்டமிட்ட முறையில் ஊட்டி வளர்த்தோம் என்பது குறித்தோ எதுவும் கூறாது மவுனமாக இருந்துவிட்டார். அமெரிக்காவின் அரச பயங்கரவாதம்தான் `தனிநபர் பயங்கர வாதத்தைமிகவும் அரக்கத்தனமான முறையில் ஊட்டி வளர்த்து செயல்பட வைத்தது,
அமெரிக்க ஜனாதிபதி இந்த மோடி அரசாங்கத்திடமிருந்து இந்தியச் சந்தைகளில் அமெரிக்க அணு உலைகளை விற்பதற்கும், அமெரிக்க ராணுவத் தளவாடங்களை மிகப் பெரிய அளவில் வாங்குவதற்கும், புதிய பசுமைப் பருவநிலைத் தொழில் நுட்பங்களை  விற்பதற்கும் பல்வேறு ஒப்பந்தங்களை பலவந்தமாய்ப் பறித்தெடுத்துக் கொண்டுவிட்டார். மேலும் கூடுதலாக, பிரதமர் மோடி, அறிவுச் சொத்துரிமை தொடர்பான இந்திய - அமெரிக்க  குழுவினரின் அனைத்து பரிந்துரை களையும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார். இதன் பொருள், நாட்டில் பல அத்தியாவசியப் பொருள்கள், அதிலும் குறிப்பாக பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் அவசியமான மருந்துகள், இனி அநியாய விலையுள்ளதாக மாறிவிடும் என்பதும், அதன் மூலம் நாட்டு மக்களில் பெரும்பான்மை யோருக்கு அடிப்படை சுகாதார உரிமை மறுக்கப்படும் என்பதுமேயாகும்.
அதுமட்டுமல்ல, ஒபாமா-மோடி இடையே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் புளகாங்கிதத்துடன் தெரிவித்துள்ளன. ஒபாமாவும் பிரதமர் மோடியும் கூட்டாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, ராணுவம் சாரா அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் நிலவிவந்த முட்டுக்கட்டை நீங்கி விட்டதாகத் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந் தத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளின் காரணமாக ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவினை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படும் ஆழமான பாதிப்புகளை அடிப்படையாக வைத்துத்தான், இவை இந்தியாவின் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடுகளை அமெரிக்காவின் அனைத்து கட்டளைகளுக்கும் அடிபணிந்து வளைந்து கொடுத்துப் போகக்கூடிய இளைய பங்காளியாக மாற்றுவ தற்கு இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கக்கூடியவைகளாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை அமெரிக்க நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்குத் திறந்து விடக்கூடிய விதத்தில் இந்தியாவை நிர்ப்பந்திக்கக்கூடியதாகும், மேலும் இந்தியாவை அமெரிக்காவின் ராணுவ மற்றும் கேந்திர வலைப்பின்னலுக்குள் ஈர்த்து, அதன் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் கூட்டாளி யாக மாற்றுவதற்கும் இட்டுச் செல்லக்கூடியதாகும். தற்போது ஒபாமா விஜயத் தின்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள் இவ்வாறு நாம் ஊகித்த அனைத்து ஆழமான எதிர்மறை விளைவுகளையும் உறுதி செய்திருக் கின்றன.  இவை, நாட்டின் பொருளாதார சுயச்சார்பை எய்திட நாம் மேற்கொண்டு வந்த அனைத்து முயற்சிகளுக்கும், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுடனும் நாம் இதுநாள்வரை பின்பற்றி வந்த பரஸ்பர அன்பு மற்றும் மரியாதைக்கும் எதிரானவைகளாகும். ஐமுகூ-1 மற்றும் 2 அரசாங்கங்கள் ஆட்சி புரிந்த சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்திட்ட பாஜக இப்போது மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்தபின் முன்னிலும் பன்மடங்கு வேகமாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்திருப்பது துரதிர்ஷ்ட வசமானதாகும்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்புச் சட்டமுன்வடிவில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மூன்று முக்கியமான அம்சங்கள் குறித்து சச்சரவுகள்  இருந்தன. முதலாவது பிரச்சனை, அணு உலைகளில் துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்புகளில் அணு உலைகளை விநியோகம் செய்த அமெரிக்க நிறுவனத்தையும் இணைப்பதாகும். இந்தப் பிரச்சனையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டத் தில்இடதுசாரிக் கட்சிகளுடன் பாஜகவும் இணைந்து நின்றது. இப்போராட்டத்தின் விளைவாக மன்மோகன் சிங் அரசாங்கம் மேற்படி சட்டமுன்வடிவில் 17(பி) என்னும் பிரிவினை இணைத்தது. இதன் மூலம் அவ்வாறு துரதிர்ஷ்டவசமாக அணு உலை விபத்து ஏற்படின் அதனை விநியோகித் தவர்களுக்கும் பொறுப்பு நிச்சயிக்கப்பட்டது.  இதனை பெரிய அளவில் இயங்கும் அமெரிக்க நிறுவ னங்கள் ஏற்க மறுத்தன.  உற்பத்தி செய்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும்கூட, ஏற்க முடியாது என்றும், இவற்றை இயக்குபவர்தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இயக்குபவர் என்பதன் பொருள் இந்தியாவின் தரப்பில் மத்திய அரசுதான், அதன்கீழ் இயங்கும் அணுஎரிசக்தித் துறைதான் முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பதேயாகும். இது குறித்து மேற்படி சட்டத்தின் 6ஆவது பிரிவில் விவரமாகக் குறிப்பிட்டிருப்பதுடன்உச்சபட்ச வரம்பு 1500 கோடி ரூபாய் என்றும் நிர்ணயம் செய்திருக்கிறது.
