Sunday, June 7, 2009

இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்திய அரசு முக்கிய பங்காற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 7-

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சென்னையில் ஜூன் 5-6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் என். வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஆர். உமாநாத், டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஏ.கே. பத்மநாபன், ஜி. ராமகிருஷ்ணன், உ.வாசுகி, பாப்பா உமாநாத் மற்றும் மாநில செயற்குழு - மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீடித்து தொடர்ந்து நடந்த ஆயுத மோதலில், எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தை சார்ந்தவர்கள், அப்பாவித் தமிழ்மக்கள் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் துயரமான முடிவுக்கும் கடுமையான பாதிப்புகளுக்கும் உள்ளாக நேரிட்டுள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக சொல்லொணா துயர வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவது என்ற பெயரால் இலங்கை அரசு தொடுத்த தாக்குதலில் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடைசி கட்டத் தாக்குதலில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இத்தகைய மனித உரிமைகளை மீறியத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு, விசாரணைக்கும் உட்படுத்திட வேண்டும்.

ராணுவ நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாதிக்கப்பட் டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும், துயர் துடைப்பு மற்றும் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, இலங்கை அரசின் அவசர - அவசியக் கட மையாகும். மேலும், மோதலுக்கு காரணமான இனப்பிரச்னைக்கு அதிகார பகிர்வு, சுயாட்சி உரிமை அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை உடனடியாக துவக்குவதும் இலங்கை அரசின் கடமையா கும். இதனை முன்னிறுத்தி உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள இலங்கை அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு வலி யுறுத்துகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள, இலங்கையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை இலங்கை அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள் அமைதியாக வாழவும், அவர்களுக்கு புது வாழ்வு ஏற்படவும் உத்தரவாதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழ்மக்களின் கோரிக் கைகளை இலங்கை அரசு செவிமடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை கணக்கில் கொண்டு, சிங்கள மக்களுக்கு இணையாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக் கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்வது உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

நிவாரண முகாம்களில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு குடிநீர், உணவு, உடை, சுகாதாரம், மருத் துவம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலையும், காயமடைந்தோர், நோயுற்றோருக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு போதிய உணவும், தேவைப்படும் அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சையையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்தப்பணிகளை ஐ.நா. அமைப்பின் நேரடி கண்காணிப்புடன் செய்வதை உறுதிப்படுத்தப்படவேண்டும்.

தற்போது வீடுகளை, உடைமைகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழ்மக்களுக்கு மறு வாழ்வுக்கான நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் சொந்த வாழ்விடங்களிலேயே வீடுகள் கட்டித்தருவதோடு உடனடி வருமானத்திற்கான வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். விசாரணை யின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களமும், தமிழும் சம உரிமையுடன் உணர்வுப் பூர்வமாகவும், உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். இலங்கை அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள அரசுப் பணிகளில் தமிழ்மக்களுக்கு சம உரிமையும், உரிய பிரதிநிதித் துவமும் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நேர்மையான முறையில் அதிகாரப்பரவல் குறித்த செயல்திட்டத்தை அனைத்து தமிழர்கள் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமலாக்கிட வேண்டும்.

மேற்கண்ட வகையில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசும், இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும், தமிழ் மக்களின் தலைவர் களும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் சிங்கள - தமிழ் மக்களிடையே இணக்கமான இயல்பு வாழ்க்கைத் திரும்பிடும் வகையில் இலங்கைப் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழ் மக்கள் சம உரிமையுடன் அமைதியாக வாழவும் - அவர்களுக்கு புதுவாழ்வு ஏற்படவும் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் பங்காற்றிட வேண்டும். குறிப்பாக, இந்திய அரசு முக்கிய பங்காற்றிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது."

