Thursday, February 14, 2008

2008-09ஆம் ஆண்டு பட்ஜெட்: இப்போதாவது செயல்படுக




நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் பிப்ரவரி 25 அன்று தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தன்னுடைய முதல் உரையை நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஆற்ற இருக்கிறார்.
‘‘தன்னுடைய அரசாங்கம்’’ முன்னுரிமை அளித்துள்ள திட்டங்களின் மீது அவர் கவனம் செலுத்துவார் என்பதில் ஐயமேதுமில்லை. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் ‘‘ஆம் ஆத்மி’’ என்கிற ‘‘சாமானியர்கள்’’ சார்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சொல்லியிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும், அரசால் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை என்றாலும் இப்போதாவது நிறைவேற்றிட முன்வரும் என்று நாம் நம்புவோமாக. மேலும், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பு மற்றும் சுயேட்சையான அயல்துறைக் கொள்கை தொடர்பாக பரவலாக எழுந்துள்ள ஐயுறவுகளைக் களைந்திடவும் அரசின் சார்பில் அவர் முன்வருவார் என்றும் நாம் நம்புவோமாக.
எது எப்படி இருந்தபோதிலும், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றிட, ஐமுகூ அரசாங்கத்திற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும். ஐமுகூ அரசாங்கத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி பட்ஜெட்டாகும் இது.விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள துயாரார்ந்த விளைவுகளைச் சரி செய்திட தீவிரமான முறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். விவசாயத்துறையில் பொது முதலீட்டைக் கணிசமான அளவில் அதிகரிப்பதாக குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவிற்கு நடந்திடவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடராது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், கந்து வட்டிக்காரர்களின் வலையில் சிக்கி மீளமுடியாது மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அவர்களது வலைப்பின்னலிலிருந்து விடுவித்தாக வேண்டும். இதற்கு அரசு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடனுதவி அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது, விவசாயத் துறையில் அரசு நிதிநிறுவனங்கள் மூலமான நிதி உதவியினை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஆயினும், விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர், இன்னமும் கந்துவட்டிக்காரர்களின் வலையில்தான் சிக்கிக்கொண்டுள்ளனர் என்பதே நிதர்சன உண்மை. மேலும், விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினோம். அரசும் கடனுக்கான வட்டிவீதத்தை 11 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி அது 4 சதவீதமாகக் குறைக்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குப் பிரதான காரணம் அவர்கள் கடன் சுமைதான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு அரசின் நிதிநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூலமாகக் குறைந்த வட்டி வீதத்தில் கடன் உதவி அளிப்பது மிகவும் முனைப்பான முறையில் அதிகரிக்கப்படாவிட்டால், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமே இல்லை. இதற்குக் கிராமப்புற வங்கி அமைப்பு முறையைப் புரட்சிகரமான முறையில் விரிவாக்கி மாற்றி அமைத்திட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஐமுகூ அரசாங்கமோ, கிராமப்புற வங்கிகளை மேலும் பலவீனப்படுத்தக் கூடிய அளவிற்கு, முரணான திசைவழியில் பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதனைத் திருப்பிவிட வேண்டியது இன்றைய தேவையாகும்.
மேலும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு, அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP-Minimum Support Price) உயர்த்துவதும் தேவையாகும். இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு 1200இலிருந்து 1600 ரூபாய் வரை தரும் இந்திய அரசு, இந்திய விவசாயிகளுக்கு வெறும் 850 ரூபாய் மட்டுமே தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, இடதுசாரிக் கட்சிகள் நிர்ப்பந்தம் அளித்ததை அடுத்து, அதனை அரசு 1,000 ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. ஆயினும், நெல்லைப் பொறுத்தவரை, நெல் விவசாயிகள் கோரிக்கையை செவிமடுத்து அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் அளித்திட அரசு இதுவரை முன்வரவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை நெல்லுக்கும் அதிகரித்திட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை அளித்திடும் விவசாயப் பொருள்களின் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும்.
தொடரும் விவசாய நெருக்கடியைத் தடுத்து நிறுத்திட இந்நடவடிக்கைகள் அனைத்தும் அவசியம்.விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்வது மனிதாபிமான அடிப்படையில் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. ஆனால், இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில், இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் முறியடிக்கப்பட வேண்டும், அதற்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை போக்கப்பட்டு, இந்திய விவசாயத் துறை மீண்டும் வலிவும் பொலிவும் பெற்றதாக மாற வேண்டும்.
விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதுடன், குறைந்த பட்ச பொது செயல் திட்டம் பல்வேறு சமூகத் துறைகளிலும் பொது செலவினங்களை அதிகரிக்க இருப்பதாகவும் உறுதிமொழி அளித்திருந்தது. கல்விக்கான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும், பொது சுகாதாரத்திற்கான செலவினம் குறைந்தபட்சம் 3 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் உறுதி கூறியிருந்தது. ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.