இரண்டாவது பிரச்சனை, இந்தியாவிற்கு அளித்திடும் அணுசக்தி உபகர ணங்கள் அனைத்தையும் நம் நாட்டிற்குள் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்காக துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கிறதா என்பதை உத்தரவாதம் செய்வதற்காக கண்காணிக்கும் வேலையையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி, வலியு றுத்தி வந்தது. இப்போது, அமெரிக்க சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆய்வுகள் போதுமானவை என்று ஏற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
மூன்றாவது பிரச்சனை, 46ஆவது பிரிவு சம்பந்தப்பட்டதாகும். இச்சட்டப் பிரிவு, அணு விபத்து ஏற்படின், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக வழக்கு தொடுப்பதற்கான உரிமையை அளிக்கிறது.   அணு விபத்தில் பாதிக்கப்படு பவர்கள், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எதையும் எடுக்கமாட்டார்கள் என்று இந்தியா வின் அட்டர்னி ஜெனரல் ஓர் உறுதி மொழியை அளிப்பார் என்று இந்தியாவின் சார்பாக அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. சட்டத்தின்கீழ் நிச்சயமாக இது நிலைக்கத்தக்கதல்ல. இந்த உறுதிமொழி எப்படி காரிய சாத்தியமாகும் என்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே நீடிக்கிறது.
தற்போது இரு அரசுகளுக்கும் இடை யேயான நன்னிலை உணர்வு எப்படி இருந்தபோதிலும், ஒபாமா - மோடி கூட்டு அறிக்கையில், “பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்; அனைவ ருக்கும் முன்னேற்றமே’’ என்று தெரிவித்திருப்பதுடன், ராணுவம் சாரா அணுசக்தி ஒப்பந்தம் குறித்து, அறிக்கையின் இறுதியில் ஒரு சிறிய பத்தி மட்டுமே (பத்தி 43) காணப்படுகிறது. அதில், “இருநாடுகளின் ராணுவம் சாரா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, 2014 செப்டம்பரில் அமைக்கப்பட்ட இரு நாடுகளின் தொடர்புக்குழு டிசம்பரிலும், ஜனவரியிலும் மூன்று முறை கூடின. ராணுவம்சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக, ராணுவம் சாரா அணுசக்தி பொறுப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்த பிரச்சனைகள் மீது தொடர்புக் குழுவினரின் புரிந்துணர்வுகளை தலைவர்கள் வரவேற்றுள்ளார்கள்.  இந்தியாவில் அணுஎரிசக்தி பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் உருவாக் கப்பட்ட அணு உலைகளின் பங்களிப்பு மிகவிரைவில் மிகவும் மகிழ்வுடன் எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதற்குமேல் எவ்வித விவரங்களும் இல்லை.
