Saturday, October 18, 2008

சங்பரிவாரக் கும்பலின் காட்டுமிராண்டி நடவடிக்கைகளுக்கு எதிராக
















புதுடில்லி, அக்.18-
சங் பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டிருக்கும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் மதச்சிறுபான்மையினரின் பரந்த மேடையைக் கட்டிடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.
தலைநகர் டில்லியில் உள்ள மாவலங்கார் அரங்கத்தில் சனியன்று மாலை வகுப்புவாதம் மற்றும் ஜனநாகத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகச் சிறப்புமாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, தெலுங்கு தேசக் கட்சியின் சார்பில் எர்ரநாயுடு, டில்லி கிறித்துவ கவுன்சில் செக்ரடரி ஜெனரல் ஜான் தயால், ஜாமியா மிலியா பல்கலைக் கழகத் துணை வேந்தர் நூருல் ஹாசன், மூத்த பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், இளம் பத்திரிகையாளர் சீமா முஸ்தபா மற்றும் டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கன்செஸ்ஸா மற்றும் பலர் உரையாற்றினார்கள். சிறப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது பிரகாஷ்காரத் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
மதச்சிறுபான்மையினரைக் காப்பதற்கான போராட்டம் என்பது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று பொருள். பல்வேறு மாநிலங்களிலும் சங்பரிவாரக் கும்பல் மதச்சிறுபான்மையினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் தடுத்திடத் தவறிவிட்டன. மத்திய அரசும் உரியமுறையில் தலையிட மறுக்கிறது.
தேசப்பற்று என்ற பெயரில் பஜ்ரங்தளம் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராயில்லை.
காங்கிரஸ்கட்சி தலைமையில் உள்ள ஐமுகூ அரசாங்கம் இதே பாதையைத் தொடருமானாலும் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மேலும் அது செல்வாக்கு இழக்கும் என்பது நிச்சயம்.
பெரும்பான்மை மதவெறியர்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட, ஒரு வழிமுறையாக இன்று இத்தகைய பரந்த மேடை டில்லியில் உருவாகி இருக்கிறது. இதுபோன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்த மேடையைக் கட்டிடுவோம்.
இவ்வாறு மதச்சார்பற்ற சக்திகளும், மதச்சிறுபான்மையினரும் ஒன்றுபட்டால் நாட்டின் மதச்சார்பின்மையைக் காத்திட முடியும், நாட்டின் ஜனநாயகத்தைக் காத்திட முடியும், நாட்டின் மதச் சிறுபான்மையினரையும் காத்திட முடியும், பெரும்பான்மை மதவெறி சக்திகளின் அட்டூழியங்களுக்கு மிக எளிதாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும். அந்தத் திசைவழியில் இன்று டில்லியில் தொடங்கியுள்ள இந்தத் திசைவழியில் முன்னேறுவோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
தொடர்ந்து மதச்சிறுபான்மையினரைக் காத்திட உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், மதவெறித் தீயை உசுப்பிவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும், பயங்கரவாத நடவடிக்கைசகளில் ஈடுபடும் அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, October 15, 2008

சிங்கூர்: மக்கள் விரோத அரசியலைத் தோற்கடித்திடுவோம்





மேற்கு வங்கத்தில் இடது முன்னணிக்கு எதிரான சக்திகள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி தலைமையில், சிங்கூரிலிருந்து டாடா கார் உற்பத்தித் தொழிற்சாலையை விரட்டியடிப்பதில் துரதிஷ்டவசமாக வெற்றி பெற்றுள்ளன.
இவ்வாறு, இழப்பீட்டுக் காசோலையை பெற மறுத்த பத்து சதவீதத்தினருக்கும் குறைவானவர்களின் ஆதரவுடன், அப்பகுதி மக்களுக்கு முன்னேற்றகரமான வாழ்வாதாரத்தையும், எதிர்கால சுபிட்சைத்தையும் அதேபோன்று தொழில்மயத்தையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றனர். நாம் இப்பகுதியில் முன்பே குறிப்பிட்டிருந்ததைப்போல, நந்திகிராம் மற்றும் சிங்கூரில் இவர்கள் மேற்கொண்ட சீர்குலைவு வன்முறைகள் அரசியலையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களின் மூலமாக திரிணாமுல் காங்கிரசும், மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களுடைய ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இறுதியாக, எத்தகைய அரசியல் தங்களுக்குத் தேவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மேற்கு வங்க மக்களேயாவர்.
மமதா பானர்ஜி, நானோ கார் உற்பத்தித் திட்டத்தை மட்டும் வங்கத்திலிருந்து விரட்டியடிக்கவில்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதானக் கட்சியான பாஜகவின் விசுவாசமிக்க கூட்டணிக்கட்சி என்ற முறையில், நானோ திட்டத்தை குஜராத்தில் அமைப்பதற்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறார். அவர் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பதன் மூலம், பாஜகவின் நரேந்திர மோடி அரசாங்கம் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள மதவெறிப் படுகொலைகளை, சரி என்று ஏற்றுக்கொள்கிறார் என்பதை நினைவிற் கொள்க.
வங்கத்திலிருந்து, டாடா தன்னுடைய நானோ கார் உற்பத்தித் திட்டத்தை வேறிடத்திற்கு ஏன் எடுத்துச் சென்றுள்ளார் என்பது குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல், பெரு முதலாளிகளின் கார்பரேட் ஊடகங்கள், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறை வாரி இறைப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ‘‘மமதாவை மட்டும் குறை சொல்லாதீர்கள்’’ என்று தி எகனாமிக் டைம்ஸ் அலறுகிறது. வேறு சிலர் சற்றே தணிந்த குரலில் குறை சொன்னாலும், மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும்தான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் மமதா பானர்ஜியை, கோலியத்திற்கு எதிராகப் போராடிய டேவிட் போன்றவர் என்றும், தி இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு அவரை ‘‘இந்தியாவின் காப்பாளர்’’ என்றும் புகழாரம் சூட்டியிருக்கின்றன. இதனை அந்த ஏடு ‘‘நிலத்தை ஒப்படைக்க விரும்பாத விவசாயிகளை’’ காவல்துறையினர் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ படத்தின் கீழ் வந்த அடிக்குறிப்பை ஆதாரமாகக் காட்டி தன் புகழாரத்தை நியாயப்படுத்தி இருக்கிறது. அவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்ற போதிலும், இத்தகைய இழிவான செயல்களில் அவை இறங்கின.



இதுபோன்ற சித்தரிப்புகள் நமக்கு 1970களின் ஆரம்ப காலங்களில் வியட்நாமுக்கு எதிராக சைகோனை அமெரிக்க ராணுவத்தினர் முற்றுகையிட்ட சமயங்களில், பாங்காக்கிலிருருந்த பிரஸ் கிளப் ‘‘நேரில் கண்ட காட்சிகளாக’’ வெளியிட்ட சாட்சியங்களைத்தான் நினைவுபடுத்துகின்றன. ஆனால் நடந்தது என்ன? இறுதியில் அமெரிக்காவின் இராணுவத்தினை, நிர்மூலமாக்கி, சைகோனையும் நாட்டின் பிற பகுதிகளையும் அமெரிக்காவிடமிருந்து வென்றெடுத்தது வியட்நாம்.
இடதுசாரிகளுக்கு எதிராக இத்தகைய கடுஞ்சொற்களை இவை பிரயோகிக்கும் அதே சமயத்தில், சில அடிப்படைப் பிரச்சனைகளும் முன்னுக்கு வந்துள்ளன. முதலாவதாக, இடது முன்னணி அரசாங்கம், தரிசு நிலத்தை கையகப்படுத்துவதற்குப் பதிலாக, விளை நிலங்களை ஏன் கையகப்படுத்தின? விடை மிகவும் எளிதான ஒன்றுதான். மேற்கு வங்கத்தில் தரிசு நிலம் என்று இருப்பது இரு சதவீதத்திற்கும் குறைவாகும்.


இரண்டாவதாக, இடது முன்னணி அரசாங்கம் ஏன் நில உரிமையாளர்களுக்கு டாடா நிறுவனம் மூலமாக பணம் கொடுக்க முயலவில்லை? இதற்கும் விடை மிக எளிது. நாட்டில் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு ஒரு புதிய மத்தியச் சட்டம் தேவைப்படுகிறது. 1894இல் பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்தபோது, ரயில் பாதை அமைப்பதற்காக, நாடு முழுதும் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலமாகத்தான் தற்போதும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. (கடந்த மூன்றாண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.) தற்காலத்திற்கொவ்வாக இத்தகைய சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. அவ்வாறு நிலம் அளிப்போருக்கு இழப்பீடு தரப்படுவதுடன், மேற்படி தொழிற்சாலையில் வேலை உத்தரவாதம் அளிப்பதற்கும் வகை செய்யக்கூடிய வகையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். இதனைச் சட்டரீதியாகச் செய்திட வேண்டியிருக்கிறது. இதனை தனிப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் விருப்பத்திற்கு மேற்கொள்ள அனுமதித்திட முடியாது. இதற்கு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டாக வேண்டியது அவசியம்.


துரதிர்ஷ்டவசமாக, கடந்த நான்கு ஆண்டு காலமாகவே, குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கையகப்படுத்தல் பிரச்சனை மிக உக்கிரமாக வந்த சமயத்திலேயே, இவ்வாறு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போதாவது அதனை அவசரமாகச் செய்திட வேண்டியது தேவையாகும்.


மூன்றாவதாக, டாடா நிறுவனத்திற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால்தான் அந்நிறுவனம் சிங்கூரிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று என்று ஒரு பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது. ரத்தன் டாட்டாவே ஒப்புக்கொண்டிருப்பதுபோல இது காரணமல்ல. உண்மையில், போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாநில அரசு தன் கடமையைச் செவ்வனே செய்து வந்தது. ஆயினும், டாட்டா ஒரு நிலைபாட்டினை மேற்கொண்டார். அதாவது, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்காவிடில், தாங்கள் சிங்கூரில் தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்று கூறினார். நிச்சயமாக இத்தகு நிலைபாட்டினை ஏற்காமல் ஒருவர் மறுத்திட முடியும். ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒருவர் வீடு கட்டுகிறார் என்றால், அங்குள்ள அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு தந்தால்தான், தன் வீட்டில் வந்து எதையும் திருட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தால்தான் வீடு கட்டுவேன் என்று எவரும் கூறுவதில்லை. ஆயினும், மமதா பானர்ஜியைப் போன்றே, டாட்டாவிற்கும் பகுத்தறிவுக்கொவ்வாத நிலைபாட்டினை மேற்கொள்வதற்கு முழு உரிமையும் உண்டு.


