Thursday, July 23, 2026
தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்
Monday, August 18, 2025
உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்
Tuesday, April 1, 2025
Sunday, February 16, 2025
ஒரு புரட்சியாளனின் பயணங்கள்-சௌகத் உஸ்மானி
Thursday, January 23, 2025
Wednesday, January 22, 2025
Wednesday, December 25, 2024
Sunday, December 1, 2024
Wednesday, November 27, 2024
Tuesday, November 26, 2024
இலங்கை: மக்கள் எங்களுக்கு அளித்துள்ள அதிகாரத்தை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திடப் பயன்படுத்துவோம் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உறுதி
Monday, November 25, 2024
Sunday, November 24, 2024
Saturday, November 23, 2024
Sunday, November 17, 2024
Monday, November 11, 2024
Tuesday, November 5, 2024
வைகறைவாணனும் நானும்.
வைகறைவாணனும் நானும்.
ச.வீரமணி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் 1970களில் மன்னார்குடியில் வேலை பார்த்த சமயத்தில் மன்னை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக்கடைகளை மேய்ந்தபோது, ‘மனிதன்’ என்று ஒரு சிவப்பிலக்கிய இதழ், புதிதாக வெளிவந்த இதழ், அட்டைப்படத்தில் ஓர் உழைப்பாளி தன் கைவிலங்கை முறித்துக்கொண்டு ஓடிவருவது போன்ற படத்துடன் வெளிவந்ததைப் பார்த்தேன். உடனே அதனை வாங்கிவிட்டேன்.
பின்னர் நான் திருவையாறு, நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றலாகிவந்தபோது, திருவையாறில் செந்தமிழ்வேங்கை என்கிற ப.ஜெயபாலன் என்பவர் ‘மனிதன்’ இதழ் வரவழைத்து விநியோகம் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர் தங்கியிருக்கும் அறையைத் தேடிச் சென்றேன். வெளியில் ஒரு சிறு பெயர்ப்பலகை. அதில் செந்தமிழ் வேங்கை, இளமுருகன், மெய்யடியான், திருவேங்கடம் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இளமுருகன், அப்போது தமிழ்க்கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வந்தார். அவரிடம், செந்தமிழ்வேங்கை இருக்கிறாரா என்று கேட்டேன். அவர் ‘நீங்கள் யார்?’ என்று என்னை வினவ, நான் ‘நீதிமன்றத்திலிருந்து வருகிறேன்’ என்றதும் சற்றே அவர் துணுக்குற்றார் என்றே கருதுகிறேன். பின்னர் சிறிது நேரம் பேசியபின் சரளமான உணர்வுக்கு வந்து, ‘ஜெயபாலன் கடைவீதியில் உள்ள ‘திருவையாறு கபே’ என்னும் உணவுவிடுதியில் மூலையில் உள்ள மேசையில் உட்கார்ந்து கணக்கு எழுதிக்கொண்டிருப்பார். போய்ப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தார்.
அப்போது பார்த்த, வைகறையின் புன்னகை முகம் இப்போதும் என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த, ஒருசில நிமிடங்களிலேயே நாங்கள் ஒன்றிப் போனோம்.
அடுத்து, ந.விஜயரங்கனும் திருவையாறு நீதிமன்றத்திற்கு மாற்றலாகி வந்தபின், அநேகமாக மூவரும் இணைபிரியாது இருந்தோம். தோழர் சி.அறிவுறுவோன் எங்கள் மூவரையும் அநேகமாக தன்னுடைய அன்புப் பிணைப்பில் கட்டிப்போட்டிருந்தார் என்று சொன்னால் மிகையல்ல.
1975இல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில், வைகறைவாணன் தலைமையில் கமுக்கமாக எவ்வளவோ செய்திருக்கிறோம். தோழர்கள் ஏ.கே.கோபாலன், இரா.செழியன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், தமிழாக்கம் செய்யப்பட்டு, வந்ததை, தட்டச்சு செய்து, உருளச்சு முறையில் பல படிகள் எடுத்து, பரப்பியிருக்கிறோம். தோழர் சிகரம் செந்தில்நாதன் அவர்களை வரவழைத்து திருவையாறில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தி இருக்கிறோம்.
தோழர் வைகறைவாணனிடம் உள்ள அசாத்திய திறமை எவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்தாலும் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு, மிகச் சிறப்பாக நடத்திடுவார்.