ராணுவம்சாரா அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான சட்டமுன்வடிவு 2010இல் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் அமெரிக்காவின் பொறுப்பு குறித்து சேர்க்க வேண்டும் என்று இடதுசாரிகள் முன்மொழிந்த திருத்தத்தை அப்போதைய பாஜக முழுமையாக ஆதரித்தது. மக்களவையில், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, இன்றைய அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர், இப்பிரச்சனை மீது மன்மோகன்சிங் அரசாங்கத்தைக் கடுமையாகக் குறை கூறினார். பிரதமர் தன் சொந்த கவுரவத்திற்காக நாட்டின் இறையாண்மைக்கு இரண்டகம் செய்துவிட்டார்,’’ என்று குறிப்பிட்டார். அதேபோன்று, அப்போது மாநிலங்களவையில் பாஜகவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், இன்றைய நிதியமைச்சரும், (அவர் ஒரு வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது) இந்தச் சட்டமுன்வடிவின் 46ஆவது பிரிவு விபத்தில் பாதிக்கப்படும் நபர் பெரிய அளவில் இழப்பீடு கோரி நீதிமன்றங்களை அணுகுவதற்கு வகை செய்கிறது’’ என்று அழுத்தமாகக் கூறினார். இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் இதனை எவரும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.  மோடி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், 2014 செப்டம்பர் 8 அன்று அயல்துறை விவகாரங்களுக்கான அமைச்சர், “போபால் துயரம் போன்று அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால்தான் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில் அவற்றை விநியோகிப்பவர்களுக்குப் பொறுப்பு ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனைத் திருத்தி சட்டமுன்வடிவு எதனையும் நாங்கள் நிறைவேற்ற மாட்டோம்.  ... அதிபர் ஒபாமா முன்னிலையில் எங்கள் நிலையை நாங்கள் மீளவும் வலியுறுத்துவோம் என்றே நான் நினைக்கிறேன். இந்தத் தடவை ஒரு வலுவான அரசாங்கம் ஒபாமாவிடம் பேசிக்கொண்டு இருக்கும். அது அனைத்து வித்தியாசங்களையும் சரிசெய்திடும்,’’ என்றார்.  இவர் கூறிய இந்த வலுவான அரசாங்கம்’’தான் இப்போது அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
மோடி அரசாங்கம், அமெரிக்கா உற்பத்தி செய்த அணுஉலைகளின் காரணமாக விபத்த ஏற்பட்டால், அதன் பொறுப்புகளிலிருந்து அமெரிக்கா தப்பித்துக் கொள்வதற்குத் தேவையான சூழ்ச்சி நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துவிட்டதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏதேனும் விபத்து ஏற்படின் அதற்கான பொறுப்புகளை இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 750 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்திலும், அரசாங்கத்தின் பொறுப்புகள் 1500 கோடி ரூபாய் வரைக்கும் நீட்டிக்கக்கூடிய விதத்திலும் சட்டத்தின் 17(பி) பிரிவு மாற்றியமைக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இதற்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகைகளைக்கூட இந்தியாவே அளித்திட இருக்கிறது. இதன் பொருள் என்ன? ஏற்கனவே இச்சட்டத்தின்படி இழப்பீட்டிற்கான உச்சவரம்புத் தொகை 1500 கோடி ரூபாய் என்றும் அதனை அணுஉலைகளை இயக்குபவர் -  அதாவது இந்திய அரசு - ஏற்க வேண்டும் என்றும் இருந்ததுஅமெரிக்கா அளித்திட்ட உபகரணங்கள்தான் விபத்திற்குக் காரணம் எனில், பின் இந்த இன்சூரன்ஸ் பாலிசிக்கான உச்சவரம்பை  மேலும் 1500 கோடி ரூபாய்க்கு உயர்த்துவதற்கு வகைசெய்யப்பட்டிருக்கிறது.  இவ்வாறு விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முழுப் பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கும், மக்களின் வரிப்பணத்தால் இயங்கி வருகின்ற இந்தியாவில் உள்ள பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குமே பொறுப்பு என்கிற முறையில் அனைத்தும் மாற்றப்பட்டுவிட்டன.  அமெரிக்க கார்ப்பரேட்டுகள் அனைத்துவிதமான பொறுப்பு களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.  விபத்து, அமெரிக்கா அளித்த குறைபாடுகளுடன் கூடியதான அணுஉலைகளால்தான் ஏற்பட்டது என்றாலும்கூட இனி அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது.
இவ்வாறு, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது’’ என்பதன் பொருள் இந்தியா, அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டது என்பதேயாகும்.  1979இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு விபத்து (three-mile island accident)க்குப் பின்னர் அமெரிக்காஅணு உலைகள் எதற்கும் ஆர்டர்கள் தராததன் காரணமாக தவித்துக் கொண்டிருந்த ஜிஇ-ஹிடாச்சி, வெஸ்டிங்ஹவுஸ் (GE-Hitachi, Westinghouse) போன்ற அமெரிக்க கார்ப்பரேட்டுகள் இப்போதைய ஏற்பாட்டை’’ நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். உலகப் பொருளாதார நெருக்கடி தொடர்வதன் மத்தியில்இந்திய அரசு மற்றும் இந்திய மக்களின் வரிப் பணத்தின் மூலமாக, அமெரிக்கா  தன் பொருளாதாரத்தை மீட்டுக் கொள்வதற்கும் இது உதவும்.