உண்மையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு கல்விக்கும், பொது சுகாதாரத்திற்கும் செலவழிப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான வருவாய் இல்லை என்று இனியும் அரசு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அரசின் கடந்த நான்கு பட்ஜெட்டுகளிலும், சராசரியாக, அரசின் வருவாய் வளர்ந்துகொண்டுதான் வந்திருக்கிறது. தற்சமயம் அரசு எதிர்பார்த்த இலக்கைவிட குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் அதிகமாகவே வருவாய் வந்திருக்கிறது. இந்த ஆண்டு, பட்ஜெட்டுக்கு முந்தைய மதிப்பீடுகளின்படி, அரசின் வருவாய் இலக்கு எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் 40 சதவீத அளவிற்கு இருந்திடும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, பொது முதலீட்டை விரிவான முறையில் செய்திடுவதற்கு ஐமுகூ அரசாங்கத்திடம் வளமில்லை என்று சொல்ல முடியாது. ஏராளமான அளவிற்கு வாய்ப்பும் வளமும் பெற்றிருக்கிறது. பொதுப் பணிகளை விரிவாக்கி, இவ்வாய்ப்பு வளங்களை ஒழுங்காகப் பயன்படுத்துவதன் மூலமும், மிகப் பெரிய அளவில் வேலையில்லா இருக்கும் இளைஞர்களுக்கு வேலை அளிக்க முடியும். அது நம் பொருளாதாரத்தையும் மேம்படுத்தி, பல்வேறு வழிகளில் உயர் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு நம் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் விரிவாக்கமானது, ஒட்டுமொத்த உள்நாட்டுத் தேவையை உயர்த்தி, ஆக்கத் தொழில்துறை(Manufacturing Sector)யின் வளர்ச்சிக்கும் உந்துவிசையாக அமைந்திடும். இப்போது அதன் வளர்ச்சி என்பது சரிந்து கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டு அரசு பொது முதலீட்டைச் செய்யாததைச் சுட்டிக்காட்டி நம் ஆழ்ந்த ஏமாற்றத்தினையும் அரசுக்குத் தெரிவித்திருந்தோம். இந்த ஆண்டும் அரசு அதே பாதையிலேயே செல்லலாம். காரணம், ஆளும் வர்க்கங்களின் நவீன-தாராளமயக் கொள்கை அடிப்படையில் உள்ள கண்ணோட்டம்தான், வரிவருவாயின் மூலம் கிடைத்துள்ள அபரிமிதமான உபரித் தொகையைப் பொது முதலீட்டுக்குப் பயன்படுத்தாதது மட்டுமல்ல, அரசு பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு மேலும் வரிச் சலுகைகளை அளித்து அவை நம் நாட்டிலிருந்து கொள்ளை லாபம் அடித்துச் செல்ல துணைபுரிந்து வருகிறது. விளைவு, பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கான வரி விகிதம், அரசு அறிவித்துள்ள வரிவிகிதத்தை விட கணிசமான அளவு குறைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு கொள்கைநிலைபாட்டினால் இரு விஷயங்கள் நடந்துள்ளன. ஒன்று, வரிச் சலுகைகள் மூலம், உயர் வருமானங்களின் பயன்கள், நாட்டின் பணக்காரர்களுக்கே மீண்டும் திரும்பிச் சென்றுள்ளன. இரண்டாவதாக, இத்தகைய வரிச் சலுகைகளின் விளைவாக, எதிர்காலத்தில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய்களும் இல்லாமல் போய்விடுகிறது. இவற்றால், ‘ஒளிர்கின்ற’ இந்தியனுக்கும் ‘அவதியுறுகின்ற’ இந்தியனுக்கும் இடையேயுள்ள இடைவெளி மேலும் விரிவடைந்திருக்கிறது.
ஆட்சியாளர்களின் இத்தகு நிலைபாடுதான், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டதின் அமலாக்கத்தை சுமார் மூன்றாண்டு காலத்திற்குத் தாமதப்படுத்தியது. அதேபோன்று, அரசாங்கம் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கழிந்த பின், தேவையான விதிமுறைகளை அரசிதழில் அறிவித்திட காலதாமதம் செய்ததன் காரணமாக, பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இப்போதுதான் நடைமுறைப்படுத்த முடிந்திருக்கிறது.
நவீன தாராளமயக் கொள்கைகளின்பால் ஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடிய பாசம்தான், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைவிட, பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்திட ஊக்குவிக்க வேண்டுமென்கிற கொள்கை நிலைக்குத் துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்சியாளர்களைத் தள்ளி இருக்கிறது. எனவேதான் குறைந்த பட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மக்கள் நலஞ்சார்ந்த உறுதிமொழிகள் அனைத்தும் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விடப்பட்டன.
இந்த ஆண்டு பட்ஜெட் ஐமுகூ அரசாங்கம், தான் போய்க்கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த இறுதியாக ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. ஐமுகூ அரசாங்கம் பட்ஜெட்டில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு மனுவை அரசுக்கு அளித்திருக்கிறது. தற்சமயம் கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்விலிருந்து ஏதேனும் நிவாரணம் கிடைத்திடலாம் என்று மக்கள் பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடைந்திட வேண்டுமானால் ஊக வணிக சந்தையிலிருந்து அனைத்து அத்தியாவசியப் பொருள்களுக்கும் தடை விதித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் பொது விநியோக முறையின் கீழான கடைகளில் விற்கப்பட்டு, பொது விநியோக முறை வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்துக் கொண்டிருக்கிறது. நாம் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மட்டும் ஊக சந்தையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் இது போதுமானதல்ல. பொது விநியோக முறையைப் பொறுத்தவரை, அரசு எதிர் திசையில்தான் சென்று கொண்டிருக்கிறது. பொது விநியோக முறைக்கு விடுவிக்கப்படவேண்டிய உணவு தான்யங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வைப் பொறுத்தவரை மிகவும் கேடுபயக்கக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, கேரளாவில், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள ரேஷன் அட்டைதாரர்களான 49.4 லட்சம் பேருக்கு, மத்திய அரசு 1 லட்சத்து 13 ஆயிரத்து 420 டன்கள் அரிசி விடுவிப்பது இதுகாறும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அது 21 ஆயிரத்து 334 டன்களாக, கடுமையான முறையில் - அதாவது சுமார் 90 சதவீதம் வெட்டப்பட்டிருக்கிறது. கேரளாவில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஒவ்வொரு அட்டைதாரருக்கும் கேரள அரசு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ அரிசி கொடுத்து வருகிறது. இதற்கு மாதத்திற்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 டன்கள் அரிசி தேவை. ஆனால் மத்திய அரசே வெறும் 20 ஆயிரத்திற்கும் கொஞ்சம் அதிகமான அளவில் அரிசியை விடுவித்திருக்கிறது. பொது விநியோக முறையைச் சின்னாபின்னப்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை மேலும் இடருக்கு உட்படுத்துவதற்கும் இதைவிட சிறந்த வழி வேறெது இருக்க முடியும்? மேலும், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.அரசு இத்தகைய போக்குகளை முழுமையாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, விரிவான வலுவான போராட்டங்களைச் சந்திக்க அரசு தயாராக இருக்கட்டும்.
தமிழில்: ச. வீரமணி