மொத்தத்தில், வங்கமும் அதன் மக்களும் தற்காலிகமாக அதிலும் குறிப்பாக இந்தத் திட்டத்தைப் பொறுத்து இதனால் ஏற்பட இருந்த வாய்ப்பு வளங்களைப் பெற மறுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் நாம் முன்பே குறிப்பிட்டிருப்பதைப் போல, வங்கமும் அதன் மக்களும் முன்னேற வேண்டுமானால் அங்கு மிகவிரைவான முறையில், நிலச்சீர்திருத்தங்களால் விளைந்துள்ள பயன்பாடுகளை ஒருமுகப்படுத்தி, வேளாண்மை உற்பத்தியை அதிகப்படுத்தி, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில்மயத்தை ஏற்படுத்துவதும் அவசியம். இடது முன்னணி மற்றும் மக்கள் மத்தியில் நீண்ட நெடிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு இம்முடிவுக்கு இடது முன்னணி வந்திருக்கிறது. இப்பிரச்சனையை முன்வைத்துத்தான் சென்ற சட்டமன்றத் தேர்தலை இடது முன்னணி சந்தித்தது. இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் இதனை மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையு.டன் தேர்வு செய்தார்கள். இப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறதென்றால், அது மக்களின் உறுதிமொழியை மறுதலிப்பதேயாகும்.
எனவே, தாங்கள் அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, அதற்கு எதிர்ப்பு வந்தால் அதனை நிராகரிப்பதா அல்லது அதனை ஏற்றுக்கொள்வதா என்று முடிவெடுப்பதும் வங்க மக்களேயாவர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நானோ திட்டத்தை வங்கத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவதற்கு எந்த அரசியல் முன்வந்ததோ, அந்த அரசியலையும் வங்கத்தின் மற்றும் அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, வேறு இடத்திற்கு அப்புறப்படுத்துவது அவசியமாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

மன்மோகன்சிங்கிற்கு ஜோதிபாசு கடிதம்

புதுடில்லி, அக்.14-என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு கடிதம் எழுதியுள்ளார்.

தலைநகர் டில்லியில் திங்கள் அன்று தேசிய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர், ஜோதிபாசுவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை விளக்கியும், நிகழ்ச்சிநிரல் தொடர்பாக சில பரிந்துரைகளை விளக்கியும் ஜோதிபாசு, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:

‘‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி அதனுடைய நிகழ்ச்சிநிரலையும் அனுப்பியிருந்தீர்கள். என் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதன் காரணமாக என்னால் நேரடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆயினும் நிகழ்ச்சிநிரலில் கண்டுள்ள விவரங்கள் குறித்து ஒருசில பரிந்துரைகளை கூட்டத்தில் விவாதிப்பதற்கா இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.தேசிய ஒருமைப்பாடு குறித்து துல்லியமான பரிந்துரைகள் பலவற்றை எங்கள் கட்சியின் சார்பில் ஆட்சியில் இருந்து அத்துணை அரசாங்கத்திற்கும் அவ்வப்போது அனுப்பி வந்திருக்கிறோம். ஆயினும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் சார்பில் எவ்வித கொள்கைத் திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை. தேசிய ஒருமைப்பாடு ஒரு வலுவான யதார்த்தமானதாக மாற வேண்டுமானால் அரசு தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கை நிலைப்பாடுகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு அரசியல் உறுதி அவசியம். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரே, அரசின் கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் என்று அழைக்கப்படும் பிரதான விதிகள்தான். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்க்கைக்குரிய போதுமான வாழ்வாதாரம், வேலை செய்ய உரிமை, செல்வம் ஒரு பக்கத்தில் குவியா வண்ணம் உள்ள பொருளாதார முறை, கல்வி உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் அனைத்தும் இந்த பிரதான விதிகளில் உள்ளடங்கி இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளில் எதுவுமே அமல்படுத்தப்பட முடியவில்லை. நாட்டில் ஆட்சியாளர்கள் இன்னமும் சமூகப் பொருளாதார முறைகளில் செல்வந்தர்களைச் சார்ந்தே செயல்படுவதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன்பின் ஆட்சி புரியத் தொடங்கி 58 ஆண்டுகள் கழிந்த பின்பும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.நாட்டின் பொருளாதார அமைப்பில் மேற்கூறிய காரணிகளினால், நாடு சுதந்திரத்திற்குப்பின் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்திருக்கிறது. இந்தியா தொழில் மேல்கட்டுமானத்துடன் கூடிய ஒரு விவசாய நாடாகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை நாம் பெற்ற பின்னர், 1950களின் மத்தியில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த போதிலும், அடுத்தடுத்து வந்த காங்கிர° மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைமைகளிலான மத்திய அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்தங்களைச் செய்திட மறுத்து விட்டன. கிராமப்புரங்களில் ஏழை - பணக்காரன் ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே இருக்கிறது. கிராமப்புர விவசாய மக்கள் கடும் துன்பத்திற்காளாவது தொடர்கிறது. கிராமப்புர மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் மத்தியச் சட்டம் ஒன்று இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.தாராமயக் கொள்கையும், ஏகாதிபத்திய ஆதரவு உலகமயக் கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிதிநிறுவனங்கள் சூறையாடிட வழிவகுத்துத் தந்திருக்கிறது. அதிகார வர்க்கம், கல்வி முறை, ஊடகம், கலாச்சாரம் அனைத்திலும் இப்போது அந்நிய மூலதனம் தங்குதடையின்றி, புகுந்து கொண்டிருக்கின்றன. இதனால் பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன என்றும், நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. நிலச்சீர்திருத்தம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி, அவற்றை மக்களுக்கு மறுவிநியோகம் செய்யாதது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிட்டு உருவாக்காதது ஆகியவற்றை சாதிக் குழுக்கள் பயன்படுத்திக் கொண்டு, மக்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார சமத்துவமில்லையென்றால், மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர் அதிலும் குறிப்பாக தலித்துகள் மிக எளிதாக இத்தகைய சாதிய சக்திகளுக்கு இரையாகிவிடுவார்கள், இரையாகியும் இருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பின்தங்கிய நிலைமைகளை வகுப்புவாதம் பயன்படுத்திக்கொண்டு வேருன்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு அவசியம்தான் என்றாலும், குறிப்பாக பொருளாதார வல்லமையைத் தராத நிலையில், இத்தகைய இட ஒதுக்கீடு மட்டும் பிரச்சனைகளைத் தடுத்துவிடாது. பொருளாதாரக் கட்டமைப்பில் அடித்தட்டில் உள்ளவர்கள், சமூகக் கட்டமைப்பிலும் அடித்தட்டில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைத் திணித்தல், விவசாயத்தில் அரசு முதலீட்டை இல்லாமல் ஒழித்தல், விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்தல் - இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டமக்களை சொல்லொணாத் துயரத்திற்குள்ளாக்கி யுள்ளன. இக்காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாநில ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடையாளங்களையும் மேலும் மோசமாக்கி இருக்கிறது.மத்திய - மாநில உறவுகளை மாற்றி அமைத்திட நாங்கள் மிக விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அதன்விளைவாக, திருமதி இந்திராகாந்தி அவர்களால் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் முழுமையாக திருப்தி அளிக்கக்கூடியவை அல்ல என்றாலும், ஒருசில நிதி உறவுகள் தொடர்பாக அதன் கருத்துக்கள் இன்னமும் அமல்படுத்தப்பட வில்லை.மத்திய - மாநில உறவுகள் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும் சில மாநிலங்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தொடர்கிறது. மத்திய அரசின் இத்தகைய நிலைபாட்டினை நாட்டைச் சீர்குலைக்க முயலும் சக்திகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை இனத்தவரின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த ஆணையங்களின் அறிக்கைகள் பலவும் தூதி அடைந்து கிடக்கின்றன. நாட்டைப் பீடித்துள்ள மதவெறி அச்சுறுத்தலை அரசியல் உறுதி மற்றும் நிர்வாகத் திறமை மற்றும் மதச்சார்பற்ற மாண்பினை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் போராடி முறியடித்திட வேண்டும். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக, மதவெறி சக்திகளுடன் சமரசம் மேற்கொள்ளும் போக்கு பரவலாக இருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக சிறுபான்மை வகுப்புவாதம் வளரத் துணை செய்கிறது. இதனால் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட, இப்போது எழுந்துள்ள பலவீனங்களைப் போக்கிட, பல்வேறு பரிந்துரைகளை நாங்கள் அளித்திருக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் - புஜ பலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 1994இல் அமைக்கப்பட்ட ஒன்பது பேர்கள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்பமை அம்சமாக மதச்சார்பின்மை வரையறுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக உள்ள மத்தி மாநில உறவுகளின் திசைவழி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.நிலச்சீர்திருத்தங்கள், உயர்ந்த அளவிலான ஊதியங்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகளில் அரசின் தலையீடுகள் அதிகரித்தல், வேலைவாய்ப்பு பெருகுதல், பொதுத்துகைளைப் பாதுகாத்தல், ஏகாதிபத்திய ஆதரவு தாராளமயக் கொள்கைகளைக் கைவிடுதல், பெண் சமத்துவம், தலித்துகள் - பழங்குடியினர் சமூக விடுதலை, இறுதியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் - இவை அனைத்தும் உள்ளடங்கியதாக நம்முடைய அரசியல் கண்ணோட்டத்தின் உந்துவிசை, இருந்திட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு குறித்த முக்கிய மூலக்கூறு, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையிலிருந்து விலகி இருத்தலாகும். இவை அனைத்தையும் நிறைவேற்ற, மத்திய அரசாங்கம் அரசியல் உறுதியைக் கடைப்பிடித்து, செயலில் இறங்கிட வேண்டும். இல்லாவிடில் நாடு பெரும் ஆபத்திற்குள்ளாகும்.