இந்தியா, “தூய்மையான எரிசக்தி’’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற பெயரில் இத்தகைய மோசமான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான சாக்குப் போக்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கூட்டு ஊடகவியலாளர் கூட்டத்தின்போது ஒரு செய்தியாளர், “பருவநிலை மாற்றம் (climate change) குறித்து அமெரிக்கா-சீனா ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், அதேபோன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியாவும் மேற்கொள்ளவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா,’’ என்று கேட்டபோது, பிரதமர் மோடி, அமெரிக்காவிடமிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ எவ்விதமான நிர்ப்பந்தமும் இல்லை என்றும், மாறாக தூய்மையான எரிசக்தியை நோக்கி முன்னேற வேண்டும் என்று இந்தியாவின் எதிர்கால சந்ததியினரிடமிருந்துதான் நிர்ப்பந்தம் வந்திருக்கிறது என்றும் பதிலளித்திருக்கிறார்.  அமெரிக்கா-சீனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா   2030ஆம் ஆண்டு வாக்கில் தலைக்கு 12 டன்கள் கார்பன் உமிழப்படுவதை (carbon emission) குறைத்துக்கொள்வதாக (தற்போது அது தலைக்கு 16.4 டன்கள் என்ற அளவில் இருந்துவருகிறது) ஒப்புக்கொண்டுள்ள அதே சமயத்தில், சீனா தற்போதுள்ள தலைக்கு 7.1 என்றிருப்பதை 12க்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோன்று எந்தவொரு உறுதிமொழியையும் அமெரிக்காவிடமிருந்து பெறாமல், கார்பன் உமிழ்தலைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்கா பிறப்பித்துள்ள கட்டளையை இந்தியா அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது. உண்மையில் உலக அளவில் மொத்தம் உமிழப்படும் கார்பனில் நம் நாட்டில் உமிழப்படுவது வெறும் 2.2 சதவீதம்தான். ஆனால் அதேசமயத்தில் அமெரிக்காவில் இது 29.3 சதவீதமாகும்.  இவ்வாறு ஒப்புக் கொண்டிருப்பதற்காக, இந்தியா அமெரிக்க நிறுவனங் களிடமிருந்து மிகவும் அதிக விலை கொடுத்து `பசுமைத் தொழில்நுட்பங்களையும் (`green technologies’) வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு செய்வதன்மூலமும் அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி பெற இந்தியா உதவி இருக்கிறது.
கார்பன் உமிழ்தல் தொடர்பாக ஒருதலைப்பட்சமாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளபோதிலும், அணுசக்தியைப் பொறுத்தவரை இந்தியா, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கும் அணு உலைகள்  இன்றையதினம் உலகில் எந்த நாட்டிலும் உபயோகப் படுத்தப்படவில்லை. எனவே, அவற்றின் நம்பகத்தன்மை குறித்தும், அவற்றினால் இழப்பு ஏற்படக்கூடிய நிலை குறித்தும் மதிப்பீடு செய்திட சாத்தியக்கூறுகளே  இல்லை.   மேலும் அமெரிக்க அணுஉலைகளால்  ஒரு மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான செலவுத்தொகை சுமார் 20 முதல் 25 கோடி ரூபாய்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய கார்பன் உமிழ்தல் வரையறைத் தொழில்நுட்பங்களுடன் கூடிய அனல் மின் திட்டங்கள் (thermal power projects with the latest carbon emission limiting technologies)மூலம் இதற்கான செலவுத் தொகை வெறும் 5 முதல் 7 கோடி ரூபாய்கள் மட்டுமேயாகும்.  நம்முடைய வாய்ப்பு வளங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்தினோமானால் அனல் மின்திட்டங்கள் மூலம் மின் உற்பத்தியை மேலும் குறைந்தசெலவில் நம்மால் செய்திட முடியும். தூய்மையான எரிசக்தி’’க்காக கூடுதல் செலவு செய்ய மோடி அரசாங்கம் விரும்பியபோதிலும், அந்நிய அணு உலைகளை நாம் வாங்க வேண்டியது தேவையா?
அணு சக்தி முறைப்படுத்தல் வாரியத்தின் (Atomic Energy Regulation Board) முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன், 700 மெகா வாட் அழுத்தம் அளிக்கப்பட்ட கனநீர் உலைகள் (700 ஆறு pressurised heavy water reactors)  நாம் உருவாக்கி இருக்கிறோம் என்றும், அவற்றை 900 முதல் 1000 மெகா வாட் அளவிற்கு விரிவாக்கிட முடியும் என்றும் இவற்றின் செலவு இறக்குமதி செய்யப்படும் உலைகளை விட 30 - 50 சதவீதம் வரைக்கும் குறையும் என்றும் வாதிடுகிறார்.  இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட,’’ (“Made in India”) பொருள்களை வாங்கி ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இதனை நம் செலவில், நம் வரிப்பணத்தின் மூலம்நம் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்பதற்காகசெய்து கொண்டிருக்கிறது.  