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் உரை:தின்பண்டத்தின் ருசி சாப்பிடும்போது தெரிந்துவிடும்




திர்பார்த்ததைப் போலவே, பதினைந்தாவது மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து, நடைபெற்றுள்ள நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர், ஐமுகூ அரசாங்கம் வரவிருக்கும் காலங்களில் செய்ய இருப்பதாகக் கூறியிருக்கும் படாடோபமான உறுதிமொழிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இப்போது கூறப்பட்டிருக்கும் திட்டங்களில் பல, முந்தைய அரசாங்கத்தால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டவைகள்தான். இப்போது ஆட்சிபீடத்தில் ஏறி இருக்கும் அரசாங்கம் சென்ற ஐந்தாண்டு காலத்தில் தாங்கள் கூறியிருந்த உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றைச் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்வது போலவே குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது. சென்ற அரசு டமாரம் அடித்துக்கொள்ளும் தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், பாரத் நிர்மான் போன்ற திட்டங்கள் தங்கள் இலக்கினை எய்திடவில்லை என்பதிலிருந்து இது உறுதிப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்பட வேண்டும். ஆனால் 48 நாட்கள்தான் வேலை அளிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் வேலைக்காகப் பதிவு செய்துள்ள 10 கோடி பேரில் சுமார் 50 சதவீதத்தினருக்குத்தான் வேலை அளித்திருக்கிறார்கள். அதேபோன்று, கிராமப்புறங்களுக்கு மின்சாரம் அளிப்பதற்கான இலக்கிலும் 27 சதவீத அளவிற்குத்தான் வேலைகள் நடந்திருக்கின்றன. விவசாயத் துறையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது தொடர்பாக குடியரசுத் தலைவர் பெரிய அளவிற்குப் பேசியிருக்கிறார். ஆயினும் பாசன விரிவாக்கத் திட்ட இலக்கில் 56 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் நம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று தொடர்ந்து அரசு கூறிவருகிறது. குடியரசுத் தலைவர் தன் உரையில், ‘‘உலகப் பொருளாதார மந்தத்தால் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் திருப்திகரமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு, நாம் இப்பகுதியில் பலமுறை சொல்லிவந்துள்ளபடி, முந்தைய அரசாங்கம் கட்டுப்பாடற்ற முறையில் நிதித் தாராளமய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தியதுதான் காரணமாகும். குறிப்பாக அரசு மேற்கொள்ளவிருந்த வங்கிச் சீர்திருத்தம், ‘‘ஓய்வூதியத் துறையைத் தனியாரிடம் தாரைவார்த்தல்’’ முதலானவற்றை இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தன. அவ்வாறு தடுக்காமல் விட்டிருந்தால் இன்றைய தினம் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் எதிர்கால வாழ்விற்காக சேமித்து வைத்திருந்த பணம் எல்லாம் காணாமல் போய் அவர்கள் வாழ்வே சூறையாடப்பட்டிருந்திருக்கும்.

குடியரசுத் தலைவர் தன் உரையில் அரசாங்கம் ‘‘சமூகத்தின் உள்ளீடான வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் உள்ளீடான வளர்ச்சி (“inclusive growth in society and inclusive growth in economy)’’ ஆகியவற்றில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இலக்கை அரசாங்கம் 2004இலேயே நிர்ணயித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் இதுதொடர்பாக அரசு கண்ட முன்னேற்றம் என்ன? உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவுகள் எத்தகைய பாதிப்புகளை நம்மீது சுமத்தியிருந்தாலும், அரசு கடைப்பிடித்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளானது இரு விதமான இந்தியர்களை உருவாக்கி இருக்கிறது என்பது உண்மை. ஒருசில ‘ஒளிர்கின்ற’ இந்தியர்களையும், (‘SHINING’ Indians) மீதம் கோடானுகோடி ‘உழல்கின்ற’ இந்தியர்களையும் (‘Suffering’ Indians) இது உருவாக்கி இருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீட்டின்படியே, நாட்டு மக்களில் 78 சதவீதத்தினர் நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான வருவாயிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதே சமயத்தில். நாட்டில் 36 ‘டாலர் பில்லியனர்கள்’ உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் சொத்து மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)யில் 25 சதவீதமாகும். ஒவ்வொரு நாளும் மருந்து இருந்தால் தடுக்கப்படக்கூடிய நீரினால் உண்டாகும் நோய்களுக்கு மருந்து உட்கொள்ளாமல் ஆயிரம் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டின் 56 சதவீதம் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசிகள் போடப்படுவதில்லை. 40 சதவீதக் குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. 70 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக ரத்தச்சோகையுடன் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் தேசிய குடும்ப சுகாதார சர்வேயிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். நம் நாட்டில் வாழும் மக்களில் 70 சதவீதத்தினருக்கு சுகாதாரமான கழிப்பிடங்கள் கிடையாது. மூன்றில் இரு பகுதியினருக்குக் சுத்தமான குடிதண்ணீர் கிடையாது. நம் நாட்டின் கர்ப்பிணிப் பெண்களில் மூன்றில் இரு பங்கினர் ரத்தச் சோகை நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவே நம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நிலை. வாய்ச்சொல் உறுதிமொழிகள் எதுவும் இத்தகைய மிக பரிதாபகரமான உண்மையான நாட்டின் நிலைமையை மாற்றிவிட முடியாது. மாறாக, இதற்கு பொது முதலீட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்துவது தேவை. ஆனால் இதனைச் செய்ய அரசு தயாராக இல்லை என்பதையே கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன.