இவ்வாறு ஜோதிபாசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, October 13, 2008

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



புதுடில்லி, அக். 13-
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் திங்கள் அன்று புதுடில்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
நாட்டின் மிக நெருக்கடியான கால கட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. ஒரிசா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கிறித்துவ சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மத மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதே சமயத்தில், நாட்டின் தலைநகர் டில்லியிலும் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலத் தலைநகர்களிலும்
நடைபெற்ற தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்களும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கடும் சவாலாக எழுந்துள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழ்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூடியுள்ளது. உண்மையில், இக்கூட்டத்தை இதற்கு முன்னமேயே நடத்தி இருக்க வேண்டும். நாட்டில் சீர்குலைந்து வரும் நாட்டு ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் அது தன் பொறுப்பை உணர்ந்து தன் கடமையைச் செய்ததாகக் கூற முடியாது. குறிப்பாக நாட்டின் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் ஒரிசாவில் கிறித்துவ சிறுபான்மை இனத்தினருக்கு எதிரானத் தாக்குதல்கள் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வந்தபோதிலும், அதில் மத்திய அரசாங்கம் தலையிடத் தவறிவிட்டது.
ஆயினும், இக்கூட்டத்திற்காக சுற்றுக்கு விடப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலில் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் அனைத்து மோதல்களும், பதட்ட நிலைமைகளும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. குறுகிய நேரமே நடைபெறக்கூடிய இக்கூட்டத்தில், முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் - அவை என்னதான் முக்கியமான பிரச்சனைகள் என்ற போதிலும் -விவாதிப்பது என்பது நிச்சயமாக சாத்தியமில்லை.
சமூக நீதி, சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், பிராந்திய வெறிக்குத் தீனி போடும் பிராந்திய ரீதியிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சச்சார் குழு அறிக்கை தெளிவுபடுத்தி இருப்பதுபோல் மதச் சிறுபான்மையினர் நலன்களை முன்னேற்றுவதற்குப் போதிய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய இந்த அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தெளிவான முறையில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் முன்பும், பகிரங்கமாகவும் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகள் அனைத்துமே நாளுக்கு நாள் -அதிலும் குறிப்பாக நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கடைப்பிடிக்கத் துவங்கியபின் - சீரழிந்துகொண்டே வந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் அமைக்கப்பட்டிருந்த பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாகக் கைகழுவி விட்டதன் மூலம், பிராந்திய பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தன. அதன் விளைவு, நாட்டின் பல பாகங்களில் பிரிவினை சக்திகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கின்றன. தாராளமயக் கொள்கையின் கீழ் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள நம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மத்திய - மாநில உறவுகள் போற்றப்படவில்லை. ஏழை - பணக்காரர்க்கிடையேயான பொருளாதார இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன, வேலைவாய்ப்புகள் கடுமையாகச் சுருங்கி இருக்கின்றன. இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு குழுக்களுக்கும் இடையே மோதல்கள் கூர்மையாகி, சமூக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டையே கடுமையாகப் பாதித்திருக்கின்றன. பத்தாம்பசலி கோஷமான ‘‘மண்ணின் மைந்தர்’’ கோஷமானது, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் புதிய முறையில் மிகவும் வெறித்தனமாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சிறுபான்மையினர் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் சிபாரிசுகள் பலவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டது. இவ்வாறு இப்பிரச்சனைகள் அனைத்தும் சரியான கண்ணோட்டத்தில் அவசரமாக விவாதிக்கப்படவேண்டும் என்ற போதிலும்கூட, இன்றைய மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இரண்டே இரண்டு அம்சங்கள் குறித்து மட்டும் விவாதிக்க நம்மை நாம் சுருக்கிக் கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.
ஒரிசா, கர்நாடகா மற்றும் பல பகுதிகளில் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடரும் அதே சமயத்தில், அஸ்ஸாமிலிருந்தும் மதவன்முறைச் சம்பவங்கள் குறித்து மிகவும் கொடூரமான அறிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை, 50 பேர் உயிர்ப்பலியாகி இருக்கிறார்கள். இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைத் துறந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலத்தின் மூத்த குடிமக்களான போடோ பழங்குடியினர், உள்ளூர் மக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் மாநிலத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகைய மத மோதல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் மோசமான முறையில் ஊறு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றையும்விட மிகவும் பயங்கரமானமுறையில் சமீபத்தில் வந்துள்ள அறிக்கை காணப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் பைஷா நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு முஸ்லீம்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இங்கே இதுவரை பத்துபேர் மதவெறி வன்முறைக்குப் பலியாகி இருக்கிறார்கள். மகாராஷ்ட்ரா துலே மாவட்டத்தில் மத வன்முறை வெறியாட்டங்கள் அப்பாவி மக்கள் பலரின் உயிரைக் குடித்திருக்கிறது. மிகப் பெரிய அளவில் அவர்களது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்குள்ளேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற மூன்றாவது வகுப்புவாத வன்முறைச் சம்பவமாகவும் இது. ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் இருந்து வரும் தகவல்கள் அங்கு வகுப்புவாத மோதல்களால் பதட்ட நிலைமை தொடர்கிறது. இதேபோன்று அறிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலைமையும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கவலையளிக்கக்கூடிய விதத்திலேயே தொடர்ந்து மதவெறி இயக்கங்கள் தங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கர்நாடக மாநிலத்தில், கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட பஜ்ரங் தளத்தினர் மீது பாஜக தலைமையிலான மாநில அரசாங்கம் மிகவும் ‘‘மென்மை’’யாக நடந்துகொள்வதாக, சிறுபான்மையினர் தேசிய ஆணையம் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அட்டூழியங்கள் நடைபெற்ற பின்னர், கர்நாடகக் காவல்துறையினர் பஜ்ரங் தள மாநில கன்வீனரைக் கைது செய்தனர். ஆயினும் உடனடியாக அவர், பிணையிலும் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில், மதவெறிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அப்பாவி கிறித்துவர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரிசா தொடர்பாகவும், சிறுபான்மையினர் தேசிய ஆணையம் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில், வீடுகளை இழந்து விரட்டியடிக்கப்பட்ட தலித் கிறித்துவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டுமானால், அவர்கள் தங்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளத்தினர் அவர்களை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு திடீரென்று பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்பட்டிருப்பதானது, நாட்டின் மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆழமான ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலமாக இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்திட வேண்டியது அவசியமாகும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நாட்டின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேலும் காலதாமம் செய்திட அனுமதிக்கக் கூடாது. மாநில அரசுகளுடன் கலந்துபேசி, இப்பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
அதேபோன்று பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பயிற்சி பெறும் வசதிகளைப் பெற்றிருப்பதற்கு எதிராகவும் கடுமையானமுறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
ஆயினும், அதே சமயத்தில், நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதிய ஒருவர், சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று பரவலாக நம்பப்படுகிறது. இவ்வாறு அரசியல் ஆதாயங்களுக்காக மதவெறி உணர்வை ஊட்டுவது, துரதிர்ஷ்டவசமாக, அனுமதிக்கப்பட முடியாத பயங்கரவாத எதிர்நடவடிக்கையாகும். பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் முறியடிக்கப்படவேண்டிய ஒன்று என்று கூறுகிற அதேசமயத்தில், மாநில நிர்வாகம் இதனை எப்பக்கமும் சாயாது நடுநிலையில் நின்று பாரபட்சமுறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. இது தேசவிரோதமானது. சமீபத்தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்து பயங்கரவாதிகள் மீதான சந்தேகத்தை இயற்கையாகவே எழுப்பியுள்ளன. சமீபத்தில் மலேகான் என்னுமிடத்தில் ரம்சான் விரதத்தை முடித்துவிட்டு வெளியே வந்த முஸ்லீம் ஜனத்திரள் மீது, நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், நான்கு முஸ்லீம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியாளர்கள், மகாராஷ்ட்ரா கூடுதல் காவல்துறை (சட்டம்-ஒழுங்கு) தலைவரை வினவியபோது, அவர் ‘‘இந்தக் கட்டத்தில், அதற்கான வாய்ப்பில்லை என்று கூறுவதற்கில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட காவல்துறையினரின் புலனாய்வுகள், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் - 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானி, ஜல்னா மற்றும் ஜலகான் மாவட்டங்கள், 2005இல் உத்தரப் பிரதேசத்தில் மாவ் மாவட்டம், 2008இல் நாண்டட் மாவட்டம், 2008 ஜனவரியில் தென்காசி, திருநெல்வேலியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட சம்பவம், 2008 ஆகஸ்ட்டில் கான்பூரில் நடைபெற்ற சம்பவம் - ஆக அனைத்து சம்பவங்களிலும் - பஜ்ரங்தளம் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கின்றன.
இந்த வழக்குகள் அனைத்தும் பாரபட்சமற்ற முறையிலும், தீவிரமாகவும் விசாரிக்கப்படுவதன் மூலமாகவே நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். கிடைத்திருக்கக்கூடிய தகவல்களிலிருந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் பஜ்ரங்தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்பே குறிப்பிட்டதைப்போல, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆயினும், மிக முக்கியமாக, இவற்றை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொண்டிட வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த அமைப்பாக இருந்தாலும், அவர்களின் மதப் பின்னணியைப் பாராது, ஒரே அளவுகோலுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், முஸ்லீம் சிறுபான்மை இனமக்களுக்குத் தொல்லைகள் கொடுப்பதையோ, துன்புறுத்துவதையோ, தண்டிப்பதையோ அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவில் பல்வேறு இன மக்களிடம் காணப்படும் வேற்றுமைப் பண்புகளினூடே இழையோடும் பொதுப் பண்புகளை வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மதரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ சீரான தன்மையைத் திணிக்க முயற்சித்தால், அது நாட்டைத் துண்டாட முயலும் சக்திகளுக்கு அற்புதமான தீனியாகும் என்று உறுதிபடக் கூற முடியும்.
நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசுத் தளத்தைப் போற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகக் குழுக்களும், சிவில் சமூகத்தினரும் இந்தியாவின் வேற்றுமைப் பண்புகளைச் சீராட்டி, பாராட்ட வேண்டுமேயொழிய, அது குறித்து புலம்பக் கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் 356ஆவது விதியைப் பயன்படுத்துவதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறது. இதனைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்திடும் வகையில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது. ஆயினும், இதுதொடர்பாக, ஒரிசா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் 355ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்நடவடிக்கையின் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு கூறும் பதில் என்ன? பதில் கூறவில்லை எனில், ஏன் கூறவில்லை?
நான் மேலே பரிந்துரைத்த அடிப்படையில், அனைத்து முக்கிய பணிகள் தொடர்பாகவும், நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் மதவெறி மற்றும் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பிசிறற்ற ஆதரவை அளிக்கிறது என்று கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(தமிழில்: ச. வீரமணி)

Sunday, October 12, 2008

இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி








இந்திய முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி



சங்பரிவாரக் கூட்டத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது



புதுடில்லி, அக். 12-



இந்திய முஸ்லீம்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் முயற்சியில் சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று புதுடில்லியில் நடைபெற்ற சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அறிஞர் பெருமக்கள் கருத்துக்கள் தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, அவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என்று கருதப்படும் விதத்தில் சங்பரிவாரக் கும்பல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.