Tuesday, February 12, 2008

புரட்சியாளர்களுக்கு எதிரான வழக்குகளில் - எதிர்வழக்கை எப்படி மேற்கொள்வது?-- பகத்சிங்


(1930 டிசம்பர் 23 அன்று பஞ்சாப் ஆளுநர், லாகூர் பல்கலைக் கழகக் கூடத்திலிருந்து, பல்கலைக்கழக பேருரையாற்றியபின் வெளியே வந்துகொண்டிருந்தபோது, ஹரி கிஷன்அவரை நோக்கிச் சுட்டார். ஒருவர் சம்பவயிடத்திலேயே இறந்தார். ஆளுநர் லேசான காயம் அடைந்தார். விசாரணையின்போது, ஹரி கிஷன் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், ஹரி கிஷனுக்கு ஆளுநரைக் கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், அவர் ஒரு எச்சரிக்கை கொடுப்பதற்காகமட்டுமே அவ்வாறு செய்தார் என்றும் எதிர்நிலை எடுத்தார். பகத்சிங் இந்நிலையை எதிர்த்தார்.
புரட்சியாளர்களின் வழக்குகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று அவருடைய நண்பர்களில் ஒருவருக்கு இக் கடிதத்தை எழுதினார். இக்கடிதம், 1931 ஜூன் ‘பீப்பிள்’ (மக்கள்) இதழில் வெளிவந்தது.)
நான் இதற்கு முன் இது தொடர்பாக எழுதிய கடிதம் உரிய நேரத்தில் உரிய இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்பதையும், அதனால் அக்கடிதம் பயன்படுத்தப்படாமல் போய்விட்டது அல்லது அக்கடிதம் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ அது நிறைவேறாமல் போய்விட்டது என்பதையும் அறிந்து மிகவும் வருந்துகிறேன். எனவே, அரசியல் வழக்குகளில் பொதுவாகவும் புரட்சிகர வழக்குகளில் குறிப்பாகவும் எதிர்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து எனது கருத்துக்களை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன். எனது முந்தைய கடிதத்தில், ஏற்கனவே விவாதிக்கப்பட்ட சில அம்சங்கள் நீங்கலாக மற்றொரு நோக்கத்திற்கும் இது பயன்படும். அதாவது, இந்த விளைவுகளுக்குப் பிறகும் நான் புத்திசாலியாக மாறவில்லை என்பதற்கான ஆவணச்சான்றாக இது இருக்கும். எது எப்படியானாலும் ஹரிகிஷன் வழக்கில் எதிர்வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்த வழக்கறிஞர் யோசனையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று நான் அக்கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால் உன்னுடைய மற்றும் என்னுடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அவ்வாறே செய்யப்பட்டு விட்டது. இருந்தபோதிலும், எதிர்காலத்தில், இதுபோன்ற சமயங்களில் நாம் நாம் எப்படி எதிர்வழக்காட வேண்டும் என்பது குறித்து, தீர்மானகரமானமுறையில் சில வரையறைகளை வகுத்திடலாம். அனைத்து அரசியல் கைதிகளும் எதிர்வழக்காடுவதற்கு ஆதரவாக நான் எப்போதும் இருந்ததில்லை என்பதை நீ அறிவாய். ஆனால் இதன் பொருள், உண்மை போராட்டத்தின் அழகு ஒட்டுமொத்தத்தில் சிதைக்கப்பட வேண்டும் என்று இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. (இங்கு நான் ‘அழகு’ என்கிற சொல்லை அழகியல் பொருளில் பயன்படுத்தவில்லை, மாறாக ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்கான நோக்கத்தைக் குறித்து அதனைப் பயன்படுத்தி இருக்கிறேன் என்பதை அருள்கூர்ந்து குறித்துக்கொள்க). அனைத்து அரசியல் கைதிகளும் எப்பொழுதும் தங்களுக்காக எதிர்வழக்காட வேண்டும் என்று நான் கூறும்பொழுது, சில வரம்புளை மனதிற்கொண்டே அதனைக் கூறுகிறேன்.
ஏதோவொரு விளைவை மனதிற் கொண்டுதான் ஒருவர் ஒரு செயலைச் செய்கிறார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது செயலின் அரசியல் முக்கியத்துவம் ஒரு சிறிதும் குறைக்கப்படக்கூடாது. செய்யப்பட்ட செயலைக் காட்டிலும் அச்செயலைச் செய்தவர், அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக ஆகிவிடக்கூடாது. இதனை உதாரணத்தின் மூலம் மேலும் விளக்குவோம். ஹரி கிஷன் ஆளுநரைச் சுடுவதற்காக வந்தார். அவரது செயலை அறநெறி நின்று நான் விவாதிக்க விரும்பவில்லை. அதனை அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே விவாதிக்க விரும்புகிறேன். அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். அவரது நடவடிக்கையின் விளைவாக துரதிஷ்டவசமாக யாரோ ஒரு காவல்துறை அலுவலர் இறந்துவிட்டார். இப்பொழுது எதிர்வழக்காடுவது பற்றிய கேள்வி எழுகிறது.