ஆயினும், நிலைமையைச் சமாளிப்பதற்கு, வள ஆதாரங்களைப் பெருக்குவதற்கு என்ன செய்ய இருப்பதாக, குடியரசுத் தலைவர் அறிவித்திருக்கிறார்? பொதுத்துறை நிறுவனங்களை மிகப் பெரிய அளவிற்குத் தனியாரிடம் தாரைவார்க்கப் போகிறோம் என்று கூறியிருக்கிறார். ஆயினும் அரசாங்கத்தின் பங்குகள் 51 சதவீதத்திற்குக் குறையாமல் பார்த்துக் கொள்வார்களாம். கடந்த ஐந்தாண்டு காலமாக இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பினால் அரசாங்கத்தால் செய்ய முடியாது தடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் இப்போது முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. திவாலாகிப்போன ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் தேசியமயமாக்கி இருக்கும் தருணத்தில் இந்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது. வள ஆதாரங்களை உயர்த்த வேண்டியது அவசியம்தான். ஆனால் அதனை யாரால் அளித்திட முடியுமோ, அவர்களின் லாபத்திலிருந்து ஒரு பகுதியை நாட்டின் கட்டுமானப் பணிகளுக்காக வசூலித்திட வேண்டும். அதற்கு மாறாக, பொதுத்துறையைக் கொன்றழிப்பதன் மூலம் அதனைச் செய்திடக் கூடாது. ஐமுகூ அரசாங்கத்தின் முதல் நான்கு ஆண்டு காலத்தில், இந்தியாவில் உள்ள பத்து உயர் கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களின் மதிப்பை இரு மடங்குக்கும் மேலாக உயர்த்தியுள்ளன. இவை அரசாங்கத்திற்கு 33 சதவீதம் கார்பரேட் வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் ஒரு நிறுவனம் கூட அரசாங்கத்திற்கு இவ்வரியை செலுத்திட வில்லை. இவர்களில் இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும்தான் 30 சதவீதம் அளவைத் தாண்டியிருக்கிறது. மீதமுள்ளவைகளில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 20 சதவீத அளவைத் தாண்டியிருக்கிறது. மற்றவை எல்லாம் மிக மிகக் குறைவாகவே செலுத்தி இருக்கின்றன. இவ்வாறு வரி செலுத்தாமல் அனுமதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி, அவர்களிடமிருந்து வசூல் செய்து நாட்டின் வள ஆதாரங்களைப் பெருக்கிட வேண்டுமேயொழிய, நாட்டின் பொதுச் சொத்துக்களை அழித்திடக் கூடாது.