இதுதொடர்பாக ஒரு கலந்துரையாடலுக்கு சஹமத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் புதுடில்லியில் சனிக்கிழமையன்று மாலை கான்ஸ்டிட்யூசன் கிளப், துணை சபாநாயகர் கூடத்தில் நடைபற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியர்கள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களைச் சேர்ந்தோர் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றார்கள்.



இவர்களில் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகமது சலீம், மது, ராம் புனியானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள். கலந்துரையாடலுக்கு வந்திருந்தோரை, ஜகீருடீன் அலிகான் மற்றும் ஷப்னம் ஹாஷ்மி வரவேற்றார்கள். கலந்துரையாடலுக்கான பின்னணி குறித்து ஜஃபார் ஆகா விளக்கினார். பின்னர், ஹைதராபாத் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவமானது எப்படி முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதை வீடியோ ஒளிபரப்பின் மூலமாக மனித உரிமைகளுக்கான முன்னணி ஊழியரும் வழக்கறிஞருமான ஷபிக் மகாஜீர் விளக்கியபோது, அரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே உறைந்த நிலைக்கு மாறினார்கள் என்று சொன்னால் மிகையல்ல.



மும்பையைச் சேர்ந்த ராம் புனியானி பேசுகையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தளம், ஆர்எஸ்எஸ் ஆகியவை எப்படி வன்முறை வெறியாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அடுக்கடுக்காக முன்வைத்தார். மேலும் இவர்களின் வன்முறை வெறியாட்டங்களுக்குக் காவல்துறையினரும் ஒத்துழைப்புடன் இருந்து வருவதையும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.



சமீபத்தில் டில்லி அருகே நடைபற்ற ஜமியாநகரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அதில் மாரடைப்பு வந்து இறந்து போன காவல் ஆய்வாளரை பயங்கரவாதியின் தாக்குதலால் இறந்துபோனார் என்று சித்தரித்தும், ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக உணர்ச்சிகளைக் கிளப்பிவிடும் முயற்சிகளையும் விவாதத்தில் கலந்துகொண்டோர் சுட்டிக்காட்டினார்கள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பஜ்ரங் தளம், விசுவ இந்து பரிசத் அப்பாவி கிறித்துவர்களை, முஸ்லீம்களைக் கொன்று குவித்து வந்தபோதிலும் அவர்களைக் கைது செய்து தண்டிக்க பாஜக ஆட்சியாளர்கள் முன்வராதது மட்டுமல்ல, மத்திய ஐமுகூ ஆட்சியாளர்களும் அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அவற்றைக் கண்டு கொள்ளாதிருப்பதற்கும் விவாதத்தில் பங்கேற்றோர் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.



விவாதத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தன்னை மிகவும் பாதித்ததாகவும், நாம் ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற அமைப்புமுறையைப் பின்பற்றுகிறோம் என்றும், இதனைச் சீர்குலைக்க எவர் முனைந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நாம் நம் நாட்டின் மதச்சார்பின்மை மாண்பினை உயர்த்திப்பிடித்தாக வேண்டும் என்றும் கூறினார்.

Thursday, October 9, 2008

உட்கட்சிப் போராட்டத்தில் இயக்கவியல் அணுகுமுறை-மாசேதுங்

ஒற்றுமை சம்பந்தமாக, அதன்அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒருசில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

ஒரு தோழர் - அவர் நாசவேலை செய்பவராகவோ அல்லது இயக்கத்திற்கு எதிராகப் போனவராகவோ இல்லாதபட்சத்தில் - அவரைக் கட்சியின் நடவடிக்கைகளுடன் ஒன்றுபடுத்துவது தொடர்பாக ஒரு நேசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, நம் அணுகுமுறை என்பது ஓர் இயக்க வியல் அணுகுமுறையாக இருக்க வேண்டுமேயொழிய, இயக்கமறுப்பியல் அணுகுமுறையாக இருக்கக் கூடாது.

இயக்கவியல் அணுகுமுறை என்று சொல்வதன் மூலம் நாம் என்ன பொருள் கொள்கிறோம்?

இதன் பொருள், ஒவ்வொன்றை குறித்தும் ஆய்வுக் கண்ணோட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள்தான், ஒருவர் தவறு செய்திருக்கிறார் என்பதற்காக அவரை முழுமையாக மறுதலித்திடக் கூடாது. தவறு செய்யாத மனிதனே உலகில் இல்லை என்று லெனின் ஒருசமயம் கூறினார். ஒவ்வொருவருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது. வேலியிட வேண்டுமென்றால் அதற்கு மூன்று பக்கங்களிலும் மரமுளைகளைக்கொண்டு இறுக்குவதுபோல், ஒரு திறமைசாலிக்கும் மூன்று பேர்களின் உதவி தேவைப்படுகிறது. தாமரைப் பூ அழகானதுதான், ஆனால் அது இலைகளுடன் இருக்கும்போது மேலும் அழகுபெறுகிறது என்பது சீனப் பழமொழி. எல்லாம் அறிந்தவர் என்றோ அல்லது சகலகலா வல்லவர் என்றோ ஒருவர் தன்னை நினைத்துக்கொண்டால், அவர் மிதப்பில் இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

தவறு செய்யும் தோழரிடம் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது? நாம் அவர் மேற்கொண்ட தவறுகளை ஆய்வுக்கண்ணோட்டத்துடன், இயக்கமறுப்பியல் அணுகுமுறையைப் பின்பற்றாது, இயக்கவியல் அணுகுமுறையுடன் ஆய்ந்திட வேண்டும். ஒருகாலத்தில் நம் கட்சியும் இயக்கமறுப்பியல் சகதியில், வறட்டுத் தத்துவாதச் சேற்றில் மூழ்கி வெளிவரமுடியாமல் தத்தளித்தது. பின்னர்தான், நாம் வறட்டுத்தத்துவாதச் சேற்றிலிருந்து மீண்டு, இயக்கவியல் குறித்து சற்றே கற்றுக் கொண்டோம். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதே இயக்கவியலின் அடிப்படை சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்தின்படி, தவறு இழைக்கும் ஒரு தோழரிடம், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

முதலாவதாக, அவரது தவறான கருத்துக்களை அவர் விட்டொழித்திட போராட்டத்தை நடத்திட வேண்டும். இரண்டாவதாக, அவருக்கு நாம் உதவிடவும் வேண்டும். முதலில் அவருடன் போராடு, அடுத்து அவருக்கு உதவிடு. நல்ல எண்ணத்துடன், அவர் தன் தவறுகளைக் களைந்திட உதவுவதன் மூலமே, தவறான நிலைபாட்டிலிருந்து அவரை வெளிக்கொண்டுவர முடியும். ஆயினும், வேறுவகையான பேர்வழிகள் குறித்த அணுகுமுறை என்பது வேறு. அதாவது, டிராட்ஸ்கி போன்றவர்களைப் பொறுத்தவரை, ஓர் இணக்கமான அணுகுமுறையைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லை, ஏனெனில் அத்தகையவர்கள் சீர்திருத்த முடியாத அளவிற்கு சீர்கேடடைந்துவிட்டவர்கள். அதேபோன்றுதான் ஹிட்லர், சியாங்கே ஷேக், ஜார் போன்ற இழிபிறவிகளும் தூக்கி எறியப்பட வேண்டியவர்களாவார்கள். ஏனெனில், நாமும் அவர்களும் ஒருவர்க்கொருவர் பொருத்தமற்றவர்களாவோம். நமக்கும் அவர்களுக்கும் எவ்விதத்திலும் ஒற்றுமை ஏற்பட வழி கிடையாது.