நல்லது. அதிர்ஷ்டவசமாக ஆளுநர் உயிர் தப்பியிருக்கும் பொழுது, அவரது வழக்கில் மிக அழகாக எதிர்வழக்கை நடத்தியிருக்க முடியும். அதாவது, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப்போல, உண்மை விவரங்களை வாக்குமூலமாகக் கொடுத்திருக்கலாம். அது ஒன்றும் மோசமில்லை. அது சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளையும் நிறைவேற்றியதாக இருந்திருக்கும். காவல் உதவி ஆய்வாளரின் மரணம் குறித்து வழக்கறிஞர் எடுத்துவைத்த வியாக்கியானத்திலிருந்து அவரது அறிவுக்கூர்மையையும் வாதத்திறமையையும் அறியமுடிகிறது.
ஆளுநரைக் கொல்வது எதிரியின் நோக்கமல்ல, அவரை எச்சரிப்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார் என்று வாதிடுவதன் மூலம் அவர் அடைந்த ஆதாயம்தான் என்ன? இதுபோன்றதொரு தூண்டுரையை ஒரு கணமாவது நேர்மையான நபர் எவராலும் நினைத்தாவது பார்க்க முடியுமா? இதற்கு ஏதாவது சட்டரீதியான மதிப்புதான் உண்டா? முற்றிலுமாக இல்லை. பின், குறிப்பிட்ட இந்தச் செயலை மட்டுமல்ல, பொதுவாக இயக்கத்தின் அழகையும் அசிங்கப்படுத்துவதன் மூலம் அடைந்திட்ட பயன்தான் என்ன?
எச்சரிக்கைகளையும், வீணாகிப்போன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எப்போதும் செய்துகொண்டேயிருக்க முடியாது. நெடுங்காலத்திற்கு முன்பே ஒருமுறை எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டது. புரட்சிகரக் கட்சியின் வலு அனுமதித்த அளவிற்கு, சரியான அளவில் புரட்சிகரப் போராட்டம் தொடங்கிவிட்டது.
வைஸ்ராயின் ரயில் நடவடிக்கை, சோதனை முயற்சியோ எச்சரிக்கையோ அல்ல. அதேபோன்று, ஹரி கிஷனின் நடவடிக்கை, அப்போராட்டத்தின் ஒரு பகுதியே அன்றி, அது ஓர் எச்சரிக்கை அல்ல. நடவடிக்கை தோல்வியடைந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்டவர் அத்தோல்வியை விளையாட்டு வீரனுக்குரிய உணர்வுடன் எடுத்துக்கொள்ளலாம். நோக்கம் நிறைவேறிவிட்டதையடுத்து, அதிர்ஷ்டவசமாக ஆளுநர் தப்பியதில் அவர் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். தனிநபர் எவரையும் கொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இறுதிப் போராட்டத்திற்கு இன்றியமையாத தேவைப்படும் சூழ்நிலையையும் மனப்பக்குவத்தையும் உருவாக்குவதால் இத்தகைய நடவடிக்கைள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வளவு தான். மக்களின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கும் தனிநபர் நடவடிக்கைகள் தேவை. நாம் சில சமயங்களில் அவற்றை ‘செயல் மூலம் பிரச்சாரமாக’ப் பயன்படுத்துகிறோம்.இவ்வாறு இவற்றைப் பரிசீலனை செய்த அடிப்படையில்தான் எதிர்வழக்கினை நடத்திட வேண்டும். எப்படி இருந்தாலும் வழக்கை நடத்திடும் அனைவருமே அதிகபட்சம் ஆதாயத்தையும் குறைந்தபட்சம் இழப்பையும் அடைவதற்கே எப்போதும் முயற்சிப்பார்கள், இதுவே பொதுவான நியதி. தனக்குக் கிடைக்கும் ஆதாயத்திற்கும் மேலாக பெரிய இழப்புகளைச் செய்திடக்கூடிய வகையில் எந்த ஒரு போர்த்தளபதியும் உத்திகளை வகுத்திட மாட்டார்.
ஹரி கிஷனின் மதிப்புமிக்க உயிரைக் காப்பாற்றுவதில் என்னைக் காட்டிலும் அதிக அக்கறையுள்ளவர் எவருமில்லை. ஆனால் அவருடைய உயிரை மதிப்புமிக்கதாக எது ஆக்கியதோ அந்த விஷயத்தையே புறந்தள்ளி விடக்கூடாது. என்ன விலை கொடுத்தாயினும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது நமது கொள்கையல்ல. ‘சாய்வு நாற்காலி அரசியல்வாதி’களின் கொள்கையாக அது இருக்கலாம், ஆனால் அது நம் கொள்கை அல்ல. ஒரு வழக்கில் எதிர்வழக்கிடுவது பற்றிய கொள்கையின் பெரும்பகுதி குற்றம் சாட்டப்பட்டவரின் மனப்போக்கைச் சார்ந்ததே. ஆயினும், குற்றம்சாட்டப்பட்டவர், பயந்து ஒடுங்கிப்போகாதவராக மட்டுமல்ல, கொள்கையின்பால் மேலும் ஆர்வத்துடன் எப்போதும்போல் இருந்தாரானால், அப்போது அவர் எதற்காக அந்தக் குற்றச்செய்கையினைச் செய்திடத் துணிந்தாரோ, அதுவே முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டும். அவரது சொந்தப்பிரச்சனைகள் எல்லாம் அப்புறம்தான்.
மீண்டும் ஒரு வகையான குழப்பம் ஏற்படலாம். சில நடவடிக்கைகள், உள்ளூர் வட்டாரத்தில் மிகப்பெரிதாக கருதப் பட்டாலுங்கூட அவற்றிற்குப் பொதுவான முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அவ்விடத்தில் பொறுப்பை ஒப்புக்கொள்வது குறித்து குற்றம் சாட்டப்பட்டவர் உணர்ச்சிவசப்பட்டு நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. இதற்கு பிரபலமான நிர்மல் காந்த் ராய் வழக்கு விசாரணையே சிறந்த உதாரணமாக இருக்கும்.
