Friday, December 21, 2012

அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததால் மெக்சிகோ நாட்டின் இன்றைய கதி -அருண் குமார்




இந்தியாவும் மிக விரைவில் வட அமெரிக்க நாடுகளின் கதிக்கு ஆளாகிடலாம். அதாவது அந்நாடுகளில் இதுருந்த சிறிய வர்த்தக நிறுவனங்கள் மங்கி மறைந்துவிட்டன. விவசாயம் வீழ்ச்சியடைந்து விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது.
மெக்சிகோ நகரில் உள்ள ஓட்டலுக்கு மெக்சிகோ விமானநிலையத்திலிருந்து டாக்சியில் என்னை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் ஒரு கணினி பகுத்தாய்நர்  (System Analyst) ஆவார். என்னை விமான நிலையத்திலிருந்து ஓட்டலுக்குக் கொண்டு செல்வதற்கு இடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தில் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தின் அவல நிலை குறித்தும் சரளமான ஆங்கிலத்தில் அவர் என்னிடம் தெரிவித்து விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் என்னிடம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஏனெனில், தானும் தன்னைப்போன்றவர்களும் மெக்சிகோவில் படும் துன்பங்கள் குறித்து அப்போதுதான் தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர் நினைத்தார். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும், தனக்கு ஒரு சரியான வேலை கிடைக்காதது குறித்தும் அவர் என்னிடம் முறையிட்டார். தன் குழந்தைகளுக்கும் இதுவே கதி என்று அவர் கூறினார். அமெரிக்காவையும் அதன் கொள்கைகளையும் சமூகத்தில் நிலவும் லஞ்ச ஊழல்களையும் அவர் சாடினார். அதன்பின் மெக்சிகோவில் நான் தங்கி இருந்த ஒரு வார காலத்திலும் எனக்கு இதுபோன்று எண்ணற்ற அனுபவங்கள் ஏற்பட்டன.
பெரும் மால்கள் (Big Malls)
டாக்சி பல வர்த்தக நிறுவனங்களையும், மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும் கடந்து சென்றது. ஆயினும்  சிறிய கடைகள் எதையும் நான் பார்க்கவில்லை. மிகப் பெரிய மால்கள் (மால் என்றால் மிகப்பெரிய வணிக வளாகம் ஆகும். திரையரங்குகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உட்பட அனைத்து வகையான வர்த்தக நிறுவனங்களும்  உள்ள இடமாகும். புதுதில்லி, மும்பை, சென்னை போன்ற இடங்களில் ஏற்கனவே முளைத்துவிட்டன.), ஆட்டோமோபைல் டீலர்கள், பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரண்டுகள், மருந்துக் கடைகள், கார் ரிப்பேர் கடைகள் இருந்தன. குடியிருப்பு காலனிகளிலாவது சிறிய கடைகள் இருக்குமா என்று என்று தெரியவில்லை. எனது நண்பர் ஒருவர் 1980 மத்திய வாக்கில் இந்தியத் தூதரகத்தில் வேலைக்குச் சேர்ந்த என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறியபோது, தான் வேலைக்குச் சேர்ந்த சமயத்தில் எங்கு பார்த்தாலும் பழக் கடைகள் இருந்ததாகவும்மாலையில் ஒருவர் தனக்கு வேண்டிய பழங்களை வாங்கிச் சாப்பிட முடியும் என்றும்ஆனால் இப்போது அத்தகைய கடைகளை எங்கேயுமே பார்க்க முடியவில்லை என்றார். இந்தியப் பெருநகரங்களின் கதியும் எதிர்காலத்தில் இதுதானோ என்று நான் வியந்தேன்.