ஒருதடவை தோழர் கோ.வீரய்யன் மற்றும் தோழர் வே.ஆனைமுத்து இருவரையும் வரவழைத்து, ஒரே மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், பெரியார் சமஉரிமைக் கட்சி குறித்தும் பேச வைத்தார்.
திருவையாறு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, திருவையாறு தியாகேசர் கீர்த்தனாவாகும். அதைப்போலவே தமிழிசைக்கும் விழா எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வைகறைவாணன், சி.அறிவுறுவோன், பேராசிரியர்கள் திருமாவளவன், இளவழகன், திருவேங்கடம், தங்க. கலியமூர்த்தி உள்ளிட்டு ஒருசில நண்பர்கள் தமிழிசை விழா தொடங்கி அது இன்றளவும் ஒவ்வோராண்டும் தைத் திங்களில் நடைபெற்று வருகிறது என்றே நம்புகிறேன்.
அன்னக்கிளி திரைப்படம் வந்த புதிது. அதில் மிகவும் புகழ்பெற்ற அன்னக்கிளியே உன்னைத் தேடுதே பாட்டின் மெட்டில் இவர் ஒரு பாடல் எழுதித் தந்ததை, தோழர் சி.அறிவுறுவோன் தன் நிலத்தில் நாற்றுப்பறிக்கும் பெண்களை விட்டுப் பாடச் செய்தார். அப்போதெல்லாம் நாங்கள், கண்ணதாசன் போன்று, வாலி போன்று நாளை நாம் நம் வைகறைவாணனையும் பார்க்கப் போகிறோம் என்று கற்பனை செய்துகொண்டிருந்தோம்.
எங்களுடன் அன்பு நண்பர் அரண்மனைக்குறிச்சி கு.கைலாசம் அவர்களும் இணைந்தார். அதன்பின் ஈழ இலக்கியங்கள் அனைத்தும் எங்களுடன் மிகவும் நெருக்கமாக உறவாடின. குறிப்பாக செ.கணேசலிங்கன் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த 26 குமரன் இதழ்கள் எங்களைப் பக்குவப்படுத்தியதில் முக்கியமான பங்கினையாற்றியது. குமரனில் வெளிவந்த தோழனின் காதல் கடிதம், பின்னர் அதற்குத் தோழி எழுதிய பதில் கடிதத்தின் சாராம்சம் இன்றளவும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. மாவோவின் ‘மலையைப் பிளந்த மூடக் கிழவனின் கதை’யை முதலில் படித்தது, செ.கணேசலிங்கனின் ‘சிறுவர்க்கான சிந்தனைக் கதைகள்’ என்னும் புத்தகத்தில்தான் என்று நினைவு.
ஈழ இலக்கியங்கள் மட்டுமல்ல, ஈழத்திலிருந்து வரும் நண்பர்களும் பலர் வைகறையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
எங்கள் மத்தியில் வறுமை கடுமையாக இருந்த நேரம். இருந்தாலும் வறுமையால் எங்களின் உணர்வுகளைத் தடுத்திட முடியவில்லை. என் அன்னை இறக்கும் நாளன்று, நான், விஜயரங்கன், வைகறைவாணன் ஆகியவர்களுடன் திருவையாற்றில் பூசைபடித்துறைத் தெருவிலிருந்த மாடி அறையில் இரவு முழுதும் பேசிக்கொண்டே இருந்தோம். இப்படி மத்தியதர ஊழியராக இருக்கும் நம்மாலேயே நம் அன்னையரை ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லையே, நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்ற விதத்தில் எங்கள் விவாதம் அன்றையதினம் அமைந்திருந்தது. அதன்பின்னர்தான், இவ்வாறு வெறுமனே சிவப்பு இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இடதுசாரி இயக்கங்களில் ஏதேனும் ஒன்றுடன் பிணைத்துக்கொண்டு, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைத்திட நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற முடிவினை அன்றைய தினம் எடுத்தோம் என்றே கூறலாம். அதன் பின் நான் நாகைக்கு சுருக்கெழுத்தராக மாற்றலானேன்.
வைகறை சென்னை சென்றுவிட்டார். 15 சாரி தெரு, கோடம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் அறை. அநேகமாக அந்த சமயத்தில் தஞ்சையிலிருந்து வேலை தேடி செல்லும் பட்டினிப் பட்டாளத்தின் புகலிடமாக அது பல ஆண்டு காலம் இருந்தது.