அதேபோன்று, இறுதியாக ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைகள், சோசலிச அமைப்பு முறையால் மாற்றியமைக்கப்பட வேண்டியதும் உண்மை. இது, தத்துவார்த்த நிலைபாட்டிற்கும் பொருந்தும். கருத்துமுதல்வாதம், பொருள் முதல் வாதத்தால், ஆத்திகம், நாத்திகத்தால் மாற்றியமைக்கப்பட வேண்டும். இங்கே நாம் நம்முடைய இறுதி இலட்சியம் (strategy) குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதனை அடைவதற்கான உத்திகளுக்கான கட்டங்கள் (tactics) வித்தியாசமானவை. எங்கு சமரசம் தேவையோ அங்கே சமரசம் செய்துகொள்ளப்பட வேண்டும். உத்திகளுக்கான கட்டங்கள் ஒவ்வொன்றின்போதும், போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அதே சமயத்தில் சமரசங்களைச் செய்து கொள்வதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனையும் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது தோழர்கள் தொடர்பான பிரச்சனைக்கு மீண்டும் திரும்புவோம். தோழர்களுக்கிடையே புரிந்துணர்வில் பிழை ஏற்பட்டிருப் பின், ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்து விட்டாலே, அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்றும், அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டிற்கோ, தப்பபிப்பிராயங்களுக்கோ இடம் இல்லை என்றும் சிலர் நினைப்பதுபோல் தோன்றுகிறது. மேலும் அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைவருமே கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை, வேறுபாடுகளின்றி எங்கும் ஒரே சீராகக் கெட்டியாயுள்ளவர்கள் என்றும் எனவே இவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைக்கு அவசியம் இல்லை என்றும் கருதுவதுபோல் தோன்றுகிறது. கட்சிக்குள் ஒருவர் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டாரானால் அவர் நூறு சதவீதம் மார்க்சிஸ்ட்டுகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவதுபோன்று தோன்றுகிறது. ஆனால், நடைமுறையில் நூறு சதவீத கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் என்றபோதிலும், 90, 80, 70, 60 அல்லது 50 சதவீத மார்க்சிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள், ஏன் சில இடங்களில் 10 அல்லது 20 சதவீத மார்க்சிஸ்ட்டுகள் கூட இருக்கிறார்கள். ஒரு சிறிய அறையில் நம்மில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட உட்கார்ந்து ஒரு விஷயத்தைக் குறித்துப் பேசி முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டதில்லையா? பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணமுடியாமல் போனதில்லையா? மார்க்சிசம்-லெனினிசக் கொள்கைக்கு ஊறு ஏற்படாத வகையில், பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போது, மற்றவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் கொண்டிருந்த கருத்துக்கள் கைவிடப்பட வேண்டியதாக இருந்தால், கைவிட்டுவிட வேண்டும்.

தவறு செய்த ஒரு தோழரைக் கையாளும்போது, நம் இரு கைகளையும் பயன்படுத்த வேண்டும். ஒரு கை அவருடன் போராடும் அதே சமயத்தில், மற்றொரு கையால் அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ள வேண்டும். போராட்டத்தின் குறிக்கோள், மார்க்சிசத் தத்துவத்தை உயர்த்திப்பிடிப்பதுதான் - அதாவது அந்தத் தோழரை தத்துவார்த்தத்தின் அடிப்படையில் கெட்டிப் படுத்துவதுதான். அது ஒரு கை. மற்றொரு கை, அவரை அன்பாதரவோடு அரவணைத்துக் கொள்ளுதல். ஒற்றுமையின் குறிக்கோள் அவரைத் தன்னுடைய தவறான நிலைபாட்டிலிருந்து வெளிக்கொணர்தலேயாகும். அவரோடு சமரசம் செய்துகொள்ளுதல் அதாவது சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். தத்துவத்தை நெகிழ்வுத்தன்மையுடன் இணைத்தல் என்பதே மார்க்சிச - லெனினிசத் தத்துவமாகும். எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது இதுவேயாகும். எந்த ஒரு உலகமாக இருந்தாலும், அதிலும் குறிப்பாக ஒரு வர்க்க சமுதாயத்தில், முரண்பாடுகள் பல்கிப் பெருகியிருக்கும்.

சிலர், சோசலிச சமூகத்தில் கூட முரண்பாடுகள் ‘‘காணப்படுகிறதே’’ என்று கூறுகிறார்கள். இவர்கள் விஷயத்தைத் தவறான வகையில் முன்வைக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது பிரச்சனை அல்ல. முரண்பாடுகள் காணப்படாத இடங்கள் என்று எதுவுமே கிடையாது. அதேபோன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட முடியாத நபர் என்றும் எவரும் கிடையாது. அப்படி ஒருவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்று ஒருவர் நினைத்தால், அவர் இயக்கமறுப்பியல்வாதியாவார். அணு என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை - இரு எதிர்மறைகளின் - நியுக்ளியஸ் மற்றும் எலக்ட்ரான்களின் - ஒற்றுமை என்பது உங்களுக்குத் தெரியும். நியுக்ளியஸிலும்கூட, மீண்டும் இரு எதிர்மறைகளின் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது புரோட்டான்களுக்கும் நியுட்ரான்களுக்கும் இடையிலான ஒற்றுமை. அதேபோன்று நியுட்ரானிலும் நியுட்ரான்கள் - ஆன்ட்டிநியுட்ரான்களின் ஒற்றுமை காணப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது எங்கும் காணப்படுகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமை என்கிற சித்தாந்தம் - இயக்கவியல் - விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். அதாவது இயக்கவியலை குறுகிய சிறு தத்துவவாதிகளின் வட்டத்திலிருந்து வெளிக்கொணர்ந்து விரிந்த அளவில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன். இந்தப் பிரச்சனை அரசியல் தலைமைக்குழு, மத்தியக்குழு மற்றும் கட்சியின் அனைத்து மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கட்சியின் கிளைச் செயலாளர்கள் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டு, தாங்கள் கிளைக் கூட்டங்களுக்குத் தயாரித்திடும் வேலை அறிக்கைகளின்போது, அவற்றில் வழக்கமாக இரு இனங்களையும் - முதலாவதாக தன் கிளை புரிந்திட்ட சாதனைகளையும், இரண்டாவதாக, செய்திட்ட பலவீனங்களையும் எழுதிட வேண்டும். இதுவே உலகம் முழுதும் உள்ள நிகழ்ச்சிப்போக்காகும். இதுவே இயக்கவியலாகும்.

***
(1957 நவம்பர் 18 அன்று, மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில், தோழர் மாசேதுங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். )

தமிழில்: ச.வீரமணி

இயக்கவியலும் இயக்கமறுப்பியலும்

(Dialectics and metaphysics)

தர்க்கவியல் என்றும் இயக்கவியல் என்றும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்னும் டைலக்டிக்ஸ் (DIALECTICS) என்னும் ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியில் உள்ள டையலெகோ (DIALEGO) என்பதிலிருந்து வந்ததாகும். எதிரிகளின் வாதத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்தி, அந்த முரண்பாடுகளை அகற்றுவதன் வாயிலாக உண்மையைக் கண்டறியும் கலைக்கு பண்டைக் காலத்தில் ‘டைலக்டிக்ஸ்’ என்று கூறுவதுண்டு. சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதும் ஒன்றுக்கு ஒன்று எதிரான கருத்துக்களை மோதவிடுவதும்தான் உண்மையைக் கண்டறிவதற்கான மிகச் சிறந்த முறை என்று பழங்காலத் தத்துவவாதிகள் நம்பினர். சிந்தனைகளின் உண்மையைக் கண்டறிவதற்குக் கையாளப்பட்ட இந்த முறை, பிற்காலத்தில் இயற்கைத் தோற்றங்களின் உண்மையைக் கண்டறிவதற்கும் கையாளப்பட்டது.

இயற்கைத் தோற்றங்கள் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொரு கணமும் தொடர்ச்சியான மாற்றத்துக்கு உள்ளாகின்றன என்றும் இந்த இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது. மேலும், இயற்கையினுள்ளே இயங்கும் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதன் விளைவாகவும், இயற்கையினுள்ளே இயங்கும் எதிர்எதிரான சக்திகள் மோதிக்கொண்டு இயங்குவதன் விளைவாகவும் இயற்கை வளர்ச்சி அடைகிறது என்றும் இயக்கவியல் அணுகுமுறை கருதுகிறது.

இயக்க மறுப்பியல் அல்லது மாயாநிலைத் தத்துவம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படும் METAPHYSICS இதற்கு நேர்மாறான தத்துவம் ஆகும். பொருள் இயலுக்கு (materialism) அப்பாற்பட்டது என்று பொருள்தரும் கிரேக்க சொல்லிலிருந்து உண்டான சொற்றொடர் மெடாபிசிக்ஸ் என்பதாகும். அதாவது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசுவதுதான் மெடாபிசிக்ஸ்.இந்தப் பெயர் கிடைத்தது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு தற்செயலான நிகழ்ச்சியால்தான். தர்க்க சாஸ்திரத்தைப் பற்றிய விரிவுரை என்ற நூலை எழுதிய அரிஸ்டாடில் நிறைய எழுதியிருக்கிறர். அரிஸ்டாடில் இறந்தபிறகு, அவரது சீடர்கள் அவரது நூல்களை வகை வகையாகப் பிரித்துத் தொகுத்துப் பட்டியலிட்டார்கள். பொருள் இயல் (பிசிக்ஸ்) என்ற தலைப்பின் கீழ் அரிஸ்டாடில் எழுதிய ஒரு நூல் இருந்தது. அதோடு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிய வேறொரு நூலொன்றும் இருந்தது. அதற்குத் தலைப்பு ஒன்றும் கிடையாது. சீடர்கள் பார்த்தார்கள். பொருளியலுக்கு என்று நூல் இருக்கிறது. ஆகவே இந்த நூலுக்குப் பொருளியலுக்கு அப்பாற்பட்டது என்று தலைப்புக் கொடுப்போமே என்று கருதி ‘‘மெடாபிசிக்ஸ்’’ என்று பெயர் கொடுத்து வகைபிரித்து விட்டார்கள்.