மேலும், நம் நாட்டிலேயே அணுசக்தி தொழில்நுட்பங்களை மிகப் பெரிய அளவிற்கு வளர்த்து முன்னெடுத்துச் செல்ல முடியும், மிக அதிக விலை கொடுத்து தோரியம் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, நம் நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கையான யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலமும்செலவிடப்பட்ட எரிபொருள்களிலிருந்து புளுடோனியம் வடித்தெடுத்தல் மூலமும் மீளவும் பயன்படுத்தி, இதனைச் செய்திட முடியும்.  இ.என்.ஆர். (ENR) என்று அழைக்கப்படும் இத்தகைய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் பயன்படுத்துவது சாத்தியமே. அணு ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடுகள் இந்தியாவை ஒதுக்கி வைத்திருந்ததிலிருந்து ஒரு முறிவினை ஏற்படுத்திக் கொண்டு நாம் இதில் முன்னேற முடியும். (2008 செப்டம்பரில்) நாடாளுமன்றத்தில்  பிரதமர் மன்மோகன் சிங் இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போது நமக்குக் கிடைப்பதற்கான உறுதிமொழியை அளித்தார். ஆயினும், அதனைத்தொடர்ந்து இரு மாதத்திற்குள், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் காரணமாக, அணு விநியோகக் குழு (Nuclear Suppliers Group) இ.என்.ஆர். தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குக் கிடைக்கமுடியாதபடி தங்களுடைய விதிகளை மாற்றியமைத்துக்கொண்டு விட்டது. இதுதான் அமெரிக்காவின் இழி நடைமுறையாகும்.
அதிபர் ஒபாமா இந்தியாவிற்குக் கடன்கள் மற்றும் முதலீடுகள் என்ற பெயரில்  4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாகத்தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவரைப் பாராட்டி, பாராட்டுப்பத்திரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை கவனத்திற்கொள்ளாத பல துறைகளிலும்’’ வர்த்தகத்தைப் பெருக்கிட முடியும் என்றும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.   இந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எதற்காக அவர் கொடுக்கிறார் என்பதைச் சற்றே நுணுகி ஆராய்வோம். அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க உற்பத்திப்பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிதி உதவி அளித்திடும். அமெரிக்க ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் இந்தியக் கிராமப்புறங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்கும்.  அமெரிக்க வர்த்தக மற்றும் வளர்ச்சி ஏஜன்சி (US Trade and Development Agency)  மரபுசாரா எரிசக்தித்துறையில் இந்தியா புதிய அமெரிக்கத் தொழில்நுட்பங்களை வாங்குவதற்காக 2 பில்லியன் டாலர்கள் அளித்திடும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், இந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர்களும் இந்தியாவிற்குள் அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான ஓர் ஏற்பாடுதான்.  
இவ்வாறு, அணுசக்தி, பருவநிலை  தொழில்நுட்பங்கள் மற்றும் ராணுவம் சம்பந்தமான உற்பத்தி (இதற்காக அடுத்து பத்தாண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கிறது) ஆகியவற்றில் இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் நுழைவதற்கு பிரதமர் மோடி மிக விரிவான அளவில் வசதி செய்து கொடுத்திருக்கிறார். இதன் மூலமாக நலிவடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரம் அதிலிருந்து மீள்வதற்குப் பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார். மேலும் கூடுதலாக, தெற்காசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியங்களில் அமெரிக்கா  மேற்கொள்ளும் அனைத்து ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளிலும் அமெரிக்காவின்  கட்டளைகள் அனைத்தையும் தலையாட்டி ஏற்றுக்கொள்ளக்கூடிய   இளைய பங்காளியாகவும் இந்தியாவை மாற்றி இருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்தியாவில் உற்பத்தி (செய்தது) செய்க’’ என்னும் கோஷம் இவ்வாறு நாட்டு மக்களைத் திசைதிருப்பும் வேலையேயாகும். எதார்த்தத்தில், இது அமெரிக்காவில் உற்பத்தி செய்த’’ பொருள்களை விற்பதற்கான ஒன்றேயாகும். இத்தகைய பிரச்சாரங்கள் இந்த மோடி அரசாங்கத்தின் அபிலாசைகளை மூடிமறைத்து, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைக்கூட்டாளியாக மாற்றுவதற்கான முகமூடியே யாகும்.