ஆனால், இது போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், அரசியல் அம்சங்களைக் காட்டிலும் தனிப்பட்ட அம்சங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கக் கூடாது. இந்த வழக்கு பற்றிய எனது வெளிப்படையான அபிப்ராயத்தை அறிந்து கொள்ள நீ விரும்பினால், நான் ஒளிவு மறைவின்றி உனக்குச் சொல்கிறேன். இது, போலித்தனமான சட்டத் தொழிலின் பலிபீடத்தில் செய்யப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் அரசியல் படுகொலை என்று கூறுவதைத் தவிர வேறொன்றுமில்லை.
மேலும் ஒரு விஷயத்தை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கின் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குப் பொறுப்பானவர்கள், இப்போது தங்களது பெருந்தவறை உணர்ந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆனால், அந்நிகழ்வுக்குப் பின்னர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள அவர்களுக்குத் துணிவில்லை. அதனால் அவர்கள் நமது இளம் தோழரின் அற்புதமான மன உரத்தின் அழகையே சிறுமைப்படுத்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வழக்கைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கு அஞ்சி ஹரி கிஷன் பின்வாங்கிவிட்டார் என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். இது மிகவும் வெட்கப்பட்டத்தக்க கடைந்தெடுத்த பொய்யாகும். அவரைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்ட இளைஞனை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.
மக்கள் நம் மீது கருணை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நெறிபிறழ்ந்தவர்களாக, தரம் தாழ்ந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டு நன்கு கவனித்துக்கொள்ளப்படுவதைவிட, கண்டு கொள்ளப்படாதவர்களாக இருப்பது நல்லது.
துன்பத்தில் வாடும் மனிதகுலத்தின் விடுதலை என்ற பொன்னான மார்க்கத்துக்காக, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ய முன்வந்துள்ள இளைஞர்களின் வாழ்வை - ஏன், அவர்கள் மரணத்தைக்கூட - சுரண்டிப் பிழைக்கும் அளவிற்கு இழிவான அற்பர்களாக வழக்கறிஞர்கள் இருந்திடக் கூடாது. நான் உண்மையிலேயே.......*
இல்லாவிட்டால் மேற்சொன்ன வழக்கில் கொடுக்கப்பட்டது போன்று நம்பமுடியாத அளவிற்கு, ஒரு பெரும் தொகையைக் கட்டணமாக ஒரு வழக்கறிஞர் ஏன் கோர வேண்டும்?
ராஜத்துரோக வழக்குகளில் எந்த அளவிற்கு நம்மால் எதிர்வழக்காட முடியும் என்பது குறித்து, நான் உனக்குச் சொல்கிறேன். கடந்த ஆண்டு, சோசலிசக் கருத்துக்களைப் பேசியதற்காக ஒரு தோழர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் குற்றச்சாட்டை மறுத்தபோது நாங்கள் அதிர்ந்துபோய்விட்டோம். இதுபோன்ற வழக்குகளில் நாம் பேச்சுரிமையை வலியுறுத்திக் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எதிர்வழக்காட வேண்டும் என்று ஒருவர் அறிவுறுத்தப்பட்டால், அது இயக்கத்தின் நலன்களுக்கு முரணானதாக இருக்குமானால், அதனை மறுத்திட வேண்டும்.
இப்போது நடந்து வரும் இயக்கத்தைப் பொறுத்து, காங்கிரஸ் தன் உறுப்பினர்களை எதிர்வழக்காடாமல் சிறைக்குச் செல்ல அனுமதித்திருப்பதன்மூலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறு என்றே கூறுவேன்.எப்படியோ, நீ இந்தக் கடிதத்தையும் என்னுடைய முந்தைய கடிதத்தையும் இணைத்து வாசித்தாயானால், அரசியல் வழக்குகளில் எதிர்வழக்காடுவது எப்படி என்பது குறித்து என்னுடைய கருத்துக்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
ஹரி கிஷன் வழக்கில், என் கருத்துப்படி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும். இதில் தவறக்கூடாது. அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட வேண்டும்.இந்தப்பொருள் குறித்து நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் இந்த இரண்டு கடிதங்களிலும் குறிப்பிட்டுவிட்டேன் என்றே நம்புகிறேன்.
*** *** ***-------------------------------------* இங்கே சில வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.
(தமிழில்: ச. வீரமணி)