சென்னையில், வைகறை, அரணமுறுவலுடன் இணைந்து பயணித்தார். நான் தமிழ்ச்சுருக்கெழுத்தைச் சுயமாகக் கற்று, இளநிலை, பின் முதுநிலை என்று தேர்ச்சியடைந்தபின், உயர்வேகத் தேர்வு, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள், 120 வார்த்தைகள், பின் 150 வார்த்தைகள் என்று தேர்வுகள் எழுதி, தேர்ச்சியடைந்தபோது, தோழர் வைகறைவாணன், ‘மக்கள் செய்தி’யில் ஒரு பெட்டிச் செய்தி, ‘தமிழ்ச் சுருக்கெழுத்தில் வீரமணிக்கு முதலிடம்’ என்று வெளியிட்டிருந்தார். இதைவிடச் சிறந்த விருது வேறு என்ன இருக்க முடியும்!
அஞ்சலட்டை வடிவிலான என் திருமண அழைப்பிதழையும், விஜயரங்கனின் திருமண அழைப்பிதழையும் வடிவமைத்தது தோழர் வைகறைவாணன்தான். என் திருமணத்திற்காக நான் அச்சிட்ட அழைப்பிதழையும், மணமகள் சார்பில் என் மைத்துனர் தோழர் இரா.இரத்தினகிரி அச்சிட்ட அழைப்பிதழையும் பேராசிரியர் இரா. இளவரசிடம் நானும், வைகறையும் சென்று அளித்தபோது, இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்துவிட்டு, இளவரசு ஐயா அவர்கள், ‘இரத்தினகிரி அச்சிட்டுள்ள அழைப்பிதழில் இல்லாத தமிழ் இதில் இருக்கிறது’ என்று மகிழ்வுடன் சொன்ன வரிகள் என் நெஞ்சில் இப்போதும் இருக்கிறது. இதற்குக் காரணம் தோழர் வைகறைவாணன்தான்.
அதேபோல் மே தினம் ஒன்றிற்கு வாழ்த்துச் செய்தி ஒன்று சுமார் 100 அஞ்சலட்டைகள் அச்சிட்டு விநியோகித்தோம். அதன் வாசகங்களை தோழர் ஜோதி இன்றளவும் நினைவு கூர்வார். அதனைப்பார்த்தபின்தான் தோழர்கள் மணியரசனும், ஜோதியும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானார்கள்.
அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபின்னர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நாமக்கல்லில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலிருந்து கி.வெங்கட்ராமன், சி.அறிவுறுவோன், வைகறைவாணன், பொதியவெற்பன், நான் உட்பட ஏழு பேர் கலந்துகொண்டோம். தோழர் கு.சின்னப்பபாரதி ஏற்பாடு செய்திருந்தார். தோழர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா, கே.செல்வராஜ், செந்தில்நாதன், இளவேனில் முதலானவர்கள் உரையாற்றினார்கள். தோழர் இளவேனில் சீன இலக்கியம் குறித்து ஆற்றிய உரையும், தோழர் என்.சங்கரய்யா, செம்மலரில் வெளியான ஒரு சிறுகதையை விமர்சனம் செய்ததும் இன்னமும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
நான் திருமணமானபின் நாகையில் வேலைபார்த்த சமயத்தில், 1976இல் புயலால் நாகை நிர்மூலமாக்கப்பட்ட சமயத்தில், நாகைக்கும் இதர பகுதிகளுக்கும் தொடர்பு அறுபட்டிருந்த சமயத்தில், தோழர் வைகறை எப்படியோ நாகை வந்து எங்களைச் சந்தித்ததை மறக்க முடியாது. அப்போதுதான் நாங்களிருவரும் சென்று சர்வதேசகீதத்தைத் தமிழில் எழுதிய கவிஞர் நாகை சாமினாதன் அவர்களைச் சந்தித்தோம். அதனைத் தோழர் வைகறை ஒரு சிறுபிரசுரமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
1984இல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உருவாகிக்கொண்டிருந்த சமயம். அதற்கு முன் ‘அரசு ஊழியர்’ மாத இதழ் தோழர் தே.இலட்சுமணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது. இதனை ஆரம்பத்தில் அச்சிடும் பணியைத் தோழர் வைகறைவாணன்தான் பார்த்தார்.