(ஜனவரி 28, 2015)
தமிழில்: ச.வீரமணி


Tuesday, January 27, 2015

பராக் ஒபாமாவுக்கு பந்தி வைக்கும் மோடி அரசு!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, 2015 குடியரசு தின அணிவகுப்பிற்கு, தலைமை விருந்தினராக வருவதை யொட்டி, ஏராளமான விஷயங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுக் கொண்டிருக் கின்றன. நாடு சுதந்திரம் அடைந்தபின், இந்தியக் குடியரசுத் தலைவர், `முப் படைகளின் தலைவர்என்ற முறையில்  ஆயுதப்படையினரின் அணிவகுப்பு மரியாதை’’யை ஏற்றுக்கொள்ளக்கூடிய சமயத்தில்அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்பது இதுவே முதல்முறை. 
முப்படைகளின் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பது என்பது, ராணுவத்தினரின் பேச்சுவழக்கில் சொல்வதெனில், “யுத்த பாணி’’யாகும். முப்படைகளின் தலைவர், முப்படைகளின் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பை’’ பெற்றுக்கொள்ளும் வரை  முப்படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள். எனவே, குடியரசு தின அணிவகுப்பு முடிந்தவுடனேயே, இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக, “பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பும்’’ நடைபெறும்.  மோடி அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை அழைத்திருப்பது, இந்தியா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் `அடிமைக் கூட்டாளியாக மாறியிருக்கிறது என்று, உலகிற்குத் தெரிவிக்கும் ஒரு வலுவான சமிக்ஞையாகும். இந்தியா இதுநாள்வரை பின்பற்றிவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையைப் புதைகுழிக்கு அனுப்பி வைப்பதற்கான வேலைகளில் அரசாங்கம் இறங்கிவிட்டது என்பதைக் காட்டும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். 
இந் தியா உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் உறவுகளை நட்புரீதியாக வளர்த்துக்கொள்ள வேண்டிய மற்றும் தொடரக்கூடிய அதே சமயத்தில், இந்தியாவின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதும் அதன் தேசிய நலன்களைத் தெளிவுபடுத்தக்கூடிய விதத்தில்தான் அமைந்து வந்திருக்கிறது. அதாவது, உலக வல்லரசு எதுவும் வளரும் நாடுகளை ஆதிக்கம் செலுத்த முடியாத விதத்தில் வளரும் நாடுகளுக்குத் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாகவே இதுநாள்வரை இருந்து வந்திருக்கிறது. கடந்த காலங்களில், அடிக்கடி, தேசியஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு தார்மீகரீதியாகவும் துணிந்தும் ஆதரவு அளிக்கக்கூடிய நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறது.
ஆயினும், இந்திய ஆளும் வர்க்கங்கள், நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தழுவத் தொடங்கிய பின்னர், இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதையாக மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான், இந்தியாவின் கொள்கைத் திசைவழி என்பது சர்வ தேச நிதி மூலதனத்திற்கு, அவை கொள்ளைலாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரக் கூடிய விதத்தில்வாய்ப்புகள் அளிப்பது என்பது மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதுமட்டுமல்லாது, மோடி பிரதமராவதற்கான பிரச்சாரத்திற்காக மிகவும் தாராளமாக நன்கொடைகள்’’ தானம் செய்திட்ட இந்திய கார்ப்பரேட்டுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக இருந்து கொள்ளை லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இத்தகைய சூழலில் 2016-17ஆம்ஆண்டில் சீனாவின் வளர்ச்சிவிகிதத்தை விட இந்தியா முன்னேறி விடும் என்று இப்போது மிகவும் ஊக்கத்துடன் கூறப்பட்டு வருகிறது.  நம்முடைய பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் முன்னறிவிப்புகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்குது’’ என்ற முறையில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சர்வதேச ஏஜன்சிகள், 2016-17ஆம் ஆண்டில், இந்தியா (6.5 சதவீதம்), சீனத் தின் வளர்ச்சி விகிதத்தை (6.3 சதவீதத்தை) தாண்டிவிடும் என்று சித்தரித்து வருகின்றன.  மோடி அரசாங்கத்தால், “எல்லாம் நன்றாகவே நடக்கிறது’’ என்கிற இந்தப் புதிய முழக்கம் மிகவும் நன்றாகவே சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.