Saturday, February 9, 2008

புதிய சுதந்திரப்போர் துவங்க வேண்டும் - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்




மிகச் செறிவான மக்கள் போராட் டத்தினாலும், அரசியல் கோட்பாட்டி னாலும் உருவான சுதந்திர இந்தியாவில், மக்களின் சுயசார்புத்தன்மை என்பது சமதரும, மதச்சார்பற்ற, ஜனநாயக கொள்கைகளின் கலவையால் உரு வாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட கோபுரத்தின் கலசமாகும். நமது நாட்டின் நிர்வாகம் இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கியதாகவும், கட்டுப்பட்டதாகவும், ஒளிவுமறைவற்ற தாகவும் உள்ளது.

நாம், இந்திய நாட்டு மக்கள் 100 கோடி பேர்களுக்கும் அதி கமாக வலிமையாக உள்ளோம். ஆனால் பன்னாட்டு நிறுவனங்களும், மாஃபியா கும்பல்களும், தங்குதடையின்றி நம் செல்வங்களைக் கொள்ளை அடித்துச் செல்லும் பில்லியனர்களும்தான் நம் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களின் மேல் வலிமையான ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

“நமது நாடு பல வளங்களை உள் ளடக்கிய வளமான நாடு: நமது கலாச்சாரம் மிகவும் மேன்மையானது: நம்மிடையே அதிசயக்கத்தக்க திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. நாம் எந்த ஒருதுருவ வல்லரசிற்கும் வால் பிடிக்கும் நாடு அல்ல. நாம் சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் அமெரிக்கா என்ற நால்வர் அணியின் பெருமை மிகு அங்கத்தினர்” - என்று சமீபத்தில் ஒரு மாநாட்டில் இத்தகையப் பார்வை முன்னிறுத்தப் பட்டது. ஆம், இந்தியா உலகத்திலுள்ள எந்த நாட்டின் கொள்கைகளையும் ஏற்று அதைச் சுற்றும் துணைக் கோள் அல்ல. நமது நாட்டின் பஞ்சசீலக் கொள்கையின் சூத்திரதாரி நாம்தான். நமது அடிமை இந்தியாவின் அவமானச் சின்னமான விவசாயிகளின் பின்தங்கிய பொருளா தாரத்தையும், நிலப்பண்ணை உரிமை முறையையும் எதிர்த்த இயக்கமாகத் தான் நமது சுதந்திரப் போர் அமைந்தது. வெறும் பிரிட்டிஷ் அடிமைத்தளையி லிருந்து விடுபடுவதற்கு மட்டும் நமது தலைவர்கள் போராடாத காரணத்தி னால்தான் கருணைமிக்க மனிதத்துவ மும், ஜனநாயகச் சமத்துவமும் நமது சமூக அரசியல் கலாச்சாரமாக உருவாகி யுள்ளது. ஆனால் இன்று இந்தியாவில் பெருகி வரும் அசுர பலமிக்க பன்னாட்டுக் கழ கங்களின் போக்குகளும், நிர்பந்தங் களும் நம்மை அச்சுறுத்தும் படியாக உள்ளன. இவர்கள் நம்நாட்டு மக்க ளுக்கு ஏற்படுத்தும் இடர்பாடுகளை மன உறுதியுடன் எதிர்கொள்ளாவிடில் நாம் அவர்களின் தயவில் வாழவேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு, இந்தியக் குடியரசே ஏழை நாடாக மாறும் நிலைமைக்குத் தள்ளப்படும். இந்நிலை யைத் தவிர்ப்பதற்கு தொழிற்சாலை களும் நிறுவனங்களும் அரசுடைமை யாக இருக்க வேண்டும். நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதோடு, நிர்வாகத்தில் ஊழியர்களின் பங்கேற்பினை உத்தர வாதப்படுத்த வேண்டும். சமூகத் தேவையினை ஒட்டி சந்தைகள் இருக்க வேண்டும். நிலக் குவியலைத் தடுத்து நிறுத்துவதோடு, மாஃபியா கும்பல் களிடம் இருந்து “ரியல் எஸ்டேட்” (நிலப் பரிவர்த்தனை) விற்பனையை மீட்டெடுப் பதும் அவசியம். வர்த்தக ஊழலையும், தொழில் சட்டங்களை மீறுபவர்களையும் ஒழிக்க அரசின் முயற்சி தேவை. திட்ட மிட்ட பொருளாதார வளர்ச்சியும், சமூக ஒழுக்கமும் நல்ல சிந்தனையுள்ள சமூகமும் தான் இன்றைய உடனடி தேவை.நாம் நமது சுதந்திரப் போராட்டத்தின் நோக்கத்தைப் பற்றியும், உறுதியைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர் வினை ஏற்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் என்பது, ஈவு இரக்கமற்ற அடிமைத்தனத்தை போக்கவும் பொரு ளாதார ஜனநாயகத்தை நிலைநாட்டவும் வீறு கொண்டு எழுந்தது. சுருங்கக் கூறின் நமது சுதந்திர இயக்கமானது, மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் களை உருவாக்குவதற்காகவோ, நிலப் பண்ணை முறையினை வளர்ப்பதற்கோ, அழிவை உருவாக்கும் தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்துவதற்கோ, அல்லது அன்னிய நாட்டு மூலதனத்தை ரத்தின கம்பளமிட்டு வரவேற்பதற்கோ, சுங்கவரி இல்லாமல் தடையற்ற இறக்குமதி செய்வதற்காகவோ கட்டப்படவில்லை. இவையெல்லாம் நமது சுதேசியத்தை அழித்தொழித்துவிடும்.