அரசு ஊழியர் இதழில் செம்பியன் (எம்.ஆர்.அப்பன்) எழுதிய ஸ்தாபனம் என்ற கட்டுரையை ஒரு சிறுபிரசுரமாகக் கொண்டுவர, எம்.ஆர்.ஏ-இடம் நான் அனுமதி கோர, அவரும் அனுமதி அளித்தார். அதன்பின்னர் நான், தோழர்கள் வைகறைவாணன், வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து அதனை வெளியிட்டோம். தோழர் இளவேனில் அட்டையை வடிவமைத்துத்தர அதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முதல் மாநாட்டின்போது வெளியிட்டோம்.
நான் சென்னையில் சட்டமன்ற மேலவையில் வேலை பார்த்த சமயத்தில் ‘சீன இலக்கியம்’ மாத இதழ் ஒன்றிலிருந்து, நாட்டுப்புற நாடோடிக் கதை ஒன்று. ஒருவன், ஒரு கிளிக்கு ‘ஆமாம்’ என்று மட்டும் சொல்லக் கற்றுக்கொடுத்து, இந்தக் கிளி, தங்கம், வெள்ளி புதைத்து வைத்திருக்கும் இடங்களைச் சரியாகக் கூறும் என்று ஏமாளிகளை நம்ப வைத்துக்கொண்டிருப்பான். இவனது ஏமாற்றுத்தனத்திற்கு அந்நாட்டின் அரசனும் பலியாகிவிடுவார். இந்தக் கதையை, ‘ஆமாம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து தந்ததை, க.சுப்பு அவர்களை ஆசிரியராகவும், க.திருநாவுக்கரசு அவர்களையும், வைகறையையும் உதவி ஆசிரியர்களாகக் கொண்டும் வெளியிட்டுவந்த நக்கீரன் இதழில் வெளியிட்டார். அதேபோன்று நான் பிரேம்சந்த்தின் சிறுகதைகளில் ஐந்தை (குழந்தை, கடவுளின் இல்லம், மோட்சம், பண்பாளன் யார்? மற்றும் இரு நண்பர்கள்) கதைகளைத் தமிழாக்கம் செய்து அது, காக்கை சிறகினிலே மற்றும் பல இதழ்களில் வெளிவருவதற்கு, முக்கிய காரணம் தோழர் வைகறைவாணன்தான்.
அதேபோன்று ‘நாடாளுமன்றத்தில் தமிழ்’ தொடர்பாக வீர.வியட்நாமின் எழுதிய கட்டுரையும் மற்றும் ‘ஞாயிற்றைக் கை மறைப்பாரில்’ என்ற பழமொழிக்கேற்ப ‘கதிரவனைக் கைகள் மறைத்திடுமோ’ என்று மாக்சிம் கார்க்கி குறித்து எழுதிய கட்டுரை காக்கை சிறகினிலே இதழில் வெளிவந்ததற்கும், வைகறைவாணன்தான் காரணம்.
தோழர் வைகறை, எவ்வளவோ திருமணங்களை மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் நடத்தியிருக்கிறார். ஆனால் அவருக்குத் திருமணமே நடக்காதா என்று நாங்கள் ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில், பேராசிரியர் விருத்தாசலனார் முன்முயற்சியில், தோழர் வைகறைக்கும் தோழர் இந்திராவுக்கும் தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அத்திருமணம் நடைபெற்ற சமயத்தில் தோழர் செல்வபாண்டியன் எறும்பைப்போல் சுறுசுறுப்பாக சுழன்று பணியாற்றியது இன்னமும் என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.
இவ்வாறு 1970களில் எங்களிடையே ஏற்பட்ட நட்புப் பிணைப்பு, 50 ஆண்டுகள் கழிந்தும் வளர்பிறையாகவே தொடர்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக நானும், தோழர் வைகறையும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டபோதிலும், மனதளவில் இறப்பு குறித்து எவ்விதமான அச்சமுமின்றி, வாழ்ந்த வாழ்க்கையை எங்களால் முடிந்த அளவிற்கு, சமூகத்திற்குப் பயனுறுவிதத்தில்தான் வாழ்ந்திருக்கிறோம் என்ற மனநிறைவு எங்களுக்கு உண்டு. அந்த மனநிறைவுடன் வருங்காலங்களையும் கடத்திடுவோம்.
Sunday, October 6, 2024
வீரம் விளைந்தது மதிப்புரை
அன்பார்ந்த நண்பர்களே,
தோழர்களே!