உண்மை நிலவரம் காட்டாத வளர்ச்சி
சில உண்மைகளை மீண்டும் நினைவு கூர்தல் அவசியம். 1978இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு140 பில்லியன் டாலர்களாகும். அப்போது சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 148 பில்லியன் டாலர்களாக இருந்தது. நாம் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைப் பின்பற்றத் துவங்கியதற்குப்பிறகு, 1990களில் துவக்கத்தில் இந்தியா மற்றும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முறையே 327 பில்லியன் டாலர்கள் மற்றும் 357 பில்லியன் டாலர்களாகும். ஆயினும், 2014ஆம் ஆண்டுவாக்கில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.36 டிரில்லியன் டாலர்கள் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.05 டிரில்லியன் டாலர்களாகும்.
ஒவ்வொரு நபருக்குமான மொத்த உள் நாட்டு உற்பத்தி என்று பார்த்தாலும் சீனா வில்தான் அதிகம். உலகப் பொருளாதார நிலையில் சீனாவின் 12 சதவீதப் பங்கினைவிட 2 சதவீதம் கூடுதலாகவே இந்தியாவின் பொருளாதார நிலை இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. எனவே, வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம், அது உண்மையாகவே இருந்தாலும்கூட, உண்மையான நிலவரத்தை அது காட்டாது. (சர்வதேச நிதி நிறுவனமும், உலக வங்கியும் பங்குச்சந்தை வணிகத்தில் செயற்கையாக உயர்வினைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், “எல்லாம் நன்றாகவே நடைபெறுகிறது’’ என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடும் என்பது உலகம் நன்குஅறிந்த ஒன்றேயாகும்.). மக்கள் மத்தியில் மாயைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே, “இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது,’’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்டு வரு கிறது. சீனப் பொருளாதாரம் தற்போது மந்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது உண்மை என்ற போதிலும், கடந்த முப்பதாண்டு காலமாக, தொடர்ந்து அது ஆண்டு வளர்ச்சி விகிதத்தைச் சுமார் 10 சதவீதமாகவே நிலைநிறுத்தி வந்திருக்கிறது. இது பலரும் எதிர்பார்த்திராத ஒன்றாகும். உலக முதலாளித்துவத்தின் வரலாற்றில் இதுபோன்று முன்னெப்போதுமே நடந்ததில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளேடு இது தொடர்பாக எழுதியுள்ள தலையங்கத்தில், “சீனப் பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இது தவிர்க்கமுடியாத புள்ளிவிவரத்தின் ஒரு பகுதி யேயாகும். கடந்த முப்பதாண்டுகளாக அதன் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 9 - 10 சதவீதமாக இருந்திருக்கிறது.  அதுஒரு குறிப்பிட்ட சமயத்தில் 6 - 7 சதவீத மாக அல்லது அதற்கும் கீழ் வீழ்ச்சி அடைந் திருக்கிறது. சீனம் அந்தக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தெளிவு. மேலும் அது அதிகமான அளவில் புதிய உருக்கு ஆலைகள், அலுமினியத்தை உருக்கும் ஆலைகள் அல்லது விமானத் தளங்கள், விரைவுப்பாதைகள் மற்றும் அதிவேக ரயில் பாதைகள் கட்ட வேண்டிய அவ சியம் இல்லை. மாறாக, இந்தியாவிற்கு இவை அனைத்தும் இன்னமும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. (ஜனவரி 22, 2015)
முன்னறிகுறி தம்பட்டம்
மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக ஏற்றிக்கூறப்படும் கணக்கீடுகள் அனைத்தும் மக்களை மேலும் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, கார்ப்பரேட்டுகள் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேலும் பெரிய அளவில் உந்தித்தள்ளுவதற்கான முயற்சியேயாகும்.  தி இந்துஸ்தான் டைம்ஸ் தன் தலையங்கத் தில், மோடி அரசாங்கம் மிகவும் தெளிவான முறையில் கொள்கைக் கலவையை மேற்கொண்டிருக்கிறது,’’ என் றும், “இதற்கு இந்த ஆண்டு ஒரு படாடோபமான அணுகுமுறையுடன் கூடிய ஆண்டாக அமைந்திடும்,’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது (ஜனவரி 22, 2015). உலகஅளவில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து ஆறாவது ஆண்டும் நீடித்திருக்கக்கூடிய நிலையில், அமெரிக்க மூலதனமும், இந்திய கார்ப்பரேட்டுகளும் தங்கள் கொள்ளைலாப வேட்கையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளின் வெளிப்பாடுகளே இவைகளாகும். 