***

தொழிற்சங்கங்கள் தந்த சிங்கார வேலர்

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் ம. சிங்காரவேலர் ஆவார். பகுத்தறிவு இயக்கத்தில் ஈ.வெ.ரா.வுடன் தோளோடு தோள் கொடுத்து நின்றவர். பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். தொழிற்சங்க இயக்கத்தை முதன்முதலாக இந்திய அளவில் உருவாக்கிய முன்னோடி. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் காமராசருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். உழைப்பாளர் தினமான மே தினத்தை இந்தியாவிலேயே - ஏன் ஆசியாவிலேயே - முதன்முறையாகக் கொண்டாடி, வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உடன் உழைக்கும் இயக்கத்தவர்களை தோழர் என்று முதன்முதலாக அழைத்தவர். இப்படிப் பல விஷயங்களில் தேசிய அளவில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் ம. சிங்காரவேலர்.தமிழகத்தையே உலுக்கிய நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை பத்து மாதங்களுக்கும் மேலாக முன்னின்று நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது அதனைத் துவக்கி வைத்தார். கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர் பங்குகொண்டது வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்ச்சியாக மதிக்கப்படுகிறது. அவர் உரைநிகழ்த்தும்போது கூட்டத்தினரை ‘‘காம்ரேட்ஸ்’’ என்று அவர் அழைத்தது அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவர் காங்கிரஸ்காரர்களால் ‘காம்ரேட்’ என்றே அழைக்கப்பட்டார். மரியாதையும் முக்கியத்துவமும் நிறைந்த தலைவர்கள் என்னும் மேன்மை பறிபோய்விடுமோ என்றும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று இளம் தலைமுறையினரே பயந்து நடுங்கிக்கொண்டிருந்த வேளையில் அறுபது வயதைத் தாண்டிய முதியவர் தன்னை மிகவும் துணிச்சலுடன் ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அழைத்துக் கொண்ட துணிச்சலை அங்கு வியந்து பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று 1923இல் வேன்கார்டு இதழில் எம்.என்.ராய் பதிவு செய்திருக்கிறார்.தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில்தான் பேசவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தமிழில்தான் நடைபெறவேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும் என்று போராடியவர்களில் முதன்மையானவர். மிகுந்த போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாநகராட்சிக் கூட்டங்கள் தமிழில் நடக்க வழிவகுத்தவர்.1917இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்த சிங்காரவேலர், இயக்கப் பாடல்களைப் பாடியும் பிறரைப் பாட வைத்தும் மக்களை அணிதிரளச் செய்தார். 1918இல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பொதுக் கூட்டங்களும் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர் சிங்காரவேலர். ‘போராட்டங்களை நடத்துவது சிங்காரவேலருக்கு நிலாச்சோறு சாப்பிடுவதுபோல’ என்று அண்ணா ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.1919ஆம் ஆண்டில் ஜாலியன்வாலாபாக் வெறியாட்டத்தைக் கண்டித்து, அவர் தமிழகத்தில் நடத்திய கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றியடைந்தது. சின்னச் சின்ன இட்லிக்கடைக்காரர்களும், இறைச்சிக் கடைக்காரர்களும்கூடத் தங்கள் கடைகளை அன்று திறக்கவில்லை. எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலின் அடையாளமான கருப்புக்கோட்டினை தெருவில் எரித்தார். அதன்பின் அவர் வழக்கறிஞர் தொழிலையே கைவிட்டுவிட்டார்.உத்தரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரிசௌரா என்னும் ஊரில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பேரணியில் வந்தோர் காவல்துறையினரைத் திருப்பித்தாக்கி, காவல்நிலையத்திற்குத் தீ வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு சென்னையில் நடைபெற்றது. வழக்கின் முடிவில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தைக் காரணமாக வைத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார். அதனைக் கண்டித்து சிங்காரவேலர் மிக நீண்ட கட்டுரையொன்றை இந்து நாளிதழுக்கு எழுதினார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது சிங்காரவேலர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ‘‘நான் இன்று எனது வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டேன். நாட்டின் மக்களுக்காக உங்களின் போராட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று எழுதியிருந்தார். ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி முடித்தபோது அதனைக் கண்டித்தும் காந்திக்கு சிங்காரவேலர் கடிதம் எழுதினார்.தமிழகத்தில் முதன்முறையாக தொழிற்சங்கத்தை நிறுவிய பெருமை சிங்காரவேலரையே சாரும். திருவிக, சக்கரைச் செட்டியார் ஆகியோர் தோளோடு தோள் நின்று இவருக்குத் துணை புரிந்தனர். சென்னை தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் யூனியன், கோவை நகரத் தொழிலாளர் சங்கம், மின்சாரத் தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியத் தொழிலாளர் சங்கம் போன்று பல்வேறு தொழிற்சங்கங்களை தொடங்கினார்.ஒவ்வோராண்டும் ஏப்ரல் 6 - 13 தேதிகளில் தேசிய வாரம் என்ற ஒரு வாரத்தைக் கொண்டாடி வந்தார். இறுதி நாளான ஏப்ரல் 13 அன்று சென்னைக் கடற்கரையில் மாபெரும் கூட்டம் நடைபெறும். 1925ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 13வது வட்டம் யானைக்கவுனி பகுதியிலிருந்து அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலத்தில் அதிகப் புலமை பெற்றிருந்தும் நகரசபைக் கூட்டங்களில் தமிழிலேயே பேசினார். அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தார். அதேசமயத்தில்h தனிப்பட்ட முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இந்தி முதலிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.சென்னையில் நடைபெற்ற ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஏழு பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனார்கள். அவர்களின் சவ ஊர்வலத்தில் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். சவஊர்வலத்தில் சென்ற சிங்காரவேலரை குறிபார்த்து காவல்துறையினர் துப்பாக்கியை உயர்த்தினார்கள். அவர்களுக்குத் தன்மார்பை நிமிர்த்துக்காட்டித் தன்னைச் சுடுமாறு சிங்காரவேலர் சொன்னார். இச்சவஊர்வலம் குறித்து குடியரசு இதழில் அவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றது.1943ஆம் ஆண்டு ஜூன் 20 அன்று சென்னையில் தீண்டாமை ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. அதில் தள்ளாதவயதிலும் சிங்காரவேலர் தந்தை பெரியாருடன் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அச்சுத் தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை தாங்கி உரையாற்றினார். அதுவே அவர் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சியாகும்.அந்தக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‘‘இப்போது எனக்கு வயது 84. எனினும் தொழிலாளர் வர்க்கத்துக்கு என் கடமையைச் செய்ய முன்வந்துள்ளேன். உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்பமுடியும். உங்கள் மத்தியில் இறந்தாலும் அதைவிட எனக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் வேறு என்னவாக இருக்க முடியும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.அவரும் அவருடைய முன்னோர்களும் ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு அந்நாளிலேயே சுமார் 200 கோடியாகும். அந்த திரண்ட சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்த அந்த மாமேதை இறுதிவரை ஏழைத் தொழிலாளர்களுடனேயே வாழ்ந்தார். தன் சொத்துக்களைத் தன் காலத்திலேயே அறக்கட்டளை அமைத்து பல அறப்பணிகளை நடத்தி வந்தார். மிகத் திரண்ட சொத்துக்களை உள்ளடக்கியதும் சிங்காரவேலரின் முன்னோர்களால் நிறுவப்பட்டதுமான எம்கேஏ சாரிடீஸ் தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அறக்கட்டளை வழியாக சிங்காரவேலரின் மருமகள் பத்மா சத்தியகுமாருக்கு தமிழக அரசு மாதா மாதம் தவறாமல் உதவித் தொகை அனுப்பி வருகிறது. ஆனால் உதவித் தொகையின் அளவு வெறும் ரூ.50 என அறிகிறோம். அத்தொகை உயர்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை...

அக்டோபர் 4 - கறுப்பு தினம்:

அக்டோபர் 4 - கறுப்பு தினம்:
டில்லியில் மாபெரும் கண்டனப் பேரணி
புதுடில்லி-
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் அக்டோபர் 4 அன்று இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளால் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. புதுடில்லியில் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் ஹைடு சட்டத்தில் அடங்கியுள்ள ஷரத்துக்கள் உட்பட இந்தியாவை அடிமைப்படுத்தக் கூடிய அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன. தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. எரிபொருள் இருப்பு வைத்துக்கொள்வதற்கும் எவ்வித வழிவகைகளும் கிடையாது. எந்த ஒரு சுயமரியாதை உள்ள அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் பல இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு இந்தியாவை அடிமைப்படுத்தும் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அரசின் சார்பில் அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைஸ் சனிக்கிழமையன்று டில்லி வருகிறார்.
கண்டலீசா வருகை மற்றும் அணுசக்தி ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவதைக் கண்டித்தும், இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நாடு முழுதும் கறுப்பு பேட்ஜ் அணிந்தும், கறுப்புக் கொடி ஏற்றியும் கறுப்பு தினம் அனுசரிக்குமாறும் கண்டன இயக்கங்கள் நடத்திடுமாறும் அறைகூவல் விடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக புதுடில்லியில் மண்டி ஹவுஸ் என்னுமிடத்திலிருந்து மாபெரும் கண்டனப் பேரணி புறப்பட்டு பெரோசா ரோடு வழியாக, ஹைதராபாத் ஹவுஸ் நோக்கிச் சென்றது. பேரணியில் சீத்தராம் யெச்சூரி, மது, தபன்சென் (மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்), து. ராஜா (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்), மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக், ஆர்எஸ்பி, தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் அணிவகுத்து வந்தனர்.
பேரணி, வித்யார்த்தி பவன் அருகே வந்தபோது, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு நடைபெற்ற கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா கண்டன உரையாற்றினார்கள்.