பொதுத்துறை-தனியார்துறை-கூட்டு (PPP-Public Private Partnership), நாட்டின் உள்கட்டமைப்பு வசதியை வளர்ப்பதற்கான ‘‘முக்கிய கூறு’’ என்று அறிவித்திருப்பன் மூலம் தனியார் தங்கள் சொத்துக்களையும் லாபத்தையும் அதிகரித்துக்கொள்ள வகை செய்திருப்பது, குடியரசுத் தலைவரின் உரையில் உள்ள மிக மோசமான பகுதியாகும். பொதுத்துறை-தனியார்துறை-கூட்டுத் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கக்கூடிய அதே சமயத்தில், அவை மக்கள் மத்தியில் பெரும் சுமையினை ஏற்றிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தனியார் விமானத் தளங்களில் வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரில் அவை அடிக்கும் கொள்ளையைக் குறிப்பிடலாம். இவ்வாறு, எதிர்காலம் மக்களுக்குத் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்றக்கூடிய அளவிற்கு வரும் என்றே தோன்றுகிறது.
(அமெரிக்க அதிபர் ஒபாமா சொல்லியிருப்பதுபோலவே,) குடியரசுத் தலைவர், அரசாங்கம் முதல் நூறு நாட்களில் அமல்படுத்த இருக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இதில் முதலாவது, நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் மகளிர்க்கான இடஒதுக்கீட்டுச் சட்டுமுன்வடிவினை அமல்படுத்துவதற்கான உறுதிமொழியாகும். குறைந்தபட்சம் இப்போதாவது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கிடப்பில் போடப்பட்டு வந்த இச்சட்டமுன்வடிவிற்கு விடிவுகாலம் ஏற்படும் என்று நம்புவோம்.

இந்தியாவின் அயல்துறைக் கொள்கை குறித்து குடியரசுத்தலைவர் உரையாற்றுகையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக நம் அண்டை நாடுகளுடன், நட்புறவுகள் பேணப்படும் என்று கூறியிருக்கிறார். இப்பிரிவில் குறிப்பிடத்தக்க முறையில் விடுபட்டுள்ள ஒரு வாசகம் என்னவெனில் அது ‘‘அணிசேரா இயக்கம்’’ (Non-aligned movement) என்பதாகும். உண்மையில், அவரது ஒருமணி நேர பேச்சில் அணிசேராமை என்ற சொல் ஓரிடத்தில் கூட வரவில்லை. இந்த அரசானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான தன் போர்த்தந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே விழைகிறது என்பது குடியரசுத் தலைவரின் உரை மூலமாக மேலும் தெளிவாகிறது.
படாடோபமான முறையில் திட்டங்களை அறிவிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் என்றைக்குமே சளைத்ததில்லை. அவற்றை எந்த அளவிற்கு அவை அமல்படுத்துகின்றன என்பதில்தான் அவற்றின் உண்மையான வர்க்க குணம் வெளிப்படும். ‘வறுமையே வெளியேறு’ என்று இந்திரா காந்தி முன்வைத்த முழக்கத்தை நினைவு கூறுங்கள். பிற்காலத்தில் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் மோசமாகியதை அடுத்து மக்கள், ‘‘வறுமையே வருக வருக’’ என்று கிண்டலடித்தைக் கண்டோம்.
வரவிருக்கும் காலம் நாட்டு மக்கள் தங்களையும் தங்கள் வேலையையும் கடுமையான போராட்டங்கள் மூலமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். உண்மையில், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் இப்போராட்டங்களுக்கு நம்மையும், நாட்டு மக்களையும் தயார் செய்திடுவதே இப்போது நம்முன் உள்ள வேலையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, June 6, 2009