இதனை மனதில் கொண்டுதான், இந்தியா மேலும் பெரிய அளவில் சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், சர்வதேச நிதியமும், உலகவங்கியும் இவ்வாறான முன்னறிகுறிகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய முன்னறி குறிகளை அமல்படுத்துவதற்கான திறவுகோலாக’’ மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. உலகமும், குறிப்பாக அமெரிக்காவும், அடிப்படையில் இந்த நோக்கத்தோடுதான் இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. எனவேதான், இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தன்னுடன் அமெரிக்க வர்த்தகப் புள்ளிகளின் ஒரு மாபெரும் பட் டாளத்தையே அழைத்துக்கொண்டு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆகவே, இதில் அதிர்ச்சி அடைவதற்கு எதுவுமே இல்லை.
2008ல் உலக அளவில் பொருளா தார மந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகத் தொழில் உற்பத்தி வளர்ச்சி விகிதம்என்பது சராசரியாக 40  சதவீத அளவிற்கே இருந்து வருகிறது. பொருளா தார மந்தத்திற்கு முன்பு இதன் நீண்டகால சராசரி என்பது  60 சதவீத மாக இருந்து வந்தது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2012லும் 2013லும் கிட்டத்தட்ட 2.3 சதவீதமாகும். இதன் விளைவாக, உலகின் உண்மையான ஊதிய வளர்ச்சி (மக்களின் வாழ்க்கைத்தரம் இதனைக்கொண்டு தான் அளக்கப்படுகிறது) 2012இல் வெறும் 1.3 சதவீத அளவிற்கும், 2013இல் 1 சதவீத அளவிற்கும்தான் வளர்ந்தது. இவ்வாறாக வருமான ஏற்றத்தாழ்வு கூர்மையானது.  
மக்களை மேலும் சுரண்டுவதன் மூலமாக தங்கள் கொள்ளை லாப வேட்டையை இவ்வாறு உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதி மூலதனமும் உத்தரவாதம் செய்து கொண்டிருக்கின்றன.
பிரதான இலக்கு
எனவே, உலக முதலாளித்துவத்திற்கும், சர்வதேச நிதி மூலதனத்திற்கும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தங்கள் கொள்ளைலாப வேட்டைக்கான வாய்ப்புகள் சுருங்கிக்கொண்டிருப்பதன் காரணமாக, அவை புதிய வாய்ப்புவாசல்களை ஆராயத்தொடங்கி இருக்கின்றன. இவர்களின் பிரதான இலக்கு இந்தியாவாகும். துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு தாராளமாக தானம் செய்ததற்கு நன்றிதெரிவிக்கும் விதத்தில், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு முழுமையாக சரணடைவதுடன் மட்டுமல்லாது, அவர்கள் மக்களைக் கசக்கிப்பிழியக்கூடிய அத்தனை முயற்சிகளையும் அடிபணிந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறது.
  அமெரிக்க அதிபரின் வருகையைத் தொடர்ந்து, பெரிய அளவில் நவீன தாராளமயச் சீர் திருத்தங்கள் பின்தொடரும் என்பது தெளிவு. ஏற்கனவேஆட்சிபுரிந்த முதல் ஆறு மாத காலத்திலேயே, மோடிஅரசாங்கம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அரித்து வீழ்த்தக் கூடிய விதத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவசரச் சட்ட ஆட்சியை’’யே நிறுவனமயமாக்கிக் கொண்டிருக்கிறது.  தி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, இந்த ஆறு மாத காலத்தில், “சீர்திருத்தவாதத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சூறைக் காற்று’’ வீசியதாக  வர்ணித்திருக்கிறது. அது மேலும், “எரிபொருள்களின் விலைகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டன. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான நெறி முறைகள் தளர்த்தப்பட்டுவிட்டன, நம் பங்குச்சந்தை வணிகத்தில் மேலும்அதிக அளவில் பங்குகள் குவியக் கூடிய அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட விருக்கின்றன, ஒரு புதிய நிலக்கரி ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப் பட்டிருக்கிறது, மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஓர் ஒருங்கிணைக்கப்பெற்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரி குறித்த விவாதங்கள் கடைசி கட்டத் திற்கு வந்துள்ளன.
... இவ்வாறாக நல்லதொடக்கத்துடன் அரசாங்கம் தன் இலக்கை அடையும் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது’’ என்றும் குறிப்பிட் டிருக்கிறது. (ஜனவரி 22, 2015) அரசாங்கம் மேலும் பெரிய அளவில் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வந்திருப்பதன் காரணமாக, மக்கள் மீதான சுமைகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் முன் கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. 
இவர்களின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வலுவான போராட்டங்களை முன்னெடுத் துச் செல்வதன் மூலமாகத்தான், மோடிஅரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியை மாற்றி அமைத்திட முடியும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முடியும்.
(ஜனவரி 22, 2015)
தமிழில்: ச.வீரமணி