இன்றைக்கு சமத்துவ சமூக அமைப்புதான் மிக மிக முக்கியத் தேவையாகும். “தனியொரு மனிதனுக்கு உண வில்லையெனில் ஜகத்தினை அழித் திடுவோம்” என்ற பாரதியின் குரல் சம தரும சமூக கட்டமைப்பை நோக்கியதுதான் என்பதை நாம் உணர வேண்டும்.நமது அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டலை மறந்துவிடக் கூடாது.

“நாம் ஜனநாயகம் என்று கூறும் பொழுது அது, பொருளா தார ஜனநாயகத்தையும் குறிக்கும். நான் சோசலிசம் சார்பாகத் தான் நிற்கிறேன். நமது இந்தியா சோஷலிசம் சார்பாகத் தான் நிற்கும். அத்தகைய இந்தியா ஒரு சோசலிச அரசை அமைக்கும்’ என்ற நேருவின் குரல் இன்னும் தேசமெங்கும் எதிரொலிக்கிறது. நேரு மட்டுமல்லாது, அரசியலில், ஒப்பற்றத் தலைவர்களான சுபாஷ் சந்திரபோஸ், இ.எம்.எஸ். நம்பூதிரி பாத், பி.சி.ஜோஷி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பிரிட்டிஷ் அறிஞர்களான பெர் னாட்ஷா, எச்.ஜி.வெல்ஸ், சிட்னி வெப், இவர்கள் எல்லோரும், சோஷலிசத்தை நேசித்தவர்கள். சுதந்திரப் போரின் தலைவர்களும், தோழர்களும் எதேச்சதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த உறுதியான கருத்துடையவர்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரல் மார்க்ஸின் கம்யூனிஸமும் பொருள்முதல்வாதமும்தான் சோஷலிசத்தின் அடிப்படை. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது மூதாதையர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள அளப்பரிய. சொத்தான அரசியல் அமைப்புச் சட்டம் பொருளாதார ஜனநாயகத்தை வலியுறுத்துகிறது. தனது சுதந்திர தின உரையில், நேரு, தனது உயர்ந்த லட்சியமும் அதுதான் என்று உறுதியளித்தார்.

ஆனால் இன்றைக்கு பல கோடி இந்திய ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இந்தியப் பொருளாதாரம் மாறி உள்ளது.பண்டித நேரு, இந்தியாவின் வளர்ச் சிக்கு அடிப்படைத் தேவையான திட்டக் கமிஷன், பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை தொழிற்கூடங்கள் மற்றும் நதிநீர் திட்டங்களை உருவாக்கிச் சென்றார். அவர் வழி வந்த இந்திராகாந்தி சற்று கூடுதலாக, கேந்திரமான துறை களை நாட்டுடைமை செய்தல், சொத்து குவிதலை தடுத்தல், நில உச்சவரம்பு சட்டம் அமலாக்கல் என பொருளாதார ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். இன்னும் ஒருபடி மேல் சென்று நமது அரசியல் அமைப்பினை ‘குடியாட்சி’ என்பதிலிருந்து ‘சமதரும குடியாட்சி’ என்று உயர்த்திய பெருமை இந்திரா காந்தியைச் சாரும். இன்றுவரை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுநர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சமதரும குடியாட்சியை உயரப்பிடிப்பேன் எனச் சொல்லுகிறார்கள்.ஆனால், நாம் நமது வளங்களை யெல்லாம் பெருமுதலாளிகள் சுவீகரிப் பதற்காக அள்ளித் தெளிக்கும்வரை, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நமது ஏழைப் பங்காளிகள் உண்பதற்கு தோல் கூடக் கிடைக்கப்போவதில்லை. பொரு ளாதார வளர்ச்சியின் பழங்களை பெரும் முதலைகள் வசதியாக விழுங்கிவிட்டு, தோல்களை நம்மீது எறிகிறார்கள்.இந்திய நாட்டின் பெருமை மீட்டெ டுக்கப்பட வேண்டுமென்றால், சமதரும ஜனநாயகவாதிகள் தங்களது வேற்று மைகளையும் வித்தியாசத்தையும் கடந்து ஒன்றுபட வேண்டும். அவர்கள் ஒன்று படுவதன் மூலம்தான் நமது நாட்டின் வளங்கள் பாரபட்சமின்றி அனைவருக் கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உத்தர வாதப்படுத்த முடியும். நாம் அனைவரும் உண்டு, அனைவரும் உடுத்தி, இருக்கிற வேலையை அனைவரும் பகிர்ந்து செய்து எல்லா வளமோடும் பெருவாழ்வு வாழ அந்த ஒற்றுமை உரமாகும். நமது நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியை சாதாரண மனிதன் வளர்ச்சிக்கும், கல்வி மேம் பாட்டிற்கும், சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களின் தேவைக்கும் பயன் படுத்த வேண்டும்.