மல்ட்டிபிள்
மைலோமா (Multiple Myeloma) என்னும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு, அதற்கெதிரான
போராட்டத்தில் உருக்குபோன்று நின்று வெற்றி பெற வைத்ததில், நிக்கொலாய் ஒஸ்த்ரோவ்ஸ்க்கியின்
‘வீரம் விளைந்தது’ நாவலுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.
நான் இந்த நாவலை
என் பதின்பருவ வயதில் படித்திருந்தேன் என்ற போதிலும், பின்னர் 1976இல் கட்சியில் சேர்ந்தபின்
இதனை நான் பல முறை படித்திருக்கிறேன். இப்போது 2024 அக்டோபர் 2 அன்று 76 வயதைக் கடந்து
77ஆவ வயதில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இப்போது மீண்டும் அந்த நாவலைப் படித்து
முடித்திருக்கிறேன். இப்போது படித்தபோதும் எவ்வளவு விஷயங்களை அது எனக்குக் கற்பித்திருக்கிறது.
ஒவ்வொரு தோழரும்
இந்நாவலை அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள
இந்நாவலில் சில பக்கங்களை உங்கள் பார்வைக்காகப் பகர்கிறேன். அவசியம் படியுங்கள்:
“மனிதனது மதிக்க முடியாத இனிய உடமைகளில்
சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோளில்லாமல்
பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பு அளிக்காத வகையில் அவன் சீராக
வாழ வேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு
இடமில்லாத வகையில் அவன் நேராக வாழ வேண்டும். உலகத்தின் தலைசிறந்த லட்சியத்துக்காக,
மனிதகுலத்தின் விடுதலைப் போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்துக்காக, நான் என் வாழ்வு
முழுதையும், சக்தி அனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்பொழுது கூறும் உரிமைபெறும்
வகையில் அவன் வாழ வேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக்கூடும்
ஆதலால், மனிதன் தன் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” (பக்கம் 316)
சமுதாயம் புரட்சிகரமாக
மாறிக்கொண்டிருப்பதைக் கண்ணுறும் ஒரு கிராமத்தில் உள்ள வண்டிக்காரன், சமுதாயத்தில்
வாலிபர் சங்கத் தோழர்கள் செயல்படும் விதம் குறித்து அதிர்ச்சியடைந்து கூறும் கூற்றைக்
கவனியுங்கள்:
“இந்தக் கம்ஸமோல் இளைஞர்கள் எல்லோரும் எங்கிருந்து
வந்தார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆட்களை நான் முன்னால் பார்த்ததே
இல்லை. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைதான் இவர்களையெல்லாம் கிளப்பி விட்டிருக்கிறாள். …
இளம் வயதுதான். ஆனாள் மிகவும் தீயவள். கிராமத்தில் உள்ள பெண்களையெல்லாம் தூண்டி விடுகிறாள்.
அவர்களுக்கு ஏதேதோ அபத்தமான விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொடுக்கிறாள். இதனால் கலகமே
உண்டாகிறது. முன்போல ஒருவன் தனது சொந்த மனைவியை அடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கெட்டுவிட்டது!
ஏண்டா வழியிலே போகிற தொல்லையை வாங்கிக் கட்டிக்கொண்டோமென்று வருந்த வேண்டியிருக்கிறது.
பொதுஜன நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என்று வீரம் பேசுகிறாள். அவள் வயதுப் பெண்களோ,
தத்தம் கணவன்மாரிடம் சட்டம் பேசுகின்றனர்! அடித்தால், விவாகரத்து செய்து விடுவேனென்று
அச்சுறுத்துகின்றனர். என் மனைவி கன்கா, மகா சாது! வாயில்லாப் பூச்சி! இப்பொழுது அவள்
மாதர் சங்கத்தில் சேர்ந்து பிரதிநிதியாக வேறு ஆகிவிட்டாள்! பிரதிநிதி என்றால் தலைவி
மாதிரியாம். கிராமத்துப் பெண்கள் எல்லாம் அவளிடம் வந்து ஆலோசனை கேட்கின்றனர். இதை அறிந்தவுடன்
எனக்கு ஆத்திரம் வந்தது. அந்தக் கோபத்தில்
அவளைச் சவுக்கால் அடிப்பதற்கு ஆயத்தமானேன். கடைசியில் எப்படியாவது தொலையட்டுமென்று
விட்டுவிட்டேன்! ஆனால் வீட்டு வேலை போன்ற விஷயங்களில், கன்காவிடம் குற்றம் காண முடியாது.” (பக்கம் 384-385)
நண்பர்களே! நாவலில்
தோழர்கள் ரீத்தாவுக்கும், பாவெலுக்கு இடையில் உள்ள ஆழ்ந்த நட்பு குறித்தும், பாய்லோ
என்ற ஓர் அயோக்கியன் தோழர் என்ற பெயரில் பெண் தோழர்களிடம் மிகவும் இழிவாக நடந்துகொள்வதைச்
சகிக்க முடியாது பாவெல் அவனை அடித்து நொறுக்குவதையும் முன்பே பதிவிட்டிருக்கிறேன்.