சிறிய கடைகள் இல்லாதது என்னை மிகவும் வியக்க வைத்ததெனில், மிகவும் ஆழமான முறையில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  மெக்சிகோவும் 1994 இலிருந்தே நாஃப்டா  எனப்படும்  வட அமெரிக்க சுதந்தர வர்த்தக ஒப்பந்தத்தில் ஓர் அங்கமாக இருந்து, அந்நிய  முதலீட்டை இறக்கிய நாடாகும்.  அமெரிக்காவிலிருந்து பல தொழிற்சாலைகள் வட மெக்சிகோவிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்துதான் அமெரிக்கா மற்றும் கனடிய சந்தைகளுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. மெக்சிகோ  நகரம் கார்களின் வருகையால் பரபரப்பாகியது.   இந்தியாவுடன் ஒப்பிடுகையில்  தனி நபர் வருமான த்தில், நம்மைவிட பத்து மடங்கு அதிகமான அளவில் இருந்தது.  ஒன்றன் மீது ஒன்றாக மேம்பாலங்கள் நிறைய கட்டப்பட்டபோதிலும் போக்குவரத்து நெருக்கடியும் மிகுந்திருந்தது. அதிகாலை நேரத்தில் 25 நிமிடங்களில் கடக்கும் தூரத்தை, பகல் நேரங்களில் கடக்க வேண்டுமானால் இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாகும். நிலப்பரப்பின் பெரும்பகுதி தண்ணீருக்கு மேலே இருந்ததால், வானுயர் கட்டடங்களைக் கட்டவேண்டுமானால் மிகவும் செலவு செய்து அஸ்திவாரங்களை அமைக்க வேண்டியிருந்ததால், நிறைய கட்டடங்கள் ஒன்று அல்லது இரண்டு மாடிக் கட்டடங்களாகவே கட்டப்பட்டன. எனவே நகரத்தின் பரப்பளவு விரிவானதாக மாறியது.
மெக்சிகோ நகரத்திற்கு 1980களின் மத்தியவாக்கில் சென்றவர்கள் நிறைய சிறிய ஸ்டோர்கள் இருந்ததை நினைவு கூர்கிறார்கள். ஆனால் இப்போது உலகின் மிகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம் என்பவருக்குச் சொந்தமான சன்பார்ன் தொடர் ஸ்டோர்கள்தான் அங்கே காணப்படுகின்றன. சன்பார்ன் ஸ்டோர்களில் முதல் தளத்தில் உணவு விடுதி, ஒரு பொருள் அன்பளிப்பு கடை (gift stores), ஒரு மருந்துக் கடை இருக்கின்றன. மற்ற கடைகள் தரைத் தளத்தில் இருக்கின்றன. நான் ஒரு இளைஞனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குடியிருப்புப் பகுதிகளின் முனைகளில் இத்தகைய ஸ்டோர்கள் இருந்ததைத் தான் பார்த்ததில்லை என்று கூறினார்.
நான் தங்கியிருந்த ஓட்டலின் சன்னலிலிருந்து பார்த்தபோது பெரிய பெரிய மால்களைத்தான் பார்க்க முடிந்ததே தவிர, என்னால் சிறிய ஸ்டோர்கள் எதையும் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் காணப்படுவதைப் போலவே சியர்ஸ் , வால்மார்ட், மெக்டொனால்டுகள்தான் எந்தப் பக்கம் பார்த்தாலும் காணப்பட்டன.  குடியிருப்புப் பகுதிகளிலும் சிறிய ஸ்டோர்கள் எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. அங்கும்வட அமெரிக்காவின் செவன் இலெவன்ஸ்  என்னும் நிறுவனத்தின் கடைகள்தான் காணப்பட்டன. ஏழைகள் வாங்குவதற்காக அங்குள்ள நடைபாதைகள் மற்றும் சந்தைகளின் அருகே சிறு சிறு கடைகள் இருந்ததைப் பார்த்தேன். மால்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நடைபாதைகளில் உள்ள இக்கடைகளுக்கு வந்து உணவுப் பொருள்களை வாங்கி உண்பதையும் பார்த்தேன். ஏனெனில் மால்களில் உள்ள விலைகள் அவர்களின் சம்பளத்திற்குள் வாங்கி உண்ணக்கூடிய அளவிற்க இல்லாத நிலை.
இவ்வாறு சிறிய கடைகளைச் சுற்றிப் பார்த்த சமயத்தில். எனக்கு வழிகாட்டியாக வந்தவர், மக்கள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்துதான் பொருள்களை வாங்குவார்கள் என்றும் ஏனெனில் இங்குதான் அவை மலிவாகக் கிடைக்கின்றன என்றும் கூறினார்.