1991 முதல் அதாவது உலகமயக் கொள்கைகள் அமலாக்கத் தொடங்கி யதிலிருந்து, நமது பொருளாதாரம் அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்குப் புறம் பாகவும், டாலர் தாகத்துடனும் செயல் படுத்தப்படுகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் பொறுப்புக்குபோட்டியிட்ட சசி தரூர் கூற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சொத்து 200 பில்லியன் டாலர் உயர்கிறது; அன்னியச் செலா வணி கையிருப்பு 200 பில்லியன் டால ரைத் தாண்டியுள்ளது. இவ்வளவு இருந் தும் நமது டாலர் தாகம் தீராமல் நமது தங்கத்தினை லண்டன் சந்தையில் அட மானம் வைத்து டாலரைக் குடிக்கிறோம். உலக பில்லியனர்களில் 27 பேர் இந்தியர்கள், பெரும்பான்மையோர் இந்தியாவில் வசிக்கிறார்கள். நமது நாட்டின் 80 கோடி ஏழை மக்கள், மாதத் திற்கு 15 டாலருக்கும் குறைவான வரு மானம் உள்ளவர்களும் இவர்களோடு தான் வசிக்கிறார்கள்.

இன்றைக்கு உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளது. ஆனால் ஏழை மக்கள் இருந்த இடம் மாறாமல் அங்கேயே இருக்கிறார்கள். இத்தகைய துன்ப துயரங்களிலிருந்து விடுபடுவதற் கான எச்சரிக்கை மணிதான் தமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலின் குடியரசு தின உரை!

உலகமயமாக்கலின் வளர்ச்சியும் பலன்களும் நாட்டில் உள்ள கோடானுகோடி ஏழை மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்றும், நமது நாட்டின் உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஏழை குடிசையில் உள்ள சாமானிய மனிதனின் வாழ்க்கையும் வளர்ச்சியடைவதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி கூறியதுபோல் ஒவ்வொரு ஏழைப் பாட்டாளியின் கண்களின் கடைசி சொட்டுக் கண்ணீரும் துடைத்தெறியும் வரை நமது லட்சியம் உறங்கக்கூடாது.

நாம் நமது ஆட்சியாளர்களைப் பார்த்து சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. நமது நேரு கூறியது போல், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ என்று உறுதிபட சொல்வாரா? இந்திராகாந்தி செய்தது போல் சோனியாகாந்தி நமது தேசியவாதம் என்பது சமதரும சோஷலிஸத்தைக் கட்டுவதுதான் என்று உறுதியேற்றுக் கொள்வாரா? நமது குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல், ‘இந்தியாவின் உயிர், சில நகரங்களில் இல்லை, கிராமங்களில் தான் வாழ்கிறது’ என்ற காந்தியின் உறுதியினை சுவீகரித்துக் கொள்வாரா?வானுயர்ந்தக் கட்டிடங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், அன்னிய மோகத்தால் தூண்டப்பட்ட சொகுசான ஆடம்பர வாழ்க்கை, தனியார்மயமாக் கல் மற்றும் எங்கெங்கும் நடக்கும் கொள்ளை, மலிந்து கிடக்கும் ஊழல் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து மீண்டும் காந்தியையும், நேருவையும், இந்திராகாந்தியையும் படுகொலை செய்துள்ளன. காந்தியத்துக்கு எதிரான உலகமயமாக்கல் கொள்கைகளும், தனியார்மயமாக்கல் கொள்கைகளும் உச்ச ஸ்தாயியில் உச்சரிக்கப்பட்டு, புதிய காலனியாதிக்கத்திற்கு பாதையை அகலத் திறந்துவிடப்படுகின்றன. நமது நாட்டின் உன்னத மூலதனம் என்பது மனிதநேயத்தை உருவாக்கு வதில்தான் வாழ்கிறது. மாறாக, ஊதாரித்தனமான ஆடம்பரத்திலோ அல்லது நட்சத்திர கலாச்சாரத்திலோ இல்லை- இவையெல்லாம் சுதந்திரத்திற்கும், சமத ருமத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், ஜனநாயக அரசியலுக்கும் சுயசார்புத் தன்மைக்கும் எதிரானவை. இந்திய மக்கள் புதிய சுதந்திரப் போரினைத் துவங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

(கடந்த 5.2.08 அன்று ‘தி இந்து’வில் வந்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழாக்கம் : வெ.ராகுல்ஜி.