பாய்லோ பற்றிக் குறிப்பிடுகையில் பாவெல் குறிப்பிடுவதாவது:
“ஒரு புரட்சிக்காரன், ஒரு கம்யூனிஸ்ட்,
அதே சமயத்தில் ஆபாச மிருகமாகவும், துஷ்டப் போக்கிரியாகவும் இருக்க முடியுமென்பதை நான்
ஒருபொழுதும் நம்ப முடியாது. நமது கம்யூனிஸ்ட் தோழர்கள், சொந்த வாழ்வில் எப்படி நடந்துகொள்ள
வேண்டும் என்ற பிரச்சனையில் கவனம் ஏற்பட்டிருப்பதே, இந்த விவகாரத்தின் ஒரு நல்ல அம்சம்.” (பக்கம் 446)
அவை
bookday.in இணையப் பக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றையும் தோழர்கள் படிக்க வேண்டும்.
இறுதிப் பகுதியை மட்டும் கீழே தருகிறேன்.
மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்
பாவெல், தன் நண்பன் அக்கீமிடம் கூறுவதைக் கேளுங்கள்.
அக்கீமின் கரத்தைத்
தன் மார்புக் கூட்டின்மேல் இதயம் மந்தமாக அடித்துக்கொண்டிருந்த இடத்தில் வைத்துக்கொண்டே,
கூறினான். “என் இதயம் இங்கு அடித்துக்கொண்டிருக்கும்வரை
என்னை எவராலும் கட்சியிலிருந்து பிரிக்க முடியாது. மரணம் ஒன்றுதான் என்னைக் கட்சி அணியிலிருந்து
அகற்றவல்லது. இதை மறந்துவிடாதே, நண்பா.”
(பக்கம்472)
பாவெலின் உடல்
மிகவும் நலிவுற்றிருப்பதைக் கண்டு, கட்சி அவனை இலக்கியத்தொண்டில் பயன்படுத்த முடியுமா
என்று ஆராய்ந்தது. கட்சிப் பத்திரிகையின் ஆசிரியர் குழு அவனை ஆராய்ந்தது. அவன் எழுதியவற்றைப்
பார்த்துவிட்டு, அவர்கள் கூறியதாவது:
“தோழர் கர்ச்சாகின், உங்களுக்குக் கணிசமான
திறமை இருக்கிறது. ஓரளவுக்குக் கடுமையாக உழைத்தால், நீங்கள் நன்றாக எழுத முடியும்.
ஆனால், தற்சமயம் உங்களது இலக்கணமெல்லாம் தப்பும் தவறுமாயிருக்கிறது. உங்களுக்கு ருஷ்ய
மொழியில் போதுமான ஞானம் இல்லை என்பதை உங்கள் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. அதில் ஆச்சரியம்
இல்லை. ஏனென்றால், மொழிப்பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு இருந்ததில்லை. துரதிஷ்டவசமாக,
உங்களிடம் திறமைஇருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. உங்களது
கட்டுரைகளின் உள்ளடக்கத்தை மாற்றாமல் அவற்றைத் திருத்தி எழுதினால், அவை சிறப்பாய் அமையும்.
ஆனால் அதற்கு மற்றவர் கட்டுரைகளைத் திருத்தி எழுதும் தரமுள்ளவர்கள் தேவைப்படுகிறார்கள்” என்று ஆசிரியர் விளக்கினார்.
பின்னர் பாவெல்
சரியாக மொழிப் பயிற்சி மேற்கொண்டு கசடறக் கற்றுக்கொண்டு கட்சி அணிக்குத் திரும்பினான்.
அதன் விளைவே இந்த வீரம் விளைந்தது நாவல்.
அவசியம் படியுங்கள்
தோழர்களே!