நான் மெக்சிகோ நகருக்கு வெளியே இருந்த டியோடிஹூவாகான் என்னும் பிரமிடுகளைப் பார்க்கச் சென்றேன்.  அங்கே இருந்த சூரியக் கடவுள் என்னும் பெரிய பிரமீடு, எகிப்தில் உள்ள பெரிய பிரமீடுகளை விட பெரியதாக இருந்தது. மூன்று மைல் நீளமும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களையும் கொண்ட அப்பகுதி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதன நகரத்தின் ஒரு பகுதியாகும். அந்த இடங்களைப் பார்க்கும்போது மிகவும் உத்வேகம் அளித்தது என்றாலும்,ஒவ்வொரு இடத்தையும் பல மணி நேரம் ஏறி இறங்குவதற்குள் மிகவும் களைத்துப்போய்விட்டது.  முடிவில், சாப்பிடுவதற்காக பக்கத்தில் இருந்த நகரத்திற்குச் சென்றோம். அதன் நுழைவாயிலில் ஓர் அழகான வளைவு இருந்தது. தெருக்களில் எண்ணற்ற சிறய ஸ்டோர்கள் வரிசை வரிசையாக இருந்தன.
கிராமக் குடியரசு
அடுத்த நாள்மொலிலோஸ் என்னுமிடத்தில் இருந்த தால்னேபாண்ட்லா  என்னும் கிராமத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். இது ஒரு புரட்சிகர கிராமமாகும். என்னை விருந்தோம்பி உபசரித்த அல்வாரோ என்பவர் ஒரு பொருளாதாரப் பட்டதாரியாவார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டார்.
அங்கிருந்த விவசாயிகளுடன் இணைந்து 4000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அம்மலைக் கிராமத்தில் பழ வகைகளைப் பயிர் செய்து வந்தார்.
இக்கிராமம் லஞ்சஊழல் அரசியல் கட்சிகளை நிராகரித்துவிட்டது. கிராமவாசிகள் தங்கள் சொந்தத் தலைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். ஓர் அரசியல் கட்சியின் பிரமுகரான அந்நகராட்சியின் தலைவரை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அல்வாரோவும் மற்றும் சிலரையும் பயங்கரவாதிகள் என்று பிரகடனம் செய்து அரசாங்கம்  அவர்களைக் கைது செய்திட துருப்புக்களை அனுப்பி வைத்தது. எனவே அவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டியதாயிற்று. மெக்சிகோ நகரம் முழுதும் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பல்கலைக் கழகங்களில் இவை நடந்தன. பின்னர் அரசாங்கம் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கைவிட்டு, ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தது. இங்குள்ள நிலம் முழுவதும் இங்குள்ளவர்களுக்கே சொந்தம் என்றும், வெளியாள் எவருக்கும் இவற்றை விற்க முடியாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு பேராசிரியர் தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், கிராமத் தலைவர்கள் எனக்கு கிராமத்தில் விளைந்த பொருள்களைக் கொண்டு விருந்து படைத்து நன்கு உபசரித்தார்கள். அவர்களது உணவு வகைகளும் மிகவும் சுவையாக இருந்தது. ஆல்வாரோகாந்திஜி குறித்தும் அவருடைய அஹிம்சை தத்துவம் குறித்தும் ஒரு நவீன சமுதாயத்தில் அதை எப்படிப் பிரயோகிக்க முடியும் என்றும் என்னிடம் கேட்டார். மெக்சிகோவில் காந்திஜிக்கு ஒரு தனி இடம் இருப்பதுபோல் தோன்றுகிறது. அங்கிருந்த புத்தகக் கடைகளில் பலவற்றின் பெயர்கள் காந்தி என்று அழைக்கப்பட்டன.  காந்திஜியின் பெயரால் பல சாலைகளும் பூங்காக்களும் கூடக் காணப்பட்டன.