குடியரசுத் தலைவர் உரை மீது சீத்தாராம் யெச்சூரி




புதுடில்லி, ஜூன் 6

நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அப்போது அவர் கூறியதாவது:
‘‘குடியரசுத் தலைவர் தன் உரையில் மேற்கு வங்கத்தில் ‘அயிலா’ புயலால் அங்குள்ள மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்புகள்
குறித்து குறிப்பிட்டிருக்கிறார். ‘மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் அரசாங்கம் அனைத்து உதவிகளையும் செய்திடும்’ என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 4ஆம் தேதிய விவரங்களின்படி அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 67.5 லட்சம். இறந்தோர் எண்ணிக்கை 137 ஆக உ யர்ந்துள்ளது. முழுவதும் மற்றும் பகுதி சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைத் தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பயிரின் அளவு 2.8 லட்சம் ஏக்கர்களைத் தாண்டும். பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பளவு 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். உண்மையில் இது ஒரு தேசியப் பேரிடராகும். தற்சமயம் 4.38 லட்சம் மக்கள் 782 நிவாரண முகாம்களில் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். 409 கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டுள்ளன. சேதத்தின் அளவு மற்றும் திடீரென்று இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளதைக் கணக்கில் கொண்டு மத்திய அரசு இதனை ஒரு தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு மாநில அரசுகளிடமிருந்து சர்சார்ஜ் வசூலிக்கும் பழக்கம் உண்டு. இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ள ராணுவ உதவிகளுக்கு அவ்வாறு சர்சார்ஜ் வசூலிப்பதையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக இப்பிரச்சனையை அரசியலாக்கும் போக்கு இருக்கிறது. மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஒருவரை சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக ஆளும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து இத்தாக்குதல் வந்துள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை அரசியலாக்குவதற்கு இது தருணம் அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் தேர்தல்கள் என்பது ஜனநாயகத் திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் தங்களை யார் ஆள வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திடும் விழா. ஆயினும் நாடு சுதந்திரம் அடைந்தபின் அமைந்த எந்த ஒரு அரசும், வாக்களித்த மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து ஆதரவினைப் பெற்றதாகக் கூற முடியாது. ஆம், ராஜிவ்காந்தி ஒருவர் மட்டுமே 48 சதவீத மக்களின் ஆதரவினைப் பெற்று பிரதமராக வந்தார். வேறெவரும் அந்த அளவிற்குக்கூட பெறவில்லை.
ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, பெரும்பான்மையோரின் ஆட்சி என்று நாம் கூறும்போது, இப்பிரச்சனையையும் நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து நீங்கள் ஆழமாகப் பரிசீலிக்க முன்வந்தீர்களானால், ஒரு பகுதி விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறைப்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அடுத்ததாக, நாம் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் நம் அரசியலமைப்புச் சட்டம். தற்போது நம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள், சட்டங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாம்,
மத்திய மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகளாகவும் செயல்படுகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் செயல்பட்டால்தான் சம்பந்தப்பட்ட அரசுகளின் மீது கண்காணிப்பினைச் செலுத்திட முடியும். சென்ற ஆண்டு நாடாளுமன்றம் வெறும் 46 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் என்ன கண்காணிப்பை அரசு மீது செலுத்திட முடியும்?
எனவே, குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். பல குழுக்கள், நாடாளுமன்றம் குறைந்தபட்சம் ஓராண்டில் 100 நாட்களாவது நடைபெற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால் இதனை இதுநாள்வரை அமல்படுத்தப்பட முடியவில்லை., எனவே மேலே கூறியவாறு ஓராண்டில் 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூடுவதைக் கட்டாயப்படுத்தக்கூடிய வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்ததாக, நீதித்துறை சீர்திருத்தம். இது இன்றைக்கு மிகவும் அவசியம். இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களிலும் 30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் 263 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 3 லட்சம் விசாரணைக்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாம் ஒரு ஜனநாயக அமைப்பைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
எனவே நிலைமையைச் சரிசெய்திட தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, குடியரசுத் தலைவர் அவர்கள் கல்வி குறித்தும் அதன் விரிவாக்கம் குறித்தும் அதன் தரம் குறித்தும் உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தரம், எண்ணிக்கை மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற முறையில் கூறியிருக்கிறார்கள். இதனை ஈடேற்ற வேண்டுமானால் அதற்கு வேண்டிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால் சென்ற முறை அரசு தான் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் உறுதிமொழி அளித்திருந்தபடி கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்திடவில்லை. அதேபோன்று இப்போதும் அரசு செய்திடக் கூடாது. குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதமும், பொது சுகாதாரத்திற்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)