Wednesday, October 8, 2008

காந்தமால் வன்முறை: மத்திய அரசு தலையிட வேண்டும்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

ஒரிசாவிலும் நாட்டின் மற்றும் பல பகுதிகளிலும் கிறித்துவ மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் எவ்விதத் தங்குதடையுமின்றி தொடர் கின்றன. காவல்துறையினர் அதிகமான அளவில் இருந்தபோதிலும், அவர்கள் கண் முன்னாலேயே, ஆயுதமேந்திய மத வெறிக் கும்பல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள தலித் கிறித்துவக் கிராமங்களுக் குள் நுழைந்து, பலரைக் கொன்று குவிப் பதும், வெட்டிக் காயமுறச் செய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் கள் வீடுகள் தொடர்ந்து தீக்கிரையாக்கப் படுகின்றன. தேவாலயங்கள் தரைமட்ட மாக்கப்படுகின்றன. இத்தகைய மனிதாபிமானமற்ற காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள், ஆர்எஸ்எஸ்-பாஜக கொடுக்குகளால், அதிலும் குறிப்பாக பஜ்ரங் தளத்தினரால், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது, 2008 ஆகஸ்ட் 24க்குப்பின் நடைபெற்ற சம்ப வங்களிலிருந்து வெளிச்சத்திற்கு வந் திருக்கிறது. 28 வயது கத்தோலிக்க கன் னியாஸ்திரி, பொதுமக்கள் மத்தியில், கூட்டாக வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். இந்தக் காட்டுமிராண்டிச் செயலைத் தடுக்க வந்த கத்தோலிக்கப் பாதிரியார் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக் கிறார். இவ்வளவும் காவல்துறையினரின் கண்முன்னாலேயே நடந்ததாக, பாதிரி யார் குற்றஞ்சாட்டுகிறார். அன்னை தெரசா அவர்களால் உருவாக்கப்பட்ட கருணை இல்லத்தின் தலைவர் சகோதரி நிர்மலா, கொடூர சம்பவங்களைப் பட்டியலிட்டு, பிரதமருக்கும், ஒரிசா முதல்வருக்கும் கடிதம் எழுதியிருக் கிறார். இக்கொடிய சம்பவம் நடந்த தினம் ஆகஸ்ட் 24. ஆனால் (அக்டோபர் 2 தேதி யாகிய) இன்றைய வரையில் வன்புணர்ச் சியில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.பல்லாயிரக்கணக்கானோர் (ஒரு சமயத்தில் இவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகும்) தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, மாவட்டத் தின் பல பகுதிகளில் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத் தகைய நிவாரண முகாம்களில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் காரணமாக, சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வு அதிகரித் துள்ளது. மாநில அரசின் போலீசார் மீது இவர்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதே சமயத்தில், சிறுபான்மையின ருக்கான தேசிய ஆணையம், கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் பஜ்ரங் தளம் மீது பாஜக தலைமையிலான கர் நாடக மாநில அரசு மிகவும் “மென்மை யாக” நடந்துகொள்வதாக மிகவும் கடுமை யாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது. பஜ்ரங் தளத்தின் மீது ‘‘உரிய நடவடிக்கை’’ எடுத்திட வேண்டும் என்று, சிறுபான் மையினருக்கான தேசிய ஆணையம் கோரியுள்ளது. இந்த ஆணையம் மேலும், மாநிலம் முழுவதும் பரவலான அட்டூழியத் திற்குப் பிறகு, பஜ்ரங் தளத்தின் மாநில அமைப்பாளரை கர்நாடகக் காவல்துறை யினர் கைது செய்தனர் என்று குறிப்பிட் டிருக்கிறது. ஆயினும், அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப் பட்டுவிட்டார். ஆனால், அதே சமயத்தில், பாதிப்புக்குள் ளான கிறித்துவர்கள் பலர் இன்னமும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வரு கின்றனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறாக, ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் மாநில அரசுகள், கிறித் துவ சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடூரமான முறையில் குற்றச் செயல் களில் ஈடுபடுபவர்களைப் பாதுகாக்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றன.ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம், தற்சமயம், கந்தமால் மாவட்டத்தில் வீடுகளை இழந்த தலித் கிறித்துவர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்கு வந்து, வீடுகளைக் கட்டிக்கொண்டு உயிர்பி ழைத்திருக்க வேண்டுமானால், அவர்கள் மீண்டும் இந்துவாக மாற வேண்டும் என்று மிரட்டிக்கொண்டிருக்கின்றன. தலித் கிறித்துவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம், அவர்கள் வலுக் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டது தான் என்று மதவெறியர்களால் குற்றஞ் சாட்டப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் தங்களுக்கேயுரிய பல் வேறு மதப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. அவர்களை இந்து மதத்திற்குச் சொந்தமானவர்கள் என்று முத்திரை குத்துவது நகைப்புக்குரிய விஷயமாகும். கந்தமால் மாவட்டத்தி லேயே, இரு விதமான பழங்குடியினர் இருக்கின்றனர். கந்தாஸ் என்பவர்கள் ஒருவிதத்தினர், தலித் பனாஸ் என்பவர் கள் மற்றொரு பிரிவினர். கடந்த சில ஆண்டுகளில், முந்தைய வகையினரில் ஒரு பிரிவினர் இந்து மதத்தைத் தழுவி னார்கள். தலித் பனாஸ் பிரிவினர் கிறித் துவ மதத்தைத் தழுவினர். பின்னர்தான் தங்கள் ‘இந்து வாக்கு வங்கியை’ ஒரு முகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ்-சும் அதன் பரிவாரங்களும் இவ்வாறு தலித் கிறிஸ்தவர்களைக் குறி வைத்துத் தாக்கத் தொடங்கின.சங் பரிவாரக் கூட்டத்தினர் கட்ட விழ்த்துவிட்டுள்ள அட்டூழியங்களை நியாயப்படுத்த முடியாத நிலையில், அத்வானி, தாம் கிறிஸ்தவர்களிடம் எப்போதும் மென்மையாகத்தான் நடந்து கொள்வதாகவும், தான் படித்ததே கராச்சி யில் ஒரு கிறித்துவப் பள்ளியில்தான் என் றும் கூறத் தொடங்கியிருக்கிறார். அவ் வாறு கூறும், அத்வானி, அதே மூச்சில் மத மாற்றம் குறித்து ஒரு ‘தேசிய விவா தம்’ நடத்தலாம் என்றும் கடந்த காலங் களில் கூறிவந்ததைப்போல் மீண்டும் சொல்லத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு நயவஞ்சகமான வாதமாகும். ஆவியுலகு டன் தங்களைப் பிணைத்திருந்த பழங் குடியினர், இந்து மதத்தைத் தழுவிய போது அது ‘மதமாற்றத்தின்’கீழ் வராது. ஆனால், அவர்களே, கிறித்துவமதத்தை யோ அல்லது வேறெந்த மதத்தையோ தழுவினால், அவர்கள் ‘‘மத மாற்றம்’’ செய்யப்படுவதாகக் கருதப்படுவார்கள். மேலும், அத்வானி, ‘‘அனைவரும் இந்தி யர்கள்’’ (ஐனேயைn-நேளள) என்னும் கருத்தை வலுப்படுத்துவதற்காக ‘அனைத்து மதங்களுக்கும் இடையே ஒரு பேச்சு வார்த்தை’ (iவேநச-சநடபைiடிரள னயைடடிபரந) நடத்த வேண்டும் என்று கூட கோரியிருக்கிறார். ஆயினும், ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் இந்து மதம் ஒன்றுதான் ஒரு மதமாக இருக்கத் தகுதிபடைத்தது என்றும், மற்ற அனைத்தும் மதங்கள் அல்ல, மாறாக மத உட்பிரிவுகள் (ளநஉவள) என்றும் கூறிக் கொண்டிருக்கின்றன. ‘இந்து வாக்கு வங்கியை’ ஒருமுகப்படுத்தும் முயற்சி யின் ஒரு பகுதியாகத்தான் மதச்சிறுபான் மையினர் மீது இவ்வாறு மனிதாபிமான மற்ற முறையில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாகத்தான் நாட்டின் ஒரு பகுதி இந்தியர் களைத் தாக்கி, நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் தகர்க்கும் செயல் களில் இறங்கியிருக்கின்றனர்.இவ்வாறு மதவெறிச் செயல்பாடு களைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற் காகக் கூர்மைப்படுத்துவதன் வாயிலாக, பயங்கரவாத அமைப்புகள் கொழுப்பதற் குத்தான் வழிவகுக்கும்.கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்ப வங்களில் பஜ்ரங் தளம் மற்றும் ஆர்எஸ் எஸ்-சின் கொடுக்குகள் சம்பந்தப்பட்டி ருக்கின்றன என்பதை காவல்துறையின ரின் புலனாய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பானி, ஜல்னா, ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள், 2005இல் உத்தரப் பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடை பெற்ற சம்பவம், 2006இல் நாண்டன் என் னுமிடத்தில் நடந்த குண்டுவெடிப்பு, 2008இல் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்எஸ்எஸ் அலுவலகத் தில் நடந்த குண்டுவெடிப்பு, 2008 ஆகஸ்ட்டில் கான்பூரில் ஏற்பட்ட சம்ப வம் என்று அடுக்கிக்கொண்டே செல்ல லாம். இவற்றின் மீதான விசாரணைகளும் பாரபட்சமற்ற முறையில் நடைபெறு வதன் வாயிலாகவே நாட்டின் உள்நாட் டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். அரசியல் ஆதாயத்திற்காக மதவெ றித் தீயை விசிறிவிடும் முயற்சியை, நிர்மூலமாக்கிடும் அதே சமயத்தில், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கும், உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்கும் பாரபட்சமற்ற முறையில் நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கர்நாடகாவில், சிறுபான்மையினருக் கான தேசிய ஆணையம் குறிப்பிட்டிருப் பதைப்போல, சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கயவர் களை ஜாமீனில் விடுவதும், பாதிக்கப் பட்ட கிறிஸ்தவர்களை ஜாமீனில் விடா மல் சிறையில் அடைத்து வைத்திருப்ப தும் நடைபெறக்கூடாது. பாஜக தலை மையிலான மாநில அரசுகள் இவ்வாறு மதவெறியர்களைப் பேணிப்பாதுகாத்து, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்கு தல்களைத் தொடுத்து, மதவெறியைக் கூர்மைப்படுத்தினால், மத்திய ஆட்சி யில் உள்ள ஐமுகூ அரசாங்கமானது நம் நாட்டின் அரசிய லமைப்புச் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி, ‘‘சாதி, சமயக்கோட் பாடுகளைப் பார்க்காமல், .....’’ அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.
தமிழில்: ச. வீரமணி