அமெரிக்காவுடனும், நாஃப்டா-வுடனும் விவசாயிகள் மிகவும் நிலைகுலைந்து போயுள்ளனர். சுதந்திர சந்தையானது அமெரிக்காவிலிருந்து மான்ய விலையில் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து தங்கள் விவசாயத்தை அழித்துவிட்டது என்று அவர்கள் முறையிட்டனர். இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 4 விழுக்காடு மட்டுமே என்றனர். இவ்வாறு, நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வந்த விவசாயமும், சில்லரை வர்த்தகமும் கடந்த இருபதாண்டுகளில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதன் காரணமாகத்தான் வேலையில்லாத் திண்டாட்டமும் (5.2 விழுக்காடு அளவிற்கு) அதிகரித்துள்ளது. தங்களுடைய கல்வித் தகுதிக்குக் குறைவான வேலைகளில் 25 விழுக்காடு அளவிற்கு வேலை பார்க்கின்றனர்.
நான் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன். தன் மகனுக்கு வேலை கிடைத்திருக்கிறது என்றால் அது அவனுக்குள்ள தொடர்புகளை வைத்துத்தான் என்றார்.  மற்றொருவர் என்னிடம், தன் பையன் பி.எச்டி. செய்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் எதிர்காலம் என்னாகுமோ என்று மிகவும் கவலையாக இருக்கிறது என்றும் கூறினார்.  அந்நிய நேரடி முதலீடு அதிகம் வந்தும் ஏன் இந்த நிலை? வேலையில்லாத் திண்டாட்டம் ஊதியங்களைக் குறைத்துவிட்டது. பல்கலைக் கழகத்தில் நான் சந்தித்த உதவிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கூறுகையில், தான் அளித்திடும் விரிவுரைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என்றும், இவ்வாறு நான் பெறும் ஊதியத்தைக் கொண்டு, கைக்கும் வாய்க்குமே போதவில்லை என்றார். மேலும் அவர் என் நிலைமையைவிட டாக்சி டிரைவரின் நிலைமை மேல் என்றார்.
கொள்ளைக் கும்பலின் ஆட்சி
அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் வந்து கொட்டப்படும் வட மெக்சிகோவில், கொள்ளைக் கும்பலின் ஆட்சியே நடைபெறுகிறது. சட்டமின்மையும் ஒழுங்கின்மையும் அங்கே தலைவிரித்தாடுகிறது. அரசாங்கம் என்ற ஒன்று அங்கு இருப்பதாகவே தெரியவில்லை. வேலையில்லா இளைஞர்கள் கொள்ளைக் கும்பலில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். போதைப்பொருள்கள் கடத்தல், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் புலம் பெயர்ந்து செல்லுதல் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.  இவ்வாறு புலம்பெயர்ந்து செல்லுதலும் வேலைவாய்ப்பின்மையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனுப்பி வைத்திடும் பணமும், பெட்ரோலியம் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறையும்தான் மெக்சிகோ பொருளாதாரத்தை ஓரளவிற்குக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி ஆழமாகாமல் ஓரளவிற்குத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.
மெக்சிகோவின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக, அது அமெரிக்காவிற்கு மிகவும் அருகில் இருப்பது, அதனுடனான சுதந்திர வர்த்தகம், அங்கிருந்து வரும் முதலீடுகள் ஆழமான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது, பாரம்பர்யமாக இருந்து வந்த விவசாயத்தை வீழ்ச்சியடையச் செய்து விட்டது, மெட்ரோ நகரங்களில் இருந்த சில்லரை வர்த்தகர்களுக்கு முடிவு கட்டிவிட்டது.  நான் மெக்சிகோவில் இன்று நான் பார்த்த காட்சி, இந்தியாவிற்கும் வர வெகு காலமாகாது.
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்சிகோவைவிட நம் நாட்டில் நெருக்கடி நிலைமை மேலும் மோசமானதாக இருக்கும்.  ஏனெனில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து சென்றிட அண்டை நாடாக அமெரிக்கா இங்கே இல்லை. பெட்ரோல் உற்பத்தியோ அல்லது சுற்றுலாத்துறையோ மெக்சிகோவில் இருப்பதுபோல் இங்கு கிடையாது. எனவே நிலைமைகள் இங்கே மெக்சிகோவைவிட மிகவும் மோசமானதாக இருந்திடும்.
(கட்டுரையாளர், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர்)
தமிழில்: ச.வீரமணி