Saturday, October 4, 2008

தொடரும் ஒரிசா வன்முறைகள் - ஆரூர் சங்கரி

சங்பரிவாரம், ஒரிசாவில் வி.எச்.பி.தலைவர் லட்சுமாணந்தா படுகொலைக்கு கிருஸ்துவ மக்களையே பொறுப்பாக்கி மீண்டும் வெறித் தாக்குதல்களை தனது ஆதரவு நவீன் பட்நாயக் ஆட்சியில் திட்டமிட்டே இப்போது நடத்திக்கொண்டிருக்கிறது. போக்குவரத்து -வணிக குடியிருப்பு வளாகங்களில் குண்டுகளை விதைத்து வெடிக்கச் செய்தல் போன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்களை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் சந்தித்து வருகின்றன. ஆனால் ஒரிசா பயங்கரவாத வன்செயல்களின் தன்மையை ஆய்வு செய்யும் போது எளிதில் நம்பவியலாத திரைப்படக்காட்சிகளில் வருவதுபோன்ற இரக்கமற்ற வெறிச் செயல்களை காண முடியும். உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும் சிறுபான்மை பெண்களுக்கெதிரான இரக்கமற்ற கூட்டுக்கற்பழிப்பும், நிராதரவாக மாட்டிக் கொண்டவர்களை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி படுகொலை செய்வதும் இச்சமகால உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அதிர்ச்சியளிக்கும் வெறிச் செயல்களாக உள்ளன. இக்காட்டுமிராண்டித்தனமான செயல்களை பட்டப் பகலில் பெரும் திரளான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்துத்துவா வெறிக்கூச்சலுடன் சங்பரிவாரங்கள் நடத்துகின்றன.
25.8.2008 அன்று புட்பாலி அனாதை குழந்தைகள் இல்லத்தில் இருந்த ரஜ்னி மஜ்கி என்ற 21 வயதுள்ள இளம் பெண்ணை சங்பரிவாரம் உயிரோடு தீயிட்டு கொளுத்திப் படுகொலை செய்ததும் அன்றே கந்தமால் மாவட்டத்தில் ஒரு கன்னிகாஸ்திரியை பகிரங்கமாக காவல்துறையினர் முன்பாகவே கூட்டுக் கற்பழிப்பு செய்ததும் சமீபத்திய பயங்கரவாரதச் செயல்களாகும்.

1998 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக கிருஸ்துவ மக்கள் மீது இந்துத்துவா குண்டர்கள் நடத்திய அட்டூழியங்கள் கணக்கிலங்கடாதவை.
கந்தமால் மாவட்டத்தில் நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. படுகொலைகள் மற்றும் சேதங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. குஜராத்தை அடுத்து ஒரிசா இரண்டாவது இந்து நிலமாகும். இங்கே என்ன நிகழ்ந்தாலும் அது இந்துத்துவாவிற்கு இசைவளிக்கும் அரசியல் நிகழ்வாகவே அமையும்” என ஒரிசா பஜ்ரங் தளத்தின் தலைவர் சுபாஷ் செளகான் 2003 இல் பேட்டியளித்திருந்தார்.
மீண்டும் ஒரு குஜராத்தை ஒரிசா மண்ணில் நிகழ்த்திக் காட்ட சங் பரிவாரம் சரியான நேரத்தை தேடிக் கொண்டிருக்கிறது.
தனது எதிர்கால கலகங்களுக்கு ஒரிசாவை ஏன் சங் பரிவாரம் தேர்ந்தெடுத்தது? முஸ்லீம்களுக்கு கற்பிக்க குஜராத் என்றால் கிருஸ்துவர்களுக்கு ஒரிசா என்பதும் ஒரு காரணமாகும். தனது மதவெறி கலகங்களுக்கு தோதாக அதே பகுதி மக்களைத் திரட்டுவதற்கான வறுமையும் அறியாமையும் ஒரிசா கிராமங்களில் இருப்பதுதான் மற்றொரு முக்கிய காரணமாகும். 2001 கணக்கெடுப்புபடி ஒரிசா மக்கட்தொகை சுமார் 3.7 கோடியாகும். இதில் மலைவாழ் பழங்குடி மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 22.1. மற்றும் 16.5 சதமாக ஒரிசாவில் இருக்கிறது. இந்திய சராசரி 9.66 என்பதிலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாட்டின் அதிக அளவு மலைவாழ் பழங்குடி மக்கள் ஒரிசாவில்தான் வசிக்கிறார்கள் என்பது தெரியவரும். ஒரிசா பழங்குடி மக்களில் பெரும்பாலர் கடுமையான வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மலைவாழ் பழங்குடி மக்கள் அதிகாக வாழும் 12 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் நாட்டின் அதிகஅளவு வறுமை நிலவுகிறது. 10வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் நிலவரப்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரிசா மக்களின் எண்ணிக்கை 47.15 சதமாக இருக்கிறது. இது இந்திய சராசரியை விட இரட்டிப்பு மடங்காகும்.
ஒரிசா நிலப் பரப்பில் 59 சதம் வேளாண்மைக்கான நிலமாகும். இதில் 21 சதவீத வேளாண் நிலங்களே பாசன வசதி கொண்டிருக்கிறது. தேவையான நிலச் சீர்திருத்தங்கள் மேற்க்கொள்ளப்படவில்லை. எனவே மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 81 சதமானோர் அறவே நிலமில்லாத‡கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். எனவே மோசமான தினப்படி அத்துக்கூலி முறை ஒரிசா கிராமங்களில் நிலவுகிறது. 10000 மக்களை பலிகொண்ட 1999 புயலில் கடுமையான சேதத்தையும் ஒரிசா சந்தித்தது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடுமையான வறட்சியும், வெள்ளச்சேதம் மற்றும் இழப்பினையும் ஒரிசா மக்கள் மாறி மாறி சந்தித்தனர். இதனால் ஒரிசா மலைவாழ் ‡பழங்குடி ‡தாழ்த்தப்பட்ட மக்களது சுகாதார நிலமை பரிதாபத்திற்குரியதாகவும் இருக்கிறது, உலகமய நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் மற்றும் தொழிலுறவு சார்ந்த அறிவுசார் சொத்துரிமை சட்ட மாற்றங்களால் மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஏழைகள் பணக்காரர்களிடையிலான மருத்துவ பயன்பாட்டின் இடைவெளி ஒரிசாவில்அதிகரித்துள்ளது. என ஒரிசா அரசின் செய்தியே கூறுகிறது.
எழுத்தறிவு ஒரிசாவில் 63.09 சதமாகும். அதில் மலைவாழ் மக்களின் எழுத்தறிவு 37 சதமே. தமது வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான அரசியல் வழி அறியமாட்டா அப்பாவி மக்களின் குடிசை வாசல்களுக்கே வந்த கிருஸ்துவ தொண்டூழியத்தின் ஆறுதல் வாசகங்கள் மற்றும் நிவாரணங்களில் மனம் மாறி மதமும் மாறினர் என்ற யதார்தத்தை ஒரிசாவின் கிராமங்களில் நாம் காண முடியும். “இப்பிரதேச நலன்கள் புறக்கணிக்கப்பட்டதால் வந்த தாழ்நிலையை தீவிரவாத வன்முறை சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரிசா நிகழ்வுகளை சட்டம்‡ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் மலைவாழ்‡பழங்குடி மக்களின் யதார்தமான சமூக பொருளாதார நிலையில் அரசு அக்கரை செலுத்த வேண்டும். இதுவே அரசின் முதல் மற்றும் முதன்மை கடமையாகும். ஆயுதபடை அணிகளால் ஆட்சி செய்வது மட்டும் அங்கே அமைதியை கொண்டுவர முடியாது. பொருளாதார சுயசார்பு மற்றும் தரமான வாழ்விற்கு உபரி நிலங்கள் கண்டறியப்பட்டு நிலமற்ற மலைவாழ்‡தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவைகள் வழங்கப்படவேண்டும்” எனமலைவாழ் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்Vன தேசிய ஆலோசனை கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது. முதலாவதாக:இந்துத்துவா சக்திகள் இம்மக்களின் வறுமை, அறியாமையை பயன்படுத்தி மூளைச சலவை செய்து தமது மண்ணின் சிறுபான்மை மக்களுக்கெதிரான கலவரங்களுக்கு அவர்களையே பயன்படுத்திக் கொள்கின்றன அல்லது அவர்களை வெறும் பார்வையாளர்களாக மாற்றுகின்றன. அம்மக்கள் வாழும் கிராமங்களை வன்முறை அச்சத்தால் நிரப்புவதன் மூலம் மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டுவரவும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்படுகின்றன.
இரண்டாவதாக, தங்களது பயங்கரவாத அரசியல் மேலாதிக்கத்தை இந்தியாவில் நிறுவுவதற்காக ஒரிசா மண்ணை இரண்டாவது சோதனை களமாக்கிப் பார்க்க சங்பரிவாரங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கந்தமால் மாவட்டத்தில் மட்டும் மலைவாழ்‡பழங்குடி மக்களின் எண்ணிக்கை 52 சதமாகவும் அதில் கிருஸ்துவர்கள் எண்ணிக்கை 16 சதமாகவும்இருக்கிறது. எனவேதான் கந்தமால் மாவட்டதையே மையமாக வைத்து சங்பரிவாரத்தினர் தங்கள் கலக வேலையை திட்டமிட்டுள்ளனர்.சங் பரிவாரத்தின் முக்கிய பிரிவுகளான ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், வி.எச்.பி. ஆகிய மூன்றும் 35 அமைப்புகளை உருவாக்கி உள்ளன. இம்மூன்றிலும் சுமார் 1,80,000 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரும் கலவரங்களை உருவாக்க தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மத்திய‡மாநிலஅரசுகளின் வெற்று அறிக்கைகள்‡அனுதாபங்கள் ஒரிசா படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்திட முடியாது. முதலாவதாக சர்வதேசஅரங்கில் நாட்டிற்கு மேலும் தலைகுனிவு ஏற்படாமல் தடுக்க பிஜேபியுடனான உறவை நவீன்பட்நாய்க் துண்டித்துக் கொள்வதுடன், பஜ்ரங் தளம், விஎச்பி அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். இரண்டாவதாக மலைவாழ் -பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதியினை ஒதுக்கி அம்மக்கள் புதியதொழில்கள்- கல்வி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை உடனே மேற்க் கொள்ள வேண்டும். மூன்றாவதாக மலைவாழ்‡பழங்குடி‡ தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை மேம்பாட்டிற்காக முழுமையான நிலச் சீர்திருத்தத்தை கொண்டுவந்து நிலமற்ற மலைவாழ்‡தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமளிக்க வேண்டும். மூன்றாவதாக மதசார்பற்ற ஜனநாயக சக்திகளைக் கொண்ட அமைதிக்குழுக்களை ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கி அம்மக்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் அமைதியையும் உறுதி செய்யவேண்டும்.